சனி, ஜூன் 26, 2010

வெட்டுப்புலி – ஒரு பார்வை -ஆர். முத்துக்குமார்

‘வெட்டுப்புலி தீப்பெட்டியின் முகப்பில் இருக்கும் மனிதர் என்னுடைய கொள்ளுத்தாத்தா. அவருடைய வரலாறைத் தேடிச் செல்கிறேன். நண்பர்கள் பிரபாஷும் ஃபெர்ணாண்டஸும் துணைக்கு வருகிறார்கள்’ என்கிறார் தமிழ்ச்செல்வன். தேடலின் வழியே சில குடும்பங்களை, மனிதர்களை நமக்கு அறிமுகம் செய்துவைக்கிறார். அவர்களுடைய வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள், மாற்றங்கள் மூலம் முப்பதுகளில் தொடங்கி புத்தாயிரத்தின் முதல் ஒன்பது ஆண்டுகள் வரையிலான சமூக அமைப்பை, பழக்கவழக்கங்களை, சாதிச் சிக்கல்களை, ஏற்றத்தாழ்வுகளை நினைவுபடுத்துகிறார்.

முக்கியமாக, திராவிட இயக்க அரசியலை அதிகமாகப் பேசுகிறது இந்த நாவல். தமிழகம் மற்றும் தமிழினத்துடன் இரண்டறக் கலந்துவிட்ட திராவிட இயக்கத்தின் தோற்றத்தை, பரிணாம வளர்ச்சியை கதாப்பாத்திரங்கள் மூலம் நாவல் நெடுக சொல்லிச் செல்கிறார் தமிழ்மகன்.

சமூக ஏற்றத் தாழ்வுகள் அனைத்தும் பிராமணர் – பிராமணர் அல்லாதார் இருவரிடம் மட்டுமே நிலவுகின்றன என்பதை நானும் ஏற்கவில்லை. நாவலும் ஏற்கவில்லை. நாவலின் இந்த அம்சம்தான் என்னை ஈர்த்தது.

முப்பதுகள், நாற்பதுகள் என்று பத்து ஆண்டுகளுக்கு ஒரு பகுதி என்ற உத்தியுடன் எழுதப்பட்டிருக்கும் இந்த நாவலில் வெறும் தகவல்கள் மட்டும் பதிவாகவில்லை. மனிதர்கள். அவர்களுடைய குணநலன்கள். அவர்களுடைய முக்கியத்துவம். அவர்களுடைய பங்களிப்புகள். தேவைக்கு ஏற்றவகையில் பதிவாகியுள்ளன. தேவைக்கு ஏற்ப என்றால் நாவலாசிரியரின் தேவைக்கு ஏற்ப. அவரைப் பாதித்த, அவருக்குப் பிடித்தமான அல்லது பிடிக்காத மனிதர்களும் அவர்கள் தொடர்பான நிகழ்வுகள் நாவல் முழுக்க விரவிக் கிடக்கின்றன.

புனைவு எழுத்தாளருக்கே உரித்தான சில உரிமைகளை அவர் பயன்படுத்திக்கொண்ட விதம் அபுனைவில் மட்டுமே ஆர்வம் செலுத்தும் என்னைப் பொறாமை கொள்ளவைக்கிறது. குறிப்பாக, எம்.ஜி.ஆர் – கலைஞர் பற்றி அப்போது வழக்கத்தில் இருந்த கேலிச் சொற்றொடர்களை அவர் பயன்படுத்திய நாசூக்கு.

நாவலில் என்னைக் கவர்ந்த, என்னை சிலிர்க்க வைத்த, என்னை ஆச்சரியப்படுத்திய சில வசனங்களை, சில வரிகளை இங்கே பதிவு செய்கிறேன். ஏன் என்பதைப் படிக்கும்போதே புரிந்துகொள்ளமுடியும்.

‘என்னென்னமோ பலகாரங்க. ஆகாரமா.. ருசியான்னு ஆகிப்போச்சி. வெள்ளைக்காரனுங்க மாதிரி ஐயர் வூடுகள்லயும் காப்பிக் குடிக்க ஆரம்பிச்சுட்டானுங்களே..’

0

‘காந்தி குசுவுக்கு சமானம்னு சொல்றானே மணி ஐயரு. வெள்ளக்காரனை ஒண்ணும் பண்ண முடியாதுங்கிறது அவன் அபிப்ராயம்’

‘அவன் கிடக்கிறான். அப்புறம் காந்தி ஆட்சிய புடிச்சுட்டா அவர்தான் தெய்வம்னு சொல்லிடுவான்’

0

‘பாரேம்மா என் தம்பியோட தைரியத்தை? வெரிகுட்.. வெரிகுட்.. சினிமாவுக்குத்தான் ஜனங்க ஆளா பறக்குறாங்களே.. நல்ல யோசனைதான். பாப்பானுங்க நுழையறதுக்குள்ள நுழைஞ்சுடு.. ம்ம்..வெரிகுட்’

‘ராஜாஜி வடக்கில் தம் பெண்ணைக் கட்டிக்கொடுத்து விட்டதால் வடக்குத் தெற்கு எல்லாம் இணைந்துவிட்டதாக நினைப்பது எந்தவிதத்தில் நியாயம் என்று யோசித்துக் கொண்டிருந்தான்!’

0

‘தருமன் ரெட்டியார்தானா?‘

‘எதுக்குக் கேக்கிற இப்ப? தொட்டுப்புட்டானா?’

‘அதெல்லாம் இல்ல’

‘தொட்டுகிட்டுப் பேசினான்னா சொல்லு.. பிச்சிப்புட்றேன் பிச்சி..’

0

அவனும் அவனுடைய கூட்டாளிகளும் இன்றும் ஒருமுறை ‘மனோகரா’ படம் பார்க்கக் கிளம்பினர். அது அவர்களின் கோபத்தை அணையாமல் பார்த்துக்கொள்ளும் கவசமாகவும் ஊதி அதிகப்படுத்தும் உலைக்களமாகவும் இருந்தது.

0

யாரோ ஒருவன் மேடையைப் பார்த்துக் குரல் கொடுத்தான். பெரியார் மேடையில் இருப்பவர் பக்கம் திரும்பி என்ன சொல்கிறார் அவர் என்று கேட்டார். குத்தூசி குருசாமியோ, யாரோ முதுகுக்குப் பின்னாடி வந்து நின்று ‘நாடகத்தை ஆரம்பிக்கச் சொல்றாங்க’ என்றார்.

பெரியார் கொதித்துப் போனார். ‘அதுக்குத்தான் வெங்காயம் இந்த நாடகம் கூத்தெல்லாம் வேணாம்னு தலையில அடிச்சுக்கிட்டேன். முக்கியமான பேச்சப்போ திசை மாறிட்டான் பாரு? வேணுமா இதெல்லாம்? என்று மைக்கிலேயே முழங்கினார். அண்ணா வெலவெலத்துப் போனார்.

0

கட்டிலில் ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்ற திராவிடர் கழக வெளியீட்டை ஹேமலதாவின் கையில் கொடுத்துப் படிக்கச் சொல்லக் காத்திருந்தான். அவள், ‘எப்பப் பார்த்தாலும் புக்ஸு புக்ஸு’ என்றபடி அதைப் பிடிங்கி கீழே வைத்தாள்.

‘இது நான் படிக்கறதுக்கு இல்ல, நீ படிக்கறதுக்கு’

‘எனுக்கா? கீழே கிடந்த புத்தகத்தை ஆர்வம் பொங்க எடுத்தாள். ‘அழகுதான்.. எனக்கு அரவம் ஒரு அட்சரம் படிக்கத் தெல்லதே..’ கட்டிலில் அதை வீசிவிட்டு முந்தானையை விலக்கினாள். பேரதிர்ச்சியோடு பார்த்தான். அங்கே தாலி தொங்கிக் கொண்டிருந்தது.

‘அம்மாதான் கழுத்து மூலியா இருக்க ஒத்துனு செப்பி அரை சவ்ரன்ல தாலி எடுத்துக் குடுத்துச்சி’ என்றாள்.

0

‘ஐயர் இன்னா மந்திரம் சொல்றாரு தெரியுமா? உம் பொண்டாட்டிய அக்னி தேவன் தன் அனுபோகத்தில வெச்சிருந்தான்.. வாயு தேவன் வெச்சிருந்தான்.. இப்ப நான் வெச்சிருக்கேன்.. இனிமே நீ வெச்சுக்கோன்னு சொல்றான்.. இந்தக் கருமத்தைச் சொன்னாத்தான் கல்யாணமா? உலகம் ஃபுல்லா இப்பிடித்தான் சொல்லி கல்யாணம் பண்ணிக்கறானா? த பார்ப்பா.. ஐயர் வந்துதான் பண்ணனும்னா எனக்குக் கல்யாணமே வேணாம். சொல்லிட்டேன்’

0

‘அவா, இவா, நேக்கு, நூக்கும்பானுங்க. அதிலதான் இருக்கு அவனுங்க உயிரே.. நல்லா தமிழ்ல பேசிக்கினே இருப்பான். அவனுங்க ஆளுங்கன்னு தெரிஞ்சதும் ஜலம் சாப்பிட்றேளானு மாறிடுவான். லோகம் கெட்டுக் கெடக்குன்னுவான்.. த்தா’

0

‘யாரை நொள்ளைக் கண்ணன்னு சொன்ன? கொன்னுப் போட்டுடுவேன் தெவடியா பசங்களா?’ முகம் சிவக்கப் படபடப்புடன் வெகுண்டார்.

‘த்தா இன்னா? கருணாநிதியதான் சொன்னேன். இன்னா பண்ணிடுவே? கண்ணு நொள்ளையா இருந்தா சொல்லாம இன்னா சொல்லுவாங்க?’

மொத்த பேரையும் கொலை பண்ணிட்டு ஜெயிலுக்குப் போயிடுவேன்.. சும்மா என்கிட்ட விளையாடாதீங்க..’‘

‘இன்னா பெரியவரே.. பசங்க ஏதோ கத்திக்கிட்டுப் போறானுங்க.. விடுங்க.. இதுக்கெல்லாம் சண்டைக்கி வந்தா எப்பிடி..உங்க ஆளுங்க கூடத்தான் பொட்டைன்னு கத்தறானுங்க.. நாங்க பதிலுக்கு அடிச்சா சரியாயிடுமா?’

0

‘பொஸ்தகம்னா பிராமின்ஸ் எழுதறதுதானே..? பாரதியார், வ.வே.சு., தி.ஜானகிராமன், சுஜாதா, பாலகுமாரன்.. எல்லாம் யாரு?’

‘எல்லாத்தையும் பெரியார் கண்ணாடி போட்டுக்கிட்டு பாக்காதீங்க.. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன்லா உங்க ஆளுங்கதானே?’

‘உங்களுக்கு ஏத்த மாதிரி எழுதினதால வுட்டு வெச்சிருக்கீங்க’

லட்சுமண ரெட்டி - குணவதி, தியாகராஜன் – ஹேமலதா, நடராசன் – கிருஷ்ணப்ரியா இந்த மூன்று ஜோடிகள் பேசும்போது வெளிப்படும் வார்த்தைகளை உன்னிப்பாகக் கவனிக்கவும். அவற்றில்தான் கடந்த எண்பது ஆண்டுகால சமூக வாழ்க்கையும் அரசியலும் புதைந்துகிடக்கின்றன.

0

எட்டிப் போடா சூத்திரப் பயலே! என்ற ஐயர் பேச்சும் ஆரியம்தான்.

கிட்ட வராதே சேரிப்பயலே என்று பேசும் முதலியார் முடுக்கும் ஆரியம்தான்.

படையாச்சிக்கு இவ்வளவு உயர்வா? என்று கேட்கும் பேச்சும் ஆரியம்தான்.

மறவர் முன்பு மட்டு மரியாதையோடு நட!

தேவர் வருகிறார், எழுந்து நில்!

நாடார் அழைகிறார், ஓடி வா!

செட்டியார் கேட்கிறார், தட்டாமல் கொடு!

- என்று ஆரியம் பலப்பல முறைகளில் தலைவிரித்தாடுகிறது, தம்பி, பல முறைகளில்.

தமிழ்மகன் எழுதிய ‘வெட்டுப்புலி’யைப் படிக்கும்போது அடிக்கடி என் நினைவுக்கு வந்த அண்ணாவின் வரிகள் இவை.


Tags: சாதி, நாவல், வெட்டுப்புலி. திராவிட இயக்கம்
Posted in அரசியல், புத்தகம்

செவ்வாய், ஜூன் 15, 2010

யுவகிருஷ்ணா விமர்சனம்

வெட்டுப்புலி!
June 14, 2010


இந்நாவல் மாதிரியாக என்னை அலைக்கழித்த, சுவாரஸ்யப்படுத்திய, சோகப்படுத்திய, மகிழ்ச்சிப்படுத்திய, கடுப்பூட்டிய, களிக்கவைத்த எழுத்தை இதுவரை நான் வாசித்ததே இல்லை என்று உறுதியாக கூறலாம். மொத்தத்தில் பன்முகத்தன்மையோடு கூடிய உணர்வுகளால் படுத்தி எடுத்து விட்டது. என்னோடு சேர்த்து என் அப்பா, பெரியப்பா, மாமா, அண்ணாவென்று பரம்பரையே கண்ணாடி முன்நின்று தனக்குத்தானே கதை சொல்லிக் கொண்டதை போன்ற உணர்வினைத் தந்தது. இந்நாவலின் கதைமாந்தர்கள் ஒவ்வொருவரும் என் குடும்பத்தில் இருந்திருக்கிறார்கள். ரத்தமும், சதையுமாக இன்னமும் உயிர்வாழ்கிறார்கள். தமிழகத்தின் பெரும்பாலான குடும்பங்களின் அந்தரங்கத்தை எட்டிப் பார்த்து எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
So called திராவிடப் பாரம்பரிய குடும்பங்களின் வயது மிகச்சரியாக முக்கால் நூற்றாண்டு. திராவிட அரசியல் மற்றும் தமிழ் சினிமாவின் வயதும்கூட இதேதான். புத்தாயிரமாண்டின் துவக்கத்தில் இருக்கும் நம்மை, கடந்த நூற்றாண்டின் முப்பதுகளுக்கும், நாற்பதுகளுக்கும் அனாயசமாக ஆட்டோவின் பின்சீட்டில் நம்மை உட்காரவைத்து சவாரி செய்கிறார் தமிழ்மகன். காலயந்திரம் இன்னமும் விஞ்ஞானத்தால் கண்டறிப்படவில்லை. பரவாயில்லை. நம் எழுத்தாளர்களிடம் பேனா இருக்கிறது.
சிறுத்தையை வெட்டிய தாத்தாவின் கதையை தேடிச்செல்வது என்பது நொண்டிச்சாக்கு. முக்கால் நூற்றாண்டு வரலாற்றை முன்னூற்றி ஐம்பது பக்க கேப்ஸ்யூலாக தருவதுதான் நாவலின் முக்கிய நோக்கம். பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அழகிரி – மொத்தமே இவ்வளவுதான். வேண்டுமானால் இடையிடையே ராஜாஜி, ராஜீவ்காந்தி, பிரபாகரன் என்று பெயர்களை போட்டுக் கொள்ளலாம். உங்களிடம் இப்போது 75 ஆண்டுக்கால வரலாறு ரெடி. வெட்டுப்புலி செய்திருப்பது இதைத்தான். ஆந்திராவை ஒட்டிய தமிழகத்தின் வடமாவட்ட அரசியல்போக்கு இவ்வளவு நுணுக்கமாக ஒரு புனைவில் பதிவு செய்யப்பட்டிருப்பது அநேகமாக இதுவே முதன்முறையாக இருக்கக்கூடும்.
முப்பதில் தொடங்கி ஒவ்வொரு பத்தாண்டு நிகழ்வுகளையும் பாத்திரங்களின் போக்கில் கொண்டுசெல்கிறார். முப்பதுகள் மிக நீண்டது. நாற்பதுகள் நீண்டது. ஐம்பதுகள் இயல்பான நீளம். அறுபதுகள் கொஞ்சம் குறைவு. எழுபதுகள் குறைவு. எண்பதுகள் வேகம். தொண்ணூறுகள் வேகமோ வேகம். புத்தாயிரம் மின்னல் வேகம். நாவல் இந்த உத்தியிலேயே எழுதப்பட்டிருக்கிறது. அந்தந்த காலக்கட்டங்கள் இயல்பாகவே இப்படித்தான் இயங்கியிருக்கிறது என்பதை குறியீடாக உணர்த்துகிறார். நாம்கூட சிறுவயதில் ஓராண்டு கடந்த வேகத்தையும், இப்போதைய அதிவேகத்தையும் உணரும்போது இந்த உத்தியின் லாவகத்தை புரிந்துகொள்ள முடிகிறது.
தசரத ரெட்டியில் தொடங்கி லட்சுமண ரெட்டி, நடராஜன், தமிழ்செல்வன் என்றொரு குடும்ப பாரம்பரியம். ஆறுமுக முதலி, அவரது மகன் சிவகுரு, சகோதரர் கணேசன், கணேசனின் மகன்கள் நடேசன், தியாகராசன், நடேசனின் மகன் ரவி என்று இன்னொரு குடும்பம். இரண்டு குடும்பங்களின் பார்வையில் விரிகிறது திராவிட இயக்க வரலாறு. பெரியாரின் சிந்தனைகள் சமூகத்தில் ஏற்படுத்திய நல்ல தாக்கங்கள் பலவற்றையும், அவற்றை தவறாக உள்வாங்கிக் கொண்டு நாசமாகப் போன சிலரையும் எந்த சமரசமுமின்றி நடுநிலையாக பதிவு செய்கிறது வெட்டுப்புலி.
லட்சுமண ரெட்டி அனுபவப்பூர்வமான நிகழ்வுகளால் திராவிட இயக்கத்தின் சார்புள்ளவராக மாறுகிறார். தேவைப்படும் இடங்களில் சிறுசிறு சமரசங்களுக்கும் உடன்பட்டு வாழ்வதில் அவருக்கு பெரியதாக பிரச்சினை எதுவுமில்லை. மாறாக கணேசன், தியாகராசன், நடராஜன் போன்றோர் மூர்க்கத்தனமாக, முரட்டுத்தனமாக சித்தாந்தங்களை குடும்பங்களிலும் நிறுவமுயன்று தனிப்பட்ட வாழ்க்கையில் தோற்கிறார்கள்.
இன்றும் கூட திராவிட இயக்கத்தை பரிபூரணமாக ஏற்றுக்கொண்ட ஒருவன் அவ்வளவு எளிதாக சாதிமறுப்புத் திருமணம் செய்துவிட முடியாது. அவனுக்கு மனைவியாக வரக்கூடியவள் வெள்ளிக்கிழமைகளில் சிகப்புப்புடவை அணிந்துகொண்டு அம்மன் கோயிலுக்கு போவாள். விரதம் இருப்பாள். குழந்தைகளுக்கு தமிழ்ப்பெயர் சூட்டுவதற்கு குடும்பத்தில் பெரிய எதிர்ப்பு இருக்கும். இதெல்லாம் அவனுடைய வாழ்வியல் சிக்கல்கள். சித்தாந்தங்களும், யதார்த்தமும் இருவேறு முனைகளில் நிற்கும் கந்தாயங்கள். நாம் விரும்புகிறோமே என்ற ஒரே காரணத்துக்காக ஒரு புள்ளியில் சந்தித்துவிடாது. இரண்டுக்கும் இடையே இயந்திரமாக மனவுளைச்சலோடு வாழ்ந்து தீர்த்துத்தான் தொலைக்க வேண்டும். இதுதான் இயல்பானது. இல்லை சித்தாந்தங்கள் காட்டிய வழியில்தான் வாழ்வேன். எச்சூழலிலும் கைவிடமாட்டேன் என்பவர்கள், முதலில் குடும்பம் என்ற ஒருமுறையிலிருந்து வெளிவந்து, சமூகத்தை புறந்தள்ளி தனிமனிதனாக வாழ திராணி உள்ளவனாக இருக்க வேண்டும்.
வெட்டுப்புலி போதிப்பது இதைத்தான். தியாகராசனின் மனைவி ஹேமலதா தாலி அணிந்துக் கொள்கிறாள். வெள்ளிக்கிழமைகளில் கோயிலுக்கு போகிறாள். எம்.ஜி.ஆர் படம் பார்க்கிறாள். இரட்டை இலைக்கு ஓட்டு போடுகிறாள். இதெல்லாம் ஒரு பிராசஸாக / தியாகராசனுக்கு எதிர்வினையாக அமையும் சூழல். இடைப்பட்ட காலத்தில் இயந்திரத்தன வறட்டு சித்தாந்த உணர்வால் அவனுக்கு வேலை போகிறது. குடிகாரனாகிறான். குடும்பம் பிளவுபடுகிறது. ஒருகட்டத்தில் வாழ்வின் எல்லைக்கே இருவரும் ஓடி களைப்படைந்து மீண்டும் இணைகிறார்கள். இப்போது தியாகராசனுக்கு அரசியல் முக்கியமல்ல. கொள்கைகள் முக்கியமல்ல. புதுவை அரவிந்தர் ஆசிரம அன்னையின் தீவிர பக்தனாகிறான். வேலைக்கு ஒழுங்காக போகிறான். வாழ்வு அவன் போக்குக்கு வருகிறது. தியாகராசனது வாழ்க்கை ஒரு சோறு பதம்.
தமிழகத்தில் சினிமாவின் ஆளுமை குறித்து விஸ்தாரமான அலசல் கிடைக்கிறது. ஆறுமுக முதலி சினிமா எடுக்க திட்டமிட்டு சென்னைக்கு வந்து ஸ்டுடியோக்களை நோட்டமிடுகிறார். பிற்பாடு ஒரு டெண்டு கொட்டாய் கட்டியதோடு திருப்தியடைந்து விடுகிறார். மாறாக அவரது மகன் சிவகுரு சினிமா மோகத்தில் சொத்தினை அழித்து, பிச்சைக்காரனாகி மடிகிறான்.
பார்ப்பன எதிர்ப்புக் கொள்கை குறித்த காரசார விவாதம் ஆங்காங்கே முன்வைக்கப் படுகிறது. நடராஜனுக்கும், அவன் காதலிக்க விரும்பும் பார்ப்பனப் பெண் ப்ரியாவுக்கும் இடையில் கன்னிமாரா வாசலில் நடைபெறும் விவாதம் முக்கியமானது. பார்ப்பனர்களுக்கும் வர்க்கப்பேதம் உண்டு என்பதை ப்ரியா அழுத்தமாக முன்வைக்கிறாள். முதலாளி வர்க்க பார்ப்பனன், ஒட்டுமொத்த சமூகத்தையும் காலில் போட்டு நசுக்குகிறான் என்று நடராஜன் எதிர்வாதம் வைக்கிறான்.
வர்க்க அடிப்படையில் பின் தங்கியிருக்கும் பார்ப்பனர்களுக்கான நியாயம் ஒன்றும் இருக்கத்தானே செய்யும்? ‘சோ’ போன்ற பிரபல பார்ப்பனர்கள் இன்றைய நிலையில் அதை பேசுவதில்லை என்றாலும், எஸ்.வி.சேகர் மாதிரியான ஆட்கள் ‘பார்ப்பனர்களுக்கு இடஒதுக்கீடு’ என்று பேசுகிறார்கள். மிகச்சிறுபான்மை வாதமான அது பெரியளவில் பேசப்படாததற்கு, வர்க்கத்தில் மேல்மட்டத்தில் இருக்கும் பார்ப்பனர்களே காரணமாக இருக்கக்கூடும்.
பார்ப்பன மேலாதிக்க விவாதங்களுக்கு இன்றுவரை திட்டவட்டமான விடை எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் நாவலின் கடைசி அத்தியாயங்களில் நியூயார்க்வாழ் பார்ப்பனரான பிரபாஸின் அப்பா சொல்கிறார் “சட்டசபை எங்க கையில இல்ல, நீதித்துறை எங்க கையில இல்ல, நிர்வாகமும் எங்க கையில இல்ல.. பாப்பான் ஒக்காந்திருக்கிருந்த இடமெல்லாம் இப்ப அவங்க கையில.. ராஜாஜி இல்ல, வக்கீல் வரதாச்சாரி இல்ல, கலெக்டர் காமேஷ்வரன் இல்ல.. ஆமாவா இல்லையா?
எங்களைத்தான் நாட்டைவுட்டே வெரட்டி அடிச்சிட்டாங்களே இந்த கோட்டா, அந்த கோட்டா, ரிஸர்வேஷன்னு.. செரி அதவுடு.. ஷேம்மாத்தான் இருக்கோம். இல்லாட்டி போனா அங்கே கோயில்ல மணி ஆட்டிக்கிட்டு இருக்கணும்..”
வைதீக பார்ப்பனராகிய அவரது மகன் சொல்கிறான். “ஐ லைக் பெரியார் யூ நோ.. புரோகிரஸிவ் மேன். என்ன கொஞ்சம் முன்னாடி பொறந்துட்டாரு.. அவர் இறந்து இத்தனை வருஷம் ஆகியும் அவரை நம்மால பீட் பண்ணமுடியலையே? எங்களைத் திட்டுறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டுட்டாரு.. இப்ப இருந்திருந்தாருனா.. எங்களைத் திட்டியிருக்க மாட்டாரு.. உங்களைத்தான் திட்டியிருப்பாரு.. ஒருத்தனோட ஒருத்தன் அடிச்சிக்கிறாங்க.. என் ஜாதிதான் பெருசு.. உன் ஜாதிதான் பெருசுன்னு.”
முன்பாகவே ஒரு கதாபாத்திரம் சுட்டிக் காட்டுகிறது. பெரியார் சொன்ன பெண்களுக்கான சீர்த்திருத்தத்தை முதலில் ஏற்றுக் கொண்டது பார்ப்பனர்கள்தான். தமிழக சமூக சூழலில் அவர்கள் வீட்டுப் பெண்கள் தான் முதன்முதலாக பணியாற்ற படிதாண்டு வருகிறார்கள். அக்காலக் கட்டத்தில் பெரியாரைத் தலையில் தூக்கிக் கொண்டாடியவர்கள் தங்கள் குடும்பப் பெண்களை பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவது குறித்தே தயக்கத்தில் இருந்தார்கள். பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாதோரைவிட எப்போதும் பத்து/இருபது ஆண்டுகள் எல்லாவற்றிலும் முன்பாகதானிருக்கிறார்கள் என்பது என்னுடைய தனிப்பட்ட மதிப்பீடு.
தமிழ்மகனின் நடை மிக முக்கியமானது. அந்தந்த காலக்கட்டத்தை கண்முண் கொண்டுவந்து நிறுத்துவதில் அவரது உழைப்பு அலாதியானது. பீரியட் நாவல் என்பதுகுறித்த வறட்சித்தன்மை ஏதுமில்லாத மசாலா விவரிப்பு. புனைவு என்றாலும் நடந்த சம்பவங்கள் நறுக்குத் தெறித்தாற்போல ஆங்காங்கே சுவைக்காக தூவப்பட்டிருக்கிறது.
அண்ணாசாலை கலைஞர் சிலை, எம்.ஜி.ஆர் மரணமடைந்த அன்று ஒரு இளைஞனால் கடப்பாரை கொண்டு இடிக்கப்படுகிறது. இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் அது படச்செய்தியாக வந்திருந்ததாக நினைவு. கலைஞர் அந்தப் படத்தை எடுத்து முரசொலியில் போட்டு படக்குறிப்பு எழுதியிருந்தார். “ஏவியோர் எள்ளி நகையாட அந்த சின்னத்தம்பி என் முதுகிலே குத்தவில்லை. நெஞ்சிலேதான் குத்தினான். வாழ்க.. வாழ்க!” – இச்சம்பவம் நாவலின் போக்கிலே கொண்டுவரப் படுகையில் என் உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளை வடிக்க வார்த்தைகளே கிடைக்கவில்லை.
1991 ராஜீவ்காந்தி கொலை, 1998 திமுக – பாஜக உறவு, 2001 கலைஞர் கைது போன்ற முக்கிய நிகழ்வுகள் குறித்த குறிப்புகள் விரிவாக சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பது எனக்கு நாவலில் படும் சிறு குறை. ஏனெனில் மேற்கண்ட சம்பவங்கள் என் குடும்பத்தில் ஏற்படுத்திய பாதிப்பை நேரிடையாக கண்டிருக்கிறேன். திமுக – பாஜக உறவு மலர்ந்தபோது என்னுடைய பெரியப்பாவுக்கு ஹார்ட்-அட்டாக் வந்தது. கலைஞர் கைதின்போது சன் டிவியில் கண்களில் நீர்கசிய பராசக்தி பார்த்துக் கொண்டிருந்த என் அப்பா நெஞ்சை பிடித்துக் கொண்டு உடல்நலிவுக்கு ஆளானார். பிழைப்புக்காக சினிமா பத்திரிகையாளராகி விட்ட நடேசனின் மகன் ரவி கதாபாத்திரம் என்னை எனக்கே நினைவுபடுத்துகிறது.
கலைஞருக்கு கலைஞர் பட்டம் கொடுத்த எலெக்ட்ரீஷியன் பாஸ்கர், முரசொலி அலுவகத்தை கண்டு ஆச்சரியப்படுகிறார். “இது கருணாநிதிக்குச் சொந்தக் கட்டடமா?”
பதினைந்து ஆண்டுக்காலமாக கிட்டத்த கோமா நிலையிலிருந்த நடராஜன் வெட்டுப்பட்ட முகமொன்றை டிவி சானலில் கண்டு, ஞாபக வெடிப்புகளில் மீள்கிறான். கால்களில் நடுக்கத்தோடு, கண்களில் நீர்வழிந்து கட்டிலில் விழுகிறான். அழகிரி மத்திய மந்திரி ஆகிறார். “வைகோ பேசாம இங்கேயே இருந்திருக்கலாம்” என்ற ஆதங்கத்தோடு நாவல் முடிகிறது.
வெட்டுப்புலி – சமகால தமிழ் சமூகத்தின் கண்ணாடி!


யுவகிருஷ்ணா

LinkWithin

Blog Widget by LinkWithin