சனி, நவம்பர் 10, 2007

என் கணவர் எனக்கு ஜீனியர்..!







கணவனும் மனைவியும் ஒரே துறையில் இருப்பது பல நேரங்களில் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியாக இருக்கும். சில நேரங்களில் அதுவே இடையூறாக இருக்கும். அதுவும் படைப்பு சார்ந்த துறைகளாக இருந்தால் ஈகோ எட்டிப் பார்க்க ஆரம்பித்துவிடும். புகழும் பணமும் செல்வாக்கும் நிறைந்த சினிமா துறையில் கேட்கவே வேண்டாம். இந்த எழுதப்படாத வரையறைகளை மீறி சில தம்பதிகள் இருக்கிறார்கள். இதோ "கண்ணாமூச்சி ஏனடா' ப்ரியாவும் அவருடைய கணவர் பூஷணும் அதற்கான உதாரண தம்பதிகள்.

தீபாவளிக்கு தம் படத்தைத் திரையிட வேண்டிய மும்முர பணியில் இருந்த ப்ரியா அத்தனை வேலை அழுத்தத்திலும் கலகலப்பாகப் பேசுகிறார்.




எப்படி இத்தனை இறுக்கமான நேரத்திலும் அமைதியாக இருக்க முடிகிறது? என்று ஆரம்பித்தோம்.

குடும்பத்தின் பக்க பலம் மிகவும் முக்கியமாக இருக்கிறது. காலையில் 9 மணிக்கு உங்களை இங்கே வரச் சொல்லிவிட்டு நான் கணவருக்கு டிபன் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் இருந்தால் நான் இங்கு வர முடியுமா? இன்று என் வேலையை என் கணவர்தான் பார்த்துக் கொள்கிறார். இங்கே என் வேலையைப் பகிர்ந்து கொள்கிற உதவியாளர்கள்... அப்புறம் அமைதியாகப் பணியாற்றுவதில் என்ன சிக்கல்?




நமக்குத் தொழில் சினிமா என்று நீங்கள் இந்த வேலையைத் தேர்வு செய்த சந்தர்ப்பத்தில் உங்கள் வீட்டில் எப்படி எடுத்துக் கொண்டார்கள்?

எனக்கு ஒரு அண்ணன், இரண்டு அக்கா. அண்ணனுக்கும் எனக்கும் 14 ஆண்டு இடைவெளி. வீட்டில் எனக்குக் கடைக்குட்டிக்கான முக்கியத்துவம் இருந்தது. நானே முடிவெடுக்கிற சுதந்திரமும் இருந்தது. எங்கள் வீட்டில் எல்லாருக்கும் அந்தச் சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. பள்ளிப்பருவத்தில் நாடகத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பு, என்னை கிறித்துவக் கல்லூரிக்கும் அதன் பிறகு திரைப்படக் கல்லூரிக்கும் இட்டுச் சென்றது. கிறித்துவக் கல்லூரியில் படிக்கும்போது ஒரு நிகழ்ச்சிக்கு வந்த நடிகை சுகாசினி எனக்குப் பழக்கமாகி "பெண்' சீரியலில் நடிக்கவும் வைத்தார். ஆனால் எனக்கு இயக்குநர் ஆவதில்தான் விருப்பம் என்பதால் அவரிடமே உதவி இயக்குநராகி "இந்திரா'வில் பணியாற்றினேன். அதன் பிறகு "இருவர்' படத்தில் மணிரத்னத்தின் உதவியாளரானேன். அவரிடம் தொடர்ந்து நான்கு படங்கள் பணியாற்றினேன். தொடர்ந்து சிக்கல் இல்லாமல் என் பயணம் சென்று கொண்டிருந்ததால் எந்தக் கேள்வியும் எழவில்லை.

கல்யாணத்துக்குப் பிறகு நடிப்பீர்களா என்பது போல "கல்யாணத்துக்குப் பிறகு படம் இயக்குவீர்களா?' என்ற கேள்வியை எதிர் கொண்டீர்களா?.

இல்லவே இல்லை. என் குடும்பத்தில் எனக்குச் சுதந்திரம் கொடுத்தது போலவே என் மாமியார் வீட்டிலும் எனக்கான சுதந்திரத்தை அனுமதித்திருக்கிறார்கள். என் கணவரும் சினிமா துறையைச் சார்ந்தவர் என்பதால் அதற்கான சிரமங்களைத் தெரிந்தவர்களாக இருந்தார்கள். அவர் ஷியாம் பெனகலிடம் பணியாற்றிவிட்டு இப்போது தெலுங்கில் ஒரு படம் இயக்கிக் கொண்டிருக்கிறார். அந்த விதத்தில் நான் அவருக்கு சீனியர். "கண்டநாள் முதல்' படத்தைத் தொடர்ந்து "கண்ணா மூச்சி ஏனடா' படத்தையும் இயக்கிவிட்டேன் (சிரிக்கிறார்).

இந்தப் படத்தைப் பொறுத்தவரை தயாரிப்பாளர் (ராதிகா), ஒளிப்பதிவாளர் (ப்ரீதா), பாடலாசிரியர் (தாமரை) எனப் பலரும் பெண்களாக இருந்தது உங்களுக்குப் பணியாற்ற வசதியாக இருந்ததா?

முதல் படத்தில் எல்லாத் தொழில்நுட்பக் கலைஞர்களும் ஆண்கள்தான். அதிலுமே எனக்கு எந்தப் பிரச்சினையுமே இல்லையே... பெண் என்பதால் எனக்கு எந்தச் சலுகையும் இருந்ததில்லை. சங்கடங்களும் இருந்ததில்லை.


தமிழ்மகன்

படங்கள்:மீனம் மனோ

திருவாளர் 50%... திருமதி 50%...









ஸ்ரீதர் இயக்கிய "தென்றலே என்னைத் தொடு' படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜெயஸ்ரீ. தொடர்ந்து "திருமதி ஒரு வெகுமதி', "தாலிதானம்' போன்ற குடும்பப்பாங்கான படங்களில் நடித்ததாலோ என்னவோ இப்போது குடும்பப் பாங்கான நிகழ்ச்சி நடத்தும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். சன் டி.வி.யின் திருவாளர் - திருமதி நிகழ்ச்சியை இவர் சமாளிப்பதே அலாதிதான். தம்பதியருக்கு அன்புச் சவால்விடுவதும் பின்பு அவர்களை கண்ட்ரோலுக்குக் கொண்டு வருவதும் இவருடைய ஸ்பெஷாலிட்டி.
இத்தனைக்கும் இவர் அமெரிக்காவில் இருந்து வந்து திருவாளர்- திருமதிகளைக் கலாய்த்துவிட்டுச் செல்கிறார் என்றால் யாராவது நம்புவார்களா?






26 -வது எபிசோட் நிகழ்ச்சியை நடத்தித் தருவதற்காகச் சென்னை வந்திருந்த அவரை மடக்கிக் கலாய்த்தோம்.

இங்கிருக்கும் தம்பதிகளைக் கலாய்ப்பதற்கு அமெரிக்காவில் இருக்கும் இருக்கும் உங்களைத் தேர்ந்தெடுத்ததன் நோக்கம்?

நான் அமெரிக்கா போய் 19 ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தனை ஆண்டுகளாக யாராவது வெளிநாட்டில் இருந்தால் இங்கே மறந்தே போயிருப்பார்கள். ஆனாலும் நான் இங்கேயே இருப்பதைப் போல ஒரு தோரணையை உருவாக்கி வந்திருக்கிறேன். அதுதான் இந்த நிகழ்ச்சி எனக்குக் கிடைப்பதற்குக் காரணம். ஒவ்வொரு முறை இந்தியா வரும்போதும் இங்கே மீடியாவுக்குத் தெரிகிறமாதிரி ஏதாவது செய்துவிட்டுச் செல்வதுதான் அதற்குக் காரணம். ஒருமுறை வந்தபோது கே.எஸ். ரவிகுமார் இயக்கிய "பிஸ்தா' படத்தில் நக்மாவின் அக்காவாக நடித்தேன். அடுத்தமுறை வந்தபோது ராமராஜன் இயக்கிய "விவசாயி மகன்' படத்தில் தேவயானியின் அக்காவாக நடித்துவிட்டுச் சென்றேன். இங்கேயே இருந்து கொண்டு படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிற மாதிரி பாவ்லா காட்டிக் கொண்டிருக்கிறேன். ராதிகாதான் அதிரடியாக இந்த வேலையைக் கொடுத்து நிரந்தரமாக திரையில் தோன்ற வழி செய்தார்.

நான் அமெரிக்காவில் இருக்கும்போதும் ராதிகா, சுஹாசினி போன்றவர்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருப்பேன். ராடான் டி.வி.க்காக ராதிகா தயாரித்த இந்த நிகழ்ச்சிக்கு நான் பொருத்தமானவளாக இருப்பேன் என்று முடிவெடுத்து என்னை அழைத்தார். ஒவ்வொருமுறை இந்தியா வரும்போதும் அடுத்த சில வாரங்களுக்கான நிகழ்ச்சிகளைத் தயாரித்து விடுகிறார்கள். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வந்தால் போதும், தேவையான நிகழ்ச்சிகள் ரெடி!.

என்னுடைய இரண்டு மகன்களும் குழந்தைகளாக இருந்தபோது அடிக்கடி வரமுடியாத சூழ்நிலை இருந்தது. இப்போது அவர்கள் வளர்ந்துவிட்டார்கள். பெரியவனுக்கு 13 வயது ஆகிவிட்டது. (அட, அவ்வளவு பெரிய பையனா?) இனிமேல் அடிக்கடி வந்து போகமுடியும் என்பதால் இந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டேன்.

இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பின்போது, இது நிகழ்ச்சி என்பதையும் மறந்து தம்பதிகளை எல்லைமீறிப் போகும்படி செய்கிறீர்களே நியாயமா?

நிகழ்ச்சியின் சுவாரஸ்யமே அதுதானே? அப்படி எல்லை மீறுகிறவர்கள் சுவாரஸ்யம் கருதி அதைப் புரிந்தே செய்கிறார்கள் என்றுதான் நினைக்கிறேன். நிகழ்ச்சி நன்றாக வருவதற்குக் கலந்து கொள்பவர்களின் "இன்வால்வ்மெண்ட்' முக்கியமாக இருக்கிறது.

கணவன் மனைவி பிரச்சினை என்பது பேசித் தீர்த்துக் கொள்ளக்கூடியதுதான் என்பதே இதன் அடிநாதமான அம்சம். பிரச்சினைகளைப் பேசாமல் மனதுக்குள்ளேயே பூட்டி வைத்திருப்பதால் அது தீர்ந்து விடப்போவதில்லை. பேசுங்கள்... சண்டையிடுங்கள்... இறுதியில் முடிவுக்கு வாருங்கள்... என்பதே எங்கள் நிகழ்ச்சியின் நோக்கம்.

வெளியிடங்களில் உங்களைச் சந்திக்கிற தம்பதிகளிடம் வசமாக வாங்கிக் கட்டிக் கொண்ட அனுபவம் ஏதாவது உண்டா?

தம்பதியரைச் சிக்கலில் மாட்டிவிட்டு ரசிப்பது எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. குறிப்பாகக் குழந்தைகளுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. அப்பாவும்- அம்மாவும் மாட்டிக் கொண்டு முழிப்பது குழந்தைகளுக்குத் தமாஷாக இருக்கிறதோ, என்னவோ? பாஸ்டன் நகரில் நாங்கள் ஒரு ஹோட்டலில் பிட்ஸô சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போது எங்களுக்கு அருகே சாப்பிட்டுக் கொண்டிருந்த ஓர் இந்தியக் குடும்பத்தில் இருந்து ஒரு சிறுமி என்னிடம் வந்து திருவாளர் நிகழ்ச்சியைப் பற்றி புகழ்ந்து தள்ளிவிட்டாள். எங்கள் வீட்டுக்கருகே எனக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது. அப்படி அவர்கள் புகழும்போது என்னுடைய பெரிய மகனின் ரியாக்ஷனைப் பார்க்க வேண்டுமே... "இதெல்லாம் ரொம்ப ஓவர்' என்பதுபோல கண்ணை மேலே உருட்டி பாவனை காட்டுவான். சின்னவனுக்கு அம்மாவை எல்லோரும் பாராட்டுவது ஆச்சர்யமாக இருக்கும். "எப்படிம்மா உன்னை எல்லாருக்கும் தெரியுது?' என்று ஆச்சரியமாகக் கேட்கிறான்.

அது சரி... இன்னும் "உங்கள்' திருவாளர் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே?






என் கணவர் பெயர் சந்திரசேகர். இப்படி நிகழ்ச்சியெல்லாம் நடத்த அனுமதித்திருப்பதிலிருந்தே அவர் எனக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுத்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அவர் சிலிகான் வேலியில் வங்கி அதிகாரியாக இருக்கிறார். திருமணத்துக்குப் பிறகு நான் பொழுதுபோகாமல் இருப்பதைப் பார்த்து என்னை சாஃப்ட்வேர் படிக்க வைத்து அங்கு பணியாற்றவும் உதவினார். திருமணமாகி குழந்தை பிறந்த பிறகு படித்து வேலைக்குப் போனேன். எனக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார். குடும்பப் பிரச்சினைகளில் இருவரும் சேர்ந்தே முடிவுகள் எடுக்கிறோம். ஆண்டுதோறும் வெளிநாட்டுச் சுற்றுலா செல்வோம். அதற்குத் தடையில்லாதவாறு என்னுடைய நிகழ்ச்சிகளை வைத்துக் கொள்ள சொல்வதுதான் அவருடைய ஒரே கண்டிஷன். குடும்பத்தில் திருவாளர், திருமதி இருவரும் 50% 50% ஆக இருக்க வேண்டும். அப்போதுதான் குடும்பம் 100% மகிழ்ச்சியாக இருக்கும்.

இந்தியத் தம்பதிகள் } அமெரிக்கத் தம்பதிகள் உங்கள் பார்வையில்?

குடும்பங்கள் உலகம் முழுக்க ஒரே மாதிரிதான் இருக்கின்றன. அங்கேயும் மாமியார் சண்டை, நாத்தனார் சண்டை இருக்கிறது. ஒரே வித்தியாசம் அங்கே ஆங்கிலத்தில் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். சமயங்களில் 'தேங்க்ஸ் கிவ்விங் ஃபங்ஷன்' சண்டைக்கான ஒரு காரணமாக அமைந்துவிடும்.

அது என்ன தேங்க்ஸ் கிவ்விங் ஃபங்ஷன்?

அமெரிக்கர்களுக்கு கிருஸ்துமஸ்ஸýம் தாங்க்ஸ் கிவ்விங்கும் முக்கியமான விழாக்கள். கிருஸ்துமஸ் டிசம்பரில் வரும் அதற்கு முந்தைய மாதத்தில் அதாவது நவம்பர் கடைசி வியாழக்கிழமை நன்றி தெரிவிக்கும் விழா.

அமெரிக்காவில் வாழ்பவர்களுக்குச் செவ்விந்தியர்கள் அளித்த விழா இது. சோளத்தையும் வான்கோழியையும் விருந்துக்குப் பயன்படுத்துவார்கள். யாருக்கு நன்றி சொல்லி கெüரவிக்க நினைக்கிறோமோ அவர்கள் வீட்டுக்குச் சென்று இப்படி விருந்தளிக்க வேண்டும். இப்போதும் அமெரிக்கப் பெண்மணிகள் இந்த வருஷம் தேங்க்ஸ் கிவ்விங் எங்கள் பெற்றோருக்குத்தான் என்பார்கள். ஆண்கள் தங்கள் பெற்றோர் வீட்டுக்குத்தான் போக வேண்டும் என்பார்கள். நன்றி சொல்வதற்கு அவர்களுக்குள் போராட்டமே வெடிக்கும்.

திருமதி ஒரு வெகுமதி.... திருவாளர் திருமதி ஒப்பிட முடியுமா?

அது சினிமா.... இது டி.வி. அங்கு என்னை இயக்கினார்கள். இங்கு நான் இயக்குகிறேன். சினிமா கொஞ்சநாள் கழித்து டி.வி.க்கு வந்து விடுகிறது. டி.வி. நிகழ்ச்சிகள் சினிமாவில் வருவதற்கு வாய்ப்பில்லை.

தமிழ்மகன்

வீட்டில் இருந்தே விண்வெளி ஆய்வு!





விஞ்ஞானம் பல அறிய கண்டுபிடிப்புகளை விஞ்ஞானம் படித்த அறிஞர்களால் இன்றியும் நிகழ்த்தியிருக்கிறது. டைனமோ கண்டுபிடித்த மைக்கேல் ஃபேரடே, மரபியல் சோதனைகளை நிகழ்த்திய கிரிகெர் மென்டல் தங்கள் கல்லூரிகளில் அதற்கான விஞ்ஞானப் படிப்புகளைப் படிக்காமல் விஞ்ஞானிகள் என்று போற்றப்படுகிறவர்கள். சென்னை பாடியில் ஆதம் ஆரம்பப் பள்ளிக் கூடம் நடத்திவரும் ஜெகநாதன் பெனலன் அப்படிப்பட்ட ஒருவர்தான்.

""நான் ஒரு விசித்திரப் பிறவி. பகலெல்லாம் தூங்கி இரவில் கண்விழித்துக் கிடப்பேன். மண்ணுலகைவிட விண்ணுலகம்தான் எனக்கு அதிக பரிச்சயம்.

இருபது ஆண்டுகளாக என் அறையைப் பகிர்ந்து கொள்வது புத்தகங்கள்தான்'' என்று அவர் படுக்கையில் இறைந்து கிடக்கும் புத்தகங்களைக் காட்டுகிறார். விண்வெளி சம்பந்தமான ஆய்வறிக்கைகள், சஞ்சிகைகள், கார்ல்சேகன் புத்தகங்கள் என்று பாதியிடத்தைப் புத்தகங்கள் அடைத்துக் கொண்டிருக்கின்றன. இயல்பாக நமக்குள் கேள்வி பிறக்கிறது.

எப்படி உங்களுக்கு விண்வெளி ஆய்வில் ஈடுபாடு ஏற்பட்டது?

நான் பிறந்து ஒன்றரை வயதில் என் தாயார் இறந்து விட்டார். பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தேன். அம்மாவைக் கேட்டு அழும்போதெல்லாம் பாட்டி நிலாவைக் காட்டி "உங்க அம்மா அங்கதான் இருக்கா வந்துடுவா' என்பார். எனக்கு நிலாமீது மெல்ல மெல்ல ஈர்ப்பு ஏற்பட்டது. வானம் என்னுள் எல்லையற்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது.

யாருமற்ற நான், என் சொந்த அக்கா வீட்டில் தங்கிப் படித்தேன். பாலிடெக்னிக் படிப்பை முடித்துவிட்டு என் மைத்துனர் காமாட்ஷி, புலவர் குழந்தை, மன்னை நாராயணசாமி ஆகியோர் பழக்கத்தில் கலைஞரின் "பரப்பிரம்மம்' நாடகத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் பள்ளிப்பருவம் முடித்த இளைஞனாக இருந்தேன். அந்த நாடகத்தை 40 முறைக்கு மேல் நடத்தியிருக்கிறேன். சிவாஜி, கலைஞர் போன்றவர்களும் நடித்திருக்கிறார்கள். அது ஒரு கட்டம். பின்னர் வாழ்க்கை என்னைத் துரத்தியது. என் பாலிடெக்னிக் படிப்பை ஒட்டி பாடியில் தொழில்துறையில் இறங்கினேன். நிறைய சம்பாதித்திருக்க முடியும் என்றாலும் என் மனம் தொடர்ந்து அமைதியையும் விண்வெளியையும் நாடிக் கொண்டிருந்தது. பள்ளிக் கூடம் ஒன்று துவங்கி அதை என் மனைவியின் பொறுப்பில் விட்டுவிட்டு முழுநேர விண்வெளி ஆய்வில் இறங்கினேன்.

வீட்டில் இருந்தபடியே ஆய்வு செய்கிறீர்களா? இது எந்த வகையில் பயனளிக்கிறது?

வீட்டில் இருந்தே விண்வெளியைப் பார்ப்பதற்கான சகல வசதிகளையும் வைத்திருக்கிறேன். இவற்றைப் பாடியில் இன்டஸ்ட்ரி வைத்திருக்கும் பலர் எனக்கு ஸ்பான்ஸர் செய்திருக்கிறார்கள். என்னைப் போன்றவர்கள் சேர்ந்து "டேன் அஸ்ட்ரானமி அúஸôசியேசன்' நடத்தி வருகிறோம். அப்துல் கலாம், மு. அனந்தகிருஷ்ணன், முன்னாள் தமிழக அரசு செயலர் டி.வி. வெங்கடராமன் போன்ற பலர் எங்களுக்குப் பெரிய ஆதரவளித்துப் போற்றியிருக்கிறார்கள். நான் அந்த அமைப்பின் ஃபவுண்டர்

செகரட்டரி.

இதனால் இந்தியா முழுக்க இருக்கும் ஸ்பேஸ் அப்ஸர்வேட்டரியிடம் நல்ல தொடர்பு ஏற்பட்டது. வடமூலையில் இருக்கும் ஒருவரின் பார்வைக்குக் கிட்டாத ஒரு நட்சத்திரத்தைத் தென்பகுதியில் பார்க்க முடியும். அந்த மாதிரி சமயங்களில் அவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு அவர்கள் ஆராய விரும்பும் கோள்களையோ, நட்சத்திரத்தையோ எங்களை அப்ஸர்வ் செய்யச் சொல்லுவார்கள். எங்களுக்குத் தேவையானபோது அவர்களிடம் செல்வோம்.

உங்கள் அமைப்பின் வேறு செயல்பாடுகள் என்ன?

அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொடைக்கானலில் இருக்கும் ஸ்பேஸ் அப்ஸர்வேட்டரி, பிர்லா கோளரங்கம் போன்ற இடங்களிலும் ஆய்வுக்குக் குழுவாகச் செல்வோம். என்னுடைய கட்டுரைகள் பல பிர்லா கோளரங்கத்தின் பிரைவேட் சர்குலேஷன் இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. உதகையில் மலைச் சிகரங்களில் கூடாரம் அமைத்தும் ஆய்வுகள் மேற்கொள்வோம்.

லண்டனில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலும் எங்கள் அமைப்பைப் பதிவு செய்து வைத்திருக்கிறோம். எங்கள் கட்டுரைகள் தான். "தீஸிஸ்' வகையைச் சார்ந்தவை அல்ல. விஞ்ஞானிகளின் கட்டுரைகள் தீஸிஸ் எனப்படும். எங்களைப் போன்றோர் ஆய்வுகளை "ஹைபாதீஸிஸ்' வகை கட்டுரைகள் என்பார்கள்.

உங்களுடைய கட்டுரை களுக்குக் கிடைத்த வரவேற்பு ஏதாவது?

சூரியனிலிருந்து ஏராளமான நியூட்ரினோக்கள் வெளியாகின்றன. ஆனால் அவை பூமியை வந்தடைவதில்லை. என்னுடைய ஆய்வுக் கட்டுரை ஒன்றில் அவை பூமிக்கு நியூட்ரினோக்களாக வருவதில்லையே தவிர, அவை வேறு வடிவங்களாக இங்கு வந்து கொண்டுதான் இருக்கின்றன என்று எழுதியிருந்தேன். பென்சில்வேனியாவைச் சேர்ந்த டாக்டர் ராம்னட் டேவிஸ் என்ற விஞ்ஞானி அதே ஆய்வைச் செய்து, நியூட்ரினோக்கள், தாவோ நியூட்ரினோவாகவும் மூவி நியூட்ரினோவாகவும் உருமாறி பூமிக்கு வருவதாகச் சொன்னார். அவருக்கு 2006 ஆம் ஆண்டின் நோபல் பரிசு கிடைத்தது. இது என்னுடைய ஆய்வுக்குக் கிடைத்தப் பெருமையாக நினைக்கிறேன்.

இத் துறையில் நீங்கள் வியக்கும் இந்திய விஞ்ஞானிகள்...?

நிறைய இருக்கிறார்கள். ஆனால் மறக்கப்பட்டுவிட்ட விஞ்ஞானிகளைப் பற்றித்தான். என்னுடைய கவலை. 1921- ஆம் ஆண்டில் கொடைக்கானல் அப்ஸர்வேட்டரியில் தன் ஐந்தாண்டுகால ஆய்வுக்குப் பின் ஏ.ஏ.நாராயண ஐயர் என்ற விஞ்ஞானி வீனஸ் கிரகம் எதிர் கடிகாரச் சுற்றாகச் சுழல்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்.

அது வெள்ளைக்கார ஆராய்ச்சியாளர்களால் சிலாகிக்கப்பட்டு அவர்களின் பதிவேட்டிலும் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது இதுவரை யாராலும் எடுத்துச் சொல்லப்படவில்லை. "அஸ்ட்ரானமி இன் இந்தியா' என்ற நூலிலும் விடுபட்டுள்ளது. இந்நூல் புதுதில்லியில் உள்ள "இந்தியன் நேஷனல் சயின்ஸ் அகாடமி' வெளியிட்ட ஆவணநூலாகும்.வீனஸ் கிரகம் இடப்பக்கம் சுழல்வதை 1963-க்குப் பிறகு அங்குச் செயற்கைகோள்கள் அனுப்பிய பிறகுதான் அறிவித்தார்கள். இந்தப் பேட்டியின் மூலம் மறந்துபோன அந்த சாதனை வெளி உலகத்துக்குத் தெரிந்தால் அதுவே போதும்.

உங்கள் ஆய்வு மையத்தில் பொது மக்களை அனுமதிக்கிறீர்களா?

ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு எட்டுமணியிலிருந்து பத்துமணிவரை மக்களை அனுமதிக்கிறேன். இது தவிர "அஸ்ட்ரானமி ஆன் வீல்ஸ்' என்ற பெயரில் எனது ஆய்வுச் சாலையை தமிழகம் முழுதும் கொண்டு செல்ல இருக்கிறேன். அதை செப்டம்பரில் அப்துல்கலாம் துவங்கி வைக்க ஏற்பாடு செய்து வருகிறேன்.

தமிழ்மகன்

LinkWithin

Blog Widget by LinkWithin