ஞாயிறு, மார்ச் 20, 2011

சுஜாதாவின் சிருஷ்டி-4





"நீங்கதானா அது? தவறு.. நீங்கள்தானா அவர்?.. இதுதான் சரி.'' பிரியாவின் ஆச்சர்யத்தைத் திருத்திக் கொண்டிருந்தார் தமிழாசிரியர்.
அதற்குள் வசந்த் வெளிப்பட்டு "என்ன சார்.. வேற ஏதாவது மெடீரியல் வெச்சிருக்கீங்களா?'' என்றான். தமிழாசிரியர் மேல் துண்டால் வியர்வையைத் துடைத்தபடி உள்ளே வந்து உட்கார்ந்தார். "நீங்க எந்த ஆராய்ச்சியைப் பற்றிக் கேள்விப்பட்டேன். எனக்கும் சில ஐயங்கள் உண்டு... அதை முன் வைக்கலாம் என..''
தமிழாசிரியர் கதையில் உலகில் தமிழே பிரயோகத்தில் இருக்காது. இரண்டு பேர் ஆர்வமாக தமிழ் கற்றுக் கொள்ள வருவார்கள். பல்கலைக் கழகத்தில் அந்தத் தமிழ் பிரிவே அந்த இருவர் தமிழ் கற்க வந்ததால்தான் தப்பிப் பிழைத்து இருக்கும். நன்றாகக் கற்றுக் கொண்டு வருகிற வேளையில் இருவரும் வகுப்புக்கு வருவதை நிறுத்திவிடுவார்கள். தமிழ்த்துறையை அதோடு நிறுத்துவதற்கு ஆணை பிறப்பிக்க விசாரணை நடத்துவார்கள். இந்த நேரத்தில் வேறு இடத்தில் வேறு இருவர் தமிழ் பேசுவதை தமிழாசிரியர் கேட்பார். அவர்களுக்கு எப்படி தமிழ் தெரிந்தது என்று ஆச்சர்யமாக இருக்கும். தன்னிடம் தமிழ் பயின்றவர்கள்தான் அவர்களுக்குத் தமிழ் கற்பித்தார்கள் என்பதை அறிவார். உலகில் அவர்களுக்கு மட்டுமே தமிழ் தெரியும் என்பதால் அதை சங்கேத மொழியாக புரட்சி இயக்கத்துக்காகப் பயன்படுத்துவார்கள்.... இப்படி முடியும் கதை.
தண்ணீர் கொடுத்து உபசரிக்கும்போது, பிரியா அவரை எதிர்காலத்தில் இருந்து வந்தவராகவே பார்த்துக் கொண்டிருந்தாள். "இது அந்தத் தமிழாசிரியர் இல்லை. எனக்குப் பழைய தமிழ் சிறுபத்திரிகைகளை விலைக்கு விற்ற தமிழாசிரியர்.'' வசந்த் விளக்கினான்.
"புறநானூறு, அகநானூறுக்கெல்லாம் சுஜாதா உரை எழுதினார். அதிலே விளக்கம் போதவில்லை. சுருக்கமாகத் தருகிறேன் என்று சில உவமைகளை தவிர்த்துவிட்டார்'' என்றார் தமிழாசிரியர்.
கணேஷ், "நீங்கள் வசந்த் கட்சியா? நல்லது. பொதுவாக தமிழறிஞர்களுக்குச் சுஜாதாவைப் பிடிக்காது'' என்றான்.

"அதண் ஏறிந்தன்ன நெடுவெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல
ஓடி உய்தலும் கூடும்மன்
ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே' என்று ஒரு சங்கப் பாடல். இந்தச் செய்யுளுக்கு சுஜாதா என்ன உரை எழுதியிருக்கார்..?
"தோல் நிறமுள்ள
சேற்று நிலத்தில்
துரத்தப்பட்ட மான் போல
தப்பி ஓடிவிடலாம் என்றால்
வாழ்க்கை தடுக்கிறது.'
-அதற்கு இதுவா அர்த்தம்?'' தமிழாசிரியர் ஒரு முடிவோடுதான் வந்திருந்தார்.
"இதிலிருக்கிற எறிந்தன்ன, நெடுவெண் களர், ஒருவன், ஒக்கல் போன்ற வார்த்தைகளையெல்லாம் அப்படியே விட்டுவிட்டார்.''

"இதுபற்றி ஜெயமோகன் எழுதியதை படித்தேன்'' கணேஷ் சாதாரணமாகத்தான் அறிவித்தான்.
"யாரோ எழுதியதைப் படித்துவிட்டுப் பேசுவதாக நினைக்கிறீர்களா? தமிழ்படித்த சாதாரண குழந்தைகூட இந்தத் தவறைச் சுட்டிக் காட்டும்..''
அவருடைய கோபத்தில் இருக்கிற நியாயத்தை ஏற்றுக் கொள்ளும்விதமாக தலையசைத்துச் செவி சாய்த்தான். "ரொம்ப விளக்கமாகச் சொல்வதால் பல மாணவர்கள் விலகிப் போய்விடுகிறார்கள். இதெல்லாம் ஒன்றுமில்லை சாதாரணமாக படிக்கக் கூடியதுதான் என்று தோள்மீது கைபோட்டுக்கூட்டிக் கொண்டு வருவதற்கான முயற்சிதான் 401 காதல் கவிதைகள், புறநானூறு ஓர் எளிய விளக்கம் போன்றவையெல்லாம்.... ''
"அதுக்காக?''
"அதுக்காகத்தான்'' கணேஷ் குரலில் பிடிவாதம் தெரிந்தது.
வந்தவர் சிரித்தார். "எளிமையாக புரிய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை... பல தமிழறிஞர்கள் எழுதிய உரையைப் படித்து மகிழ வேண்டுமானால் நிறைய அவகாசம் தேவைப்பட்டது. இந்தக் காலத்தில் பொறுமையில்லை. அத்தகையவர்களை உணர்ந்து இது எழுதப்பட்டிருக்கலாம்''
"பின் தமிழறிஞர்களுக்காகவா அவர் இதை எழுதினார்? இதை ஆரம்பத்தில் படிக்கட்டும். பிறகு உ.வே.சா., வையாபுரிப்பிள்ளை, ச.வே.சுப்ரமணியம், தமிழண்ணலுக்குப் போகட்டும். ஒரு அபடைஸர் மாதிரிதான் இது. அகநானூறை அறிமுகப்படுத்தும்போதே "குறுந்தொகை சங்க காலத்தைச் சேர்ந்த நூல். இது ஒரு தொகை நூல். இப்போது கவிதைத் தொகுப்பு, கதைத் தொகுப்பு என்கிறார்களே அதுபோல்...' என்று எழுதியிருப்பதிலிருந்தே மிகவும் அறிமுக நிலையில் உள்ளவர்களுக்கானது என ஒதுங்கிக் கொள்வது தெரிகிறது.''
தலையசைத்து மறுத்தார் தமிழாசிரியர். வசந்த் தம் பாடு மிச்சம் என்று பிரியாவின் கண்களில் இன்னமும் இருக்கும் ஜீவனை ரசிப்பதில் இறங்கிவிட்டான்.
"குறுந்தொகை பாடல்களை செய்யுள்களாகப் பார்க்காமல் கவிதைகளாகப் பார்ப்பதற்கு சில சமயம் உரைக்காரர் தடையாக இருக்கிறார்.. என்று உ.வே.சா.வையே அல்லவா உரசுகிறார் உங்கள் சுஜாதா?'' தமிழாசிரியர் அண்ணாதுரைபோல சடுதி நேரத்தில் மூக்குப் பொடி போட்டதை கணேஷ் தவறவிடவில்லை.
"அடுத்த வரியிலேயே ஒவ்வொரு பாடலையும் ஆஸ்பத்திரி சுத்தத்துடன் பார்க்காமல் நவ கவிதைகளாக பார்க்க வைப்பதே இந்த நூலின் குறிக்கோள் என்று தெளிவாகச் சொல்லிவிட்டாரே.. இதில் ஆஸ்பத்திரி சுத்தத்தை எதிர்பார்க்காதீர்கள். இது தமிழ்க் குழந்தைகளுக்கானது. அரிச்சுவடி... மேலை நாட்டு மோகம் பிடித்து எரிகா ஜங் படிக்கப் போய்விட்டவர்களைக் கூட்டி வருவதற்கு..''
தமிழாசிரியர் ஆஸ்பத்திரி சுத்தத்தை ரசித்தார் போலத்தான் தெரிந்தது.
"குளிர்ந்த கடல் அலைகள் வெளிப்படுத்தும்
அயிரை மீன்களை
வெண் சிறகு நாரைகள் உண்ணும்
"மரந்தை' நல்ல ஊர்தான்.
தனியாக வாழும்போதுதான்
வருத்துகிறது-னு குறுந்தொகையில் ஒரு பாட்டுக்கு விளக்கம் எழுதியிருக்கார் பாஸ். நிறைய தனிமை... ஏக்கம்... தலைவன் எப்போது திரும்புவானோ என்ற தவிப்பு குறுந்தொகையில் நிறைய இருக்குது... அப்பவும் துபாய்க்கு வேலைக்குப் போயிட்டாங்களா பாஸ் எல்லாரும்?''
"காந்தளூர் வசந்த குமாரன் கதையில் நீ யவனன் விஷயத்தில் மாட்டிக் கொண்டதால் நான் பட்ட பாட்டை மறந்துவிட்டாயா? ஏதேன்ஸ் நகருக்கு வணிக நிமித்தம் போய் வந்திருப்பார்கள்.... இந்தியாவிலேயே வேறு நகரங்களுக்குச் சென்றிருப்பார்கள்.. போர்புரிய போயிருப்பார்கள்.. ஆ நிரை கவர வேண்டி போயிருக்கலாம்... தலைவன் எதற்காக பிறதேசம் போயிருக்கிறான் என்பதை மெல்லிசாகச் சொல்லியிருக்கிறார்கள்.''
"ஆனால் ஒரு விஷயம் பாஸ்'' வசந்த் தீவிரமாக ஏதோ ஒரு கேள்வியை சொந்தமாகக் கேட்க முற்படுகிறான் என்று தெரிந்தது.

(தொடரும்)

LinkWithin

Blog Widget by LinkWithin