புதன், டிசம்பர் 31, 2008

திரைக்குப் பின்னே- 14

நடிகையின் அம்மாக்கள்
நடிகைகளுடன் எப்போதும் அம்மாக்கள்தான் படப்பிடிப்புக்கு வருவார்கள். மிகச் சிலருடன்தான் அப்பாக்கள். தேவயானி, அம்பிகா- ராதா, சுவாதி, விந்தியா, சங்கீதா, த்ரிஷா என இப்போது ஞாபகம் வரும் பலரையும் சொல்லிக் கொண்டே போகலாம். இப்படி அம்மாவின் மடியிலேயே உட்கார்ந்து பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த நடிகைகள் திடீர் என்று ஒரு நாள் தனியாக வந்து அம்மாக்களை எதிர்த்துப் பேட்டி கொடுத்த சம்பவங்களும் நிறைய இருக்கின்றன.

’சங்கமம்' படத்தில் அறிமுகமான விந்தியாவை ’திருப்பதியில் இருந்து ஒரு லட்டு' என்று அட்டையில் போட்டு அலங்கரித்தது ஆனந்தவிகடன். ஏறத்தாழ எல்லாப் பத்திரிகையிலும் விந்தியாவும் அவர் அம்மாவும் சேர்ந்து அமர்ந்து அளித்த பேட்டிகள் வெளியானது. ஒரு நாள் இரவு அண்ணா சாலையில் தம் காரில் அமர்ந்து பரபரப்பாகப் பேட்டியளித்தார். என் தாய் என்னை தவறான வழியில் திசைதிருப்பப் பார்க்கிறார். அதனால் நான் அவரைப் பிரிந்து வந்துவிட்டேன். இனி எனக்கும் அவருக்கும் எந்த உறவும் இல்லை என்று கூறிவிட்டார். தொடர்ந்து அவருடைய அம்மாவும் "நான் அவளை தலை முழுகிவிட்டேன்" என்று அறிக்கை விட்டார். நடிகை விந்தியா ராத்திரி பத்துமணிக்கு இப்படி நடுரோட்டில் காரில் அமர்ந்து பேட்டியளிக்க வேண்டிய அவசியம் என்ன என்று தோன்றியது எனக்கு.
அதே போல தேவயானி தன் வீட்டு கேட்டை நள்ளிரவில் தாண்டிக் குதித்து ராஜகுமாரனை மணந்த போதும், நடிகை மந்த்ரா தன் பெற்றோரைக் குற்றம்சாட்டிவிட்டு தனியாக தன் சகோதரனுடன் வந்து தனி வீடு எடுத்துத் தங்கியபோதும் ’மாறன்' படத்தில் நடித்த ப்ரீத்தி என்ற நடிகை தன் பெற்றோர் தன்னை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகக் கூறியபோதும் எனக்குள் மிகப் பெரிய வினாக்குறி. இந்தியச் சூழலில் பெண்ணுக்குப் பெற்றோரைவிடப் பாதுகாப்பான உறவு இருக்கமுடியுமா? என.
வேறு எந்தத் தொழிலில் ஈடுபட்ட பெண்களைவிடவும் நடிகை என்று அடையாளப்படுத்தப்பட்ட பெண்ணுக்குத்தான் இது அதிகம் பொருந்தும் வினாவாக இருக்கிறது.





ரஹ்மானின் முதல் படம்!
ஆரம்பம் பிரகாசமாக இருந்தால்தான் எதிர்காலம் நல்லபடியாக இருக்கும் என்று (ஃபர்ஸ்ட் இம்ப்ரஸன் ஈஸ்த பெஸ்ட் இம்பரஷன்) சொல்லுவார்கள். இது எல்லாத் துறைக்கும் பொருத்தமான பொன்மொழியாக இருந்தாலும் சினிமா துறையில் முதல் அடியில் நிரூபிக்காதவர்கள் அடுத்து என்னதான் போராடினாலும் ஜெயிப்பது கல்லில் நார் உரிக்கிற கதைதான்.
சிவாஜிக்கு ’பராசக்தி', இளையராஜாவுக்கு ’அன்னக்கிளி', ரஜினிக்கு ’அபூர்வ ராகங்கள்', மாதவனுக்கு ’அலைபாயுதே' என்று அடித்தளம் அட்டகாசமாக அமைந்தது. பேஸ்மென்ட் ஸ்ட்ராங்காக இருந்தால் பில்டிங் கொஞ்சம் வீக்காக இருந்தாலும் தாக்குப் பிடிக்கும் என்பதற்கு இவர்கள் முக்கிய உதாரணம்.

முதல் படம் சுமார் வெற்றி அடைந்ததாலோ, தோல்வியைத் தழுவியதாலோ காணாமலேயே போய்விட்ட இயக்குநர்களும் நடிகர்களும் எத்தனை பேரோ? நிச்சயம் அது தமிழ் சினிமாவின் எழுபத்தைந்து ஆண்டுக்கால சரித்திரத்தில் வெற்றி கண்டவர்களைவிட மிக மிக மிக மிக மிக நீளமானதாக இருக்கும்.

ஆரம்பத்தில் தடுமாற்றமும் அடுத்தடுத்து வெற்றிகளை மட்டுமே பெற்ற நடிகர் என்றால் அது எம்.ஜி.ஆர். ஒருவர்தான்.

பழம்பெரும் பத்தரிகையாளர் மதிஒளி சண்முகத்தின் சகோதரர் சினி நியூஸ் செல்வம் என்பவர் ஒருமுறை சொன்னார். ஏ.ஆர்.ரஹ்மானின் முதல்படம் முதலில் வெளிவந்திருந்தால் அதன்பிறகு அவருக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு இருந்திருக்குமா? என்றார்.

ரஹ்மான் முதலில் இசையமைத்த படம் ’உழவன்'. இயக்குநர் கதிர் இயக்கிய அந்தப்படம் தோல்விப்படம். "அவர் எவ்வளவு திறமைசாலியாக இருந்தும் ’ரோஜா' முதலில் வெளியானதுதான் அவருக்கு இந்தத் திருப்பு முனைக்குக் காரணம்'' என்றார்.

மனிதனுடைய முயற்சிக்கும் திறமைக்கும் பின்னால் இப்படியான இடைஞ்சல்கள் இருப்பதைத்தான் விதி என்கிறோம்.


சத்யராஜின் வாக்குமூலம்

கேட்கும்போதெல்லாம் வரம் அருளும் இறைவன் மீது சத்யராஜுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் பேசும்போதெல்லாம் பத்திரிகையாளருக்குச் சுவாரஸ்யமான செய்திகளை அள்ளித் தருவதில் சத்யராஜுக்கு நிகர் சத்யராஜ்தான். மனதில் பட்டதைப் பட்டென்று போட்டு உடைப்பதில் மட்டுமல்ல; தன் சொந்த அனுபவத்தில் இருந்து பெற்ற பாடத்தையும் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொள்வார்.

என்ன சார் எப்படி இருக்கீங்க என்று பேச ஆரம்பித்ததுமே அது பேட்டியாக உருமாறிவிடும். "என்னோட அக்கா வீட்டுக்காரர் அமெரிக்காவில சயின்ட்டிஸ்ட்டா இருக்காரு. ஒரு தடவை அவர் என்ன சொன்னார்னா...' இப்படி ஆரம்பிப்பார்.

"என்னோட ரெண்டு பசங்களுக்குமே பிள்ளையார்னா யார்னே தெரியாது. குழந்தைல இருந்தே அப்படி வளர்ந்துட்டாங்க' என்பார்.

ஒரு முறை போன் செய்த போது "நான் கொடைக்கானல்ல இருக்கேன் சார். ஆமா... பத்து நாளா ஷூட்டிங் ஒண்ணுமில்ல. நமக்கு இங்க கெஸ்ட் ஹவுஸ் இருக்கு. குடும்பத்தோட வந்து தங்கிட்டேன்...'' இப்படிச் சொல்லிக் கொண்டே போனார். அவர் சொல்கிற ஒவ்வொரு வரியும் எனக்குச் செய்தி.

சத்யராஜின் மாமா அமெரிக்காவில் விஞ்ஞானியாக இருக்கிறார்... அவர் என்ன துறையில் விஞ்ஞானி.. அவர் எப்படி சொந்தம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

கொடைக்கானலில் எப்போது கெஸ்ட் ஹவுஸ் வாங்கினீர்கள்... ஏன் பத்து நாள்களாக ஷூட்டிங் இல்லை... மார்க்கெட் டல் ஆனதுக்குக் காரணம் என்ன? முக்கியமாகக் கொடைக்கானலில் சென்று தங்குவது ஏன் என்று கேள்வி அடுக்கலாம்.

பசங்களுக்கு அவங்க அம்மாவோட பக்தியில நாட்டமில்லையா? என்ன படிக்கிறாங்க? எந்த ஸ்கூல்ல படிக்கிறாங்க. படிப்பில எப்படி.. கேட்டுக் கொண்டே போகலாம்.

’தோழர் பாண்டியன்' படப்பிடிப்பில் இருந்தபோது "பத்து வருஷத்துக்குள்ள வாழ்க்கைல எவ்வளோ மாற்றம் சார்...'' என்று ஆரம்பித்தார்.

"எதற்காக இப்படிச் சொல்கிறீர்கள், சார்?''

"பொள்ளாச்சிக்கு ஒரு பங்ஷனுக்குப் போயிருந்தேன். கூட படிச்சவன் ஒருத்தன் விழாவுக்கு வந்திருந்தான். என்னைப் பார்த்து ’அர்ஜென்டா ஒரு நோட்டு வேணும்டா'ன்னான். ’திடீர்னு இப்படி வந்து கேட்டா நான் எங்கடா போவேன். மெட்ராஸுக்கு வாடா'ன்னேன். அவனுக்கு ரொம்ப அவசரம். ’இப்பவே வேணும்டா. பக்கத்தில யார்கிட்டயாவது வாங்கியாவது குடுடா'ன்னான். ’யாரும் அவ்வளவு ரூபா கையில வெச்சிருக்க மாட்டாங்கடா'ன்னு சொல்லிட்டேன். அவனுக்கு முகமே வாடிப்போச்சு. ’சரிடா'ன்னு கிளம்பிட்டான்.... தடுத்து நிறுத்தி ’அப்படி என்ன அவசரம்னு சொல்லேன்..' என்றேன். ’ஆட்டோவை சர்வீஸ் விட்டிருக்கேன்டா... நாளைக்கு முக்கியமான சவாரி. இப்ப காசு கிடைச்சா வண்டிய எடுத்துடுவேன்'. ’ஆட்டோ சர்வீஸுக்கு ஏண்டா அவ்ளோ ரூபா'ன்னு கேட்டேன். இவ்வளவு கேள்வி கேட்பதே அவனுக்குப் பிடிக்கவில்லை. அலுத்துக் கொண்டு ’என்ஜின் போர் பண்ணி... ஆயில் சர்வீஸ் பண்ணதுல ஆயிரம் ரூபா ஆயிடுச்சு' என்றான். எனக்கு ஆடிப் போய்விட்டது. அவன் கேட்டது ஆயிரம் ரூபாய். ஒரு நோட்டுன்னா எனக்கு ஒரு லட்சம் அவனுக்கு ஆயிரம் ரூபா.. ஒண்ணா படிச்சவங்களுக்குள்ள இப்படியொரு கணக்கு வித்தியாசம்.''

இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போவார். அவருடன் உரையாடி வாக்குமூலம் என்ற தொடரை உண்மை வார இதழுக்காகத் தொடர்ந்து எழுதினேன். என்னை அவரும் அவர் என்னையும் புரிந்து கொள்வதற்கு வாய்ப்பாக இருந்தது. முதிர்கன்னிகள் குறித்து நான் எழுதிய திலகமணிந்த விதவைகள் கவிதையின் சில வரிகளை அவர் இயக்கிய ’வில்லாதிவில்லன்' படத்தில் பயன்படுத்தினார். விடுதலை ராஜேந்திரன் விடுதலை நாளிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்த நேரம். அப்போது நிகழ இருந்த நாத்திக மாநாட்டுக்கு சத்யராஜை அழைத்து வரமுடியுமா என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். சத்யராஜை மாநாட்டுக்கு அழைத்து வந்தேன். "பெரியார் திடலுக்குப் பலமுறை சென்றிருக்கிறேன். ஆனால் பெரியார் திடல் மேடையில் என்னை முதன் முதலாக ஏற்றியது நீங்கள்தான்'' என்று சொன்னார் சத்யராஜ். பிறகு பெரியார் திடலில் அவருக்கு ’இனமான நடிகர்' பட்டம் வழங்கப்பட்டது. அதன் பிறகு பொதுச் செயலர் வீரமணிக்கு மிகவும் நெருங்கிய நண்பரானார். ’பெரியார்' படத்தில் பெரியாராக நடித்ததும்கூட வாக்குமூலம் எழுதப்பட்டதன் தொடர் நெருக்கத்தின் ஆதாரமாக இருக்கலாம்.
சில யூகங்கள் உண்மைக்கு நெருக்கமானவை, மகிழ்ச்சியளிப்பவை.

செவ்வாய், டிசம்பர் 30, 2008

புரூஸ் லீ தாத்தா

கடந்த முறை வந்து போன பிறகு கிராமத்தில் ஏற்பட்டிருந்த மகத்தான மாற்றம் என்றால் பேருந்து நிறுத்தத்தில் இருந்த டீக்கடை சாராயக் கடையாக மாறியிருந்ததுதான்.
அந்த நிறுத்தத்தில் அதிகபட்சமாக பஸ்ஸில் இருந்து இறங்கியது நாம்தானோ என்று சங்கரன் திடீரென நினைத்தான். ஏனென்றால் அவன் பஸ்ûஸவிட்டு இறங்கும்போதெல்லாம் அவனைத் தவிர வேறுயாரும் அதில் இருந்து இறங்கியதில்லை. ஒருவேளை நாம் மட்டும்தான் இங்கு பஸ்ஸில் இருந்து இறங்குகிறோமோ என்றும் நினைத்தான். எப்பவுமே இப்படி கடைசி பஸ்ûஸப்பிடித்துத்தான் ஊருக்கு வருவது என்று வழக்கமாகிவிட்டது. இந்த நேரத்தில் ஊர்க்காரர்களுக்கு வெளியே போய் வருவதற்கு என்ன வேலை இருக்கப் போகிறது?

"பட்ணத்தில இருந்தா வர்றே?'' என்ற வழக்கமான கேள்வியைக் கேட்டுவிடுவதற்காக பஞ்சாயத்து ஆபிஸ் படியில் உட்கார்ந்திருந்த தனுசு ரெட்டி ஆயத்தமானார். அவர் மெல்ல எழுந்து நின்று விசாரிப்பதற்கு முன்னர் ஒரு பத்து ரூபாயை அவர் கையில் திணிப்பதற்காக பாக்கெட்டைத் துழாவ ஆரம்பித்தான் சங்கரன். இது சங்கரன் படிக்கிற காலத்திலிருந்து ஏற்பட்ட பழக்கம். அப்போதெல்லாம் ஒரு ரூபாய்.

"உம் பையன்தாம்பா எனக்கு இப்ப தோஸ்த்து'' என்றார்.

"லீவு முடியுது கூட்டிக்கிட்டுப் போகத்தான் வந்தேன்''

"அதுக்குள்ளேயேவா?''

"ஆமா. இது அரை பரீட்சைதானே?''

கூடவே இரண்டு அடி எடுத்து வைத்துவிட்டு பிறகு பஞ்சாயத்து ஆபிஸ் பக்கமே போய் உட்கார்ந்துவிட்டார். ""காலைல வர்றேம்பா''
இன்றைக்கு நேற்றா வருகிறார்? நினைவு தெரிந்த நாளாக காலையில் வந்து திண்ணையில் அப்பாவிடம் அமர்ந்து ஒரு மூச்சு பயிர் பச்சை பற்றி பேசிவிட்டு, கூழோ, மோரோ ஒரு வாய் குடித்துவிட்டுப் போனால்தான் அது அவருக்கு நாள் கணக்கில் வரும்.
பையன்கள் இரண்டுபேர் வேலைக்குப் போகிறேன் பேர்வழி என்று போய்விட்டார்கள். இருக்கிற இரண்டு காணி நிலத்தை ஆளுக்குப் பாதியாகப் பிரித்து விற்றுவிட்டுப் போக நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நிலம் தனுசு ரெட்டி பெயரில் இருப்பதால் எப்போது மண்டையைப் போடுவார் என்பது எதிர்பார்ப்பு.
விடுமுறைக்கு வசந்தாவையும் முகிலனையும் கூட்டிவந்தபோது தனுசு ரெட்டி ரொம்பவும் குறைபட்டுக் கொண்டார்.

"பொண்டாட்டி செத்த அஞ்சாவது நிமிஷம் புருஷன் செத்துப் போயிடணும். இல்லாட்டி அவன் வாழ்க்கை நரகம்தாம்பா.''

சொன்னது போலவும் வழக்கம்போலவும் தனுசு ரெட்டியார் காலை பத்துமணிக்கெல்லாம் வந்தார்.
அப்பா முன்பு போல உழவு, உரம் என்று பெரிதாகப் பேசுவதில்லை.

"என்னய்யா அரிசி இது? எட்டு மணிக்கு சாப்பிட்டா பத்துக்கெல்லாம் பசியெடுக்குது? சிறுமணி, கார் அரிசி, நீருட் சம்பா... இதெல்லாம் காலைல சாப்பிட்டா அதோட ஏர் முடிஞ்சி வீட்டுக்கு வந்தாதான் லேசா பசிக்கும்... என்னமோப்பா தோசைங்கிறானுங்க, இட்லிங்கிறானுங்க.. எனுக்கு எதுவும் ஒத்துக்கிறதில்ல''

"இல்ல ரெட்டியாரே ... உலகமே மாறிப்போச்சு இப்ப. எல்லாம் இப்பவே நாத்து நட்டு அடுத்த நாளே அறுப்புக்கு வரணும்னு பாக்றான். நீ சொல்ற நெல்லெல்லாம் ஆறுமாசத்துக்கு பயிராவும்... அவசர யுகம்யா இது.''
-கொஞ்சநாள் முன்புவரை இந்த ரீதியில் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். இப்போது அப்பாவுக்கு அதுவும் போரடித்துப் போய் இன்னும் எவ்வளவு நாளைக்கு இதைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பது என தனுசு ரெட்டியாரின் பேச்சுக்கு "உம்' கொட்டுவதோடு சரி.
முகிலன் ஓடிவந்து "அப்பா, அப்பா இந்தத் தாத்தா புருஸ் லீயை அடுச்சிடுவாராம்பா'' மாபெரும் தவறைத் தகுந்த ஆதாரத்தோடு தவிடுபொடியாக்குகிற தொனி. மூன்றாம் வகுப்பிலேயே கராத்தே வகுப்பு. புருஸ் லீயை பீரங்கி கொண்டோ, வாளால் வெட்டியோ வீழ்த்த முடியாது என்பது அவனது தீர்மானம்.

சங்கரன் தனுசு ரெட்டியாரைப் பார்த்துச் சிரித்தான். "அம்மாவும் ஆமாங்கிறாங்கப்பா'' என்று வசந்தாவைப் பார்த்தான் முகிலன்.
பையனின் நிலைமையைப் பார்க்க பரிதாபமாகத்தான் இருந்தது.

நிலைமையை யூகித்த தனுசு ரெட்டி "முகிலா இங்க வாடா எப்படின்னு சொல்றேன். உங்க பூசினி எப்படி செத்தான்?... சிரிக்காத.. அவன் பேரு எனக்கு வாயில வர்ல. விஷம் வெச்சுக் கொன்னுட்டாங்கன்னு சொன்னே இல்ல?'' என்றார்.

"ஆமா..''

"என்னை எத்தினிவாட்டி பாம்பு கடிச்சிருக்குது தெரியுமா? என்னைக் கடிச்ச பாம்புதான் செத்துப் போகும். எனக்கு ஒர்ரொரு பாம்பு கடிக்கும்போதும் பலம் கூடிக்கிட்டே போகும்'' அவர் தன் முழங்கைக்கு மேலே சட்டையை மடித்துக் காண்பித்தார். தோல் பை என தொங்கிக் கொண்டிருந்தது அவர் காட்டிய பலம்.

"நிஜமாவாப்பா?''

"உங்கப்பனைக் கேட்டுப் பாரு... ''

சங்கரன் தலையசைத்தது முகிலனுக்குப் பிரமிப்பாகிவிட்டது.

தன் முன் தொள தொள சட்டையுடன் உட்கார்ந்திருந்த தாத்தாவைப் பார்த்தான்.

"விஷம் ஏறிச் செத்தவன் பெரிய ஆளா? நா பெரிய ஆளா சொல்லு?''
முகிலன் இந்தத் தாத்தாவிடம் வேறு என்னென்ன திறமைகள் ஒளிந்து கிடக்கிறதோ என யூகிக்க முடியாமல் திணறினான். நாம் அவர் உருவம் பொறித்த பனியனைப் போடாமல் புரூஸ் லீ படத்தைப் போட்டிருப்பது ஏன் என்ற இயல்பான சந்தேகம் வந்தது.

"ஒரு தடவை சமுத்திரத்தில எறங்கி நடந்தேன். நடக்கிறேன்.. நடக்கிறேன்.. நடந்துக்னே இருக்கேன். முட்டிக்காலுக்கு மேல தண்ணி ஏறவே இல்ல. ஒரு ராத்திரி ஒரு பகல் நடந்துட்டேன்னா பாத்துக்கியேன். நடுக்கடல். இந்தப் பக்கம் ஒரு கப்பல் போவுது. அந்தப் பக்கம் ஒரு கப்பல் போவுது. சில்லுனு காத்து. அண்ணான்டை கரையே வந்துடும்போல இருக்குது. அப்பவும் முழங்கால் ஆழம்கூட இல்ல. வெறுத்துப் போய் திரும்பி வந்துட்டேன். சாவு வரணும்னு இருந்தா டம்ளர்ல தண்ணி குடிக்கும்போது புரையேறி செத்துப் போறான். நடுக்கடல்ல போய் நாலு நாள் நின்னாலும் எனக்கு சாவு வரலே''

முகிலன் திகைப்பும் திகிலுமாக தாத்தாவைப் பார்த்துவிட்டு, உறுதிப்படுத்திக் கொள்ள அப்பாவைப் பார்த்தான்.

"குழந்தைகிட்ட அதையெல்லாம் ஏன் தாத்தா சொல்றீங்க?'' என்றாள் வசந்தா.
தாத்தா தன் சொந்தக் கதையோடு சோகக் கதையையும் கலந்து அடிப்பது வழக்கம்தான். சாவு பற்றி குழந்தைகளுக்குச் சொல்வது ஒருபுறம் என்றாலும் கடல் முழங்கால் அளவுதான் ஆழம் என்று ஏதாவது விஷப்பரீட்சையில் இறங்கிவிட்டானானால்?

``தப்பும்மா.. தப்பும்மா'' என்று தன் கன்னத்தில் தானே மெல்ல தட்டிக் கொண்டார். என்றாலும் முகிலனுக்குத் தாத்தாவிடம் ஈர்ப்பு ஏற்பட்டது ஏற்பட்டதுதான். அவன் தாத்தாவையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தான். சற்றைக்கெல்லாம் தாத்தாவும் வேறொரு சம்பவத்தைச் சொல்லுவதற்குத் தயாரானார்.

"கராத்துன்றீயே அப்படினா என்னது?''

முகிலன் புரிந்து கொண்டு "வெறும்கை'' என்றான்.

"வொரும் கைல சண்ட போட்றதா?''

"ஆமா''

"விளாம்பாளையத்தான் தெரியுமா? தோள் செக்கட்டைல பனைமரத்தையே சாச்சிடுவான்''

"எப்படி?''

"தோள்ல இடிச்சே பனை மரத்தை விழ வெச்சுடுவான். அப்பேர்பட்ட சாமார்த்தியக்காரன்''

முகிலின் மனதில் புருஸ்லீ கழன்று, தாத்தா வந்து பரவினார்.

"அவனுக்குக் கோவம் வந்தா பனை மரத்தையெல்லாம் புடுங்கி கிடாசிடுவான். அடப்பாவி.. இப்பேர்பட்ட சமாசாரத்தைக் கையில வெச்சுக்கிட்டு சாப்பாட்டுக்குக் கஷ்டப்பட்றியேனு நான்தான் அவனுக்கு ஒரு வழி சொன்னேன். பனைமரம் சாய்க்கிற வித்தைனு ஊர் ஊரா போய் சாகஸம் செய்ய ஆரம்பிச்சான். அப்புறம் அவனை அமெரிக்காகாரன் கூட்டிக்கினு போய்ட்டான். அமெரிக்காவுல பனை மரம் ஜாஸ்தியாச்சே... அதையெல்லாம் புடுங்கிக் கிடாசரத்துக்கு.. காரூ.. பங்களால்லாம் கொடுத்து ராஜா மாதிரி வெச்சிருக்காங்க அங்க..''
தாத்தா கோணி உதற ஆரம்பித்தால் இப்படித்தான் இப்படி அரிசியும் வந்து விழும் அதைவிட அதிகமாக தூசும் பறக்கும். நாம்தான் உண்மை எது பொய் எது என்று அன்னப்பட்சியாகப் பரித்துக் கொள்ள வேண்டும். எல்லோருமே கூடத்தைவிட்டு உள் அறைகளுக்குச் சென்றுவிட்டனர். அவருடைய சாதனைகளுக்கு செவி மடுக்க முகிலன் மட்டுமே மிச்சமிருந்தான். தவிர சங்கரின் அப்பா. அவர் கூடத்தின் ஒரு முலையில் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டு அரை நிஷ்டையில் கனவும் நிஜமும் கலப்படப்பட்டுக் கிடந்தது அவருக்கு. முகிலன் கேட்பது கனவில் மாதிரிதான் கேட்டுக் கொண்டிருந்தது.

"ஸீ லாம் ஆழமா இருக்காதா?""

"ஸீன்னா?''

"கடல் தாத்தா''

ஞாபகமில்லாமல் "அய்யோ... ரொம்ப ஆழமாச்சே?'' என்றார்.

"உங்களுக்கு கால் அளவுக்குத்தான் வந்துதுன்னு சொன்னீங்க''

"அதுவா? நான் தாயத்துகட்டியிருக்கன்ல?'' அரைஞான் கொடியில் அழுக்கேறிப் போயிருந்த தாயத்தை இழுத்துக் காண்பித்தார். அது அவர் சற்று புஷ்டியாக இருந்த நேரத்தில் கட்டியதாக இருக்க வேண்டும். அது நழுவி கீழே விழாமல் இருக்க அதன் மேல் வேட்டியை இறுக்கிக் கட்டிக் கொண்டார். அவருடைய இவ்வளவு சாகஸத்தையும் நம்பும்படி செய்வதற்கு அவரிடம் எஞ்சியிருந்தது மீசை மட்டுமே.

"ஏம்மா வசந்தா'' என்று குரல் கொடுத்தார் சங்கரின் அப்பா. "ரெட்டியாருக்கு கூழ் இருந்த ஒரு சொம்பு குடுக்கக்கூடாது?''

"இதோ தர்றேன் மாமா.'' வசந்தா கூழும் ஊறுகாய் மிளகாயும் கொண்டு வந்தாள். தனுசு ரெட்டி ஒரே மூச்சில் கூழை வாயில் சாய்த்துக் கொண்டார்.அவர் குடித்த கூழின் மீது மீசைக்கும் ஆசைதான்போலும். கூழோடு சேர்த்து மீசையை தடவிக் கொண்டபோது அது மேலும் விரைப்பாக நின்றது. "குடுக்கு வண்டி செஞ்சித்தர்றேன் வர்றீயா?'' என்று முகிலனை அழைத்துக் கொண்டு பின்கட்டுக்குப் போனார். நேற்று வெட்டிப் போட்ட பனங்காயில் இரண்டை பொறுக்கி எடுத்து பையன் ஓட்டி விளையாட வண்டி செய்ய ஆரம்பித்தார்.
சங்கரனின் அப்பா வசந்தாவை அழைத்து "நான் சொல்லித்தான் தெரியணுமா? அவன் ஒரு வா கூழுக்காகத்தான் இங்க வந்து இவ்வளவு பேச்சு பேசறான்.''

"இல்ல மாமா....வந்து..''

"ஒரு பானை கூழு குடிப்பான். பொண்டாட்டி செத்தபிறவு செஞ்சி குடுக்க ஆள் இல்ல... வந்தான்னா ஒரு சொம்பு குடுத்துடுங்க. அவனும் எவ்வளவு நாழி பேசுவான்?'' என்றார்.

திங்கள், டிசம்பர் 22, 2008

திரைக்குப் பின்னே- 13

வெங்கட் பிரபு என்கிற தனுஷ்!



நல்ல மழைநாள். 2002 ம் ஆண்டு என்று ஞாபகம். சாலிக்கிராமத்தில் இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் வீட்டுக்குத் திரைத்துறை தொடர்பாளர் மெளனம் ரவியுடன் சென்றிருந்தேன். கஸ்தூரிராஜா அப்போது இயக்கியிருந்த "துள்ளுவதோ இளமை' படத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.

"எல்லாருமே புதுமுகம்தான். சினிமாவில் சம்பாதிச்ச காசையெல்லாம் சினிமாவிலேயே விட்டாச்சு. இந்தப் படமும் காலை வாறிட்டா சொந்த ஊர்லபோய் செட்டில் ஆக வேண்டியதுதான்'' என்றார்.

மகள் டாக்டருக்குப் படித்திருப்பதாகவும் மகன் செல்வராகவன் என்ஜினீயரிங் படித்திருப்பதாகவும் இன்னொரு மகன் வெங்கட் பிரபுவை இந்தப் படத்தில் நடிக்க வைத்திருப்பதாகவும் சொன்னார். மகனின் படத்தைக் காட்டி "தேறுவானா?'' என்றார். மீசை முளைக்காத மெலிந்த சிறுவன். "ஸ்கூல் படிக்கிறமாதிரி கேரக்டர்லதான் நடிக்கிறான்'' என்று அவசரமாக விளக்கினார். படித்துக் கரையேறிவிட்ட மற்ற குழந்தைகளைவிட வெங்கட் பிரபு குறித்து அவருக்குக் கவலை அதிகமாக இருந்தது.

"கங்கை அமரன் பையன் பெயரும் வெங்கட் பிரபுதான். வேறு பெயர் வைத்தால் நன்றாக இருக்கும்'' என்றேன்.

"அவர் நடிப்பதாகத் தெரியவில்லையே?”

"அவர் நடித்து பாதியில் நின்று போன படம் ஒரு வேளை வந்தாலும் வரலாம். அதுவும் இல்லாமல் பெயர் சின்னதாக இருந்தால் சுலபமாக இருக்கும்'' என்று கருத்து சொன்னோம்.

வெங்கட் பிரபு என்றே இருக்கட்டும் என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டார். மாடியில் இருந்து கீழே வரும்போது வெங்கட் பிரபுவும் செல்வராகவனும் செஸ் ஆடிக் கொண்டிருந்தனர்.




வெளியே வந்து மழைக்காக ஒதுங்கிக் கொண்டிருந்தபோது இந்த வீட்டை அடமானம் வைத்துத்தான் படத்தை எடுத்திருக்கிறார் படம் ஓடவில்லை என்றால் கஷ்டம்தான் என்று மெளனம் ரவி சொன்னார். காரும் பங்களாவும் பேரும் புகழும் இழந்து மீண்டும் சொந்தக் கிராமத்தில் போய் வாழ நேர்வது எவ்வளவு துயரமானது. இந்த அவஸ்தையெல்லாம் இல்லாமல் சாதாரணமாகவே இருந்துவிட்டால் எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நம்மைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று பேசிக் கொண்டிருந்துவிட்டுக் கிளம்பினோம்.




வெங்கட் பிரபு நடிக்கும் "துள்ளுவதோ இளமை'என்றுதான் எழுதினேன்.




படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் மகனின் பெயரை தனுஷ் என்று மாற்றினார் கஸ்தூரிராஜா. படம் அபார வெற்றி. தனுஷ் அடுத்த இரண்டு படங்களில் இரண்டு கோடி சம்பளம் வாங்குவதாகச் சொன்னார்கள். "சுள்ளான்' படப்பிடிப்பில் இருந்த தனுஷுக்கு போன் செய்து, "நீங்கள் ரஜினி மகளைக் காதலிப்பதாக ஒரு செய்தி வந்திருக்கிறது. உண்மையா?'' என்றேன்."சார் அப்படிலாம் எழுதிடாதீங்க. ரஜினி ரசிகர்கள் என்னைச் சுளுக்கெடுத்துடுவாங்க. அதெல்லாம் ஒண்ணுமில்ல, விட்டுடுங்க சார்'' என்று கேட்டுக் கொண்டார்.




அடுத்த சில மாதங்களில் ரஜினி மகள் ஐஸ்வர்யாவுக்கும் தனுஷ் என்கிற வெங்கட் பிரபுவுக்கும் திருமணம் நடந்தது.




பொதுவாக தடாலடியாக மாற்றங்கள் நிகழ்ந்தால் சினிமாவில் நடப்பது மாதிரி இருக்கிறது என்று சொல்வது வழக்கம். அதிலும் சினிமாவில் இருப்பவர்களுக்குத்தான் அப்படிச் சினிமாவில் நடப்பது மாதிரி நடக்கிறதோ என்று தோன்றுகிறது.




ஒரு கோடீஸ்வரனின் கதை!






தயாரிப்பாளர் குஞ்சுமோன் சினிமாவின் உச்சபட்ச வெற்றியைக் கண்டவர். சூரியன், ஜென்டில் மேன், காதலன் என்று அவருடைய படங்கள் வரிசையாக மெகா வெற்றி பெற்று சாதனை படைத்தன. நடிகர்கள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள் என்று பலரை அறிமுகப்படுத்தியவர்.




இயக்குநர் ஷங்கர், ஒளிப்பதிவாளர் ஜீவா, நடிகர் அப்பாஸ், இயக்குநர் பவித்ரன், நடிகராக பிரபுதேவா என்று நிறைய சொல்லலாம். பாலிவுட் நடிகைகளை லட்சம் லட்சமாகச் செலவு செய்து தமிழுக்கு அறிமுகப்படுத்தினார். நக்மா, தபு, சுஷ்மிதா சென், மதுபாலா போன்றவர்கள் தமிழுக்கு உதடசைத்தார்கள். பெரிய பெரிய நகரங்களை செட்டுகளில் உருவாக்கினார். கோடி, கோடி ரூபாய்கள் செலவாகின.




மைசூரில் ‘காதலன்’ படத்தின் படப்பிடிப்பு. கவர்னர் வீடாக அப்படத்தில் மைசூரின் அரண்மனை ஹோட்டல் ஒன்று காட்டப்பட்டது. கவர்னர் மகள் மான்குட்டியைத் துரத்தி விளையாடுவதாகக் காட்சி. சென்னையில் கவர்னர் இல்லத்தில் மான்கள் இருக்கும் என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கும். கவர்னர் வீடு என்ற நம்பகத் தன்மைக்காக அப்படி மான் துரத்தல் காட்சி வைத்திருந்தார் ஷங்கர்.




ஆனால் மைசூரில் மான் ஏற்பாடு செய்ய முடியவில்லை. நாய்க்குட்டியோடு விளையாடுவதாகவோ, பூனைக் குட்டியோடு விளையாடுவதாகவோ காட்சியை மாற்றிக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று சென்னையில் இருந்த குஞ்சுமோனிடம் கருத்து தெரிவித்தார் தயாரிப்பு நிர்வாகி. குஞ்சுமோனுக்கு அந்தக் காட்சியில் மான் இருந்தால் நம்பகத்தன்மையாக இருக்கும் என்ற விவரம்கூட தெரிந்திருக்க நியாயமில்லை.




"ஷங்கர் மான் கேட்டா மான் கொண்டுவந்து கொடு'. அது பூனை கேட்டா மட்டும் பூனை கொடுத்தா மதி'' என்று போனை வைத்துவிட்டாராம் குஞ்சுமோன்.




அப்படி தாராளமாகச் செலவு செய்து படம் எடுத்தவர் குஞ்சுமோன். தன் மகன் அபியை கதாநாயகனாக்கி கோடீஸ்வரன் என்று ஒரு படத்தை எடுத்தார். நந்தகுமார் என்பவர் இயக்கத்தில், ரஹ்மான் இசையில், சிம்ரன் நாயகியாக நடிக்க படம் ஆடம்பரமாக உருவாகியது. படத்தை முடித்து இப்போது பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது இன்றும் அந்தப் படம் மட்டும் வெளியாகவே இல்லை. அப்படியொரு பொருளாதாரச் சிக்கல். அதன் பிறகும் கடந்த பத்தாண்டுகளில் அவரால் வேறு படங்களையும் தயாரிக்க முடியவில்லை.




தனுஷுக்கு ஏற்பட்ட திருப்புமுனை அபிக்கு ஏற்படாமல் போனதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?





ரோஜாவின் கண்ணீர்



நடிகை ரோஜா மிகக் குறுகிய காலம் மேற்கு மாம்பலத்தில் ஒரு சின்னஞ்சிறு ப்ளாட்டில் இருந்தார். ஏறத்தாழ 90 படங்களில் நடித்து முடித்திருந்த அவர் வாழ்வில் அப்போது அப்படியொரு துயரமான சூழ்நிலை. அவருடைய அண்ணன் கையெழுத்து போட்டுக் கொடுத்திருந்த ஒரு காசோலைதான் அவரை அப்போது அப்படி வாட்டியெடுத்துக் கொண்டிருந்தது. படத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த அவர், ஐந்து லட்ச ரூபாய் காசோலை ஒன்றை முன் தேதியிட்டுக் கொடுத்து கடன் வாங்கியிருந்ததாகவும் அதை அவர் செலுத்தாததால் பணம் கொடுத்திருந்த நபர் கோர்ட்டுக்கு இழுத்திருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்தி வெளியாகிக் கொண்டிருந்தது.




ரோஜா செக் மோசடி என்றே எல்லோரும் அதை எழுதினார்கள். அதைப் பற்றி வருத்தத்துடன் பேச ஆரம்பித்தவர். தொலைக்காட்சிகளில் செக் மோசடி செய்தியை நிமிடத்துக்கொரு தரம் தன்னுடைய போட்டோவைப் போட்டுக் கேவலப்படுத்துவதாகவும் கூறியவர், சட்டென அழ ஆரம்பித்துவிட்டார்.




அந்த ஹாலில் நானும் ரோஜாவும் ஒரு சமையல்கார அம்மாவும் மட்டும் இருந்தோம். ரோஜா அழுகையை நிறுத்த முடியாதவராகச் சிரமப்பட்டார். மன உறுதியோடு அந்த வழக்கைத் தான் எப்படி எதிர் கொள்ள இருக்கிறேன் என்று பேசிக் கொண்டிருந்தவர் இயல்பு மாறிப் போனார். முகம் சிவக்க, உதடுகள் துடிக்க கேவினார். "நான் இவங்களுக்கெல்லாம் என்ன பாவம் பண்ணேன். ஏன் என் வாழ்க்கையை இப்படி கேலியா பாக்றாங்க?''

எத்தனையோ துயரமான காட்சிகளில்கூட ரோஜா அப்படி அழுது நடிப்பதைப் பார்த்ததில்லை. கிளிசரின் இல்லாமல் நிஜமாக அவர் என் முன்னால் அழுது கொண்டிருந்தார். ஸ்டார்ட், கேமிரா, ஆக்ஷன் சொல்லாமலேயே ஒரு நடிகை அழுவது ஏறத்தாழ ஒரு ரசிகன் மனநிலையில் இருந்த எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. "கட்' சொன்னால் ஒருவேளை நிறுத்திவிடுவாரோ? என்ற குழப்பம்கூட எனக்கு இருந்தது. "தயவு செய்து அழாதீங்க. தைரியமா இருங்க' என்று மட்டும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தேன். டேப்பில் அத்தனையும் பதிவாகியிருந்தது. குமுதத்தில் அதைப் போட்டுக் கேட்டுவிட்டு நான் ஆறுதல் சொல்லும் தர்மசங்கடமான நிலைமையை எண்ணி பலரும் சிரித்தனர். ரோஜாவின் அழுகையில் நாடகத்தன்மை இருந்ததாகச் சிலர் நினைத்தனர்.

எனக்கு அப்படித் தோன்றவில்லை. "உடைந்து நொறுங்கும் தருணம்' என்பது எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கிறது.

புதன், டிசம்பர் 17, 2008

பென்டியம் மனிதர்கள்

இந்த வார தினமணி கதிரில் என் சிறுகதை

"மூன்று லட்ச ரூபாய் சம்பளத்தை உதறித் தள்ளிவிட்டுப் போகிறேன் என்கிறீர்களே.. அது கூட எப்படியோ போகட்டும். உங்களைப் போன்றவர்கள் இந்தப் பதவியை தவிர்ப்பது நாட்டுக்குப் பேரிழப்பு அல்லவா?'' மல்ஹோத்ரா நிஜமான வருத்தத்துடன் கேட்டார்.
சமீபத்தில்தான் தன் நாற்பதாவது வயதைக் கடந்த ராகுல் விஸ்வநாத் மிகக் குறுகிய காலத்தில் மரபணு சோதனை ஆய்வுக்குழுவின் தலைவராகப் பொறுப்புக்கு உயர்ந்தான். வேலையில் ஏனோ ஆர்வம் குறைந்துவிட்டது. இஷ்டம் போல ஆய்வுக்கூடத்துக்கு வருவான். யாராவது மடக்கித் திட்ட வேண்டும் போலத்தான் எந்த வேலையிலும் பொறுப்பில்லாமல் இருந்தான். ஆனால் யாரும் அவனை அப்படித் திட்டாமாலேயே இன்று ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டான்.

"என்னுடைய வாழ்வில் மிக்க அக்கறை உள்ளவர் என்பதால் ஒன்று சொல்கிறேன். இங்கு செய்து வரும் எல்லா ஆராய்ச்சிகளும் எனக்குக் குப்பையாகத் தோன்றுகின்றன. இதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. இந்த ஆண்டு மத்திய அரசு ஒதுக்கிய 1200 கோடி ரூபாயும் எள். பாழுங்கிணற்றில் போட்டுவிடலாம். போதுமா? இந்த மடத்தனத்துக்கு நானும் உடந்தையாக இருக்க விரும்பாமல்தான் விலகிக் கொள்கிறேன்.''
இத்தனை கடுமையான விமர்சனத்தை மல்ஹோத்ரா எதிர்பார்க்கவில்லை.

"மிஸ்டர் விஸ்வநாத்... தீர்மானிக்கும் பொறுப்பில் உள்ள உங்களைப் போன்றவர்கள் இப்படிப் பேசக் கூடாது. என்ன மாதிரி ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டும் என்று நீங்கள் கருத்து தெரிவிக்கலாமே?''

"மரபியல் சோதனையில் நாம் மிகவும் பின் தங்கியிருக்கிறோம். ஐரோப்பிய நாடுகளின் சாதனைகளை எட்ட வேண்டுமானால் இன்னுமொரு 25 ஆண்டு உழைப்பு தேவை. அப்புறம்தான் டாலி மாதிரி ஒரு ஆட்டுக்குட்டி செய்வோம். மரபு அணுவில் சர்க்கரை நோயை அகற்ற அதற்கடுத்து 20 ஆண்டுகள் இப்படியே போனால் மூளைத் தகவல் பதிவிறக்கம் செய்ய இன்னுமொரு 100 ஆண்டு ஆகிவிடும். யாராவது செய்துவிட்ட சாதனையைச் செய்து பார்க்கவே நமக்கு இன்னும் ஆற்றல் போதவில்லை.''

"உங்களைப் போன்றவர் என்ன செய்யலாம் என்று சொல்லலாமே?'' மல்ஹோத்ரா தாடியை ஆயாசமாகத் தடவி விட்டுக் கொண்டார்.
விஸ்வநாத் தன் பிரெஞ்ச் பேடு செவ்வகத்திந் நடுவே சிரித்தார்.

"நாம் ஆசைப்படுவதையெல்லாம் செய்து பார்த்துவிடுகிறமாதிரியா இருக்கிறது நம் சமூக அமைப்பு? அது எப்படி இருக்கிறதோ அதில் ஒரு அங்கமாக வாழ்ந்துவிட்டுப் போய்விடுவதுதான் மரியாதைக்குரியதாக இருக்கிறது. நாம் மாற்ற நினைத்தால் புரட்சிக்காரன், கலகக்காரன், சமூகவிரோதி என்று அகராதியில் நிறைய வார்த்தைகளை இதற்காகவே உருவாக்கி வைத்திருக்கிறார்கள். வேண்டாம் நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்பதை ஏற்றுக் கொள்ளவோ, புரிந்துகொள்ளவோகூட இங்கு யாரும் இல்லை.''

"நிச்சயம் நான் இருக்கிறேன்.''

"அப்படியானால் என் ராஜிநாமாவை ஏற்றுக் கொண்டதாக கையெழுத்துப் போட்டுவிட்டு என் வீட்டுக்கு ஒரு நடை வாருங்கள் சொல்கிறேன்.''
விஸ்வநாத் பதவி விலகியது தினமானி நாளிதழில் எட்டாம் பக்கத்தில் ஒற்றைப் பத்தி செய்தியாக வெளியானது. அதற்காகத்தான் காத்திருந்தது மாதிரி விஸ்வநாத் வீட்டுக்குப் போனார் மல்ஹோத்ரா.

பகட்டு தெரியாத எளிமையான வீடு. பெயருக்கு ஒரு தோட்டம் இருந்தது. குறுக்கே கொடிகட்டி துணி காயபோட்டிருந்தார்கள். பழைய டீசல் கார் ஒன்று சேறுகூட துடைக்கப்படாமல் இருந்தது. ரொம்ப விவரிக்காமல் சொல்ல வேண்டுமானால் பிழைக்கத் தெரியாதவன் என்று பெரிய எழுத்தில் எழுதி ஒட்டியிருந்தது.

"இதுதான் எனக்கு இனி சோதனைக் கூடம்'' என்று விஸ்வநாத் தன் இரண்டு கைகளையும் விரித்து அறிமுகப்படுத்துவது போல தன் வீட்டைக் காண்பித்தார்.
குஷன் மீது இருந்த செஸ் போர்டை நகர்த்தி வைத்துவிட்டு உட்காரச் சொன்னார்.

"அசப்பில் வீடுபோலவே இருக்கிறது'' என்றார் மல்ஹோத்ரா. அது பாராட்டல்ல, குத்தல்.
மனைவி விவாகரத்துப் பெற்றுச் சென்றுவிட்டதால் தன் இரண்டு குழந்தைகளையும் தன்னுடனே வைத்திருந்தார் விஸ்வநாத். பெண்ணுக்கு பத்து வயது. பையனுக்கு எட்டு வயது. அப்பாவைப் பார்க்கவும் யாரோ வந்திருக்கிறார்கள் என்ற ஆச்சர்யத்தில் அவர்கள் ஹாலுக்கு வந்தனர்.

"குழந்தைகள் பள்ளிக்குப் போகவில்லையா?''

"என் ஆராய்ச்சியின் முதல் கட்டமே எல்லா பள்ளிக் கூடங்களையும் மூட வேண்டும் என்பதுதான். அது முடியாது என்பதால் இவர்களைப் பள்ளியில் இருந்து நிறுத்திவிட்டேன். ஏதோ என்னால் முடிந்தது...''

"என்ன சொல்கிறீர்கள்... ஏன் இந்த விஷப்பரீட்சை?''

"ஐந்தாம் வகுப்பு படிக்கும் குழந்தைக்கான எந்தக் கேள்வியையும் அவளிடம் கேட்கலாம். ஏனென்றால் அவள் இப்போது படிக்க வேண்டியிருந்தால் ஐந்தாம் வகுப்புதான் படிப்பாள்.
இல்லையா இதோ இந்தப் புத்தகத்தில் எந்தப் பக்கத்தில் எந்தக் கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம்'' என்றார்.

அவர் காட்டியது என்ûஸக்கிளோ பீடியா பிரிட்டானிகாவின் 16}வது வால்யூம்.
ஏதோ பக்கத்தைத் திருப்பி வீராப்புக்காகக் கேட்டு வைத்தார். கேட்டு முடிப்பதற்குள் பதில் வந்தது. மல்ஹோத்ராவின் வியப்பை ரசித்தபடி ""நீங்கள் உங்கள் அறைக்குப் போங்கள்'' என்று குழந்தைகளை விடுவித்தார். அவை பொம்மை ரிமோட் கார் போல நடந்தன.

"என்ன அவர்களையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?''
மல்ஹோத்ரா குழந்தைகள் புகுந்த அறையிலிருந்து கண்களை விடுவித்து ""குழந்தைகளை என்ன செய்கிறீர்கள்?'' என்றார்.

"மூளையின் ஆற்றலில் ஒரு சதவீதத்தைக் கூட மனிதர்கள் பயன்படுத்துவதில்லை என்று உங்களுக்குத் தெரியும்தானே? பில்லியன் கணக்கான மூளைச் செல்கள் இருக்கின்றன. அதில் ஒவ்வொன்றிலும் இரண்டு லட்சம் தகவல்களை சேகரித்து வைக்க முடியும். ஆனால் என்ன நடக்கிறது? யாருக்கும் அவர்கள் வீட்டு போன் நம்பர் கூட ஞாபகம் இருப்பதில்லை. உலகில் உள்ள அத்தனை போன் நம்பரையும் சேமிக்க முடியக் கூடிய மூளை ஏன் ஓரிரு நம்பரோடு முடிந்து போகிறது?'' போன முறை பெட்ரோலிய அமைச்சராக இருந்தவர் யார் என்றால் ஏன் தடுமாற்றம்? இந்த எல்லா பிரச்சினையையும் தீர்த்து வைக்கப் போகிறேன்.""
மல்ஹோத்ரா குழந்தைகளை என்னடா செய்கிறாய் படுபாவி என்ற முகக்குறியை மாற்றாமல் கேட்டுக் கொண்டிருந்தார்.

"ஒலி அலைகளின் குறிப்பிட்ட அலை வரிசையில் மனித மூளை ஸ்தம்பித்து நிற்கிறது. அதுதான் மூளையைப் பயன்படுத்துவதற்கான சரியான தருணம். கிட்டத் தட்ட கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் போல அது தகவல்களைப் பதிந்து கொள்ளத் தயாராக இருக்கிறது. அப்போது கீர்த்தனையைப் பாடினால் அது டிவிடி போல பதிந்து போகிறது. ஒரு புத்தகத்தின் பக்கத்தைக் காட்டினால் அது ஸ்கேனர் போல அதாவது ஒரு புகைப்படம் போல பதிந்து போகிறது... அடுத்து எப்போது கேட்டாலும் அந்தப் பக்கத்தின் தகவல்களைத் திரும்பச் சொல்ல முடிகிறது. பரிட்டானிகா என்ûஸக்ளோ பீடியாவின் 26 வால்யூம்களையும் அப்படி என் மகளுக்குப் பதித்துக் கொண்டிருக்கிறேன். இப்போது 16 முடித்துவிட்டேன். சிம்பிள்...''

"அடப்பாவி மனிதர்கள் பாட்டரியால் இயங்குவதாக நினைத்துவிட்டாயா? உடம்பில் ஓடுவது ஒயர்கள் இல்லை, நரம்புகள்... ரத்தமும் சதையும் வேறு... சிலிக்கான் சிப்புகள் வேறு''

"அடிப்படை ஒன்றுதான். இதில் எந்தச் சிக்கலும் இல்லை. என் மகள் அனிதா வழக்கம் போலத்தான் இருக்கிறாள். அதையும் சோதித்துவிட்டேன். இட்லி, சப்பாத்தி சாப்பிடுகிறாள். டி.வி. பார்க்கிறாள்... காலண்டரி கிழிக்கிறாள் எல்லாமே சரியாகத்தான் இருக்கிறது.''

"பையன்?''

"நல்ல கேள்வி... மனிதர்கள் என்று பொதுவாகச் சொல்வதே தவறுதான். ஆண்கள் வேறாகவும் பெண்கள் வேறாகவும் இருக்கிறார்கள். ஆண்களுக்கு வேறு மாதிரியும் பெண்களுக்கு வேறு மாதிரியும் போதிக்க வேண்டியிருக்கிறது. பள்ளிக் கூடங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுவேறுவிதமாகப் போதிக்க வேண்டியிருப்பதன் அவசியம் இருக்கிறது.''

"எப்படி?'' கேள்வியில் ஆர்வத்தைவிட விபரீதத்தைத் தெரிந்து கொள்ளும் நோக்கம்தான் அதிகம் தொனித்தது.

"ஆண்களின் மூளை லாஜிக் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. மேற்கே இத்தனை கிலே மீட்டர் தூரம் சென்றால் பூந்தமல்லி வரும் என்று தெரிந்து விட்டால் அது சைதாப்பேட்டை மார்க்கமாகச் செல்வதா, வடபழனி மார்க்கமாகச் செல்வதா, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் செல்வதா என்று மூளையில் ஒரு கணக்கு உருவாகிவிடுகிறது. புறப்படும் இடம், ட்ராபிக்ஜாம் பொருத்து எந்தச் சாலையில் செல்வது என்று ரூட் உருவாகிவிடும். பெண்களுக்கு வடபழனி மார்க்கம் வழியாகப் பழகிப் போனால் அதிலேதான் செல்கிறார்கள். அல்லது அதையேதான் விரும்புகிறார்கள்.''

"எத்தனை பேரிடம் கணக்கெடுத்தாய்?''

"பார்த்தாயா?... ஒரு உதாரணத்துக்குத்தான் சொல்கிறேன். அதற்காக பூந்தமல்லி செல்லும் பெண்ணையெல்லாம் விசாரிக்க முடியுமா? நான் சந்தித்தப் பெண்களின் பொது குணத்தை வைத்துச் சொல்கிறேன்... ஏனென்றால் அந்த முழுப் பாதையும் ஒரு புகைப்படம் போல மனதில் இருக்கிறது. அதில் சென்றால் இந்த இடத்தில் இந்தக் கடை இருக்கும், இந்த இடத்தில் ஒரு பூக்காரி இருப்பாள், இந்த இடத்தில் ஒரு மரம் விழுந்து கிடக்கும், இந்த இடத்தில் ஒரு சிவப்புக் கட்டடம் இருக்கும் என்று முழுப்பாதையையும் அவர்கள் மூளையில் போட்டோ எடுத்துவிடுகிறார்கள். ஆண்களுக்கு இலக்குதான் முக்கியம் "பூந்தமல்லிதானே... எட்டு மணிக்குள்ள வந்திட்றேன்' என்கிறார்கள். அவர்கள் மூளையில் நேரடியாக பூந்தமல்லி விரிகிறது."

"பையனை என்ன செய்தாய்?''

"நீ என்ன வந்ததிலிருந்து குற்றவாளி போலவே பேசுகிறாய்? நான் செய்வது சமூகத்துக்கு நல்லது என்று புரியவில்லையா உனக்கு?''

"முயற்சி செய்கிறேன். சொல்''

"உதாரணத்துக்கு செஸ் போர்டில் எத்தனை லட்சம் நகர்வுகள் செய்ய முடியும் என்று நிகழ்தகவு கணக்கு இருக்கிறது. இதை என் இரு குழந்தைகளுக்கும் அந்த அலைவரிசையில் சொல்லிக் கொடுத்தேன். பெண் ஏறத்தாழ எல்லா நகர்வுகளையும் சித்திரம் போல உள்வாங்கிக் கொண்டாள். நீ வேண்டுமானால் விளையாடிப்பார். நான்காவது நகர்வில் வீழ்த்தப்படுவாய்... ஏன் காஸ்ப்ரோ, விஸ்வநாதன் ஆனந்த்... யாரை வேண்டுமானாலும் அழைத்து வா... அவர்களுக்கும் அதே கதிதான். என் மகளை யாரும் ஜெயிக்க முடியாது. பையன் அவனாக ஆட ஆரம்பிக்கிறான்... அதனால் தோற்றுப் போகிறான். லாஜிக் கூர்மையாவதற்கு வேறு முறையைக் கையாள இருக்கிறேன்.''

மல்ஹோத்ரா கிட்டத் தட்ட இங்கிருந்து தப்பித்தால் போதும் என்ற மனநிலையில் இருந்தார். நம்மை ஒரு அறையில் போட்டு பரிசோதிக்க ஆரம்பித்துவிடுவானோ என்ற அச்சம் கண்களில் தெரிய ஆரம்பித்தது.

"நீ சொல்வதைப் பார்த்தால் பார்த்தால் எல்லோரும் பென்டியம் ஃபோர் கம்ப்யூட்டர் மாதிரி ஒரே மாதிரி ஆகிவிடுவார்களே...?''

"எல்லோரும் ஒரே திறன் உடைய இசை வித்வான்களாக இருப்பார்கள், எல்லோரும் உயர்ந்த தரத்தில் கவிதை எழுதுவார்கள், சுருக்கமாகச் சொன்னால் எல்லோரும் ஒரே மாதிரி புத்திசாலியாக இருப்பார்கள். சமத்துவம்தானே வேண்டும்?''

மல்ஹோத்ராவுக்கு நல்லது மாதிரிதான் தோன்றியது. "வாழ்த்துகள் விஸ்வநாத்... நான் கிளம்பறேன்...''

குழந்தைகளை அழைத்து "மாமாவுக்கு டாடா சொல்லுங்க'' என்றார் விஸ்வநாத்.
குழந்தைகள் கால்களை கழுத்துவரைத் தூக்கி மேலும் கீழும் ஆட்டினார்கள். மல்ஹோத்ரா திடுக்கிட்டு பின் நகர்ந்தார்.

விஸ்வநாத் மெல்ல புன்னகைத்து குழந்தைகளை நோக்கி ""பின்னங்கால் அல்ல, முன்னங்கால்...'' என்றார்.

குழந்தைகள், காலை இறக்கிவிட்டு கைகளால் ""டாடா'' என்றனர். கட்டளையின் படியான நகர்வு தெரிந்தது.

"சில நேரங்களில் இந்த மாதிரி சின்னக் குழப்பங்கள் ஏற்பட்டுவிடுகின்றன. பதிவிறக்கத் தவறுகள்தான் காரணம்.. சரியாகிவிடும்'' விஸ்வநாத் சாதாரணமாகச் சொன்னார்.

"ஓ அப்படியா?'' மல்ஹோத்ரா ஆச்சர்யப்பட்டார் என்று சொல்ல முடியாது அதில் மெல்லிய அலறல் ஒளிந்திருந்தது.

காரை சாலைக்குத் திருப்பியதும் முதல் வேளையாக போலீஸ் கமிஷனருக்குப் போன் போட்டார் மல்ஹோத்ரா.

"ஸôர் இரண்டு குழந்தைகளை உடனடியாகக் காப்பாற்ற வேண்டும். முகவரியா..? ம் குறித்துக் கொள்ளுங்கள்... ''

வியாழன், டிசம்பர் 11, 2008

வார்த்தையுள் ஒளிந்திருக்கும் கிருமி

உயிர்மையில் டிசம்பர் மாதம் வெளியான என் சிறுகதை

சொல்லப்போனால் நான்கு நாட்களும் அவர்களுக்கு ஒரு சிங்கமும் கிடைக்கவில்லை. "அசாமில் சிங்கம் இருப்பதாக யார் சொன்னார்கள்' என்றான் ஆல்பர்ட். "ஆப்ரிக்காவைவிட்டால் குஜராத்தின் கிர் காடுகளில் சில எஞ்சியிருக்கின்றன. அசாமில் இருந்தவற்றை எப்போதோ வேட்டையாடி முடித்துவிட்டார்கள்' என்றான். மற்ற மூவருக்கும் நப்பாசை.

கிழக்கு இமயமலை அடிவாரத்தின் அடர்த்திபற்றி கேட்டிருந்தாலும் பிரம்மபுத்ராவின் பேரிரைச்சலோடும் குளிரோடும் அதை அனுபவிக்கும்போது பிரமிப்பாகவும் அச்சுறுத்துவதாகவும் இருந்தது. துணைக்கு திஸ்பூரிலிருந்து இரண்டு பேர் வந்திருந்தார்கள். இவர்களின் காமிரா, சமையல் பாத்திரங்களை இறக்கி வைப்பதும் மீண்டும் ஏற்றுவதும் அவர்களின் வேலை. ஆங்கிலம் அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. கிரிஸ்டியன் மிஷனரிகள் செய்த உருப்படியான வேலை. கீழ்படிதலுள்ள நம்பிக்கையான ஆசாமிகள். ஆனால் அதிகமாகப் புகையிலைப் பயன்படுத்தினார்கள். வந்த அன்று ஆல்பர்ட் அதை ஒரு இழு இழுத்துவிட்டு ஐந்து மணி நேரம் பிணம் போல கிடந்தான்.

கெய்தாச்சூ சோமாலியாவைச் சேர்ந்தவன். பிரெய்ன் மற்றும் வில்லியம் சிட்னியில் இருந்து வந்தவர்கள். ஆல்பர்ட்.. லண்டன். கெய்தாச்சுவுக்கு ஆப்ரிக்கக் காடுகளில் இருந்த பரிச்சயம் இங்கு பயன்படும் என்று நினைத்தது பயனளிக்கவில்லை. சமவெளி காடுகளுக்கும் மலைக்காடுகளுக்கும் அதிக வித்தியாசம் இருந்தது. எதிர்பார்த்ததைவிட அதிகக்குளிர். ஆற்றின் இரைச்சல் காட்டின் தீராத அடையாளம்போல எப்போதும் கேட்டுக் கொண்டிருந்தது. நம்பிக்கை இழந்தவனாகவும் குளிர் தாங்க முடியாதவனாகவும் வில்லியம் அடிக்கடி குடித்துக் கொண்டிருந்தான். ஜீப்பை நிறுத்திவிட்டு ஓர் உச்சிப் பகுதியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தபோது பைனாகுலரை ஆல்பர்ட்டிம் கொடுத்து அங்கே பார் என்றான். அந்த இடம் காய்ந்த புல் புதராக இருந்தது. அதன் மஞ்சள் நிற அசைவு சிங்கத்தை ஞாபகப்படுத்துவதாக இருந்தது. பைனாகுலரை எவ்வளவு சரிபடுத்திப் பார்த்தபோதும் அங்கு சிங்கம் இருப்பதற்கான அடையாளம் தெரியவில்லை. இந்த லட்சணத்தில் மேற்கொண்டு போனால் டாகுமென்ட்ரி எடுத்தது மாதிரிதான்.

பைனாகுலரில் பார்த்தபடி நாலாபக்கமும் சுழன்றான் ஆல்பர்ட். சற்றும் எதிர்பாராதவிதமாக அவன் கால் இடறினான். அது ஓர் அதள பாதாளம். சேற்றில் சறுக்கி மரக்கிளைகளில் சிக்கி, பாறைகளில் மோதி அவன் அந்தக் கானகத்தின் இருண்ட பகுதியில் குற்றுயிரும் குலையுயிருமாகத் தூக்கி வீசப்பட்டான். அதிகமாகக் குடித்திருந்ததாலும் நிறைய காயங்களினாலும் அவன் மூர்ச்சையாகிக் கிடந்தான். அவன் நான்கு நாட்களாக எதற்கு ஆசைப்பட்டானோ அது அவனுக்கு பத்தடி சமீபத்தில் இருந்தும் அவன் நினைவின்றிக் கிடந்தான். அவன் தூக்கி ஏறியப்பட்டது ஒரு சிங்கத்தின் குகை வாசலில். சிங்கமும் அவனுக்காகவே காத்திருந்தது போல தலையை லேசாக உயர்த்திப் பார்த்துவிட்டு அவனாக எழுந்திருக்கட்டும் என்று காத்திருந்தது.

இரவு முடிந்து பகல் பொழுது தன் கிரணங்களால் கானகத்தின் இருட்டுக்குள் நூலென நுழைந்தது. ஆல்பர்ட் முனகலோடு கண்களைத் திறந்தான். ஈரமான இடத்தில் அவன் உடல் நனைந்து பழுத்து நடுங்கிக் கொண்டிருந்தது. சற்று தள்ளி தன் கண்களைச்சற்றே திறந்து அவன் பக்கம் திரும்பியது சிங்கம். பதறிப்போய் எழுந்திருக்க நினைத்தான். அவனால் முடியவில்லை. காலிலோ, முதுகிலோ பயங்கரமான காயம் இருப்பதை உணர முடிந்தது. மார்பிலும்கூட வலித்தது. நிம்மதியாக கூவிக் கதறவேண்டும் என்று அவன் நினைத்தான். அந்த வலிக்கு அப்படி அழுதால்தான் ஆறுதலாக இருக்கும். எதிரில் இவ்வளவு பெரிய சிங்கம் உட்கார்ந்திருக்கும்போது அது எப்படிச் சாத்தியம்? நாம் மயக்கத்தில் இருந்தபோதே நம்மை இது சாப்பிட்டிருக்கலாமே என்று தோன்றியது. அப்படியே சிங்கத்தின் கண்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். அது பெரிய கொட்டாவிவிட்டது. சாப்பிடத்தான் வாயைத் திறந்ததாக அஞ்சித் தரையில் சில அங்குலம் நகர்ந்தான் ஆல்பர்ட்.

சிங்கம் எழுந்து அவனை நோக்கி வந்தது. ஆறடி அகலம் இருக்கும் என்று தோன்றியது.
அருகில் வந்து "பார்த்து வரக்கூடாது?'' என்றது.

பேசியது சிங்கம் தானா இல்லை பிரமையா, விழுந்த அதிர்ச்சியில் சித்தம் கலங்கிவிட்டதா என்று சந்தேகமாக நகர்ந்து குகைச்சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தான்.
சிங்கம் உட்பக்கம் திரும்பி "இவருக்கு ஏதாவது சாப்பிடக் கொடு'' என்றது. நிச்சயமாக பிரமையில்லை. சத்தியம். நிஜம். தெளிவாக ஆங்கிலம் பேசுகிறது சிங்கம். வாட்டிய நீர்வாத்து இறைச்சியை இழுத்து வந்து வைத்தது ஒரு பெண் சிங்கம். பெரிதும் சிறிதுமாக வேறு சில சிங்கங்கள் அங்கே இருப்பது அப்போதுதான் தெரிந்தது.
வாட்டிய இறைச்சி, கணவனுக்குக் கட்டுப்பட்ட பெண் சிங்கம், ஆங்கிலம் எல்லாமே தலைவெடிக்கும் புதுமையாக இருந்தது.

"உனக்கெப்படி ஆங்கிலம் தெரியும்?'' என்றான் ஆல்பர்ட்.

"மனிதர்களின் பேராசையைப் புரிந்து கொள்ள எனக்கு வேறு வழி தெரியவில்லை. இந்தப் பாழாய் போன மொழியைக் கற்க நான்பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஏதற்காக மனிதன் இவ்வளவு வெறியனாக இருக்கிறான் என்பது எங்கள் வன விலங்குகள் எதற்குமே புரியாமல் இருந்தது. ஓயாமல் மனிதன் காட்டின் மீதே குறியாக இருக்கிறான். போகிற போக்கில் எங்கள் இனத்தை வெட்டிச் சாய்க்கிறான். சுட்டுப் பொசுக்குகிறான். மரங்களை வெட்டுகிறான். காட்டு நிலங்களை அகழ்ந்து கனிம வளங்களைச் சுரண்டுகிறான். அணைகள் கட்டுகிறான். காடு, மனிதனுக்கு பைத்தியக்காரன் கையில் கிடைத்த வெடிகுண்டு போல இருக்கிறது. சாப்பிட்டுக் கொண்டே கேள்... என்னைக் காட்டு ராஜா என்று காலமெல்லாம் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்குக் கதைச் சொல்லி வருகிறீர்கள். என்ன பிரயோஜனம்? ஒரு ராஜா செய்யக் கூடிய எந்தப் பணியையும் என்னைச் செய்யவிடுவதில்லை நீங்கள். கையையும் காலையும் கட்டிப் போட்டுவிட்டு காட்டாற்றில் நீந்தச் சொல்கிறீர்கள். உங்களின் வாழ்நிலங்களில் நாங்கள் வந்தால் நீங்கள் அனுமதிப்பதில்லை. உங்கள் வாழ்நிலம் என்று சொல்வதே தவறுதான். அதுவும் எங்கள் வாழ்நிலம்தான். அதாவது நம்முடைய வாழ்நிலங்கள். என்ன நடந்தது? மெல்ல மெல்ல அவற்றை நீங்கள் உங்களுடையது என்று ஆக்கினீர்கள். இப்போது அதையும் வைத்து வாழத்தெரியாமல் அதிலும் எங்கள் நாடு.. உங்கள் நாடு என்று பிரிவினைகள். நாட்டுக்குள் என் வீடு உன் வீடு என்று பிரச்சினைகள்... பாகப் பிரிவினைக் கொலைகள். எப்படியோ உங்களுக்கான இடத்தில் வாழ்ந்துவிட்டுப் போங்கள். இங்கே ஏன் வருகிறீர்கள் என்பதுதான் என் கேள்வி. ஒரு காட்டு அரசன் இதைக்கூட கேட்கக் கூடாதா?''
நீர்வாத்தின் இறைச்சி லகுவாக உள்ளே இறங்கிக் கொண்டிருந்தது. உப்பில்லாதது பெரிய குறையாகத் தெரியவில்லை. சிங்கம் மிக நியாயமான கேள்வியாகக் கேட்டுக் கொண்டிருந்தது. வெறுமனே தலையை மட்டும் அசைத்துக் கொண்டிருந்தான்.
"அதோ தெரிகிறதே அது பாக்சைட் ஆலை. இதோ இந்தப் பக்கம் புனல் மின் நிலையம். காட்டை இப்படி வளைத்துப் போட்டுவிட்டீர்கள். நீங்கள் எங்கு போகிறீர்களோ அங்கெல்லாம் சாலை போட்டு கறுப்பு நிறத்தில் ... அது என்னம்மா..? ம்ம்.. தார் சாலை போடுகிறீர்கள். சகிக்கவில்லை. அது காட்டைக் கிழிக்கிற மாதிரி இருக்கிறது. எங்கள் பாதையில் அது குறுக்கிட்டால் ஒழிய அதில் நாங்கள் காலை வைப்பதில்லை. வைக்கும்போது உடம்பே கூசுகிறது. நீங்கள் சாலை போடுவதை எங்களுக்கு உதவி செய்வதாக நினைக்கிறீர்களா இரவு நேரங்களில் நாங்களும் அதைப் பயன்படுத்திக் கொள்வோம் என்று நினைத்தால் அது தவறு. அது எங்களின் வழி அறுக்கும் இம்சை. நீங்கள் எங்கள் வலியை, எங்கள் கோரிக்கையை எப்போதும் புரிந்து கொள்ள முயற்சித்ததே இல்லை. அதனால்தான் நாங்கள் உங்களுக்குப் புரிய வைக்கிற மாதிரி உங்கள் மொழியையே கற்க நினைத்தோம். இங்குள்ள பழங்குடி மக்களுக்கு மருத்துவ சேவையும் கல்வியும் தருவதற்காக 10 ஆண்டுகளுக்கு முன்பு குழு ஒன்று வந்தது'. ஸ்டீபன் ஜார்ஜ்தான் தலைவர். நல்ல மனிதர். எங்கள் பிரச்சினையைப் புரிந்து கொண்டு எங்களுக்கு மொழியைக் கற்பித்ததோடு கடைசி வரை எங்களுடனே வாழ்ந்து மறைந்தார்''' பேசிக் கொண்டே அது பார்த்த திசையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மண் மேடு தெரிந்தது. சிங்கக் குட்டிகள் சற்றே சினேகமாகி ஆல்பர்ட்டின் மேல் வந்து உட்கார்ந்து விளையாட ஆரம்பித்தன. அவன் கையில் கட்டியிருந்த வாட்ச், அணிந்திருந்த பூட்ஸ் போன்றவற்றை வினோதமாகப் பார்த்தன. "அவருக்கு அடிபட்டிருக்கிறது. தொந்தரவு செய்யாதீர்கள். கொஞ்சம் உடம்பு சரியானதும் நம் மூலிகைக் குளத்தில் குளிக்க வையுங்கள்'' குட்டிகளுக்கு ஆணையிடுவது போலவும் அறிவுறுத்துவது போலவும் இருந்தது அது.

பரவாயில்லை இருக்கட்டும் என்று மடியில் எடுத்து வைத்துக் கொண்டான்.
"எங்களுக்கெல்லாம் பெயர் வைப்பதற்காக ஸ்டீபன் முயற்சி செய்தார். நாங்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. எங்கள் அனைவருக்கும் ஒரு அடையாளம் இருக்கிறது. நாங்கள் வாசனைகளாலும் உருவங்களாலும் வனத்தின் ஒவ்வொரு விலங்கையும் நாங்கள் அறிந்து வைத்திருக்கிறோம். முதலைகள், கிளிகள், யானைகள் எல்லாமே எங்களுக்கு வாசனையால் சப்தத்தால் அடையாளமாகிவிடும். பெயர் புதிய குழப்பமாக மாறிவிடும் என்று விட்டுவிட்டோம். தீயிலிட்டு உண்பதுகூட ஸ்டீபன் ஏற்படுத்திய பழக்கம்தான். பச்சையாகச் சாப்பிடுவது அவருக்கு ஒத்துக் கொள்ளவில்லை. அவருக்காக ஏற்படுத்தப்பட்ட பழக்கம் அப்படியே எங்களுக்கும் தொற்றிக் கொண்டுவிட்டது. ஆனால் நாங்கள் உப்பிடுவதில்லை. இந்த உப்புக்கு மயங்கித்தான் எங்கள் குரங்குகள் உங்கள் நகரத்துக்கு இடம் பெயர்ந்து பிச்சைக் காரனைப் போலவும் வழிப் பறிக்காரனைப் போலவும் வாழத் தொடங்கியிருக்கின்றன.''

"எங்களை சர்க்கஸ்களில் சாட்டையால் அடித்து வாயைத் திறக்கச் சொல்லி துன்புறுத்துகிறீர்களே... நியாயமா? சிங்கங்கள் வாயைத் திறந்து காட்டுவதைப் பார்ப்பதற்கு ஒரு கூட்டம். உங்கள் ரசனையும் புரியவில்லை. வாயைத் திறந்தால் வேறு என்ன இருக்கும் என்று எதிர்பார்த்து சர்க்கஸ் பார்க்க வருகிறீர்கள்? மிருகக்காட்சிச் சாலையில் இன்னொரு கொடுமை பத்துக்குப் பத்து கூடத்தில் அடைத்து வைத்து அதிலேயே நாங்கள் மூத்திரம் பெய்து அதிலேயே சாப்பிட்டு அங்கேயே இனப் பெருக்கம் செய்து... எல்லாம் கேள்விப்பட்டேன். எங்களைச் சிறைச்சாலையில் அடைத்துவைத்துப் பார்ப்பதில் என்ன சுகம் கிடைக்கிறது உங்களுக்கு? உங்களுக்குத்தான் தலையெழுத்து... எவனையாவது குற்றம் புரிந்தான் என்று சொல்லி சிறையில் அடைத்து வைப்பீர்கள். நான் கேட்கிறேன், குற்றம் என்றால் என்ன? நீங்களாக இது இவனுக்குச் சொந்தம் என்று வரையறுக்கிறீர்கள். அதன் பிறகு அதை இன்னொருத்தன் எடுத்துப் பயன்படுத்தினால் குற்றம் என்கிறீர்கள். அதற்குத் தண்டனை சிறை. இது வரைக்கும் என் நாடு என்கிறீர்கள். அதை ஒருவன் மீறினால் சிறை. நீங்கள் எங்களுடன் இருந்த காலம்வரை எல்லாம் எல்லாருக்கும் பொதுவானதென்றும் அடையும் முயற்சியுடைவர் அதைச் சாப்பிடும் உரிமையுள்ளவர்களாகவும் இருந்தோம். உங்கள் சித்தாந்தங்களால் எவ்வளவு கலவரங்கள், போர்கள், வழக்குகள், பிரச்சினைகள், படுகொலைகள், நிம்மதி இன்மைகள், நோய்கள், பித்தலாட்டங்கள், துரோகங்கள். நீங்கள் நினைத்தால் உங்களுக்கு இருக்கும் வசதிக்கு இன்னும்கூட நன்றாக வாழலாம் என்று ஏன் புரியவில்லை? ''

ஆல்பர்ட் அமைதியாக இருந்தான்.


"என்னுடைய பேச்சில் இலக்கணப் பிழை அதிகமாக இருக்கிறதா? நான் பேசுவது புரிகிறது இல்லையா?''

"நன்றாகப் புரிகிறது. பதில் சொல்ல முடியாமல்தான் அமைதியாக இருக்கிறேன். கலாசாரம், பண்பாடு, பழக்க வழக்கம் என்று எங்கள் தலையில் சுமத்தப்பட்டதன்படி நாங்கள் எங்கள் வாழ்க்கையை ஒழுகுகிறோம். அல்லது அதில் மாற்றம் வேண்டும் என்று போராடுகிறோம். திருமணங்கள் இப்படி இருக்க வேண்டும் என்று ஒரு விதி இருக்கிறது. அதை பேணுகிறோம். அல்லது அப்படி இருக்க மாட்டோம்... இப்படித்தான் வாழ்வோம் என்று எதிர் கலாசாரம் செய்வோம். எங்களுக்குப் போதிக்கப்பட்ட மகிழ்ச்சிகளை நாங்கள் தொடர்ந்து அனுபவித்து வருகிறோம். யாராவது புதிய மகிழ்ச்சிகளை அறிமுகம் செய்கிறார்கள். அப்படித்தான் மிருகக் காட்சி சாலையில் விலங்களுகளை அடைத்து வைத்துப் பார்க்கிற மகிழ்ச்சியும். நீங்கள் வருந்த வேண்டாம். காலப் போக்கில் அதை நாங்கள் உணர்ந்து அத்தகைய இடங்களை அகற்றிவிடுவோம். எங்கள் தேவைகளும், பாதுகாப்பு உணர்வும் எங்களைக் காட்டு வளங்களைத் தேடி வரச் செய்திருக்கிறது. பயமும் நல்ல நோக்கமும் அதிகமாகும்போது அது சரியாகிவிடும்'' என்றான் ஆல்பர்ட்.

"எனக்கு நம்பிக்கை வரவில்லை. மனிதர்களின் ரசனை, அவர்களின் வாழ்க்கை பற்றிய பயத்தால் மேலும் சுருங்கிக் கொண்டிருக்கிறது. குயுக்தி நிரம்பியதாகவும் பொய்மை நிரம்பியதாகவும் மாறிக் கொண்டிருக்கிறது. இவர்கள் போகிற பாதையில் தரமான மகிழ்ச்சிக்கு வாய்ப்பே இல்லை. அப்படியொரு அனுபவத்தை அவர்களால் இனி அடையாளம் காணவும்கூட முடியாது. அது அவர்களின் முன்னால் காட்டுப் பழம்போல ஒதுக்கப்பட்டுப் புறம்தள்ளப்படும் " சிங்கம் யோசனையில் ஆழ்ந்தது. ஆல்பர்ட் வலியால் ஏற்பட்ட காய்ச்சல் காரணமாகக் கண்கள் சொருகினான்.

அடுத்த இரண்டு நாட்களில் மூலிகைக் குளத்தின் குளியல் காரணமாகவோ, சிங்கங்கள் அடையாளம் காண்பித்த சில தழைகளை உண்டதாலோ வலி குறைந்து சற்றே நடமாடக் கூடியவனாக மாறியிருந்தான் ஆல்பர்ட். பிரம்மபுத்ராவின் கிளையாறு போல இருந்தது அது. அவ்வளவு ஆவேசமில்லாத நீரோட்டம். சில்லென்ற குளியலும் துவைத்துக் காயப்போட்டு புதிதாக அணிந்த உடையும் அவனைப் புத்துணர்வாக்கியது. உடன் துள்ளிகுதித்து வந்த சிங்கத்துக்கு ஐந்து அல்லது ஆறு வயது இருக்கும்.

"உங்களால் எப்படி ஆங்கிலம் கற்றுக் கொள்ள முடிந்தது?'' என்றான் அவற்றிடம்.

"அதான் பெரியப்பா தெளிவாகச் சொன்னாரே... ஸ்டீபன் மாமாவைப் பற்றி...''

"இருந்தாலும் எனக்கு ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.''

"எங்களால் ஆங்கிலம் பேச முடியும் என்று நீங்கள் நம்பிக்கை வைத்தீர்களா? எப்போதாவது அதைக் கற்பிக்க வேண்டும் என்று விரும்பினீர்களா? என்னமோ பலமுறை சொல்லித் தந்து எங்களுக்கு வராமல் போனது போல கேட்கிறீர்களே?'. உங்களையும் பிறந்ததும் காட்டுக்குள் கொண்டு வந்து போட்டால் ஓநாய் பையன் போலத்தான் வளருவீர்கள் தெரியுமா?''
ஆல்பர்ட் சிரித்தான். "ஏற்கெனவே உங்களுக்கு சர்க்கஸில் தரும் பயிற்சியை மட்டும் நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?''

"வாயைத் திறந்து பற்களைக் காட்டச் சொல்வது ஒரு பயிற்சியா?''
பேசியபடி குகை வாசலை நெருங்கினர்.

சிங்கராஜா, ஆல்பர்ட்டைப் பார்த்து "இப்போது பரவாயில்லையா?'' என்றது.
உள்ளே இருந்து வாட்டிய முயல் கறியை இழுத்து வந்து போட்டது ஒரு குட்டிச் சிங்கம்.

"முடி நீக்கப்படாமல் இருக்கும் பார்த்துச் சாப்பிடு'' என்றபடி "ஏதோ தீவிரமாகப் பேசிக் கொண்டு வந்தீர்களே'' என்று விசாரித்தது.

"எல்லாம் நம் ஆங்கிலம் பற்றித்தான்'' என்று போட்டு உடைத்தது குட்டி.

"கற்பவருக்கும் அதில் ஆர்வம் இருக்கும்பட்சத்தில் எதுவும் சாதாரணம்தான்.'' சற்று சாய்ந்து படுத்துக் கொண்டு, "ஆனால் விலங்குகள் எதுவும் எதையும் கற்க விரும்புவதில்லை. தன் முனைப்பும் விலங்குகளின் பரிணாமத்துக்கு ஒரு காரணம்தானே? தான் இப்போது இருக்கிற நிலையிலேயே இருக்க விரும்பும் விலங்குக்கு அடுத்த கட்டங்கள் அர்த்தமற்றவையாகிவிடும். ஒரு தேனீ தேனுப்பதில் அலாதி ஆனந்தம் கொள்கிறது. அது கேரட் சாப்பிட ஒருபோதும் விரும்பியதில்லை. நாங்கள் மான் சாப்பிடுகிறோம். ஒரு போதும் மான் பிரியாணி சாப்பிட விரும்பியதில்லை. அப்படி ஆசைப்பட்டவுடன் அடுத்தகட்டம் ஏற்படுகிறது. அதற்கு விலையாக நாங்கள் எங்கள் இயல்பான மகிழ்ச்சியை இழக்கிறோம். மனிதர்களின் பகுத்தறிவு அதற்கான சவால்களைத் தொடர்ந்து சந்தித்தாக வேண்டியிருக்கிறதல்லவா?''

ஆல்பர்ட்டுக்கு சிங்கம் பற்றிய பயம் சுத்தமாக இல்லை. மிகச் சரளமாக அவற்றுடன் பேசவும் பழகவும் ஆரம்பித்திருந்தான்.

சிங்கம் தொடர்ந்தது. "உங்கள் வார்த்தைகள் இன்னும் செப்பனிடப்பட வேண்டியிருக்கிறது''
ஆல்பர்ட் "உண்மைதான். ஆரம்பக் கோளாறுகள் அப்படியே தொடருகின்றன. உதாரணத்துக்கு பி.. யூ.. டி.. புட் எனப்படுகிறது. ஆனால் பி.. யூ..டி.. பட் என''
"நான் அந்த மாதிரி கோளாறுகளைச் சொல்லவில்லை. மொழியை நீங்கள் வசதிக்கேற்றவாறு வளைக்கிறீர்கள். சொல்லப் போனால் உங்கள் தவறுகளில் இருந்து தப்புவதற்காக அதை அதிகம் பயன்படுத்துகிறீர்கள். வசியம் செய்கிறீர்கள். விலங்குகளிடம் அந்தப் போலித்தனம் ஒரு போதும் இல்லை.''

ஆல்பர்ட் அமைதியாக இருந்தான். சிங்கம் முகட்டில் நின்று பருவகால சூழலை அளந்தது. திரும் வந்து, "நாளைக்கு உன்னை இரும்பு வாராவதியில் விட்டுவிட்டு வந்துவிடுகிறேன். நீ அங்கிருந்து திஸ்பூர் செல்வதற்கு லாரிகள் கிடைக்கும்'' என்றது சிங்க ராஜா.
"நான் நகருக்குச் சென்றதும் நிச்சயம் உங்கள் உரிமைக்காகப் போராடுவேன்'' அவனுடைய கண்கள் பனித்திருந்தன.

"வேண்டவே வேண்டாம். இப்படியான பேசும் சிங்கங்களைப் பார்த்ததாக நீ யாரிடமும் சொல்லக் கூடாது. எங்களைப் பிடித்துப் போய் கூண்டில் அடைத்து டி.வி.கேமிரா முன் பேச வைத்து கொடுமைப்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள். அதைவிட வேறு நரகம் இருக்க முடியாது. முடிந்தால் காட்டை நம்பித்தான் காட்டு விலங்குகள் இருக்கின்றன என்பதைச் சொல். அது போதும்.''

ஏழு சிங்கங்களும் சேர்ந்து சென்று ஆல்பர்ட்டை வழியனுப்பி வைத்தன. தடுமாறி, கால்தாங்கி திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே அவன் நடந்து சென்றான். சிங்கங்களின் கண்களில் நீர் அரும்பியது முதல் முறையாக. ஆல்பர்ட் மெல்ல அவற்றின் கண்களில் இருந்து மறைந்தான். அடுத்த நாளை ஆல்பர்ட் பெரும் பட்டாளத்தோடு சிங்கங்களைப் பிடிக்க பெரும் பட்டாளத்தோடு வந்தான். ஆனால் அந்தக் குகையில் சிங்கங்கள் இல்லை. அதற்கான தடயமேகூட இல்லை. சக நண்பர்களின் பெரும் ஏளனத்தோடு ஆல்பர்ட் காட்டைவிட்டுப் போனான்.

திங்கள், டிசம்பர் 08, 2008

திரைக்குப் பின்னே- 11

"சரக்கு அடிப்பது சப்பை மேட்டர்!'



சிவாஜியின் பேரன் துஷ்யந்த் நடித்த படத்தில் அறிமுகமானார் சோனியா அகர்வால். அடுத்து வந்த "காதல் கொண்டேன்' திரைப்படம் அவருக்கு மிகப் பெரிய பெயரைப் பெற்றுத் தந்தது.

வழக்கமாக மும்பை நடிகைகள் என்றால் படப்பிடிப்பு நேரத்தில் குடும்ப சகிதமாக சென்னைக்கு வந்து நட்சத்திர ஹோட்டலில் தங்குவார்கள். விமான டிக்கெட், ஹோட்டல் பில் என்று பில் எகிறும். தயாரிப்பாளர் அந்தச் செலவில் இன்னொரு படம் எடுத்துவிடலாம் என்று புலம்புவார். எனக்குத் தெரிந்து சோனியா அகர்வால் தனியாகத்தான் படப்பிடிப்புக்கு வந்தார். எளிமையான நடிகை. பேட்டி நேரங்களிலும் அந்த எளிமையும் துணிச்சலும் அவரிடம் இருந்தது. வட இந்திய நடிகையான அவரை வண்ணத்திரை நிருபர் சுரேஷ் ராஜா பேட்டி காண சென்றார். அவர் மது அருந்துவார் என்பது அப்போதைய சூடான கிசி கிசுவாக இருந்தது. அவரைப் பற்றி இப்படி ஒரு கிசு கிசு உலவிக் கொண்டிருப்பதைப் பற்றித் தெரியாதவராக இருந்தார் அவர்.

நமது நிருபர் இந்தக் கேள்வியை அவரிடம் கேட்டுவிட்டு ரியாக்ஷனுக்காகக் காத்திருந்தார்.

""ஆமாம் குடிப்பேன்'' என்றார் அவர். இவ்வளவு இடம் கொடுத்தால் போதாதா? நிருபருக்கு ஆர்வம் அதிகமாகிவிட்டது. எவ்வளவு குடிப்பீர்கள், என்ன ரக மதுவை அருந்துவீர்கள் என்றெல்லாம் விசாரிக்க ஆரம்பித்துவிட்டார். பொதுவாக நடிகைகள் பிறந்த ஆண்டைச் சொல்ல மாட்டார்கள். அவர் தன் பிறந்த நாளோடு பிறந்த ஆண்டையும் சொன்னார். வயசு தெரிந்தால் பரவாயில்லையா என்று கேட்டதற்கு "வயசை எத்தனை வருஷம் மறைக்க முடியும்? '' என்றார்.

அடுத்த வார வண்ணத்திரையின் அட்டைப்படத் தலைப்பு: "சரக்கு அடிப்பது சப்பை மேட்டர்''- சோனியா அகர்வால் ஆவேசம்!

பேட்டி வெளியான பத்திரிகையைப் பார்த்தும்கூட அவரிடம் பெரிய ரியாக்ஷன் இல்லை. மிகச் சரியாக பேட்டி வந்திருப்பதாகத்தான் கருதினார்.

ஆச்சர்யப்படுத்திய நடிகை.



பங்கஜ் புதிர்!

திரையுலகின் எத்தனையோ தீராத புதிர்களுக்கு விடையே இல்லாமல் விட்டிருக்கிறேன்.

அதில் இது ஒரு புதிர்.

பங்கஜ் மேத்தா என்ற ஃபைனான்சிஸர் முதன் முதலாகப் படம் தயாரிக்க முனைந்து "மாறன்' என்ற படத்தை எடுத்தார். மார்வாடி இனத்தவரான அவர் பல தமிழ்ப் படங்களுக்கு முதலீடுசெய்பவர். நாவரசன் கொலை வழக்கைச் சம்பந்தப்படுத்திய படம் அது. அந்தப் படத்துக்கு மேலும் சில பரபரப்புகளும் இருந்தன. பார்த்திபனை பிரிந்த பின் சீதா மீண்டும் நடிக்க வந்த படம்... சத்யராஜின் மகனாக மணிவண்ணனின் மகன் அறிமுகமாகும் படம்... இப்படியான பரபரப்புகள் படத்துக்கு இருந்தது.

எனக்கு வேறு ஒரு ஈர்ப்பு அந்தப் படத்தின் மீது இருந்தது. தமிழ் நாட்டில் மாறன் என்பது தனி மனிதரின் பெயராக மட்டுமின்றி ஒரு குடும்பப் பெயராக மாறிவிட்ட நேரம். இவர் ஏன் இப்படி ஒரு தலைப்பை படத்துக்கு வைத்தார் என்பதுதான் அது.

அவரைச் சந்திக்கப் போனபோது மேலும் அதிர்ச்சி. அவர் டேபிளில் கலைஞரின் படம். இத்தனைக்கும் அப்போது கலைஞர் ஆட்சியில் இல்லை. கொச்சையான உச்சரிப்பில் தமிழ் பேசும் அவர் ""எனக்கு தமிழ்னா உயிர் ஸார்'' என்றார். ""கலைஞர்னா அதைவிட உயிரு'' என்றார். எதற்காக இவருக்கு கலைஞர் மீது உயிர் என்று புரியவேயில்லை.

எதற்காக உங்களுக்கு அவர் மீது உயிர் என்று கேட்டேன். என் கேள்வியில் ஏதோ பிழையிருப்பதாக அவர் என்னைப் பார்த்தார். ஒரு வட இந்தியர்... ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களிடம் நிறைய காரியம் ஆக வேண்டியிருக்கும் அதற்காகக் கலைஞர் பெயரைப் பயன்படுத்துகிறார் என்றால்கூட பரவாயில்லை.

"கலைஞரு ஆட்சில இல்லாதபோதுதான் அவர் படத்தை டேபிள் மேல வெப்பேன். அவர் ஆட்சி இருக்கும்போது எல்லாரும்தான் அவர் படத்தை வெச்சுப்பாங்களே... நமக்கும் மத்தவங்களுக்கும் வித்தியாசம் இருக்குப்பா'' என்றார்.

எதற்கு வித்தியாசம் இருக்க வேண்டும்?



காலத்தின் கட்டளை!
கலைஞரிடம் ஆசி பெறும் என்.ஸி.ஸி மாணவன் புகைப்படம் ஒன்று கிடைத்தது. குங்குமத்தில் பணியாற்றியபோது அந்தப் படத்தைப் பிரசுரித்து, அது யார் என்று கண்டுபிடிப்பவர்க்கு அதிரடி பரிசு காத்திருக்கிறது என்று அறிவித்தோம்.

கலைஞரிடம் ஆசி பெறும் அந்த மாணவர் சரத்குமார். 1970-ம் ஆண்டில் குடியரசு தின அணிவகுப்புக்காகத் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டு தில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார் சரத்குமார். முதல்வரிடம் வாழ்த்துகளைப் பெற்றுச் செல்லும் தருணம்தான் அந்தப்படம்.

நிறைய கடிதங்கள் வந்தன. இரண்டு பேர் மட்டும் மிகச் சரியாக சரத்குமார் என்று குறிப்பிட்டிருந்தார்கள். நாங்கள் அறிவித்திருந்த இந்தப் போட்டியைக் கேள்விப்பட்டு சரத்குமார், அந்த இருவருக்கும் பரிசளிக்கும் பொறுப்பை தானே ஏற்றுக் கொள்வதாகக் கூறினார்.

500 அல்லது ஆயிரம் ரூபாய் பரிசளிப்பதாக உத்தேசித்திருந்தோம். ஆனால் சரத்குமார் அவர்கள் இருவருக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் பரிசளித்தார். பரிசு பெற்றவர்கள் எங்கள் அலுவலகத்துக்கு வந்து கலைஞரையும் சந்திக்க வேண்டும் என்றார்கள். கலைஞரிடம் சென்று விஷயத்தைச் சொன்னேன். கலைஞர் ""சரத்குமார் எவ்வளவு பரிசு தந்தார்?'' என்றார்.

"பத்தாயிரம்'' என்றேன்.

"தலா ஐந்தாயிரமா?''

"இல்லை அய்யா. தலா பத்தாயிரம்''

எதிரில் இருந்த சின்னக்குத்தூசி அய்யாவை ஆச்சர்யம் தொனிக்கப் பார்த்தார். "ரெண்டு பேருக்குமே பத்தாயிரம் கொடுத்தாரா?'' என்று மீண்டும் ஒரு முறை கேட்டார். அந்த வயதிலும் அவருடைய ஆச்சர்யம் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நான்கு முறை முதலமைச்சராக இருந்த ஒருவருக்கு - தமிழகத்தின் பெயர் சொல்லும் செல்வந்தராக இருக்கும் ஒருவருக்கு - பணம் என்பது இன்னமும் ஆச்சர்யமானதாக இருக்குமா என்பதுதான் என் ஆச்சர்யத்துக்குக் காரணம்.

சரத்குமாரை தொலைபேசியில் அழைத்து கலைஞர் ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் அடைந்ததைச் சொன்னேன்.

சரத்குமார் ஓர் அழகான கோ- இன்ஸிடென்ஸ் சொன்னார்.

"70-ம் ஆண்டில் என்னை வாழ்த்தி டெல்லி அனுப்பி வைத்தார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் என்னை வாழ்த்தி டெல்லிக்கு அனுப்பினார், ராஜ்ய சபா எம்.பி.யாக. எங்கோ பிறந்த இருவரை காலம் முதன்முறையாக ஒன்று சேர்க்கிற போது தற்செயலாக நிகழ்வதாகச் சொல்லலாம். இன்னொரு முப்பதாண்டுகள் கழித்து மீண்டும் இணைத்தபோது அது தற்செயலாகத் தெரியவில்லை. காலத்தின் கட்டளை போல இருக்கிறது'' என்றார்.

"மிக நன்றாக இருக்கிறது உங்கள் ஒப்புமை'' என்றேன்.

அடுத்த சில ஆண்டுகளில் அவர் தி.மு.க.விலிருந்து பிரிந்து அ.தி.மு.க.வில் இணைந்தார். அதுவும் காலத்தின் கட்டளைதான் போலும்.

ஞாயிறு, டிசம்பர் 07, 2008

திரைக்குப் பின்னே- 10

காபி தெரியும் டீ தெரியும் காப்பர் டி தெரியாது

நாளெல்லாம் சேற்றில் உழல்கிற விவசாயிக்குக் கிடைப்பதைவிட பல ஆயிரம் மடங்கு மரியாதையும் பணமும் புகழும் நடிகர்களுக்குக் கிடைத்துவிடுகிறது. ஆனால் அதே சமயத்தில் அதற்கு அவர்கள் கொடுக்கிற விலைதான் அவர்களைப் பற்றி வெளியாகிற வதந்திகள். ஒரு சாமானியனின் அந்தரங்கம் வெட்டவெளிச்சமாகிறபோது அந்தச் சாமானியனைத் தெரிந்த எல்லோரும் பரவசம் ஊட்டுவதாக இருக்கிறது. நாடறிந்த பிரபலமாக இருந்தால் அவர்களின் அந்தரங்கம் நாட்டையே பரவசமாக்குகிறது. அடுத்தவர் வீட்டு ஜன்னலை எட்டிப் பார்ப்பதில் மனிதனுக்குள்ள ஆர்வம் மிகவும் தொன்மையானது. ஆதியில் அது அடுத்தவர் குகையை எட்டிப் பார்ப்பதாக இருந்திருக்கக் கூடும்.



அந்த ஆர்வம் சார்ந்த செய்தி இது. நான் தினமணியில் சேர்ந்த புதிது. ஆசிரியர் என்னை அழைத்து "உத்தமன் என்பவரிடம் இருந்து மட்டும் சினிமா கட்டுரை வாங்கி வெளியிடாதே'' என்று கடுமையான முகத்துடன் சொன்னார். அந்தக் கடுமையைக் கண்டு எதற்காக என்றுகூட அவரிடம் தெரிந்து கொள்ள துணிவு வரவில்லை.

விசாரித்ததில் ஆங்கிலப் பத்திரிகையில் வெளிவருகிற மாதிரி பேட்டிகள் சூடாகவும் சுவையாகவும் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு நடிகைகளிடம் கேள்விகள் கேட்பவர் அவர் என்றார்கள். நடிகை சுகன்யாவிடம் அவர், "நீங்கள் கன்னித் தன்மை உள்ளவரா?'' என்று கேட்டு அங்கிருந்து தினமணி அலுவகத்துக்குப் போன் பறக்க, ஆபிஸ் அல்லோலகல்லோபட்டுப் போனதாம்.

ஆனால் வண்ணத்திரை அப்படியில்லை. கேள்விகளில் சூடு இருக்க வேண்டும் என்பார்கள். நான் ஆசிரியப் பொறுப்பில் இருந்த நேரத்தில் நண்பர் அண்ணாதுரை சினேகாவிடம் பேட்டிக்குச் சென்றார். அப்போதைய சினிமா இதழ்களில் சினேகா காப்பர் டி அணிந்திருக்கிறார் என்று செய்திகள் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் இருந்தன. நண்பரும் நீங்கள் காப்பர் டி அணிந்திருக்கிறீர்களா என்பதையே முதல் கேள்வியாக ஆரம்பித்திருக்கிறார்.

படப்பிடிப்பில் ஃபிலிம் சிட்டியில் நடந்த உரையாடல் இது. பதறிப் போய்விட்டார் சினேகா. தேம்பி அழ ஆரம்பித்து, அவருடைய அப்பாவிடம் இருந்து எனக்குப் போன். "என்ன இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறார் உங்கள் நிருபர்'' என்றார். "இப்போது தொடர்ந்து இப்படி ஒரு செய்தி பத்திரிகைகளில் வந்து கொண்டிருக்கிறது. அதற்குத்தான் அவர் விளக்கம் கேட்கிறார். எல்லோரும் எழுதுவதுபோல் அவரும் யாரோ சொன்னதை எழுதிவிட்டுப் போயிருக்கலாம். உங்கள் தரப்பில் மறுப்பு இருந்தால் சொல்லுங்கள். அந்தக் கேள்வியும் பதிலும் தேவையே இல்லை என்றாலும் அதைத் தவிர்த்துவிடுகிறேன்'' என்றேன்.

"சினேகாவிடம் பணியாற்றியவர் ஒருவரே இங்கிருந்து நீக்கப்பட்ட கோபத்தில் இப்படியெல்லாம் வதந்தி பரப்புகிறார்'' என்றார் அவருடைய தந்தை.

ஆனால் அந்த நீக்கப்பட்டவரைப் பற்றிச் சொன்னால் அது மேலும் பிரச்சினையை வளர்க்கும் என்று நினைத்து அந்த நபரைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆனால் "காப்பர் டி போட்டிருக்கிறீர்களா' என்ற கேள்விக்குப் பிறகு சினேகா வேடிக்கையாக ஒரு பதிலைச் சொன்னார்.

"எனக்கு காபி போடத்தெரியும், டீ போடத்தெரியும். காப்பர் டி போடத் தெரியாது."


காதல் மன்னன்



காதல் மன்னன் என்று ஜெமினியைச் சொல்வார்கள். பெண்களைக் கிண்டலடிப்பதில் அவருக்கு அலாதி ஆர்வம் இருந்தது. நண்பர் வேணுஜி தினமணிக்காக ஜெமினி கணேசனை ஒரு பேட்டி காணச் சென்றார். ஜெமினியிடம் எடுத்த பேட்டியை எழுதித் தந்துவிட்டு அவர் சொன்னதில் எழுதாத பகுதிகளை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

அப்போது ஜெமினி நடித்துக் கொண்டிருந்த அதே படத்தில் மந்த்ரா என்ற இளம் நடிகை ஒருவரும் நடித்துக் கொண்டிருந்தார். பேட்டியின் நடுவே அந்த நடிகையை ஓரக் கண்ணால் கவனித்தபடியே இருந்தாராம் ஜெமினி. "அந்தப் பொண்ணுகூடவே பாதுகாப்புக்கு வந்திருக்கிற அவன் அப்பனைக் கொஞ்சம் பாரேன்'' என்றாராம். "ரொம்ப கஷ்டமான வேலைதான் இல்ல?' கொஞ்சம் அசந்தா கொத்திக்கிட்டுப் போயிடுவாங்கன்னு பயந்து சாகறான்' என்றும் கூறியிருக்கிறார்.

நடிகையின் பாதுகாப்புக்கு வருகிற அப்பாவின் பாடு எத்தகையது என்று விளக்கியிருக்கிறார். இந்த மாதிரி சுமார் நூறு அப்பாக்களையாவது அவர் பார்த்திருப்பார். அவரை மாதிரி காதல் மன்னன்களிடம் இருந்து பெண்களைக் காப்பாற்ற அப்பாக்களுக்கு சிரமமமாகத்தான் இருந்திருக்கும்.

பேச்சின் முடிவில் வாழ்வின் சூத்திரம் போல அவர் சொன்ன செய்தி:

"ஒரு மனிதனுக்கு எப்போது காதலில் நாட்டம் குறைந்து போகிறதோ அப்போதே அவன் வாழத் தகுதியில்லாதவன் ஆகிவிடுகிறான்.''

அதன் பிறகு ஓராண்டு கழித்து அவர் இன்னொரு பெண்ணை மணப்பதாகச் செய்திகள் வெளியாகின. பெரும் பஞ்சாயத்துகள்... அந்தப் பெண்ணிடமிருந்து அவரை ஏறத்தாழ மீட்டெடுத்தனர். அதற்குப் பின் அவர் தன் மகளின் ஜி.ஜி. மருத்தவமனையின் வாசலில் உட்கார்ந்து மாலை வேளைகளில் போகிற வருகிறவர்களை பார்த்துக் கொண்டிருந்தார். அதற்குப் பின் சில நாள்களில் தம் எழுபத்திச் சில்லறை வயதில் காதலிப்பதை நிறுத்திக் கொண்டார்.



ரிலாக்ஸ் ரத்னம் !




சென்னை கற்பகம் அவின்யூவில் ஓர் இலக்கியக் கூட்டம். சுந்தர ராமசாமி உரையாற்றுவதாக ஏற்பாடு. சிறிய அரங்கம். கூட்ட நேரத்துக்கு முன்பே நிரம்பிவிட்டது அது. வெளியே நிறைய பேர் நின்று கொண்டிருந்தனர். அதில் முக்கியமாக இயக்குநர் மணிரத்னமும் இருந்தார். இலக்கியவாதிகளில் சிலர் சினிமாகாரனிடம் நாம் போய் பேசுவதா என்ற போக்கும் சிலருக்குச் சாதாரணமாக இருக்கும் தயக்கமும் இருந்தது. ஒரு சிலர் மட்டும் நேருக்கு நேராகப் பார்க்கும் தருணத்தில் புன்னகைத்தனர். பதிலுக்கு அவரும் புன்னகைத்துக் கொண்டிருந்தார்.

எந்தவித பந்தாவும் இல்லாமல் ரிலாக்ஸாக இருந்தார். சினிமாவின் பரபரப்பை ஒதுக்கி வைத்துவிட்டு ஏற்றுக் கொள்வதற்குத் தயாரான காலி கோப்பையாக அவர் இருந்தார். இருந்தாலும் அவருடைய பிரபலம் அவருக்கு இடையூறாகத்தான் இருந்தது.

நான் அவருடைய இக்கட்டைத் தவிர்க்கும் நோக்கமாக அருகில் சென்று பேச்சுக் கொடுத்தேன். பம்பாய், இருவர், உயிரே படங்களுக்குப் பிறகு அவர் படமெடுப்பதற்கு அடுத்த பிரச்னையைத் தேடிக் கொண்டிருந்தார். எனக்குக் கிடைத்த காற்று வாக்குச் செய்தியை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாக, "அடுத்து இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் படமாக்க இருப்பதாகச் சொல்கிறார்களே?'' என்றேன்.

எப்படித் தெரியும் போல புருவம் உயர்த்தினார். பத்திரிகையாளன் என்ற உண்மையைச் சொல்லாமல் அவரிடம் பேசும் விஷயத்தை நாளைக்குப் பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டியிருந்தால் அது நியாயமாக இருக்காது என்று ஒரு திடீர் குற்ற உணர்வு ஏற்பட்டது. நான் உடனே சொன்னேன். அவர் செல்ல கோபம் போல முகத்தை மாற்றினார். நீங்கள் எழுத வேண்டாம் என்றால் இதை நான் எழுத மாட்டேன் என்று உறுதியளித்தேன். நான் இப்படிச் சொன்னதும் அது அவரைச் சற்றே நெகிழச் செய்துவிட்டது. "அதனாலென்ன பரவாயில்லை'' என்று கூறிவிட்டார்.

தொடர்ந்து பிரச்சினையான படங்களையே எடுத்துவிட்டேன். நடுவில் ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக ஒரு படம் எடுக்கிறேன். என்றார். "அக்னி நட்சத்திரம் மாதிரியா?'' என்றேன்.

சற்று யோசித்து ஆமாம் என்று தலையசைத்தார். "கொஞ்சம் வேற மாதிரி'' என்று சிரித்தார்.

"அலைபாயுதே' வந்தது. அதன் பிறகு இலங்கைத் தமிழர் வாழ்வைப் பின்னணியாக வைத்து "கன்னத்தில் முத்தமிட்டால்' வெளியானது. `அலைபாயுதே' அவர் சற்றே ஓய்வெடுத்துக் கொண்ட படம் போல தோன்றியது எனக்கு.

புதன், டிசம்பர் 03, 2008

நிரம்பி வழியும் வீடு

"அபியும் வர்றானாம்'' அழுத்தம் கொடுத்துச் சொன்னாள் செண்பகம். முதலில் சண்முகத்துக்கு அதற்கான முக்கியத்துவம் புரிபடவில்லை. திடுக்கென புரிந்து, இப்போது என்ன செய்வது என்று பரிதாபமாகப் பார்த்தான். ஸ்தம்பித்தான் என்றோ நிலைகுலைந்தான் என்றோ விவரிக்கலாம்.

அபியின் வருகை அவர்களை மிகவும் பயமுறுத்துவதாக இருந்தது. பயப்படும்படியாக அபி முரட்டு மீசையும் வீச்சருவாளும் திரண்ட தோளும் போதை ஏறிச் சிவந்த கண்களும் உடையவன் அல்ல. அவன் இரண்டடி உயரமுள்ள கிண்டர் கார்டன் சிறுவன்.

போன காலாண்டு பரீட்சை விடுமுறைக்கு வந்தான். சண்முகத்தின் தங்கைப் பையன். வந்த சில நிமிடங்கள் வரை அம்மாவின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு அதாலேயே முகத்தை மறைத்துக் கொண்டு இருந்தான். பிருந்தாவும் இரண்டொரு தடவை "மாமாகிட்ட பேசுடா' என்று தன்னிடமிருந்து அவனைப் பிடுங்கி சண்முகத்திடம் தர முயன்றாள். அது அவ்வளவு சுலபமானதாக இல்லை.

"ஏய் குட்டி என்ன படிக்கிறே? கமான்... கமான்...'' கொஞ்சுகிற ஆசையோடு இரண்டொரு முறை அழைத்தபோதும் அவன் இன்னும் இடுக்கிக் கொண்டு பின் வாங்க ஆரம்பித்தான். எந்த வீட்டிலும் குழந்தையை அழைத்துக் கொண்டு விருந்தாளி வந்தால், மொத்த பேரின் பொது இலக்காகி விடும் குழந்தை. சொல்லி வைத்தது மாதிரி எல்லோரும் ஒரே நேரத்தில் கொஞ்சுவார்கள். குழந்தையின் பெருமையை, புத்திசாலித்தனத்தை, ஒருவர் சொல்லி முடித்ததும் இன்னொருவர் ஆரம்பிப்பார்கள். நாமும் நம் பங்குக்குக் குழந்தை குறித்து ஏதாவது பேச வேண்டுமென ""எங்க வீட்ல ரெண்டு வாலு இருக்கு...'' என்று ஆரம்பிப்பார்கள் சிலர். சபை நாகரீகமில்லாமல் "லுல்லு லுல்லு,,, மில்லிம்மா மில்லிக்குட்டி' என்று கொஞ்சுவார்கள்.

சண்முகம் இதற்கெல்லாம் ரொம்ப தூரம். சண்முகம் பேச விரும்புகிற குழந்தை குறைந்தபட்சம் பத்தாவதாவது தேறியிருக்க வேண்டும். குழந்தைகள் ஏதோ தேர்வாணையத்தில் தேர்வாகி இண்டர்வியூ க்கு வந்தது மாதிரிதான் பேசுவான்.
"ஸ்கூல் பேர் என்ன?'' என்று கேட்பது அவனைப் பொறுத்தவரை மழலைகளிடம் கொஞ்சும் வார்த்தை. இந்த மாதிரி நேர்முக வினாக்களுக்கு அபி செவி சாய்க்கவில்லை. "தொல்ல மாட்டன் போ'' என்பதையே எல்லாக் கேள்விக்கும் பதிலாகச் சொன்னான்.

தன்னை மையப்படுத்தியப் பேச்சு மெல்ல மெல்ல மறைந்ததும் அபி ஹாலில் இருந்து மறைந்து உள் அறையில் போய் ஏதோ விளையாட ஆரம்பித்தான்.

அநேகமாக அவனை எல்லோரும் மறந்துவிட்டனர். முதலில் பிருந்தாதான் "அச்' என்று தும்மினாள். அதை இயல்பானதாக எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து செண்பகமும் சண்முகமும் தும்மினார்கள். இது சண்முகத்துக்குச் சற்று யோசிக்கும் விஷயமாகப் பட்டது.
""அபி எங்கே?'' என்று அவசரமாகத் தேடினர். தும்மலுடன் அபியைத் தொடர்புபடுத்தியது சரிதான். உள்ளே கட்டில் மெத்தையைக் கத்திரி கொண்டு கிழித்து உள்ளிருக்கும் பஞ்சை புதையல் பறிக்கும் தீவிரத்தோடு கிளறிக் கொண்டிருந்தான் அபி. அறை முழுதும் பஞ்சு கலந்த காற்று. இரவு படுக்கையில் எப்படிப் படுப்பது, படுக்கையைக் கொண்டுபோய் தைப்பவனிடம் கொடுக்க வேண்டுமா, அல்லது தைப்பவனை அழைத்து வந்து படுக்கையில் விடவேண்டுமா இதற்கு எவ்வளவு செலவாகும், எத்தனை நாள் ஆகும் உள்ளிட்ட குழப்பங்கள் அத்தனையும் ஒரே நேரத்தில் தாக்கியதில் சண்முகம் பிருந்தாவைப் பார்த்தான்.
அவளோ, "ஒரு நிமிஷம்கூட சும்மாவே இருக்க மாட்டான்'' என்பதைச் சான்றிதழ் போல சொன்னாள்.

பீறிட்டு வந்த எரிச்சலை அடக்கிக் கொண்டு "குழந்தைன்னா அப்படித்தான்'' என்றான் சண்முகம். செண்பகத்துக்கு அவ்வளவு நாகரீகம் போதாது. அவள் ஒரு மாதிரி இறுக்கத்தோடு படுக்கை மீது ஒரு படுக்கை விரிப்பைப் போட்டு மூடிவிட்டு சமையல் கட்டுக்குப் போய்விட்டாள். போதாததற்கு அபி அவளுடைய அக்கா குழந்தையாக இல்லாததும் இந்தப் பல்லைக் கடிக்கும் இறுக்கத்துக்குக் காரணம்.

பையனை படுக்கை அறையில் இருந்து அகற்றி ஹாலில் உட்கார வைத்தார்கள். இந்த முறை அவனை வித்தியாசமாகத்தான் பார்த்தான் சண்முகம். டி.வி.யில் பிரைம் டைம் சீரியல் ஓடிக் கொண்டிருந்தது. பத்து நிமிடம் டி.வி. பார்த்துக்கொண்டே பிருந்தா கிளம்பிப் போனதும் செண்பகம் எப்படி வெடிப்பாள் என்று மனத்திரையில் படம் ஓட்டிக் கொண்டிருந்தான். பையனின் அமானுஷ்யமான மெüனம் சண்முகத்தைத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க வைத்தது.

ஜன்னல் ஸ்கிரீன் துணியின் கீழ்ப் பகுதிகளை ரிப்பன் ரிப்பனாக வெட்டிக் கொண்டிருந்தான் அபி. பையனை அறையில் இருந்து அப்புறப்படுத்திய கையோடு அவன் கையில் இருந்த கத்திரியையும் அப்புறப்படுத்தியிருக்க வேண்டும். சண்முகம் இப்படி நிலைக்குத்தி உட்கார்ந்துவிட்டதைப் பார்த்த பிருந்தா... சனியனே கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டே... என்றபடியே அபியின் பின்புறத்தில் தட்டிவிட்டு அதேவேகத்தில் கத்திரியைப் பிடுங்கி சண்முகத்திடம் கொடுத்தாள். ""கத்திரி கிடைச்சா போதும். எதையாவது வெட்டிக்கிட்டே இருப்பான்''... மீண்டும் சான்றிதழ்.

இந்த முறையும் செண்பகம் எதுவும் சொல்லவில்லை. அதுதான் வயிற்றைக் கலக்கியது. புலி பதுங்குகிறது. எங்கே இது டைவர்ஸ் வரை போய்விடுமோ என்றும்கூட அஞ்சினான். அது அவளே தேர்வு செய்து வாங்கி ரசித்து ரசித்து தைத்து மாட்டிய கர்டெய்ன்.
அது இப்படிக் காற்றாடி வால் மாதிரி அறுந்து தொங்குவது அவளை என்ன பாடு படுத்தியிருக்கும் என்பது புரிந்து கொள்ள முடியாத ரகசியமா?

அந்தக் கணம் முதல் தனக்கு யாரும் கட்டளை இடாதபோதும் சண்முகம் தானாகவே அவனையே கவனிப்பது என்ற பணியை ஏற்றுக் கொண்டான். அவனைக் கவனிக்கப்படுவதை அபியும் கவனித்தான். இது எவ்வளவு நேரம் ஓடுகிறது பார்க்கலாம் என்ற சவால் அவன் முகத்தில் தெரிந்தது. ஆனால் இவ்வளவு இழப்புக்கு மேல் சண்முகம் அலட்சியமாக இருந்துவிட விரும்பவில்லை. மேற்கொண்டு சமாளிக்க முடியாமல் அவன் எழுந்து வெளியே போனான். தன்னுடைய மன உறுதிக்குக் கிடைத்த வெற்றி என்றுதான் அதை சண்முகம் நினைத்தான்.

வெளியே அவன் தும்சம் செய்கிற மாதிரி பொருள் எதுவும் இல்லை என்பதால் எல்லோரும் டி.வி. பார்த்துவிட்டு திரும்பி வந்தவனை மடக்கி படுக்க வைத்து தூங்க வைத்தாள் பிருந்தா. இனி ஒரு பயமும் இல்லை என்றுதான் எல்லோரும் தூங்கினர். காலையில் எழுந்து கோலம் போட போன செண்பகம், மிரட்சியோடு உள்ளே ஓடிவந்தாள். அவளது மெüனத்திலேயே ஒருவினாடியில் அத்தனை ஆபத்தையும் புரிந்து கொண்டு வெளியே ஓடிப்போய் பார்த்தான் சண்முகம்.

தொட்டியில் வளர்த்திருந்த அத்தனை பூச்செடியும் குரோட்டன்ஸýம் இலையிலையாகக் கிள்ளி எறியப்பட்டு வேறோடு பிடுங்கி எறியப்பட்டிருந்தது. இரவு ஏற்பட்ட கதி. செண்பகம் செடிகளை அப்படியே முறத்தில் வாரி எடுத்துக் கொண்டு சண்முகத்தை ஒரு முறை "ஒருமுறை' முறைத்தாள். இந்த ஜென்மத்துக்குப் போதுமானதாக இருந்தது.
பிருந்தா பார்த்துவிட்டு, ""டேய்... இப்படியெல்லாம் பண்ணே அப்புறம் வீட்டுக்கே கூட்டிக்கிட்டுப் போகமாட்டேன். இங்கேயே விட்டுட்டுப் போய்டுவேன்'' என்றாள். தண்டனை பையனுக்கா? தமக்கா என்று சண்முகம் வேர்த்து விறுவிறுத்துப் போய்விட்டான்.
ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கோபமாகத் திட்டிவிடலாமா என்று நினைத்தான். ஆனால் என்னவோ அதற்கான தருணம் வரவில்லை என்று ஒவ்வொரு முறையும் தவிர்த்துவிட்டான்.
எதையாவது உடைப்பது, கிழிப்பது, நொறுக்குவது, அழிப்பது, பாழாக்குவது போன்றவற்றை ஒரு வேள்வி போல கடைப்பிடித்தான் அவன். டி.வி.யின் ரிமோட் கண்ட்ரோலை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு சானைலையும் எத்தனை வேகமாக மாற்ற முடியும் என்பதை நிறைவேற்ற ஆரம்பித்தான். மன்மோகன் சிங், வடிவேலு, சிம்ரன், ரோஜா செடி, மேட்டூர் அணைக்கட்டு, சிங்கம், பிங்க் பாந்தர் எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் மாறிக் கொண்டிருந்தது. ஒன்றையும் உருப்படியாகப் பார்க்க முடியவில்லை. அப்புறம் அது வெறுப்படித்துப் போய் சோபா விட்டு சோபாவுக்குத் தாவினான். குஷனை எடுத்து சுவற்றில் வீசினான். அது ஒரு தடவை டி.வி. மீது விழுந்து டி.வி. கீழே விழப் பார்த்தது. பிருந்தாவிடமிருந்து "டேய் அபிய்ய்'' என்று ஓர் அதட்டல். அதை அவன் ஒரு மைக்ரோ வினாடிகூட மதிக்கவில்லை.

தலையணையை எடுத்துக் கிரிக்கெட் பேட் போல ஆடிக் கொண்டிருந்தான். எவர் சில்வர் டம்ளரைப் பந்தாகப் பாவித்தான். யார் தலை வெட்டுப்படப் போகிறதோ என்ற அச்சத்தில் அடுத்த அரை மணி நேரம் கழிந்தது.

மனசுக்குள் அடிக்கும் களேபரத்தை மறைத்துக் கொண்டு எத்தனை நேரம்தான் அமைதிக் கவசத்தோடு அமர்ந்திருப்பது? சகிப்புத்தன்மையின் எல்லையை வகுக்கும் விளையாட்டாக இருந்தது அது. நல்லவேளையாக சண்முகம் எல்லை தாண்டிய சகிப்புத் தன்மையை எட்டவில்லை.

ஆனால், செண்பகத்தின் அலாதியான மெüனத்தால் அதிருப்தியை ஓரளவுக்குப் புரிந்து கொண்டாள் பிருந்தா. மறுநாள் "அவரு தனியா இருப்பாரு. நா வர்றேன் அண்ணி'' என விடைபெற்றாள்.

ஷேவிங் கிரீமைப் பிசுக்கி ஆபீஸ் ஃபைலில் பூசிவிட்டு அவனும் விடைபெற்றான்.
அபி போன பிறகு தன் கம்ப்யூட்டர் கீ போர்டில் தெப்பக் குளமாக தண்ணீர் நிரம்பியிருந்ததையும், மோட்டர் பைக்கின் இரண்டு சக்கரத்திலும் காற்று இறக்கப்பட்டு இருந்ததையும் சண்முகம் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை.

பகிர்ந்து கொள்ளவில்லையென்றால் என்ன கஷ்டம் கஷ்டம்தானே? காற்று இல்லை என்பதை மறைப்பதற்காக பைக்கை அப்படியே ஓட்டிச் சென்றதால் இரண்டு ட்யூப் மவுத்தும் பிய்ந்து போய் இரண்டையும் வேறு மாற்ற வேண்டியதானது. கீ போர்டு புதிதாக வாங்கி வந்து மனைவிக்குத் தெரியாமலேயே மாட்டினான்.

ஆனால் இது எல்லாமே செண்பகத்துக்குத் தெரிந்துதான் இருந்தது. தனக்குத் தெரியாமல் புதிய கீ போர்டை மாட்டி, பழைய கீபோர்டை பைக்கின் சைடு பாக்ஸில் வைத்ததை அவள் இரவு ஒரு மணி தூக்கக் கலக்கத்திலேயே பார்த்தாள். பைக் டயரில் காற்று இல்லாமல் அது நெளிந்து நெளிந்து போவதை அவள் "டாடா' காட்டிவிட்டுத் திரும்பும்போது கவனித்தாள். தனக்குத் தெரியக்கூடாது என சண்முகம் படுகிற பாட்டை எண்ணி, அபி சமையல் கட்டில் செய்த சேட்டைகளைக்கூட சண்முகத்திடம் சொல்லவே இல்லை அவள். உதாரணத்துக்கு அவள் சேகரித்து வைத்திருந்த ஆடியோ கேசட்டுகளை எல்லாம் அவன் ஃப்ரிட்ஜின் ஃப்ரீஸருக்குள் வைத்து மூடிவிட்டதைக்கூட அவள் சண்முகத்திடம் சொல்லவே இல்லை. அத்தனை கேசட் டேப்புகளும் ஒரு மாதிரி நெளிநெளியாக முறுக்கிக் கொண்டு பாழாகி குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டாள்.

சில நாள்களில் வீடு மீண்டும் அமைதியாகி சகஜநிலைக்கு வந்தது. குழந்தையின் இருப்பு என்பது வீட்டை நிறைத்து வைக்கிற அம்சம்தானோ என்று நினைத்தான் சண்முகம். குழந்தையில்லாமலேயே பழகிவிட்ட வீடு. அதனால்தான் அபியின் சேட்டைகள் தமக்கு வித்தியாசமாக இருந்ததோ என்றும் தேற்றிக் கொண்டான். ஏனென்றால் பிருந்தா எதையும் பொருட்படுத்தாமல் இருந்ததே அதற்கு ஒரு ஆதாரம்தான். என்னதான் சமாதானம் சொல்லிக் கொண்டாலும் அபியை நினைத்து ஒரு பயம் இருக்கத்தான் செய்தது.
முதல்வரியில் "அபியும் வர்றானாம்' என்று செண்பகம் அதிர்ந்தது இந்த அபிக்காகத்தான்.
ஆட்டோவைவிட்டு இறங்கி பிருந்தா உள்ளே நுழைந்ததும் பின்னாலேயே அபியை எதிர்பார்த்தனர். ஆட்டோவில் இருந்து யாரும் இறங்கவில்லை. ஆட்டோ சீட்டைக் கிழித்துக் கொண்டிருக்கிறானோ என்னவோ?

"அபி வர்லயா?'' ரொம்பவும் எதிர்பார்த்துக் காத்திருந்த தொனியில் கேட்க நினைத்து, சந்தோஷத் தொனியில்தான் கேட்க முடிந்தது.

"அவன் வர்லணா... இங்க அவனுக்கு ஒரே போரடிக்குதாம்... உங்க வீட்ல விளையாட்றதுக்கு எதுவுமே இல்லையாம்... பாருங்க, இந்த வயசிலேயே எப்படிலாம் பேசுதுங்க?'' என்றாள்.

இப்படி ஒருவரியில் தம் வீட்டை நிராகரித்துவிட்டானே என்ற தவித்த ஒரு கணத்தை, சீக்கிரத்திலேயே தனியாக அவனிடம் அகப்பட்டுக் கொண்ட வீட்டை நினைத்துத் தேற்றிக் கொண்டான் சண்முகம்.

சனி, நவம்பர் 29, 2008

திரைக்குப் பின்னே- 9

நம்பியார் - பரங்கிமலை!

தமிழகத்தில் கருப்புச் சட்டை என்றால் அது பெரியார் கட்சிக்குத்தான் சொந்தம். தனிமனித ஒழுக்கத்தினும் பொது ஒழுக்கம் முக்கியம் என்பதற்காகப் போராடியவர். அறுபது எழுபதுகளுக்குப் பிறகு அதிகரித்த கருப்புச் சட்டைகளுக்கு நம்பியார் முக்கிய காரணம். குறைந்தபட்சம் ஒரு மண்டலம் தனிமனித ஒழுக்கமாக இருப்பதற்கான உத்தியைக் கொண்டுவந்தவர் என்பதற்காக மகிழ்ந்து கொள்ளலாம்.



ஒரு தீபாவளி இதழுக்காக அவரைச் சந்தித்தேன். நம்பியாரைச் சந்திக்கத் தயாரானபோது "உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் புத்தர் இருக்கும் புனிதமான ஆலயத்தில் எம்.ஜி.ஆரைத் தாக்குவாரே அந்தக் காட்சிதான் ஞாபகத்தில் இருந்தது. நம்பியாரின் வில்லத்தனத்திலேயே அதைத்தான் மன்னிக்க முடியாத குற்றமாக மனதில் பதித்து வைத்திருந்தேன். இது புனிதமான இடம் இங்கு சண்டை வேண்டாம் என்று எம்.ஜி.ஆர். எவ்வளவோ பொறுமையாக எடுத்துக் கூறியும் நம்பியார் அவரை அடிப்பார். அடிக்க அடிக்க எம்.ஜி.ஆர். மெல்ல ஆலயத்துக்கு வெளியே வந்துவிழுந்துவிடுவார். அதன் பிறகு எம்.ஜி.ஆர். அடிக்கிற அடி இருக்கிறதே... அதில் நேர்மை, நாணயம், கொள்கை எல்லாம் தெரிந்தது எனக்கு. அந்த மன பிம்பத்தோடு நான் நம்பியார் வீட்டுக்குப் போனேன். முன் வாசலில்- அவர் பின் கட்டில் காத்திருப்பதாகச் சொன்னார்கள். நான் வீட்டின் பின் கட்டுக்குச் சென்றேன். அங்கு ஒரு கதவு இருந்தது. அது சாத்தியிருக்கவே மெல்ல கதவைத் தட்டி "சார்?' என்றேன்.

"வாங்க... வாங்க'' என்று குரல் கேட்டது. பல திரைப்படங்களிலும் மிமிக்ரி நிகழ்ச்சிகளிலும் கேட்டுப் பழகிய அதே குரல்.

நான் இந்தப் பத்திரிகையில் இருந்து வந்திருக்கிறேன்.. என்று கதவுக்கு மறுபக்கம் இருந்து அறிமுகப்படுத்திக் கொண்டேன்.

"அதெல்லாம் சரிதான். நாம ரெண்டுபேரும் இப்ப சந்திச்சுப் பேசறது இப்ப உங்க கையிலதான் இருக்கு. கதவை நீங்கதான் திறக்கணும்.'' என்றார்.

"வெளிப்பக்கம் திறந்துதான் இருக்கு'' என்றேன்.

"தெரியும். கதவை அழுத்தித் திறங்க''

புதிதாக வருகிறவர்களிடம் இப்படியெல்லாம் விளையாடுவாறோ என்ற குழப்பம் தொற்றிக் கொண்டது. அவர் சொன்ன படி கதவைத் தள்ளிப் பார்த்தேன். திறக்கவில்லை.

"என்னப்பா திறந்துவிடச் சொன்னா என்ன பண்றே அங்கே?'' குரலில் அலுப்பும் அழுத்தமும் வெளிப்பட்டது.

"சார் தள்ளிக் கொண்டுதான் இருக்கிறேன்.''

"காலையில சாப்பிட்டியா இல்லையா? நல்லா தள்ளுப்பான்னு சொல்றேன்''

நான் திரையில் பார்த்து பிரமித்துப் போயிருந்த ஒரு நடிகர். பேட்டி எடுக்க வந்த நேரத்தில் இப்படித் தடுப்புக்கு இருபுறமும் இருந்து கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமலேயே அறிமுகமாகிக் கொண்டிருப்பது வேடிக்கையாகவும் இருந்தது.

கதவை வேகமாக ஓர் உதைவிடச் சொன்னார்.

அப்படியே செய்தேன். மழையால் ஊறி பிடித்துக் கொண்டிருந்த கதவு படாரென்று திறந்தது. வெள்ளை ஜிப்பா, வேட்டியில் நம்பியார்.

காமுகன், கொள்ளைக்காரன், சதிகாரன், அயோக்கியன், திருடன், நயவஞ்சகன், செய் நன்றி மறந்தவன், துரோகி என்று நம்பியாரை உருவகிக்க நிறைய கருத்துருவம் இருந்தது. ஆனால் அது அத்தனையும் அவரைக் கதவைப் பிளந்து கொண்டு பார்த்த அந்த ஒரு நொடியில் தொலைந்தது.

அவர் அமைதியாக இட்லி சாப்பிட்றீங்களா என்று உபசரிக்க ஆரம்பித்து, இந்திய மலைகளிலேயே பரங்கிமலைதான் வயதில் மூத்த மலை என்பது குறித்து நீண்ட நேரம் பேசியது நினைவு இருக்கிறது. உதகையையோ, இமயத்தையோதான் பிரமித்து இருக்கிறோம். பரங்கிமலை பல லட்சம் ஆண்டு மூத்ததாக இருந்தும் அப்படி ஒரு மலை இருப்பதையோகூட நாம் கவனிப்பதில்லை என்றார்.

அவர் வயதில் பாதி வயது நிரம்பாதவர்கள்கூட பத்மஸ்ரீ விருது வாங்கிவிட்டார்கள். அவருக்கு விருது எதுவும் கிடைத்ததே இல்லை. அவர் இறந்த அன்று எனக்கு பரங்கிமலைதான் ஞாபகத்துக்கு வந்தது.




இசையமைதி!

பொறுமையாகச் செயல்படுவதில் இசையமைப்பாளர் தேவாவைப் போல இன்னொருத்தரைப் பார்க்க முடியாது. ஆண்டுக்கு 30 படங்கள் இசையமைத்த நேரத்திலும் அவரிடம் ஆர்ப்பாட்டமான, அகம்பாவமான நடவடிக்கையைப் பார்த்ததில்லை. செய்து வைத்தது மாதிரி ஒரு பாவனையோடு ஒரு முகம். இன்னும் சொல்லப் போனால் பழகிவிட்டவர்களிடம் மனம் திறந்து பல உண்மைகளைச் சொல்லுவார்.




"கொஞ்சமா பேசறுதுல ஒரு நன்மை இருக்கு. வாயைக் குடுத்து மாட்டிக்காம இருக்கலாம். வேகமா பேசினா நமக்கு மெட்ராஸ் பாஷைதான் வருது. அதனாலதான். லைட்டா ஒரு புன் சிரிப்போட நிறுத்திக்கிறேன்'' என்பார்.

சத்யராஜ் ஒரு ஒலிநாடா வெளியீட்டு விழாவில், "தேவாசார் மாதிரி பொறுமையான ஆளை நான் பார்த்ததே இல்லை. அவர் மியூசிக் கம்போஸ் பண்ணும்போது அந்த ஆர்மோனியப் பெட்டியில கறுப்பும் வெள்ளையுமா இருக்கிற கட்டைகள்ல நாலை பிடுங்கிக்கிட்டாகூட கோபப்படாம அமைதியா சிரிப்பாரு'' என்றார். அவருடைய அமைதியை இந்த அளவுக்கு மிகைப்படுத்தியதற்காகவாவது தேவா கோபப்பட்டிருக்கலாம். மேடையில் இருந்த தேவா அப்போதும் சிரித்தார்.

இளையராஜாவின் பல பாடல்களை தேவா அப்படியே காப்பியடித்து இசையமைப்பதாக பல பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்தார்கள். எந்தப் பத்திரிகை மீதும் அவர் கோபப்பட்டதில்லை. நேரடியாக ஒரு முறை இதைக் கேட்டேன்.

"சில டைரக்டர்கள் ஒரு சில பாட்டைச் சொல்லி அந்த மாதிரி வேணும்னு சொல்லுவாங்க. நாண அந்தமாதிரி போட்டா அவங்களுக்குத் திருப்தியா இருக்காது. சில நேரங்களில் அதையை போட்டுத் தர வேண்டியதா இருக்கு. உங்களுக்கு ஒரு சம்பவம் சொல்றேன். கும்பகோணத்துப் பக்கத்தில ஒருத்தன் கோவில் தேரை எரிச்சுட்டான். ரொம்ப பழைய தேர். குப்புனு எரிஞ்சுபோச்சு. கோர்ட்ல கேட்டாங்க. "ஏன்டா தேரை எரிச்சே'னு. அதுக்கு அவன் "சாமிதான் கனவுல வந்து அந்தத் தேரை எப்படியாவது எரிச்சுடுன்னு கேட்டுக்குச்சு. அதனாலதான் எரிச்சேன்'னு சொன்னான்.''

எதற்காக இந்தச் சம்பவம் என்று புரியவில்லை.

"எதுக்காகடா சாமித் தேரைக் கொளுத்தினேன்னு கேட்டா, சாமி சொல்லித்தாந் கொளுத்தினேன்னு சொல்லிட்டான். அதுக்கப்புறம் அவன் சாமிக்கு விரோதமா செஞ்சான்னு சொல்ல முடியுமா? ஏன்டா இளையராஜா மியூசிக்கைக் காப்பியடிக்கிறேன்னு கேட்டா, அவரோட மியூசிக்தான் எனக்கு ரொம்பப் பிடிக்குது. இதுதான் பதில்'' என்றார்.

தேவா அப்படித் தன்னடக்கத்தோடு சொன்னாலும் அவருடைய தனித்துவமான பல பாடல்களைச் சொல்ல முடியும். ஆசை, அண்ணாமலை, வாலி, காதல் கோட்டை போன்ற பல படங்களின் பாடல்களைக் கேட்கும்போது அவர் சுதந்திரமாகவும் சிரத்தையாகவும் செயல்பட்டதை உணரமுடியும்.

உச்சக்கட்ட புகழில் இருந்தபோது தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் பாடலாசிரியர்களும் மொய்த்துக் கொண்டிருந்த நேரத்தில் அவர் இப்படி இறங்கி வந்து பதில் சொல்லியிருக்க வேண்டியதில்லை.

இதுபோல் பதில் சொல்வதற்கு தன்னடக்கம் மட்டும் போதுமா என்று தெரியவில்லை. தன்னம்பிக்கையும் அதிகமாக இருக்கும் சிலரால்தான் இப்படிப் பதில் சொல்ல முடியும்.


இழக்கும் ஆச்சர்யங்கள்!

நடிகை சுவலட்சுமியின் வீட்டில் சத்யஜித் ரே புகைப்படம் இருக்கும். அவருடைய படம் ஒன்றில் நடித்திருப்பதாகப் பெருமையாகக் கூறுவார். கூர்மையான அவதானிப்பு உள்ள நடிகை அவர். "ஆசை' படத்தில் அஜீத் ஜோடியாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் வசந்த்.




"என் ஆச ராசாவே' திரைப்படத்தின் படப்பிடிப்பு இடைவேளையில் சிவாஜிகணேசன் ஓய்வாக அமர்ந்திருந்தார். அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்த சுவலட்சுமி தூரத்தில் உட்கார்ந்தபடியே அவரைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

"அவரை ஏன்அப்படிப் பார்க்கிறீர்கள்?'' என்றேன்.

அங்கே அமர்ந்திருந்த மற்ற நடிகர்களைக் காட்டினார். "வித்தியாசம் தெரிகிறதா?'' என்றார்.

அது சாப்பாட்டு இடைவேளை. எல்லோருமே உண்ட களைப்பை அனுபவிப்பது மாதிரி ஓய்வில் உட்கார்ந்திருந்தனர் . "வித்தியாசமாக எதுவும் தெரியவில்லை'' என்றேன்.

"அவர் மட்டும்தான் நிமிர்ந்து நேராக உட்கார்ந்திருக்கிறார். மற்றவர் எல்லோரும் சரிந்தும் சாய்ந்தும் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர் தியேட்டரில் இருந்து வந்தவர். அவருக்கு இது பால பாடம். அரிதாரம் பூசிவிட்டால் இப்படியும் அப்படியும் அசைந்து அதை உடையெல்லாம் பூசிக் கொள்ளக் கூடாது. கழுத்தில் இருக்கும் அரிதாரம் காலரில் படக்கூடாது என்கிற அக்கறையோடு அவர் எப்படி அமர்ந்திருக்கிறார் பாருங்கள். காலையில் ஆறு மணிக்கு வந்ததிலிருந்து அதே விரைப்போடு நிமிர்ந்தே உட்கார்ந்திருக்கிறார்'' என்று ஆச்சர்யப்பட்டார்.

ஆச்சர்யமாகத்தான் இருந்தது. கவனித்து ஆச்சர்யப்பட வேண்டிய நிறைய விஷயங்களை நாம் நம் அலட்சியத்தால் கணம் தோறும் இழந்து கொண்டே இருக்கிறோம்.

வியாழன், நவம்பர் 27, 2008

சனிக்கிழமை

வசந்தி கணக்கில் கொஞ்சம் வீக். கணக்கு வாத்தியாரோ உடல் ரீதியாக மிகவும் ஸ்ட்ராங். என்ன நடக்கும்? கணபதி வாத்தியார் அடிக்க ஆரம்பித்தால் நிறுத்துவதற்கு மறந்துவிடுவார் அவ்வளவுதான்.

வெள்ளிக்கிழமை மாலை அநேகமாகக் கடைசி பீரியட் சர்குலர் வரும். சனிக்கிழமை பற்றிய செய்தி வாசிக்கப்படும்.அப்படி வாசிக்கப்பட்டது.

"சனிக்கிழமை பள்ளி நாளென்றால் ஐந்து பீரியட் நடக்கும். பள்ளியின் ஏகோபித்த விருப்பம் எதுவாக இருக்குமென்றால் கணபதி வாத்தியார் வகுப்பு ஆறாவது பீரியட், ஏழாவது பீரியட் என வரும் வார நாளின் டயம் டேபிளை வேண்டுவதாக இருக்கும்.''

வசந்தியின் வகுப்பு செவ்வாய்க் கிழமைக்கு ஏங்கியிருந்தபோது "புதன்கிழமை அட்டவணைப்படி வகுப்புகள் நடக்கும்' என்று வாசித்து முடிக்கப்பட்டது.

புதன்கிழமை கணபதி வாத்தியார் மூன்றாவது பீரியட்.

புதன்கிழமை ஒரே ஒரு செüகர்யம் இருந்தது. இரண்டாவது மணியில் ஆங்கிலம். ஜோக்கர் வாத்தியார் வகுப்பு. ஜோக்கர் வாத்தியார் வகுப்பென்றால் கிராஃப் வரைவதற்கும் மேப் ட்ராயிங் புக்கைப் பிரித்து பசிபிக் கடலுக்கு நீல வண்ணம் தீட்டுவதற்கும் இன்னபிற ஆங்கிலம் சம்பந்தப்படாத வேலைகளுக்கும் பாத்ரூம் போய் வருதலுக்கும் வசதியாக இருக்கும். ஜோக்கர் வாத்தியார் வகுப்பென்றால்தான் எல்லோருக்கும் பாத்ரூம் போகிற ஆசை வரும்.

கணபசி அப்படியில்லை. ஒருமுறை மிகவும் உண்மையாக பாத்ரூம் முட்டவே எழுந்து பர்மிஷன் கேட்ட சுந்தரியை அடியோ அடியென்று அடித்ததில் அவள் பயந்து போய் நடு வகுப்பில் சிறுநீர் கழித்து வெட்கம் தாளாமல் பள்ளியைவிட்டு நின்று போனாள். டி.சி. வாங்கக் கூட வரவில்லை.

வாத்தியார் என்ற பெயரில் அவர் நடத்தி வந்த வன்முறைக்குப் பள்ளியில் பணிபுரியும் சக ஆசிரியர்களின் பாராட்டும் அதிகம்.

"கணபதி சாரோட கிளாஸ்தான் ரொம்ப கொய்ட்''என்பார் ஹெட்மாஸ்டர்.

சுதந்திர தினம் போன்ற நாள்களில் பள்ளி மைதானத்தில் நடக்கும் விழாவில் பள்ளிக்கூடமே அவர் பேச்சுக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கும். காக்கையின் கரைதலும் பேச்சாளரின் சுதந்திர தின அறிவுரையும் மட்டும் அங்கே ஒலி அலைகளை ஏற்படுத்துவனவாக இருக்கும்.

கணபதி புறநானூறு என்றால் ஜோக்கர் (நிஜப் பெயர் ஜெ.கே.ராமன்- ஜெ.கே.ஆர். என அழைக்கப்பட்டு ஜோக்கர் என மருவினார்.) புதுக்கவிதை.

"எல்லோரும் கவனிங்க'' என்று அடிக்கடி குரல் கொடுத்துவிட்டு அவர் பாட்டுக்கு இங்கிலீஷ் புத்தகத்தைப் படித்துக் கொண்டு போவார். ரொம்பவும் கோபம் வந்து விட்டால் "பெஞ்சு மேல ஏறி நில்லு..'' என்பார். கணபதி வாத்தியாரோடு ஒப்பிடுகையில் இவர் புறக்கணிக்கத் தக்கவர்.

முதல் பீரியடின்போது செவன்த் பி செக்ஷன் வாசலில் ஏழு பெண்கள் முட்டி போட்டுக் கொண்டிருந்ததை வசந்தி ஆறாம் வகுப்பு ஜன்னல் வழியாகப் பார்த்தாள். "கணபதி சார் வந்துட்டாரா?' என்று விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.

பனிரெண்டாவது வாய்ப்பாட்டை இருபது முறை எழுதிக் கொண்டு வரச் சொல்லியிருந்தார். பதினான்கு முறைதான் எழுதியிருந்தாள்.

இரவு ஒளியும் ஒலியும் பார்ப்பதற்கு முன்பு கொஞ்சம் எழுதினாள். பவர் கட் ஆனதால் தூங்க நேர்ந்து மூன்று மணிக்குக் காலை தண்ணீர் நாளாக அமைந்து }அம்மா தலைவாறும்போது கொஞ்சம் எழுத முடிந்தது.

ஜே.கே.ஆர். பீரியட்டைதான் நம்பிக் கொண்டிருந்தாள். பத்து பதினைந்து நிமிடங்கள் போதும். முதலில் வரிசையாக 1,2,3.. என இருபது வரை எழுதிக் கொள்ள வேண்டும். அடுத்து இண்ட்டு.... இண்ட்டு... இண்ட்டு. அடுத்து வரிசையாக ஈக்குவல் குறி. அதற்கடுத்துதான் வாய்ப்பாட்டைப் பார்த்து எழுத வேண்டும். வசந்தி சுலபமாக வாய்ப்பாடு எழுதும் வழி இதுதான்.

முதல் மணி முடித்து அடுத்த வகுப்பு துவங்க, ஆவேசமாக நிறையப் பெண்கள் அவரவர்க்கு இடப்பட்ட கணிதக் கட்டளைகளை முடிக்க ஆயத்தமாயினர்.

ஜே.கே.ஆர். வரவேயில்லை. எந்த வகுப்பிலும் ஆசிரியர்கள் நுழையவில்லை. பள்ளிக்கூடம் காட்டுக் கூச்சலாக இருந்தது.

எல்லா ஆசிரியர்களும் மந்தையாகப் பேசிக் கொண்டு போனார்கள். ஸ்டாப் ரூமில் நுழைந்தவர்கள் சிறிது நேரம் கழித்து வெளியே வந்தார்கள்.

ஆசிரியர்கள் வகுப்புகளில் நுழைய ஆரம்பித்த பின் படிப்படியாகச் சத்தம் குறைந்தது. ஜே.கே.ஆர். வந்தார் வழக்கத்தைவிட நிதானமாக.

"நம்ம கணபதி சாரோட அப்பா இறந்துட்டாராம். இப்பதான் நியூஸ் வந்தது..''

வகுப்பு ஒருமாதிரியாக முழித்தது.

"முதல்ல ஒரு பெல் அடிக்கும் எல்லோரும் எழுந்து நிக்கணும். அவருக்கு மெüன அஞ்சலி செலுத்தறதுக்காக. அப்புறம் ஒரு பெல் அடிக்கும் உக்காரணும்''

பெல் அடித்தது. நின்றார்கள். அடுத்த பெல் அடிப்பதற்கு அரைமணி நேரம் ஆகிவிட்டதுபோன்ற உணர்வு. வசந்திக்குப் பின்னால் யாரோ }மல்லிகாவாக இருக்கலாம்} குபுக் என்று சிரித்த சப்தம் கேட்டது. வசந்திக்கும் சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டாள்.
அடுத்த பெல்.

சலசலப்போடு அமர்ந்தனர்.

வசந்தி மெல்லத் திரும்பி "நீ தான சிரிச்ச?'' என்று மல்லிகாவை விசாரித்தாள்.

"அப்ப இன்னிக்கி வரமாட்டாரு'' பூரித்தாள் குமுதா.

"இன்னும் ஒரு வாரத்துக்கு நம்மளை வாய்ப்பாடே கேட்கமாட்டாரு'' என்று தெம்பூட்டினாள் அங்கயற்கண்ணி.

ஏறத்தாழ எல்லா வகுப்பிலும் லீவு போல பேசிக் கொண்டார்கள்.

"அவங்க வீட்ல வாரம் ஒர்த்தர் செத்துட்டா கணபதி சார் அடிக்கவே மாட்டார் இல்ல?'' என்று யோசனை சொன்னவளைப் பார்த்து, "ச்சீ பாவம்டீ'' என்றாள் வசந்தி.



கணையாழி- 1989
தி.ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டியில் தேர்வானது

புதன், நவம்பர் 26, 2008

வெள்ளிக்கிழமை

"அப்பா பேப்பர் கேட்டார்'' என்றாள் லட்சுமிபதியின் மகளான மகேஸ்வரி.

"படிச்சிட்டு முரளிக்கிட்ட குடுத்தனுப்பறேன்'' என்று சொல்லிவிட்டு தினகரனின் நான்காவது பக்கத்திலிருந்து ஐந்தாவது பக்கத்தைத் திருப்பினார் மோகன்தாஸ்.

தினகரனின் ஆரம்பநாள் முதல் விடாப்பிடியாகப் படித்துவருபவர் மோகன்தாஸ். எக்காரணம் கொண்டும் வேறு பத்திரிகை வாங்கியதில்லை. எம்.ஜி.ஆர். இறந்த செய்தியை எல்லாப் பத்திரிகையிலும் போட்டாலும் தினகரன் பார்த்த பின்பே நம்பினார்.

பத்தாவது ப்ளஸ் டூ போன்ற தேர்வு முடிவுகளும் அப்படியே. கலைஞர் பேச்சென்றால் பரீட்சைக்குப் படிப்பது போல படிப்பார். தினமும் இலவசத்தில் லட்சுமிபதியும்} ஜனதா ஆதரவாளராக இருந்தும்கூட படிப்பார். என்.ஜி.வோ}வைப் பற்றிச் செய்தி வந்தால் மட்டும் கணேசன் வாங்கிச் சென்று படிப்பார். மற்றபடி மதிய நேரத்தில் பெண்கள் டி.வி. நிகழ்ச்சிகள் பற்றி அலசிவிட்டு சமையல் குறிப்பு படிப்பார்கள்.

மோகன்தாஸ் வீட்டில் சாமிபடங்களைவிட அண்ணா, பெரியார் என்று தலைவர்கள் படங்கள் அதிகம். மனைவிக்கு தெய்வ வழிபாடென்றால் இவருக்குத் தலைவர் வழிபாடு.

"எப்பிடினா ஒழி'' என்று சட்டென்று எழுந்து வேட்டியை உதறிக் கட்டிக் கொண்டு சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டார் மோகன்தாஸ்.

"நான் ஒழிஞ்சாத்தான் உங்களுக்கு நிம்மதி. ஒழிஞ்சி போறேன். நாளும் கிழமையுமா சாபம் குடுத்திட்டீங்களே.. எனக்கு வோணும்'' நிமிடத்தில் கண்ணீர் கொப்பளித்தது.

"எல்லாம் பாப்பானுங்க பண்ண வேலை. தமிழனை அழிச்சதே அவனுங்கதான்'' முணகிக் கொண்டே வெளியே போனார் மோகன்தாஸ்.

லட்சுமி மூக்கை சிந்திக் கொண்டு கத்திரிக்காயைப் போட்டு சாம்பாரும் மோரும் மட்டும் செய்து வைத்துவிட்டு யாருடனும் பேசாமல் கோபமாய்ப் படுத்துக் கிடந்தாள்.

பதினோரு மணி சுமாருக்கு பழனிச்சாமியின் மனைவி நாகபூஷணம் உள்ளே வந்து. ""என்னாங்க வெளியே தலை காட்ல இன்னிக்கி?'' என்றாள்.

லட்சுமி படுத்துக் கொண்டே "ஒண்ணுல்லங்க'' கண்களைத் துடைத்துக் கொண்ட போதே சுவாரஸ்யம் ஏதோ இருக்கிறதுபோல மேற்கொண்டு அக்கறையாக விசாரிக்க ஆரம்பித்தாள்.

கேட்பதற்கு இப்படியாராவது வரமாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டிருந்த லட்சுமி தன் கணவர் நல்ல நாளும் போதுமாக இப்படிச் சாபம் கொடுத்த கதையைச் சொன்னாள்.

"அட, நீங்க ஏன் இதையெல்லாம் பெரிசு பண்ணிக்கிறீங்க? சினிமாவுக்கு வர்றீங்களா போவலாம்?'' என்றாள்.

"யார் யார் போறீங்க?''

"நானும் ராஜேஷ் அம்மாவும். நீங்களும் வாங்களேன். வூட்லயே இருந்தா இன்னும் கஷ்டமாத்தான் இருக்கும்''

"நா வர்ல. போயிட்டு வாங்க''

அதற்குள் மாலதி வந்து "மகாலட்சுமில புதுப்படம் போட்ருக்கான்...பிரபுது'' என்றாள்.

லட்சும் "இன்னா படம்?'' என்றாள்.

"கலியுகம்''

"காத்தால படமா?''

"டயமாய்டுச்சிங்க. சீக்ரம்''

"நா சும்மா கேட்டேன். நீங்க போய்ட்டு வாங்க'' தன் வருத்தத்தைச் சட்டென விட்டுவிடமுடியாத தயக்கம் இருந்தது.

"அட கிளம்புங்க, டயமாச்சின்றேன்...'' மாலதி மறுபடி உசுப்ப, எழுந்து உட்கார்ந்து ""டிக்கெட் கெடைக்காதுங்க.. இப்பவே பதினொன்னு ஆய்ட்ச்சி'' என்றாள் லட்சுமி.

"வாங்கில்லாம் வாங்க''

மறுநிமிடத்தில் மூவரும் தயார். போகும்போது கீதாவின் அம்மா எதிர்ப்பட, ""சினிமாவுக்கு வர்றீங்களா?'' என்றனர் போகிற போக்கில். நிச்சயம் வரமாட்டார்கள் என்ற தைரியம். இவர்களைவிட கீதா அம்மா வயதில் மூத்தவர். வசந்தியின் அம்மாவுக்கும் நாகபூஷணத்துக்கும் முறைவாசல் விஷயத்தில் சண்டை என்பதால் வசந்தி அம்மாவைக் கூப்பிடவே இல்லை. அதே போலத்தான் ராஜேஷ் அம்மாவுக்கும் மகேஷ் அம்மாவுக்கும்.

அவர்கள் தனி செட்டாகப் போவார்கள்; அநேகமாக நாளைக்கு.
(தொடரும்)

செவ்வாய், நவம்பர் 25, 2008

வியாழக்கிழமை

சரியாக நான்கு மணி சுமாருக்கு முதல் தேதி அதன் முழு அர்த்தத்தையும் அடைந்தது. சம்பளம் கைக்குக் கிடைத்த மறுவினாடி ஒவ்வொருவருமே மேஜை அறையைத் திறந்து வைத்து அதனுள் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு சற்றே மறைவாய்} பணத்தை எண்ணினார்கள்.

ரயில்வே துறையின் அந்த எளிய அறையில் லட்சுமிபதியோடு சேர்த்து ஆறுபேர் இருந்தார்கள். வரிசைக்கு மூன்றாய் இரண்டு வரிசை மேஜைகள். இவர்கள் வரைக்கும் ஒரு பிளைவுட் தடுப்பு. ஆறுபேருமே அப்படித்தான் எண்ணினார்கள். எண்ணிக் கொண்டே ஒருவரை ஒருவர் பார்க்க நேர்ந்ததால் சிரித்துக் கொண்டார்கள்.

பிடித்ததெல்லாம் போக லட்சுமிபதியின் பே ஸ்லிப்பில் போட்டிருந்த தொகை ஆயிரத்து முன்னூற்று இருபத்தொன்று. இது அப்படியே முழுசாக வந்து சேர வேண்டும் என்ற மனைவியின் கண்டீஷனை மீறியே ஆகவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தார் அவர்.

காலையில் ஆபிஸýக்கு வந்ததும் சங்கீதராவ் நூறு ரூபாய் கைமாற்றாய் கேட்டிருந்தார். எத்தனையோ முறை கொடுத்து உதவியிருக்கிறார். முடியாது என்று சொல்ல முடியவில்லை. அதுவும் பொண்டாட்டி ஆஸ்பத்திரியில் இருப்பதாலும் உறவினர் வந்துவிட்டதாலும் சமாளிக்க முடியாமல் கேட்டிருந்தார். சொசைட்டியில் லோன் போட்டிருப்பதால் பத்து தேதிக்குள் கிடைத்துவிடும் திருப்பித் தருகிறேன் என்று வேறு சொன்னார்.

மனைவி சொல்லை மீறி நூறு ரூபாய் தாளைத் தனியே எடுத்து மேல் பாக்கெட்டில் வைத்தார். மீதியை பாண்ட் பாக்கெட்டில் வைத்தார்.

இப்படி ஒவ்வொருவரும் முதல் தேதி பணத்தை இந்தப் பாக்கெட்டும் அந்தப் பாக்கெட்டும் மாற்றி வைப்பதும்கூட முதல் தேதியின் சகஜம்.

சரியான நேரத்தில் நுழைந்தார்கள் கூட்டமாக ஐந்து பேர். கையில் நீண்ட லிஸ்ட்.

லட்சுமிபதி "என்னது?'' என்றார்.

"நம்ம அக்கெüண்ட் சேக்ஸன் எழுமலை பொண்ணுக்கு இந்த மாசம் கல்யாணம் இல்ல...'' என்று நினைவுபடுத்தினார் ஒருவர்.

இது வழக்கம். அலுவலக ஊழியர் வீட்டில் திருமணம் என்றால் அதற்கு எல்லோருமாகச் சேர்ந்து பணம் போட்டு ஒரு பிரஸர் குக்கரோ} பெரும்பாலும் அதுதான்} அல்லது டேபிள் ஃபேனோ வாங்கி "அன்பளிப்பு ரயில்வே ஊழியர்கள்' என்று பெயர் போட்டுக் கொடுப்பது நெடு நாளைய நடைமுறை.

லபக் முதல் தேதியில் பிடித்துவிட்டார்கள்.

லட்சுமிபதி பத்து ரூபாயை பேண்டிலிருந்து எடுத்துக் கொடுத்து "எம் பேரை டிக் பண்ணிடுங்கப்பா'' என்றார்.

இப்படி யாராவது ஒருவர் கல்யாணம் செய்வதும் ரிடையர்ட் ஆவதும் அதற்கான பணம் சேகரிப்பதும் முதலீடு செய்வது மாதிரி அனைவரும் பணம் கொடுப்பதும் சராசரியாய் எல்லா மாதமும் நிகழும்.

பஸ் ஸ்டாப்பில் நின்ற போது "கட்ச்சி டிக்கெட் சார். சீக்கிரம் சார்'' என்று சீட்டாடுபவன் மாதிரி விசிறியாக லாட்டரி சீட்டை நீட்டினான் ஒருவன்.

லட்சுமிபதியின் கட்டுப்பாடெல்லாம் குலைந்தது. காலையிலேயே பேப்பரில் இந்த வாரம் எப்படி? இருக்கும் என்று தனுசு ராசியில் போட்டிருந்ததை மனப்பாடமாய் படித்திருந்தார்.

கணவன் மனை உறவு அன்புடையதாக இருக்கும் என்பதற்கும் கீழ் "மொத்தத்தில் சுமாரன வாரம் அதிர்ஷ்ட எண் 1' என்று போட்டிருந்தான்.

லாட்டரி சீட்டை ஆர்வமாகப் பார்த்தார். எல்லாச் சீட்டிலும் முதல் இலக்கம் ஒன்று. முதல் பரிசும் ஒரு லட்சம் இன்று தேதியும் ஒன்று. எல்லாமே கூடி வந்தது.

"எத்தினி டிக்கெட் இருக்கும்?''

"எட்டு சார். கண்டிப்பா அடிக்கும் சார்''

"என்னைக்கு குலுக்கல்?''

"இன்னைக்கு நாளைக்கு ரிசல்ட். நாளைக்கு நெறைஞ்ச வெள்ளி. லட்ச ரூபா உங்களுக்குத்தான் சார்''

இப்படிப்பட்ட நல்ல டிக்கெட்டை அவன் வைத்துக் கொள்ளாமல் நமக்கேன் கொடுக்கிறான் என்றெல்லாம் லட்சுமிபதியால் யோசிக்க முடியவில்லை.

வாங்கிக் கொண்டார்.

"ஒண்ணாந்தேதி சம்பளத்தைச் சாமி படத்தாண்ட வச்சிட்டு செலவு பண்ணனும்னு எத்தினா வாட்டி சொல்லி அனுப்பிச்சேன்?' என்று மனதில் திட்டினாள் மனைவி.

"ஒரு லட்சம் வேண்டாம். அம்பதாயிரம் இருந்தா போதும் பொண்ணு கல்யாணத்தை முடிச்சிட்லாம். நாளைவரை காத்திருக்கணும்.

"போன வாரம்கூட மெட்ராஸ்தான் ஒருத்தன் லக்கா அடிச்சுக்குனு போனான்.' பரிசுத் தொகையில் கல்யாணத்தை முடித்துவிட்டால் ரிடையர்ட் ஆகிற பணத்தில் வீட்டைக் கட்டி விடலாம் என்று திட்டம் தீட்டினார்.

பணம் எடுத்தே எடுத்தாகிவிட்டது. ஒட்டலுக்குப் போய் ஒரு தோசையும் காப்பியும் சாப்பிடலாம் என்று நினைத்து கீதா கஃபேவில் நுழைந்து ஃபேன் சுற்றுகிற இடமாகப் பார்த்து அமர்ந்தார்.

வீட்டு வாடகை, மளிகை, ரேஷன், பஸ் பாஸ், பால் அட்டை போன்ற ஆயுள் தண்டனைகள் போக ஜுரம், சளி, விருந்தினர் வருகை, கோவில், பயணம் போன்ற லாக்-அப் விஷயங்கள் சர்வர் வருவதற்குள் தோராயமாக ஒரு கணக்குப் போட்டு மிரண்டார்.

சர்வர் "என்ன சார் வேணும்'' என்றான்.

லட்சுமிபதி கல்யாண வயதில் இருக்கிற பெண்ணையும் பையனையும் உத்தேசித்து "ஒரு காப்பி மட்டும் கொடுப்பா'' என்றார் நிதானமாய்.
(தொடரும்)

திங்கள், நவம்பர் 24, 2008

திரைக்குப் பின்னே- 8

தருமி முதல் தசாவதாரம் வரை

நாகேஷ் என்றால் நகைச்சுவை. புத்திசாலித்தனமான பாவனை வெளிப்பாடும் டைமிங் சென்ஸும் உடல் மொழியும் அவருடைய நகைச்சுவைக்குத் தனி ஈர்ப்பைத் தருகின்றன.




திருவிளையாடல், பாமா விஜயம், காதலிக்க நேரமில்லை, ஆயிரத்தில் ஒருவன், சர்வர் சுந்தரம் போன்றவை அவருடைய முதல் ரவுண்டு காமெடிகள். உடல் சேட்டைகளும் ஓங்கி ஒலிக்கும் குரலும் பிரதானமாக இருந்தன அதில். அவருடைய இரண்டாவது இன்னிங்ஸ், ஆழ்ந்த அமைதியான உடல் சேட்டைகள் குறைந்த காமெடிகள்.

நான் அவரை இரண்டாவது இன்னிங்ஸ் காலத்தில்தான் சந்தித்தேன். இரண்டொரு முறை பேட்டி கேட்டபோதும் அதை அவர் தவிர்த்துவிட்டார். பேட்டி தருவதில் பெரிய விருப்பம் எதுவுமில்லை அவருக்கு. மிகவும் விருப்பமுள்ளவர்கள் அல்லது ஏற்கெனவே பழகியவர்களிடத்தில் மட்டும்தான் அவர் பேசினார். அப்படிப் பேசும்போது அங்கே தொடர்ந்து நகைச்சுவைப் பட்டாசு வெடிக்கும்.

கமல்ஹாசனின் மகளிர் மட்டும் படத்தில் அவர் நடிப்பதை கமல்ஹாசன் இப்படி அறிவித்தார்:

"இந்தப் படத்தில் நாகேஷ் நடித்திருக்கிறார்.... உண்மையாகச் சொல்ல வேண்டுமானால் நடித்து ’இருக்கவில்லை' என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இதில் நாகேஷ் பிணமாக நடித்திருக்கிறார்'' என்றார்.

ஒரு படத்தில் ஒரு நடிகர் முழுவதும் பிணமாகவே நடித்து சிரிக்க வைத்தது உலக சினிமா வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை என்று தோன்றுகிறது.

’அபூர்வ சகோதரர்கள்', 'காதலா காதலா', 'பஞ்சதந்திரம்,' 'தசாவதாரம்' என கமல் பல படங்களில் நாகேஷைப் பயன்படுத்தியிருக்கிறார்.

படத்தில் நடிப்பதில் அவருடைய பங்கு முக்கியத்துவமானது என்பது மட்டுமல்ல. படப்பிடிப்பு இடைவேளைகளில் அவர் தரும் பங்களிப்புக்காகவும்தான் அவருக்கு இந்தத் தொடர்ச்சியான வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன்.

'பஞ்சதந்திரம்' படப்பிடிப்பின்போது நடைபெற்ற சிறு சம்பவம் இது.

கமல்ஹாசன் எப்போதும் அதிக காரம் சாப்பிட மாட்டார். அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிக்கன் துண்டில் ஒட்டியிருந்த மசாலாவைத் தவிர்க்கும் விதமாக அதன் கழுத்துப் பகுதியைப் பிடித்துக் கொண்டு தட்டில் தட்டினார். மசாலா விழுவதாக இல்லை. வேகமாகப் பலமுறை தட்டினார். அருகில் இருந்த நாகேஷ் லேசாகத் திரும்பிப் பார்த்து "என்னப்பா... கோழி சரியா சாகலையா. இந்த அடி அடிக்கிறே?'' என்றார் கூலாக.

கமல் இதையெல்லாம் ரசிப்பார் என்று நாகேஷுக்குத் தெரியும். நாகேஷ் இப்படியெல்லாம் ரசிக்க வைப்பார் என்று கமல்ஹாசனுக்குத் தெரியும்.


பட்டு என்பது பெயர் காரணம்

மோகன் ஸ்டுடியோவில் பிரபு நடித்துக் கொண்டிருந்த ’உழவன்' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. நான் பிரபுவைப் பார்க்கத்தான் சென்றிருந்தேன். பாதிப் பேட்டியில் வண்ணத்திரையில் அவரைப் பற்றி வந்த கிசுகிசுவைச் சுட்டிக்காட்டி அதே கோபத்தில் பேட்டி போதும் என்று விடைகொடுத்துவிட்டார்.



அதே ஸ்டுடியோவில் ’சில்க்' ஸ்மிதா வேறு ஏதோ படத்துக்காக நடித்துக் கொண்டிருந்தார். அவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவ்வளவாகக் கெடுபிடி இல்லாமல் பேசினார். பேட்டி என்றால் பொதுவாக "இத்தனாம் தேதி இந்த இடத்துக்கு இத்தனை மணிக்கு வாங்க” என்பார்கள் பலரும். ஆனால் இவரோ தன் தொடையை மறைக்கும் விதமாக ஒரு சின்னத் துண்டைப் போர்த்திக் கொண்டு "கேளுங்க" என்றார் சாதாரணமாக.

என்னிடம் கைவசம் கேள்விகள் எதுவும் இல்லை. திராபையான கேள்விகளாகக் கேட்டேன். ”இப்போது என்ன படங்களில் நடிக்கிறீர்கள்” என்பது என் முதல் கேள்வி. அப்போது அவர் நடித்துக் கொண்டிருந்த நான்கைந்து படங்களின் பெயர்களைச் சொன்னார். "என்ன வேடத்தில் நடிக்க விரும்புகிறீர்கள்” என்பது என் இரண்டாவது கேள்வி. "பிச்சைக்காரியா நடிக்கணும்னு ஆசை” என்றார். "உங்களுக்குப் பிடித்த நடிகை யார்” என்று மூன்றாவது கேள்வி. அவர் ”சாவித்திரி” என்று சொன்னதாக ஞாபகம்.

அவ்வளவுதான் பேட்டி. வண்ணத்திரை போன்ற குட்டிப் பத்திரிகையிலேயே அரைப் பக்கத்துக்கு மேல் அதை இழுக்க முடியாது. அப்படியொரு ரத்தினச் சுருக்கப் பேட்டி அது.

நடிகைகளிடம் நீங்கள் நடிக்க விரும்பும் கேரக்டர் என்று கேட்டால் பிச்சைக்காரியாக நடிக்க விரும்புகிறேன் என்பதும் பைத்தியக்காரியாக நடிக்க விரும்புகிறேன் என்பதும் அப்போது பேஷனாக இருந்தது. கவர்ச்சியாக நடிப்பீர்களா என்றால் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். ஆனால் கிளாமராக நடிப்பேன் என்பார்கள். இதெல்லாம் நடிகைகளின் ரெடிமேட் பதில்கள். நாங்களும் இந்தப் பதில்களை விடாமல் கேட்டுப் பிரசுரித்துக் கொண்டிருப்போம். வாசகர்களும் ’நடிகை... யின் பதில் அபாரம்' என்று, வாசித்துக் கடிதம் எழுதுவார்கள். சங்கிலித் தொடர் போன்ற பழக்கம்போல இதைச் செய்து கொண்டிருந்தோம். ஆனால் அவர், அவருடைய தொடர்ச்சியான வேடங்கள் குறித்து அதிருப்தியாகத்தான் இருந்தார் என்று பிறகு தெரிந்தது.

வித்தியாசமாக நடிக்க வேண்டும் என்று அவருக்கு ஆசை இருந்தது. ஆனால் அவர் மீது இருந்த முத்திரை கடைசி வரை மறையவே இல்லை. அவரை அரைகுறை ஆடையுடன் ஆடுவதற்குத்தான் அழைத்தார்கள். சமீபத்தில் கலைநிகழ்ச்சிகள் நடத்தும் கடையம் ராஜுவைச் சந்தித்தபோது "அனாதை ஆஸ்ரமங்களுக்காகக் கலை நிகழ்ச்சி நடத்துவதாக இருந்தால் நான் இலவசமாகவே நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன்'' என்று சில்க் ஸ்மிதா அவரிடம் சொல்லியிருந்ததைக் கூறினார்.

அவர் சொன்ன சில பதில்கள் உண்மையானவையாகவும் இருந்தன என்று முடிவு செய்வதற்கு சமயத்தில் அந்த நபர் உயிரையும் தர வேண்டியிருப்பதாகத் தோன்றுகிறது.

தற்கொலை என்பது சமூகத்துக்குத் தரும் தண்டனை என்பார்கள். பல நேரங்களில் தங்களை நம்ப வைப்பதற்காகச் செய்கிற கடைசிக் கட்ட முயற்சியாகவும் அது இருக்கிறது. சில்க் ஸ்மிதாவை எத்தனை பேர் நம்பினார்கள் என்று தெரியவில்லை. அவருடைய பிணம் ராயப்பேட்டை மருத்துவமனையில் அந்தப் ’பட்டு' மேனி கேட்பாரற்றுக் கிடந்தபோது அவருடைய கடைசிமுயற்சியும் தோற்றுப் போனதாகவே தெரிந்தது.


நடிகைக்காகவே பிறப்பெடுத்த கேள்விகள்

சில்க் ஸ்மிதாவிடம் கேட்டது மாதிரி பல நேரங்களில் கேள்வி கேட்கத்தான் வேண்டியிருக்கிறது. அந்தவிதத்தில் சில நடிகைகள் பிரமிக்க வைக்கவும் செய்திருக்கிறார்கள். அப்படி பிரமிக்க வைத்த ஒரு நடிகையைத் தெரிந்து கொள்வதற்கு முன்... பொதுவாக நடிகை எப்படிப் புரிந்து கொள்ளப்படுகிறார்கள் என்று பார்ப்போம்.




நடிகைகள் என்றதும் ஆணாதிக்கத்தோடு இன்னும் கொஞ்சம் வக்கிரம், கொஞ்சம் அலட்சியம், கொஞ்சம் கவர்ச்சி ஈர்ப்பு எல்லாம்தான் கலந்து கொள்கிறது.

நம் இயக்குநர்களும் அவர்களை அப்படித்தான் பார்க்கிறார்கள். அவர்கள் குறைவான உடையோடு குலுங்கிக் குலுங்கி ஓடுவதற்காகவே பிறந்தவர்களாகப் பாவிக்கிறார்கள். ஆல்ப்ஸ் மலைச் சிகரத்திலும் இமயத்தின் வெள்ளைப் பனி மலையின் மீதுலாவும்போதும் நடிகைக்கு மார்பகமும் தொடையும் தொப்புளும் தெரிகிற மாதிரிதான் உடை. அவர்களும் சந்தோஷமாக பனிக்கட்டி மீது உருண்டு புரண்டு ஆடுவார்கள். உடன் நடிக்கும் நடிகரோ ஜெர்க்கின் போட்டுக் கொண்டு தலையில் விலங்கின் ரோமத்தால் ஆன குல்லா அணிந்து கையில் தோல் கிளவுஸ் மாட்டிக் கொண்டு கம்பீரமான ஆண் மகனாக சிகரெட் புகைத்தபடி ஸ்டைல் காட்டுவார்.

நடிகைகளை வெறியுடன் காமுகிக்கும் எந்திரம்போலச் சித்திரிப்பதில் சினிமாதுறையினரும் அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள். மக்களுக்கு அவர்கள் கனவுக் கன்னிகளாக மாறவேண்டும் என்பது தலைவிதி.. அல்லது தலையாயவிதி. அப்படிக் கனவுக்கன்னியாக நாம் திகழவேண்டும் என்று சம்பந்தப்பட்ட சில நடிகைகளே விரும்புவது வேறு.

இதில் பத்திரிகையாளர்கள் இந்த இருதரப்புக்கும் இடையே தங்கள் பங்களிப்பைச் செலுத்த வேண்டியதாக இருக்கிறது.

நடிகைகள் என்றால் எப்போ கல்யாணம், காதல் கல்யாணமா, கவர்ச்சியாக நடிப்பீர்களா, உங்களுக்கும் அவருக்கும் இதுவாமே, நடிக்க வராமல் இருந்தால் என்ன செய்து கொண்டிருப்பீர்கள், (யாரைப் பிடித்து) எப்படி நடிக்க வந்தீர்கள், உங்களுக்குப் பிடித்த ஹீரோ யார், கல்யாணம் ஆன பிறகும் நடிக்க வருவீர்களா, நம்பர் ஒன் நடிகை ஆவது எப்போது, எதற்காக நாய் வளர்க்கிறீர்கள்? (நான் சில்க்கிடம் கேட்ட கேள்விகளையும் சேர்த்துக் கொள்ளலாம்) இந்தக் கேள்விகளைத் தவிர்த்துவிட்டு கேள்விகேட்ட தமிழ் நிருபர் யாரேனும் இருந்தால் அந்தத் தனித் தன்மைக்காக அவரை நோபல் பரிசுக்குக்கூட சிபாரிசு செய்யலாம்.

நடிகை ஜோதிர்மயி என்னை ஆச்சரியப்படுத்திய நடிகை. என்ன மாதிரி பொழுது போக்குவீர்கள் என்று கேட்டேன். படிப்பேன் என்றார். இப்போது படித்துக் கொண்டிருக்கிற புத்தகம் என்ன என்றேன். கேப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ்ஸின் ஹண்ரட் இயர்ஸ் ஆஃப் சாலிட்யூட் என்றார். தொடர்ந்து அவர் லத்தீன் அமெரிக்கப் புனைவுலகம் பற்றி படபடவெனப் பேச ஆரம்பித்துவிட்டார். நான் இந்தக் கேள்விக்கு முந்தைய கேள்வி வரை அவரை எப்போ கல்யாணம் டைப்பில்தான் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தேன். சட்டென அவமானமாகிவிட்டது எனக்கு.

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார். தொழில் கண்டும் எள்ளாமை வேண்டும். இதையும் எங்காவது சொல்லியிருப்பாரோ என்னவோ?

LinkWithin

Blog Widget by LinkWithin