செவ்வாய், மார்ச் 03, 2009

திரைக்குப் பின்னே- 22

சொன்னது நீ தானா?

"கரகாட்டக்காரன்', "தாலாட்டு கேட்குதம்மா' போன்ற படங்களுக்குப் பிறகு கனகாவின் புகழ் உச்சத்தில் இருந்தது. "நெஞ்சில் ஓர்
ஆலயம்', "வானம்பாடி' படங்களைப் பார்த்து தேவிகாவின் மீதிருந்த மயக்கம் சற்றே கனகாவின் பக்கம் திரும்பிக் கொண்டிருந்தது.

ராஜ அண்ணாமலைபுரத்தில் உள்ள அவர்களின் வீட்டில் இருவரையும் ஒரே இடத்தில் சந்திக்கிற சந்தர்ப்பம். மிடுக்கான பழைய வீடு.
கதவைத் தட்டியதும் கனகாதான் கதவைத் திறந்தார். ஜீன்ஸ் பேண்டும் டி சர்ட்டும் போட்டிருந்தார். புடவையில் மட்டுமே பார்த்திருந்த
அவரை இப்படி எதிர்பார்க்காததுதான் அதிர்ச்சிக்குக் காரணம். போதாததற்கு மூக்குக் கண்ணாடி வேறு அணிந்திருந்தார். அவர் இப்படி
இருந்திருக்கவே கூடாது என்று நினைத்தேன். ஒரு நடிகை ரசிகனின் எதிர்பார்ப்பைப் புறந்தள்ளிவிட்ட ஏமாற்றம் அது.

உள்ளே வரவேற்பறையில் அமர வைத்தார். தேவிகா வந்தார். கனத்த சரீரம். ""நீ இதுக்கு முன்னாடி வந்திருக்கே இல்லையாப்பா?''
என்றார். பத்திரிகையாளர்களிடம் வழக்கமாக அறிமுகப்படுத்திக் கொள்ளும் பாணி அது. கண்களில் துறுதுறுப்பும் நாணமும்
தென்படாத அவருடைய உருவத்தையும் மென்மையற்ற குரலையும் ஒரு வயதான தாய்க்கான அடையாளம் என உடனடியாக ஏற்றுக்
கொள்ள மனம் தயங்கியது.

எதிரில் வந்து அமர்ந்த தேவிகா, நான் கேட்க வந்த கேள்விகளை அலட்சியம் செய்துவிட்டு அவர் ஏதோ பேச ஆரமம்பித்தார். "அந்தப்
படுபாவி. குடிகாரன். இப்ப இது என் பொண்ணு என்கிட்டதான் இருக்கணும்னு சொல்றானே.. நியாயமா சொல்லு? பெத்து வளர்த்து
ஆளாக்கி இவ்வளவு தூரம் வந்த பிறகு எங்க இருந்து வந்தான் அவன். (கனகாவைக் காட்டி) இவ பொறந்தப்ப விட்டுட்டுப் போன
வம்பா. இப்ப நடிகையாகி சம்பாதிக்கிறான்னு தெரிஞ்சதும் பாசம் பொத்துக்கிட்டு வந்துடுச்சாக்கும்.... ஏம்மா அந்த ஸ்டூலை எடுத்து
முன்னாடிப் போடு.. காலை இப்படி கீழே தொங்கவிட்டு வெச்சிருந்தா வீங்கிப் போவுதுப்பா. இப்படி மேல வெச்சுக்கிறேன்... ம்.. என்ன
சொன்னேன்? குடிகாரன்... குடிகாரன். எதுக்குச் சொந்தம் கொண்டாட்றான் இப்ப வந்து?''
அவர் திட்டிக் கொண்டிருப்பது கனகாவின் அப்பாவை என்பது கொஞ்ச நேரம் கழித்துத்தான் புரிந்தது. எந்தவித முன்னறிவிப்பும்
இல்லாமல் திட்ட ஆரம்பித்ததில் எனக்கு நேராகவே காலை நீட்டி உட்கார்ந்திருந்ததில் சற்று நிலைகுலைந்து போனேன். என் கன
வெல்லாம் சரிந்து தரைமட்டமாக விழுந்தது. மாலை ஆறரைக்கு அவர் வீட்டுக்குப் போனவன் இரவு எட்டு மணிக்கு வெளியே
வந்தேன். எனக்குப் பழக்கமில்லாத பகுதி அது.இருண்ட தெருக்கள் வழியாக ஏதோ வாழ்க்கையின் தாத்பர்யம் புரிந்து போனவன் மா
திரி நடந்தேன்.அங்கே இங்கே சுற்றி தேனாம்பேட்டை சிக்னல் வந்ததும்தான் எனக்கு வழி விளங்கியது.
அடுத்த ஆண்டில் தேவிகாவும் இறந்துபோக, கனகாவைப் பேட்டி எடுக்க நினைத்தபோது ஒரு அட்வகேட் எண்ணைக் கொடுத்து
அவரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்றார்கள். அந்த எண்ணில் பேசினேன். நீங்கள் யார், எதற்காகப் பேச வேண்டும்? என்ன பேச
வேண்டும்? என்று நிறைய கேள்வி கேட்டார்கள். அதன் பிறகு கனகாவை சினிமாவிலும் பார்க்க முடியவில்லை. பொது நிகழ்ச்சிகளி
லும் பார்க்கமுடியவில்லை.
அந்த வீட்டையும் பார்க்கவில்லை.

மணிவண்ணன் அலுவலகத்தில்

சத்யராஜ் சொன்ன விஷயம் இது. "கோயமுத்தூர் கல்லூரியில் பி.எஸ்ஸி. படிக்க விண்ணப்பம் வாங்க வரிசையில் நின்று
கொண்டிருந்தபோது ஒரு மாணவர் எந்த கோர்ஸில் சேருவதென்றே முடிவெடுக்க முடியாமல் நின்று கொண்டிருந்தார். "அட்வான்ஸ்
இங்கிலீஷ் என்கிறார்களே அது என்ன கோர்ஸ்' என்றார் அந்த மாணவர் என்னிடம். ஆளைப் பார்த்தால் என்ன சொன்னாலும் நம்புவார்
மாதிரி இருந்தது. "இப்ப ஒரு வீடு வாங்கணும்னா அட்வான்ஸô கொஞ்சம் பணம் தர்றதில்லையா.. அந்த மாதிரி இங்கிலீஷ்
கத்துக்கறதுக்கு முன்னாடி அட்வான்ஸô கொஞ்சம் இங்கிலீஷ் கத்துக் கொடுப்பாங்க' என்று ஒரு போடு போட்டேன். என்னை ஏற
இறங்க பார்த்துட்டு மனசார நம்பி அதற்கு விண்ணப்பித்தார். ஷேக்ஸ்பியர், பெர்னாட்ஷா என்று ஆங்கில இலக்கியம் ஆரம்பித்ததும்
இரண்டாவது மாசமே படிப்பை மூட்டைக் கட்டிவிட்டு சென்னைக்கு ரயில் ஏறிவிட்டார். பாரதிராஜாவிடம் உதவியாளராகச் சேர்ந்தார்.
இயக்குநர் ஆனார். அவர்தான் டைரக்டர் மணிவண்ணன். அவர் டைரக்டர் ஆனதற்கு நானும் ஒரு காரணம் என்றால் அவர் கோபித்துக்
கொள்ள மாட்டார்.''
ஒரு முறை அவரைச் சந்திக்க அவருடைய தி.நகர். அலுவகத்துக்குச் சென்றிருந்தபோது, அங்கு தமிழகத்தில் வெளியாகும்
பெரும்பான்மையான நாளிதழ்கள் இருந்ததைப் பார்த்தேன். டி.வி.யில் செய்தி ஓடிக் கொண்டிருந்தது. "அப்ப திரிபாதி( திரிபாதியாகவோ
அது போன்றதொரு வட இந்தியத் தலைவராகவோ இருக்கலாம்.) சொன்னது மட்டும் சரிங்கிறீங்களா?'' என அப்ரப்ட்டாக ஆரம்பித்தார்
. எனக்கு சுதாரிக்கச் சில வினாடிகள் ஆயின. டி.வி.யில் அப்போது அவர் சம்பந்தமாக ஏதோ ஓடிக் கொண்டிருந்தது. திரிபாதியைப் பற்றி
எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்; எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்; அவர் என்ன சொல்லியிருந்தார்;
இப்போது டி.வி.யில் அது சம்பந்தமாக என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்... சுத்தம்... ஒன்றுமே விளங்கவில்லை. "ஒரு நியாயம்
இருக்கா பாருங்க.. பேசறதெல்லாம் பேசிட்டு இப்படி பல்டி அடிச்சா ஜனங்க என்ன இளிச்ச வாயனுங்களா?'' என்று ஆவேசமாகக் கூ
றினார். பேந்த, பேந்த விழித்தேன். அவரோ, அது பற்றி என்னுடைய அபிப்ராயத்தை எதிர்பார்த்துப் பேசிக் கொண்டிருந்தார். குப்பென்று
அவர் பற்றிய மதிப்பு உயர்ந்தது. சத்யராஜ் சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு இவரை எடைபோடக்கூடாது என்று தெரிந்தது.
மிகப்பாதுகாப்பாகப் பேசினேன். அவர் சொல்வதற்கெல்லாம் "ஆமாம் சார். யாருக்கு சார் அக்கறை..? அரசியல்வாதிகிட்ட என்னத்தை
எதிர்பார்க்க முடியும்?' என்று பேசிவிட்டு தப்பித்து வந்தேன்.
இந்திய அரசியல் பற்றி அவருக்கு நல்ல ஞானம் உண்டு. ஓயாமல் படிக்கிறவராக இருக்கிறார். பதிப்பகங்களை நாடி வந்து புத்தகம்
வாங்குகிற பண்பு உள்ளவர் அவர். சினிமா இந்த மாதிரி ஆட்களை கோமாளிகள் போல சித்திரிப்பதும் அதே சமயம் ஹீரோவானவர்
எல்லா சமூக சிக்கலுக்கும் சுலபமாகத் தீர்வு கண்டுவிடுபவராகவும் இருப்பது விபரீதமான முரண்பாடுதான்.


புதுமைப்பித்தன்

பார்த்திபனிடம் நேர்த்தியான ரசனையைப் பார்த்து வியப்பேன். வாழ்த்து சொல்பவர்கள் பொக்கே கொடுத்துப் பார்த்திருக்கிறேன். இவர்
பழங்களால் ஆன பாக்கெட்டை கொடுப்பார். நடிகர்களுக்கும் நண்பர்களுக்கும் இவர் தரும் பரிசுகள் அவருடைய தனி
கைவண்ணத்தோடு இருக்கும். யாருக்கும் அவசர அடியாக கடையில் போய் ஒரு பரிசுப் பொருளை வாங்கித் தருகிற ஆள் இல்லை
அவர். மீனாவுக்கு அவர் தந்த பரிசு ஒன்றை மீனாவின் வீட்டில் பார்த்தேன். மீனாவின் கண்ணை குளோசப்பில் படமாக்கி "கண்ணே
மீனா...' என்று ஆரம்பித்திருந்தார். அதிர்ச்சியாக இருந்தது. கீழே அடுத்த வரி "மீனே கண்ணா?'... இப்படியாக இருக்கும் அவர் வழங்கும்
பரிசுகள். மேடையில் ஒரு நிமிடம் பேசுவதென்றாலும் ஏதாவது புதுமையிருக்கும்.
ஒருமுறை அவருடைய மனைவி சீதாவைப் பேட்டி காணச் சென்றேன். காலையிலேயே வரச் சொல்லியிருந்தார். சீதா தஞ்சாவூர்
ஓவியங்கள் வரைவதில் திறமைசாலி. நிறைய ஓவியங்கள் வரைந்து வைத்திருந்தார். அதைப் பற்றித்தான் பேட்டி காண வந்திருந்தேன்.
எங்கோ படப்பிடிப்பில் இருந்த பார்த்திபனும் ஓடிவந்து பேட்டியைச் சுவாரஸ்யப்படுத்தினார். (திருமதி இயக்குநர் என்ற தலைப்பில்
சீதாவையும் இயக்குநர் வசந்தின் மனைவி ரேணுகாவையும் பேட்டி எடுத்திருந்தேன். ரேணுகா இன்டீரியர் டெகரேஷன் துறையில் தாம்
செய்திருந்த புதுமைகளைப் பற்றிச் சொன்னார்.) அவர் வீட்டில் "கருப்பி' என்றொரு நாய் இருந்தது. பேட்டரியில் ஓடும் காரை
தமிழ்நாட்டில் முதலில் வாங்கியவர் அவராகத்தான் இருக்கும்.
பார்த்திபனின் அலுவலகத்தில் "உங்கள் பாதுகைகளைக் கழற்றித் தாருங்கள்} பரதன்' என்று எழுதியிருக்கும் இடத்தில் செருப்பை விட
வேண்டும். காலிங் பெல்லுக்கு பதில் ஒரு பெரிய காண்டா மணியைக் கட்டித் தொங்கவிட்டிருப்பார். உள்ளே நுழைந்ததும் ஒரு
எலக்ட்ரானிக் சென்ஸர் மூலம் நம் வரவை அறிந்து குருவி பொம்மை ஒன்று கத்தும். வாழ்க்கையை அணுஅணுவாக ரசிப்பது
என்பார்களே அது அவருக்கு மட்டுமே சாத்தியம் என்று பொறாமையாக இருக்கும்.
அடுத்த ஆண்டில் அவரும் சீதாவும் மன வேறுபாடு காரணமாகப் பிரிந்தனர். அதில் புதுமை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

LinkWithin

Blog Widget by LinkWithin