திங்கள், செப்டம்பர் 22, 2008

நோக்கம்

தமிழ்மகன்

உயிரோசை இதழில் கடந்தவாரம் வெளியான சிறுகதை.

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=166


அலை அடிக்கும் கடலோரம் ஆயாசமாக அமர்ந்தான் ராமன். கடல் கடந்து வருகையில் தண்ணீருக்குத் தவித்துப் போய்விட்டாள் சீதை. நடுவிலே இளைப்பார வசதியில்லா வெயில். சிவனை பூஜித்துப் புறப்படுவதாக எண்ணம் ராமனுக்கு. லட்சுமணன் இந்தப் பிராந்தியம் பாதுகாப்பானதுதானா? காட்டுவிலங்குகள் தாக்கக் கூடிய இடமா என்பதிலேயே கவனமாக இருந்தான். அவன் சற்றுத் தள்ளி நின்றவாறு இலங்காபுரி நோக்கி பார்வையிட்டுக் கொண்டிருந்தான். வானரங்கள் அங்கும் இங்கும் மரத்தடிகளிலே களைப்பாறிக் கொண்டிருந்தன.



மணல் வெளியில் ஊற்றெடுத்து சீதாபிராட்டிக்கு சுரைக்குடுவையில் நீர் முகர்ந்து கொடுத்தான் ஹனுமன். அமர்ந்து நீரை கையேந்திக் குடித்தாள் சீதா.
அவள் அருந்திய இடத்தில் மணலில் சிந்திய நீர், திட்டாகப் பரவி நின்றது. அதைக் கையால் அள்ளித் திரட்டி குழவி போலாக்கினாள் சீதா. மணலில் விளையாட விரும்பாத மனிதர் உண்டா? இல்லை எனத் தெரியும். கடவுளும் இல்லையென்று சிரித்துக் கொண்டான் ராமன்.

"ஏன் சிரிக்கிறீர்கள்? மிதிலா புரியிலோ, அயோத்தியிலோ கடற்கரையே இல்லை. இப்போது விட்டால் பிறகு எப்போது இப்படி கடற்கரையில் விளையாட முடியும்? பாற்கடலிலோ பாம்பே கதி...''

"சிரித்தது உன் விளையாட்டைப் பார்த்தல்ல. சிவபூஜையில் ஈடுபட விரும்பினேன். திரும்பிப் பார்த்தால் நீ லிங்கேஸ்வரனை கையில் ஏந்தியிருக்கிறாய்?''

"இல்லை. ராமநாதீஸ்வரன்'' ஹனுமன் உரிமையோடு பெயரிட்டான். ராமனிடம் அதே மாறாத புன்னகை.

சற்றைக்கெல்லாம் "ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய..'' ராமனின் உதடுகள் மென்மையாக உச்சரிக்கத் தொடங்கின. இமைகள் மூடியிருந்தன. ஒருக்களித்து அவனருகில் அமர்ந்து நிஷ்டையில் ஆழ்ந்தாள் சீதா. மனிதப் பிறவியெடுத்து வந்து இறைவன் தன்னைத்தானே வணங்கி மகிழும் நாடகத்தை ரஸித்துக் கொண்டிருந்தான் ஹனுமன். அவனுடைய இமைகளும் மெல்ல திரையிட்டன. ராமனின் மென்குரல் மட்டும் ஏகாந்த வெளியெங்கும் பரவி ஓடிக் கொண்டிருந்தது. யுகங்களே கரைந்து கழிந்தது போல காலம் கடந்து கரைபுரண்டு கொண்டிருந்தது. மூவருமே பிரபஞ்மெங்கும் வியாபித்து பொருளற்ற ஓர் உருவாய் எங்கும் நிறைந்து கிடப்பதாய் நினைத்தான் ஹனுமன். அக்கணமே பிரபஞ்சத்தின் ஒரு துளியாய் எங்கோ ஒரு புள்ளியாக மாறியும் தோன்றியது.

"இரவு இங்கேயே தங்கி காலை அயோத்தி நோக்கிப் புறப்படுவோமா?'' ராமன் குரல் குளிர்த் தென்றல் போல தழுவியது. சீதையும் லட்சுமணனும் ஹனுமனும் ஆமோதித்தனர்.

காலை-

வானரங்களுக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டு நால்வரும் வடதிசை நோக்கிப் பிரயாணத்தை ஆரம்பிக்க இருந்த நேரத்தில், இந்த வனாந்திரத்தில் லிங்கத்தை அப்படியே விட்டுவிட்டுப் போவது உசிதமில்லையென தன் வாலால் சுழற்றி இழுக்க எத்தனித்தான் ஹனுமன். மணல் லிங்கம்தானே என்ற அசிரத்தை அவன் வால் வழியே வெளிப்பட்டது. லிங்கம் உறுதியாக இருந்தது. அதீத ஆவேசத்துடன் இழுத்துப் பார்த்தான். அசைவதற்கான அறிகுறியே இல்லை. அட மணலுக்கு இத்தனை வலிமையா?

மானிட அவதாரமாயினும் முக்காலம் உணர்ந்த ராமன், இந்தச் செயலை ரசித்துக் கொண்டிருந்தான். ஹனுமன் ஆவேசத்துக்கு வால் அறுந்ததுதான் மிச்சம்.

அறுந்த வாலை மீண்டும் ஒட்ட வைத்தபடி ராமன் கேட்டான். "எதற்கிந்த ஆவேசம் ஹனுமா?''

வெட்கித் தலைகுனிந்து, "வழிபடும் நோக்கம் முடிந்தபின்பு வழியில் இப்படியொரு விக்ரகம் இருக்க வேண்டாமே என்று நினைத்தேன். இந்த மணல் திட்டை அகற்றிவிடலாம் என்று...''

"லங்காபுரிக்குச் செல்வதற்காகப் பாலம் அமைத்தோம். அதற்கான நோக்கமும் முடிந்துவிட்டது. இனிமேல் பாலம் அவசியம் என்று நினைத்தாயா?''
ஹனுமன் அலைகளுக்கிடையே கோடுபோல கிடந்த கடற்பாதையைப் பார்த்தான். எத்தனை உழைப்பு... எத்தனை உழைப்பு... எவ்வளவு பாறைகள், எவ்வளவு மணல் குவியல், எத்தனை ஆக்ரோஷமாக உருவானது இந்த பாலம்... இதையும் இந்த மணல் லிங்கத்தையும் ஒன்றென்பதா?

"ராமா நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? இந்த லிங்கமும் இறைவன்தான் என்பதை அறியாமல் இல்லை. இந்த ஆளற்ற மணல் பூமியில் பராமரிக்க யாருமின்றி ஈசனை விட்டுச் செல்வதை விரும்பாமல்தான் அதை அகற்ற எண்ணினேன். அது அறியாமல் செய்த பாபம்தான். அதற்காக நல்ல நோக்கத்துக்காக உருவான பாலத்தைக் களைய நினைப்பதுபற்றி யோசிக்க முடியுமா? எதற்காக இரண்டையும் ஒப்பிட்டீர்கள் என்று எனக்கு விளக்க வேண்டும்'' தலைவணங்கி வினவினான் ஹனுமன்.

"எந்த நோக்கத்துக்காக எது உருவாக்கப்பட்டதோ அது நிறைவேறியவுடன் உருவாக்கப்பட்ட அம்சம் நோக்கத்துக்கு விரோதமாக மாறிக் கொண்டிருப்பதை நீ கவனிக்கவில்லையா? இறைவன் சிருஷ்டியில் எல்லாமே அவன் நோக்கத்துக்கு விரோதமாக மாறிக் கொண்டுதான் இருக்கிறது?''

"என்ன சொல்கிறீர்கள் பிரபோ...?''

"பதறாதே வாயு புத்ரா... இதோ இந்த வில் எதற்காக சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறது?''

"பாதுகாப்புக்கு..''

"யாருடைய பாதுகாப்புக்கு?''

"பிரபோ என்னைச் சோதிக்காதீர்கள்... வில்லை சிங்கமும் புலியுமா பிரயோகிக்கின்றன. மனிதன்தான் பிரயோகிக்கிறான். அவனுடைய பாதுகாப்புக்குத்தான்...''

"மனிதர்களை அழிக்கவும் அதே வில்லைத்தான் மனிதன் பயன்படுத்துகிறான்.. நடப்பது திரேதா யுகம். துவாபர யுகத்தில் ஆயுதத்தின் நோக்கம் காத்துக் கொள்வதில் இருந்து அழித்துக் கொள்வதற்காக என்று மாறிவிடும். கலியுகத்தில் ஆயுதம் செய்வது, அதை விற்பது அதை விற்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது, அதற்கான சந்தையை ஏற்படுத்துவது, அப்படியான அரசியல் சூழலை நியாயப்படுத்துவது, புதிய ஆயுதங்கள் உருவாக்கும் சிந்தனையாளர்களை உருவாக்குவது, போர் செய்வது, போர் செய்யாமல் இருப்பது குறித்து விவாதிப்பது, அமைதிக்காகப் போராடுவது, போராடாமலேயே அழிப்பது, அழியாமல் இருப்பதற்கான அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவது... என ஆயுதத்தை மையப்படுத்திதான் உலகமே இயங்கும்...''

"எதிர்காலம் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரிய வேண்டாம். இந்த லிங்கமும் இந்த பாலமும்... நோக்க முரண்களாக மாறிப் போகுமா?'' கலக்கத்துடன் கேட்டான் காற்றின் மைந்தன்.

சுற்றும் முற்றும் பார்த்தான் ராமன். வனவிலங்குகள் ஏதும் தாக்க வருமோ என்பதில் கவனமாக இருந்தான் லட்சுமணன். சீதா தேவி போகும் தூரம் எண்ணி மரநிழலில் துயில் கொண்டிருந்தாள்.

"இந்த பாலம் வேண்டுமா, வேண்டாமா என கலியுகத்தில் விவாதம் பிறக்கும்... அப்போது நாம் பேசிக் கொண்டது போல அத்தனை எளிமையான விஷயமாக இது இருக்காது''


சபர்மதி ஆஸ்ரமத்தில் நேரு, படேல் இருவருமே மகாத்மா காந்தியிடம் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர்.

"சுதந்திரத்தை அடைவதுதான் நம் நோக்கமாக இருந்தது. அதற்காகத்தான் இந்தப் பேரியக்கம். சுதந்திரம் கிடைத்ததுமே நாம் அதை கலைத்துவிடுவதுதான் சரி. இதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை''

"ஏற்றுக் கொள்கிறோம். இப்போது ஆட்சி அமைப்பது யார்? புதிதாக ஒரு கட்சியைத் தொடங்கி அதை மக்கள் மத்தியில் பதியச் செய்து ஆட்சியைப் பிடிப்பது சாத்தியமா?'' நேரு தன் குல்லாவைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டு தலையைத் தடவிக் கொண்டார். அவருடைய வழுக்கைத் தலை வியர்த்திருந்தது.

"இப்போது சாத்தியமில்லை போலத் தோன்றும். பின்னர் இதே கட்சி நூறு கட்சியாக சிதறுண்டு போகும். காங்கிரஸ் பேரியக்கம். வேறு அற்பக் காரணங்களுக்காக - தனிமனித விருப்பு வெறுப்புகளுக்காக வெவ்வேறு தலைமையில் துண்டுபட்டு நிற்கும். அப்போது மக்கள் தங்களுக்குப் பாடுபடப் போகிறவர்கள் யார் என்று தீர்மானிக்கத்தான் போகிறார்கள். அதை இப்போதே செய்துவிட்டால் காங்கிரஸýக்கு நற் பெயர் மிஞ்சும்.'' காந்தி தீர்மானமாகச் சொன்னார். நேரு, படேலைப் பார்த்தார். தனித் தனி ராஜாங்கமாகச் சிதறுண்டு கிடந்த மாநிலங்களை ஒன்று சேர்த்த இரும்பு மனிதர் படேல், மகாத்மாவின் தர்மத்தையும் நேருவின் நியாயத்தையும் மனத்தராசில் நிறுத்திப் பார்த்தார். விவாதம் முற்று பெறாமலேயே பிரிந்தனர்.

இந்தியச் சுதந்திரம் இந்து} முஸ்லிம் கலவரத்துக்கிடையே பிறந்தது. காந்தி கசப்பான சூழலில் எல்லோரையும் போல அவராலும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியவில்லை. தில்லியில் நேரு சுதந்திரக் கொடியை ஏற்றும்போது கல்கத்தாவில் வகுப்புக் கலவரம் நடந்து கொண்டிருந்த பகுதியில் அவர் அமைதிக்காகப் போராடிக் கொண்டிருந்தார்.

பாகிஸ்தானில் இருந்து அகதியாக இந்தியா வந்தவர்கள், இந்தியாவில் இருந்து அகதிகளாக பாகிஸ்தான் சென்றவர்கள் என்று நாட்டில் ரத்த ஆறு ஓடியது. இரு தரப்பு இழப்புகளுக்கும் அவர் வருந்தினார். "பாகிஸ்தான் சென்று அங்குள்ள இந்துக்களுக்கு ஆறுதல் சொல்லலாம் என்றால் இங்கும் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே... நான் எந்த முகத்தோடு பாகிஸ்தான் இந்துக்களுக்கு ஆறுதல் சொல்ல முடியும்?'' உலக உத்தமரின் பேச்சில் அதீத வருத்தம் வெளிப்பட்டது.

பிர்லா மாளிகையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மகாத்மா மீது சிலருக்குக் கோபம். ஒருவன் மாளிகைக்கே வந்து குண்டு வீசிவிட்டுப் போனான். அவர் இந்துக்கள் மீதுமட்டும் பரிவு காட்ட வேண்டும் என்பது அவனுடைய ஆசை. அடுத்த சில நாளில் பாகிஸ்தானில் இருந்து வந்திருந்த அகதிகள் காந்தியைச் சந்தித்தனர். கூட்டத்தில் இருந்த ஒரு கோபக்கார இளைஞன். ""உங்களால்தான் நாங்கள் இப்படி ஆனோம். நீங்கள் பேசாமல் இமயமலைக்குப் போய்விடுங்கள்'' என்று கத்தினான். அவனை சமாதானம் செய்து அழைத்துப் போனார்கள்.
""வெள்ளையனை இந்தியாவைவிட்டு வெளியேற்றுவதற்காகப் பாடுபட்டவரை இந்தியாவைவிட்டு வெளியேற்றப் பார்க்கிறார்களே'' பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வந்த புண்ணியவான் ஒருவர் மனம் நொந்து புலம்பினார்.
மறுநாள் ஜனவரி 30, 1948. உலகப்பிதா காந்தியை முஸ்லிம்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்ற காரணத்துக்காக கோட்சே என்பவன் சுட்டுக் கொன்றுவிட்டான். இறக்கும்போது "ஹேராம்' என்றபடி தரையில் சாய்ந்தார் மகாத்மா.

"இந்த பூமியில் இப்படியொரு மகாபுருஷர் ஒருவர் வாழ்ந்தார் என்பதை வருங்காலத் தலைமுறையினர் நம்புவதுகூடச் சிரமமானதாக இருக்கும்'' என்றார் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

"சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸ் இருக்கக் கூடாது என்றார் காந்தி. அவரையே இருக்கக் கூடாதுனு சொல்லிப்புட்டான் நம்ம ஆளு. இந்தியாவுக்கு காந்திதேசம்னு பெயர் வைக்கச் சொல்லி தலையங்கம் எழுதப் போறேன்'' என்று தம் தோழர்களிடம் கூறிக் கொண்டிருந்தார் பெரியார்.


மனிதனுக்குத்தான் திரேதாயுகம் கலியுகம் எல்லாம். மகாவிஷ்ணுவுக்கு...? ஹனுமனை அழைத்துச் சொன்னார்: "ராம அவதாரத்தில் சொன்னது ஞாபகம் இருக்கிறதா? பூலோகத்தில் நடப்பதைப் பார்த்தாயா?''

"கொடுமை.. இறைவனுடைய நோக்கம் என்று ஒன்று இல்லையா? எல்லாமே மனிதர்களின் செயலாக அல்லவா இருக்கிறது?''

"இறைவன் நோக்கமற்றவன். இல்லையென்றால் கொலைகளுக்கும் பூகம்பத்துக்கும் மதக் கலவரத்துக்கும் அவன் பொறுப்பேற்க வேண்டியதாகிவிடும். மனித சாபம் பொல்லாதது ஹனுமா''

"அப்படியானால் இறைவனின் வேலை?''

"இறைவனாக இருப்பதுதான்''

மகாவிஷ்ணுவின் மாறாத புன்னகை. ஹனுமன் "சரி நான் கிளம்புகிறேன்'' என்றான்.

"நாளை வா... இன்னொரு காட்சியிருக்கிறது''

"சரி'' வாயு மகன் விரைந்தான்.


அரசு உறுதியாக இருந்தது. "சேது சமுத்திர திட்டம் நிறைவேறியே தீரும். சேது மணல் திட்டு பகுதியில் 300 மீட்டர் பகுதியை ஆழப்படுத்துவதன் மூலம் கப்பல் போக்குவரத்து நடைபெறும். இந்தியா முன்னேறும். இது ஒரு தொலை நோக்குத் திட்டம். சற்றேறக் குறைய 150 ஆண்டுகளாகவே சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற பல அரசுகள் போராடி வந்திருக்கின்றன. எங்கள் ஆட்சியில் இது நிறைவேறுகிறது என்பதுதான் இவர்களின் ஆத்திரத்துக்குக் காரணம்.''- முதல்வர் அறிக்கை சூடாக இருந்தது.

"இந்து மக்களின் புனிதச் சின்னமான ராமர் பாலத்தை இடித்தால் கலவரம் வெடிக்கும். உலமெங்கும் இருக்கும் ஹிந்துக்களின் புனிதச் சின்னமான இதை இடிப்பதால் இவர்கள் அரசியல் செல்வாக்கு சரிந்துவிட்டது. உடனே ஆட்சியைக் கலைக்க வேண்டும். மறு தேர்தலுக்கு உத்தரவிடவேண்டும்.'' -எதிர்க் கட்சிகளும் ஹிந்து அமைப்புகளும் பதில் அறிக்கை வெளியிட்டன.


"ராமேஸ்வரம் பகுதியில் கப்பல் போக்குவரத்து துவங்குவதன் மூலம் மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று அந்தமான் நிக்கோபார் பகுதிவரை சென்று மீன் பிடிக்கலாம். சர்வதேச கப்பல்கள் வருவதால் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கும். தமிழகம் சிங்கப்பூராகும். அது ராமர் கட்டினார் என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லை. சின்னச் சின்ன மணல் திட்டுகள் அவ்வளவே.''- ஓர் அறிஞர்.

"கப்பல் வந்தால் ராமேஸ்வரம் கடற்பகுதி பவழப் பாறைகள் பாதிக்கப்படும்.பல கடல் உயிரினங்கள் செத்து மடியும். அதில் சிறிய கப்பல்கள் மட்டுமே செல்ல முடியும். சர்வதேச கப்பல்கள் அவ்வளவு குறைந்த ஆழத்தில் பயணிக்க முடியாது.'' - தினமானி நாளிதழ் கட்டுரை வெளியிட்டது.



(மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்தில் இருவர்)
"நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்துனு கடற்படை அதிகாரி சொல்லியிருக்கிறாரு. அப்படியிருந்தும் இந்தத் திட்டத்தை அமல் படுத்துவதில் முதல்வருக்கு ஏன் இவ்ளோ அக்கறை? இதனால பல கோடி கொள்ளை அடிக்கலாங்கிற திட்டம்தான் அது.''

"அதான் ஒரு ஆபத்தும் இல்லனு அமைச்சர் சொல்லிட்டாரே. திட்டம் முடிவாகி ரெண்டு வருஷம் கழிச்சி எதிர்த்துக் குரல் கொடுக்கிறாங்களே.. இவனுங்களுக்குப் பங்கு சரியா வந்து சேரலைனு இப்படி தகராறு பண்றானுங்களோ என்னமோ?''

"என்ன பிரபோ இந்தக் காட்சிகளைப் பார்க்கவா என்னை வரச் சொன்னீர்கள். பெருங்கவலையாக இருக்கிறது. அப்போதே இந்தப் பாலத்தை அகற்றியிருக்கலாம் என்று தோன்றுகிறது.''

"கடவுளாகவே இருந்துவிடுவதுதான் கவலையை மறப்பதற்கு ஒரே வழி'' விஷ்ணு புன்னகைத்தார். பல நெடுங்காலமாய் படுத்துக் கொண்டே இருக்கும் அவருக்குக் கால்களைப் பிடித்துவிட்டு பணிவிடை செய்து கொண்டிருந்தாள் மகாலட்சுமி. "ஏன் இப்படி கால் அழுத்திக் கொண்டிருக்கிறீர்கள் தேவி?'' என்று ஹனுமன் பேச்சை மாற்றினார்.

"பார்க்கிறாய் அல்லவா, சினிமாவிலும் காலண்டிரிலும் என்னை இப்படித்தான் படம் போடுகிறார்கள். எனக்கும் அதைப் பார்த்து அதே பழக்கம் வந்துவிட்டது.'' தேவி சிரித்தபடியே "உள்ளங்கையில் இருந்து பொற்காசுகளாக பிரவகிப்பதற்கு இது எவ்வளவோ மேல். வேறு என்னதான் செய்வதென்று எனக்கும் புரியவில்லை.''

இறைவியின் கிண்டலை ரசித்தபடி அங்கிருந்து புறப்பட்டான் ஹனுமன்.

""அந்த இடத்துக்கு நேரே வானத்திலேயே பெர்னூலியா சற்று நேரம் நின்றது. அது ஒரு விண் கப்பல்.
""இவ்வளவு பணம் கட்டி வந்து பார்த்துவிட்டுப் போவது நாகரீகமாகிவிட்டது. குளோபல் வார்மிங் நிலப்பரப்பைச் சுருக்குவிட்டபின், மூழ்கிப் போன ஏராளமான கடற்கரைகளைக் காட்டி பணம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்'' முதியவர் வேண்டா வெறுப்பாகப் பேசினாலும் கோவிலின் கோபுரம் தெரிகிறதா என்று பார்த்தார். ஆழ்கடலில் எல்லாமும் ஒரே மாதிரிதான் தெரிந்தது.
""பூம்புகார் கடல் கொண்டபோது செட்டியார் வம்சத்தினர் நீரே இல்லாத மேடான இடத்தில் குடியேற விரும்பி சிவகங்கை பகுதிக்குப் போய், பத்துபடி உயரத்தில்தான் வீட்டையே கட்டினார்கள். அவர்கள் கணித்தபடி இப்போது கடல், சிவகங்கை பகுதி வரை வந்து நிற்கிறது. இதோ இதுதான் ராமேஸ்வரம்.. சென்ற முறை வந்த போது ஓரளவுக்குத் தெரிந்தது'' என்றார் கைடு.
கீழே கடலில் வழக்கமான கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது.

நாராயணன் அப்போதும் கடவுளாகவே இருந்தார்.

tamilmagan2000@gmail.com

சனி, செப்டம்பர் 13, 2008

காலபிம்பம்

இம்மாத உயிர் எழுத்து இதழில் வெளியான என் சிறுகதை


கொஞ்ச காலமாகத்தான் இப்படியெல்லாம். நான் காலமில்லாதவனாக மாறிவிட்டதாக ஒரு உணர்வு. காலமில்லாதவனுக்கு கொஞ்ச காலம் ஏது?

பைக்கில் சென்று கொண்டிருக்கும் போதுதான் முதன்முதலில் இத்தகைய உணர்வு ஏற்பட்டதாக ஞாபகம்.ரெட்ஹில்ஸிலிருந்து காரனோடைக்குப் போகும் வழியில் இப்படி ஏற்பட்டது. காரனோடையிலிருந்து ரெட்ஹில்ஸ் போகிறோமா, அல்லது ரெட்ஹில்ஸிலிருந்து காரனோடைக்குப் போய்க் கொண்டிருக்கிறோமா என்ற குழப்பம். சுமார் 35 ஆண்டுகளாகப் போய் வந்து கொண்டிருக்கிற ஒரு சாலையில் எனக்கு இப்படி ஒரு குழப்பம் ஏற்பட்டது அசாதாரணமாகப்பட்டது.

வீட்டுக்கு வந்ததும் ஜானகிராமனைச் சந்தித்துச் சொன்னேன். ""ஞாயிற்றுக் கிழமை அடிச்சது தெளியலையா'' என்று அவன் அடித்தக் கிண்டலுக்கு நானும் சேர்ந்து சிரித்துவிட்டு மறந்துவிட்டேன்.

அடுத்து அதே அனுபவம். ஆனால் இந்த முறை திசைக் குழப்பத்தோடு நான் போய்க் கொண்டிருப்பது இன்றிலா, நேற்றிலா என்ற குழப்பம். எதிரில் வரும் லாரி, பஸ், சைக்கிள் காரன் எல்லோரையும் மலைத்துப் போய் பார்க்கிறேன். இவர்கள் எல்லாம் நேற்று மனிதர்களா, நாளை மனிதர்களா என்று அலை பாய்ந்தது மனம்.

இந்த முறை ஜானகிராமனிடம் சொல்வதற்குப் பயமாக இருந்தது. மனைவியிடம் சொன்னேன். "இந்த மாதிரி புக்கையெல்லாம் படிச்சா இப்படித்தான் உளறுவீங்க'' என்று "கேஸ் ஹிஸ்ட்ரி ஆஃப் சிக்மண்ட் பிராய்டை'க் காண்பித்தாள். அதில் லெஸ்பியன் பற்றியும் ஹோமோ செக்ஸ் பற்றியும்தான் நிறைய அலசியிருந்தார். அதற்கும் நேற்று மனிதர்களுக்கும் சம்பந்தமிருப்பதாகத் தெரியவில்லை.

சைக்யாட்ரிட்ரிஸ்ட் மீதிருந்த அவநம்பிக்கை காரணமாக மாற்று மார்க்கங்கள் குறித்தே யோசிக்க ஆரம்பித்தேன். "பெரிய பாளையம் பக்கத்தில் ஒரு மூனீஸ்வரன் கோவில் இருக்கிறது. தாயத்து மந்தரித்துக் கட்டினால் நான்கு வாரத்தில் எப்பேர் பட்ட பேயும் தலைதெறிக்க ஓடிடும்' என்றான் கருணாகரன். இந்த மாதிரி அதீத குழப்பங்களுக்கு யாரை அணுகுவது என்பதற்கே வழி தெரியாத நிலையை முதன் முறையாக உணர்ந்தேன். இத்தகைய மனப் பிம்பங்கள் இப்போதுதான் உலகத்தில் முதன் முறையாக ஏற்படுகிறதா? இல்லை எல்லா விஷயத்திலும் பின் தங்கியிருப்பதுபோல இந்தப் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் இந்தியாவில் இன்னும் எட்டப்படவேயில்லையா? நான்தான் பலிகடாவா?

"அதெல்லாம் ஒன்றும் இல்லை. சரியாகத் தூக்கமில்லையென்றால் இப்படி ஆவது சகஜம்தான்'' என்று தேற்றினாள் அலுவலகத் தோழி. இதிலே சற்றே நியாயம் இருப்பதாக ஏற்று ஒரு வாரம் நகர்ந்தது.

இந்த முறை மேலும் வித்தியாசமான கால ஊர்வலம். என்னுடைய பொது மேலாளர் எங்களின் போட்டியாளர்கள் மேற் கொண்டுவரும் புதிய உத்திகள் பற்றியும் அதை எதிர் கொள்வது சம்பந்தமாகவும் பேச அழைத்திருந்தார்.
நீரேற்று மோட்டர் வகைகளில் சப் மெர்ஸிபள் மோட்டர்களுக்குத்தான் அதிக மவுசு ஏற்பட்டிருப்பதையும் விரைவில் அரை குதிரைத் திறன் மோட்டர்களும் உருவாக்குவது நல்லது என்றும் கூறிக் கொண்டிருந்தேன்.

"எப்படி சொல்கிறாய்?'' என்றார்.

"சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்லார் வீட்டிலேயும் ஒரு ஆறு அங்குல போர் போட்டு நீர் எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. சென்னையின் இட நெருக்கடி அப்படி.... அதனால்'' இப்படி நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதுதான் அந்த நிலைமை ஏற்பட்டது. என் பொது மேலாளர் எனக்கு ஐந்து வயது சிறுவனாகவும் 90 வயது கிழவராகவும் கணப் பொழுதில் மாறி மாறித் தோன்றினார்.

அவருடைய முன் வழுக்கையும் தொப்பையும் ப்ரெஞ்ச் பேட் தாடியும் ரேமண்ட் சூட்டும் சட்டென மறைந்து அரை நிஜார் போட்டு பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒரு சிறுவனாக அவரைப் பார்த்தேன். தொண்டு கிழமாக அப்பல்லோ ஹாஸ்பிடல் ஸ்ட்ரெச்சரில் இருப்பதாக இன்னொரு தரிசனம். இதென்ன விபரீதம் என்று தோன்றியது. அலுவலக ரிஸப்னனிஸ்ட் ஜட்டி அணிந்த குழந்தையாகவும் ஐம்பது வயது பெண்ணாகவும் 75 வயது மூதாட்டியாகவும் ஏடாகூடமாகத் தோன்றி மறைந்த போது எனக்கு ஏற்பட்டிருக்கும் அடுத்த சங்கடத்தைத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

இது தூக்கக் குறைவினால் அல்ல.

நிலை கொள்ளாமல் தவித்தது மனசு. அஞ்சுவதா, மகிழ்வதா என்று தெரியவில்லை. யாரிடம் சொன்னாலும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். நாள்போக்கில் நானாகவே யாரிடமும் இதைப் பற்றிச் சொல்ல வேண்டாம் என்று தவிர்த்துவிட்டேன். சாலையில் நடக்கும் போது கரண்ட் பில் கட்டும்போது டி.வி. பார்க்கும்போது என்று எந்த சமயம் என்று இல்லாமல் நான் கால ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தேன்.

ஒரு நப்பாசைதான்... மேடவாக்கம் மனநோய் மருத்துவமனைக்குச் சென்று அவுட் பேஷண்ட் க்யூவில் நின்று டாக்டரைச் சந்தித்தேன். குடியை நிறுத்த, பதட்டம் குறைய, தூக்கமில்லாமல் தவிப்பதைத் தவிர்க்க என.. பைத்தியம் என்று ஓரங்கட்டுவதற்கு முந்தைய நிறைய பிரிவுகள் இருக்கத்தான் செய்தன.
டாக்டர் பொதுவாக ""என்ன செய்கிறது'' என்றார்.

"காலம் குழப்பமா இருக்கு.. உதாரணத்துக்கு''

"ஏம்பா டீ சொன்னனே'' என்றார் கதவுப்பக்கம் பார்த்து. "சொல்லுங்க''

அந்த அவகாசத்தில் வார்த்தைகளை இன்னும் கொஞ்சம் சரி செய்து "எனக்குக் கொஞ்ச நாளா விநோத பிரச்சினை சார். மூன்று காலங்களும் ஒரே நேரத்தில தெரியுது''

"மூன்று காலம்னா?''

"உதாரணத்துக்கு நீங்கள் குழந்தையில் இரண்டாவது படிக்கிற சிறுவனாக எப்படி இருந்தீர்கள் என்று தோன்றுகிறது. கொஞ்ச நேரத்தில் ரிடையர்ட் ஆகி பார்க்கில் வாக்கிங் போய்விட்டு ஓர் ஓரமாக உட்கார்ந்திருக்கிற முதியவராகத் தெரிகிறீர்கள். இதோ எதிரில் இப்போதிருக்கிறமாதிரியும் தெரிகிறீர்கள். குழந்தையின் புன்னகையும் முதியவரின் முகச் சுருக்கமும் ஒரே...''
எந்தவித சலனமும் காட்டாமல் ஏதோ எழுதினார். அதே நிலையில் "எவ்ளோ நாளா?'' என்று தெரிந்து கொண்டு "மூணாவது கவுண்டர்ல காட்டுங்க'' என்று ரசீது கொடுத்தார்.

"நீங்கள் சரியாக உள்வாங்கிக் கொண்டீர்களா? என்னை நிமிர்ந்துகூட பார்க்காமல் சீட்டு கொடுக்கறீர்களே?''

"இங்கு வருகிறவர்கள் எல்லாருக்கும் நமக்கு மட்டும் ஏதோ விபரீதமாக நடப்பதாக நினைக்கிறார்கள். நான் உங்களை மாதிரி ஒரு நாளைக்கு நூறு பேரை பார்க்கிறேன்''

"நிஜமாக என்னை மாதிரி நூறு பேர் இருக்கிறார்களா?... அது போதும் எனக்கு. எனக்கு மட்டும்தான் இப்படி இருக்கிறதென்று நினைத்து பயந்துவிட்டேன்.''

என்ன நினைத்தாரோ ""என்ன நடக்குது உங்களுக்கு முழுசாகச் சொல்லுங்கள்'' என்றார்.

"போன வாரம் கிருஷ்ண ஜெயந்தி. வீட்ல கட்டில்ல படுத்துகிட்டு ஏதோ யோசித்துக் கொண்டிருந்தேன். "கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்'னு ரேடியோவில பாட்டு. திடீரென்று கண்ணன் இறந்தக் காட்சி ஞாபகம் வந்தது. பாரதப் போரும் பகவத்கீதையும் உலகுக்குத் தெரிவித்த மகா உண்மைகளின் அசை போடலோடு கண்ணன் ஒரு வனத்தில் படுத்திருக்கிறார். கால்மேல் கால் போட்டு படுத்தபடி காலாட்டிக் கொண்டிருக்கிறார். அவருடைய கால் கட்டை விரலைப் பார்த்து வேடன் ஒருவன் பாம்பென்று நினைத்து அம்பெய்துகிறான். கண்ணன் எதிர்பார்த்திருந்த தனக்கான முடிவை ரசித்து புன்னகையுடன் கண்ணை மூடுகிறான். கண்ணன் இறந்து விட்டான் என்ற செய்தி அறிந்து மதுராவே கொந்தளிக்கிறது. கொன்ற வேடனை கொலை வெறியோடு துரத்துகிறது.....''

"கற்பனை உலகில் சஞ்சரிக்கிற இந்த மனநோய் நீங்கள் நினைக்கிற மாதிரி ரொம்ப புதுசானது இல்லை. டான் க்விக் ஸôட் படித்திருக்கிறீர்களா?''

"அவன் கதைக்கும் எனக்கும் முக்கிய வித்தியாசம் இருப்பதாக நினைக்கிறேன். நான் எந்த விஷயத்திலும் மூன்று காலங்களோடு ஊடாடுகிறேன்''

"ஈ.எஸ்.பி. சம்பந்தமாக ஏதாவது புத்தகம் படித்தீர்களா?''

"இல்லையே... எனக்கு அதில் நம்பிக்கையும் இல்லை''

"எல்லாவற்றையும் முன்கூட்டியே கணித்துவிடுவதாக ஏதாவது சம்பவம் நடந்திருக்கிறதா?''

"அதையெல்லாம் நான் கவனிக்கவில்லை. அது சோதிடம் பார்ப்பதுபோல ஆகிவிடும்.''

"எதிர்காலத்தை முன்கூட்டியே திறந்து பார்த்துவிடுவதில் மனிதனுக்கு ஒரு ஆசைதான். அது மாதிரி உங்களுக்கு ஏதாவது இருக்கலாம். நீங்கள் மூன்றாவது கவுண்டருக்குப் போய் மாத்திரை வாங்கிச் செல்லுங்கள். தேவைப்பட்டால் அடுத்த மாதம் வாருங்கள்''

டாக்டருக்கு அதற்கு மேல் பொறுமையில்லை. மூன்றாவது கவுண்டருக்குச் செல்லாமலேயே வெளியே வந்தேன். பெசன்ட் நகரில் ஆன்மீக ஞானி அஷ்வகோஷ் வந்திருப்பதாக அங்கு செல்லும் பஸ் ஒன்றிலேயே சின்னதாக போஸ்டர் ஒட்டியிருந்தார்கள். அவர் யாரென்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அந்தப் போஸ்டரில் என்னைக் கவரும் அம்சம் ஒன்று இருந்தது. அவர் முக்காலமும் உணர்ந்தவர் என்று போட்டிருந்தது.
மாலை ஆறுமணிக்குத்தான் அவருடைய பிரசங்கம் என்றார்கள். நான் அவரைத் தனிமையில் சந்திக்க வேண்டும் என்றேன். "நீங்கள் "ஈஷா யோக சம்பூர்ணா' முடித்தவரா?'' என்றார்கள். அவர்கள் கேட்பது பற்றி எனக்கு ஒன்றும் புரியவில்லை.

""வருகிற வழியில் பரங்கி மலையைப் பார்த்தேன். கண நேரத்தில் அது அங்கு தோன்றாத காலத்தையும் தோன்றி பின் இல்லாமல் போன காலத்தையும் பார்த்தேன். எனக்கு பயமாகவும் பரவசமாகவும் இருக்கிறது. அதை ஞானியிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்''

ஆழ்ந்து பார்த்தார் வெள்ளுடை தரித்து நரைத்த தாடியும் தாழ்ந்து நோக்கும் பார்வையும் கொண்ட அந்த ஆஸ்ரமவாசி. "இங்கே அமர்ந்திருங்கள். சுவாமிகள் பார்க்க விரும்பினால் அழைக்கிறேன்'' என்றார்.
நான் அமர்ந்திருந்தேன்.

இருபது நிமிடங்கள் கழித்து உள்ளே அழைக்கப்பட்டேன். சற்றே இருளும் குளுமையுமான அறை. எங்கிருந்து கசிகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியாத நீலநிற ஒளிக்கிரணம் வியாபித்திருந்தது.

"ஆங்கிலத்தில் பேசுவீர்களா?''
தலையசைத்து, "என்னையும் கடந்து நான் இயங்குகிறேன். நான் என்பது இந்த உடலுக்கு வெளியிலும் செயல்படுவதாக உணர்கிறேன். அதாவது நான் இந்த அறைக்கு வெளியிலும் பிரக்ஞை கொள்கிறேன்.''

"அறைக்கு வெளியில் நடக்கும் சம்பவம் உங்களுக்குத் தெரிகிறதா?''

"இடத்தைப் போலவே காலமும் எனக்கு ஒரு பொருட்டாக இல்லை. மனித இனம் தோன்றிவிட்டதா?, ராஜராஜசோழன் காலமா? என்பதெல்லாம் ஒரு பொருட்டாக இல்லாத மனநிலை ஏற்படுகிறது. பொதுவாக வெளியே என்ன நடக்கிறதோ அது மனப்புயல் பிம்பமாக சுழல்கிறது. வெளியே யாரோ சிலர் உங்களைப் பார்க்க வருகிறார்கள். சோனியா காந்தி காங்கிரஸ் உயர் மட்டக் குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். குடகுமலையில் ஒரு ஆதிவாசி தேனெடுத்துக் கொண்டிருக்கிறான். கங்கையில் மீன்கள் துள்ளுகின்றன. சாதிக் கலவரம் நடந்து கொண்டிருக்கிறது. அலுவலகத்தில் யாரையோ யாரோ புறம் பேசுகிறார்கள். நியூஜெர்ஸியில் ஒரு சாலை விபத்து. எங்கோ எதற்கோ சதி திட்டம் தீட்டுகிறார்கள். ராக்கெட் விடுகிறார்கள். இன விடுதலைக்காகப் போராடுகிறார்கள். தங்கள் மொழியே சிறந்தது என்கிறார்கள். வரதட்சணை, சினிமா ரசிகன், இண்டெர்நெட்...டிசம்பர்}6, செப்டம்பர்}11 எல்லாமே அந்தச் சுழலில் துகள்கள் போல சிக்கிச் சுழல்கின்றன.''

ஞானி சிரித்தார். "ஒன்றின் ஒரு கோடி மாயத்தோற்றங்கள்'' என்றார்.

"ஒரு கணத்தில் ஒரு யுகம்... ஒரு யுகத்தில் ஒரு கணம்'' என்றேன். அவர் என்னைப் புரிந்து கொள்வது தெரிந்தது.

நெருங்கி வந்து தோளில் வாஞ்சையுடன் தொட்டார்.

"இணையத்தில் எல்லாம் இருக்கிறது, பரமாத்மா போல. நாம் அதன் பலகோடியில் ஒரு துகளைத் துய்க்கும் ஜீவாத்மாக்கள்...''

ஞானி மீண்டும் சிரித்தார்... "உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை, அப்படித்தானே?''

"ஆமாம்''

"உங்களைப் போன்ற ஒருவரைத்தான் தேடிக் கொண்டிருந்தேன். என்னுடன் அமெரிக்கா வருகிறீர்களா ஆஸ்ரம வேலைகளுக்கு?'' என்றார்.

"நானா?''

"முக்காலம் உணர்தல் என்பதே அறியாமைதான்... நான்கு காலம் உணர்ந்தவர் நீங்கள்... நான்காவது காலமான இடைதூரம் பிடிபட்டிருக்கிறது உங்களுக்கு..''
நான் ஆச்சர்யமாக அவரைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அவர் புன்னகையுடன் வெளியே சென்றார். தியான அமைதியா, மயான அமைதியா என்று புரிபடவில்லை.

LinkWithin

Blog Widget by LinkWithin