சனி, செப்டம்பர் 29, 2007

நெய்தல் ராஜா!









சினிமாவில் லொகேஷன் தேர்வு செய்வது என்பது முக்கியமான வேலை. படத்தின் ஆதாரம் கதை நடக்கும் களம். அதைச் சரியாகத் தேர்வு செய்துவிட்டால் பாதி சுவாரஸ்யத்தை அதுவே பார்த்துக் கொள்ளும்.

"கடலும் கடல் சார்ந்த' பகுதியில் படப்பிடிப்பு என்றால் மீனவர்களின் ஒத்துழைப்பும் கடலின் ஒத்துழைப்பும் வேண்டும். அதற்கு பட்டினப்பாக்கம் ஜெயராமனின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்கிறது கோலிவுட். சென்னை டூ கன்யாகுமரி வரை உள்ள கடற்பகுதியில் எங்கு படப்பிடிப்பு என்றாலும் இவரைத்தான் அணுகுகிறார்கள். 50- க்கும் மேற்பட்ட கடல்சார் படங்களில் இவருடைய பங்களிப்பு உண்டு. கமல்ஹாசன், மணிரத்னம், ஷங்கர் படங்கள் முதல் பல முக்கிய படங்கள் இவர் தேர்ந்தெடுத்த லொகேஷனில் உருவாகியிருக்கின்றன. தமிழ்நாடு மீனவர் பேரவையின் சென்னை மாவட்டத் தலைவராக இருக்கும் அவரிடம் பேச்சு கொடுத்தோம்.


கடலும் சினிமாவும் நீங்களும் இணைந்த அந்த இனிய சந்திப்பு எப்படி, எப்போது நிகழ்ந்தது?

பட்டினப்பாக்கம் பகுதியில் வசித்த மணிவண்ணன், ஜெய்சங்கர் ஆகியோர் சிட்டாடல் வீடியோஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். அவர்கள்தான் "சங்கர்லால் துப்பறிகிறார்' தொடர் மூலமாக என்னை கேமிரா முன்னால் நிறுத்தியவர்கள். அதைத் தொடர்ந்து என் வகுப்புத் தோழர் ஆனந்தி ஃபிலிம்ஸ் மோகன் நடராஜன் மூலம் சத்யராஜ் நடித்த "பங்காளி' படத்தில் வில்லனாக நடித்தேன்.

அதில் கடற்கரை ஒட்டிய காட்சிகள் எடுக்கும்போது சில ஏற்பாடுகள் செய்து கொடுத்தேன். அப்படித்தான் நானும் சினிமாவும் கடற்கரையும் இணைந்தோம். முதலில் "நெருப்பு' என்ற படத்துக்காக ஆலம்பரைக் கோட்டை, கோவளம் பகுதியில் காட்சிகள் எடுப்பதற்கு லொகேஷன் தேர்வு செய்து கொடுத்தேன். அன்று தொடங்கிய கடல் லொகேஷன் வேலை இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

நீங்கள் பணியாற்றிய படங்களில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய படங்கள் எவை?

"இயற்கை' படத்துக்குப் பணியாற்றியதைச் சொல்லலாம்.

ஷங்கரின் "பாய்ஸ்' படம் பட்டினம்பாக்கம் பகுதியில் பாடல் காட்சிக்காக எடுத்த காட்சிகள் மறக்க முடியாதவை. இடத்தையே வேறொரு இடம் போல மாற்றிக் காட்டிவிட்டார். "செல்லமே' படத்தில் ரீமாசென்னை கொலை செய்வதற்காக நடிகர் பரத் கடலுக்குள் அழைத்துச் செல்லும் காட்சி மிகவும் சிரமப்பட்டு எடுக்கப்பட்ட காட்சி. படக்குழுவினர் ஒரு படகிலும் பரத், ரீமாசென் ஒரு படகிலும் இருந்தனர். அவர்களின் பாதுகாப்புக்காக இருபது மீனவர்களை இன்னொரு படகில் நிறுத்தி வைத்திருந்தேன். மணிரத்னத்தின் "ஆய்த எழுத்து' படத்தில் பாரதிராஜா மீனவர்கள் மத்தியில் பேசுவதுபோல ஒரு காட்சி. சுமார் இரண்டாயிரம் படகுகளின் பின்னணியில் 5000 பேர் திரண்டு நடித்தனர். அதை மிக இயல்பாக எடுக்க முடிந்ததற்குக் காரணம்,

மீனவர்கள் என் மீது வைத்திருக்கும் பாசம்தான். கே.வி. ஆனந்த் இயக்கிய "கனா கண்டேன்' படத்தில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் ஒன்று வரும். அதற்கான ஏற்பாடுகள் செய்ததோடு அந் நிலையத்தின் செக்யூரிட்டியாகவும் நடித்தேன். "கிழக்குக் கடற்கரை சாலை' படத்தில் முழு லொகேஷனுமே நான் தேர்வு செய்ததுதான். விஜய் நடித்த "கில்லி' படத்தில் கபடி ஆட்டத்துக்கான செட், லைட் ஹவுஸ் செட் எல்லாம் போட்டோம். கிளைமாக்ஸில் பெரிதும் பேசப்பட்ட காட்சியாக அது அமைந்தது. கமல் நடித்த "வேட்டையாடு விளையாடு' படத்தின் பாடல் காட்சிக்குக் கடல் நடுவே படகில் பாடிக் கொண்டே லைஃப் ஜாக்கெட்டோடு கடலில் குதிப்பதுபோல காட்சி வரும்.

அதில் கமலும் கமலினி முகர்ஜியும் அணிந்த அந்த லைஃப் ஜாக்கெட்டை அவர்களின் ஞாபகமாக நான் என் வரவேற்பறையில் வைத்திருக்கிறேன். இப்போது "தசாவதாரம்' படத்துக்காக என்னுடைய படகைக் கொடுத்தேன். அதைச் சரித்திரக்கால டைப்பில் மாற்றி படத்துக்குப் படமாக்கினார்கள். அதையும் இப்போது ஞாபகமாக வைத்திருக்கிறேன். சிம்பு நடித்த "தொட்டி ஜெயா', "வல்லவன்'... இப்போது நடித்துவரும் "கெட்டவன்' படங்களுக்கும் நான் கடற்கரை லொகேஷன்கள் பிடித்துக் கொடுத்தேன். இப்படி நிறைய சொல்லலாம்.

லொகேஷன் பிடித்துக் கொடுப்பதோடு படங்களிலும் நடித்து வருவதாகச் சொல்கிறீர்கள்... என்னென்ன படங்களில் நடித்திருக்கிறீர்கள்?

"தர்மசீலன்', "அரிச்சந்திரா', "பவித்ரா', "நினைவிருக்கும் வரை', "நேசம்', "புதுமைப்பித்தன்', "கடவுள்', "மதுர', "திருப்பாச்சி', "சிவகாசி' போன்ற பல படங்களில் நடித்திருக்கிறேன். "கடவுள்' படத்தில் இறைவன் என்னிடம் தோன்றி என் கடையில் சாப்பிட்டுவிட்டு காசு தராமல் போவார். காசு கேட்கும்போது "அப்படீன்னா... அது நடக்குமா பறக்குமா'ன்னு கேட்பார். "இந்த மாதிரி எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க?' என்பேன். மிகவும் ரசிக்கப்பட்ட காட்சி அது.

அதேபோல் "புதுமைப்பித்த'னில் போலி அரசியல்வாதியாக நடித்த வடிவேலு எல்லா பொருள்களிலும் கலப்படம் மிகுந்துவிட்டதாக தீக்குளிப்பதாகச் சொல்வார். "அண்ணே கவலைப்படாதீங்க... கலப்படம் இல்லாத பெட்ரோல் வாங்கியாந்திருக்கேன். நல்லா தீக்குளிங்க' என்பேன். இப்படி மக்களுக்கு ஞாபகப்படுத்தும் காட்சிகள் சிலவற்றைச் சொல்லலாம்.

கடல் படப்பிடிப்பில் மிகவும் பயந்து போன சம்பவம் ஏதாவது?

"போக்கிரி' படத்துக்காகக் கடல் நடுவே படப்பிடிப்பு. முதல் நாள் லோகேஷன் பார்த்துவிட்டு வந்த போது கடல் அமைதியாகத்தான் இருந்தது. மறுநாள் படப்பிடிப்பின் போது அலைகள் படுஆவேசமாக இருந்தது. பாதுகாப்புக்காக மீனவர்களை வைத்திருந்தபோதும் இயற்கையின் சீற்றம் அச்சுறுத்தியது. எங்கள் கடல்மீது நாங்களே அச்சம் கொள்ளும் இத்தகைய அனுபவங்கள் சுனாமி திகிலுக்குப் பிறகுதான். காரணம், சுனாமியால் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டு நூலிழையில் உயிர் தப்பியவன் நான்.

தமிழ்மகன்

வியாழன், செப்டம்பர் 27, 2007


வேரோடும்...வேரடி மண்ணோடும்...
தமிழ்மகன்

ஒரு சமூகம் தன் அடையாளங்களைத் தொலைத்துவிட்டு நிற்பது எப்பேர்பட்ட பரிதாபம்? விவசாய நாடான இந்தியா, தம் பாரம்பர்ய விவசாய உத்திகளைக் கைவிட்டு இன்று கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது. இதன் பூர்வீக விதை நெல்கள் இப்போது இந்தியாவில் இல்லை. களைக் கொல்லி, பூச்சி மருந்துகள், செயற்கை உரங்கள் அனைத்துமே இந்திய விவசாயத்தில் இருந்ததில்லை. பசுமைப் புரட்சி என்ற பெயரில் ஏற்பட்ட இந்த மாற்றம் (தடுமாற்றம்?) இன்று பல நோய்களுக்கும் காரணமாக இருக்கிறது.

இவை பற்றிய விழிப்புணர்வை வலியுறுத்தி வெளியாகி இருக்கிறது "வேர்களைத் தொலைத்துவிடாதீர்கள்' என்ற ஆவணப் படம். எஸ்.ஏ.இ. திரைப்படக் கல்லூரி மாணவர் கே.அமர்நாத் ஒளிப்பதிவு செய்து எழுதி இயக்கித் தயாரித்திருக்கிறார். இன்று இந்தியா முழுதும் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பையும் எழுச்சியையும் ஏற்படுத்தியிருக்கும் இப் படம் குறித்து அவரிடம் பேசினோம்.

இப்படியொரு படம் தயாரிக்க வேண்டும் என்பதற்கான ஆதார எண்ணம் எப்படி ஏற்பட்டது?

நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆம்பூரை அடுத்த குடியாத்தம் அருகே என் கிராமம். தொழிற்சாலை ரசாயனக் கழுவுகளும் பயிர்களுக்கு நாமாகப் பயன்படுத்திய ரசாயனமும் பயிர்த் தொழிலைப் பாழாக்கிவிட்டதை என் கண் முன்னாலேயே கண்டேன். இப்போது நான் விவசாயியாக இல்லை. என் தந்தையார் காலத்திலேயே விவசாயம் எங்கள் பகுதியில் அதன் மகத்துவத்தை இழக்க ஆரம்பித்துவிட்டது. இந்தச் சுயபாதிப்பு அடிப்படைக் காரணம். இது குறித்து மேற்கொண்டு தகவல் தேடிய போது அது என் சுயபாதிப்பைக் கடந்த விஷயமாகி விட்டது.
இந்த ஆவணப் படத்தின் சிறப்புத் தன்மையாக நீங்கள் கருதுவது எதை?
விவசாயிகளுக்கும் படித்த மேதாவிகளுக்கும் இடையே இருக்கும் இடைவெளிதான் இந்தியாவின் 80 சதவீத மக்களின் ஜீவாதாரமான பிரச்சினை பொருட்படுத்தப்படாமல் இருப்பதற்குக் காரணம். வலுவாக இதைப் பற்றிப் பேசக் கூடியவராக இருக்க வேண்டும் என்பதற்காக வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களைத் தேர்ந்தெடுத்தேன். செயற்கை உரங்கள் எதற்காகத் தயாரிக்கப்பட்டன. எதற்காகப் பசுமைப் புரட்சி என்ற பெயரில் அவை இந்தியாவில் சந்தைபடுத்தப்பட்டன என்ற தகவல்களோடு அவற்றால் ஏற்படும் நோய்களையும் இந்த ஆவணப் படத்தில் மிகச் சிறப்பாகப் பட்டியல் இட்டிருக்கிறார்.

செயற்கை உரங்கள் தயாரிக்கப்பட்டது ஏன்? குறிப்பாக என்ன நோய்கள் ஏற்பட்டன?

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு வல்லரசுகளின் வெடி மருந்து தொழிற்சாலைகளுக்கு வேலை இல்லாமல் போனது. அமோனியாவையும் நைட்ரஜனையும் வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவை யூரியாவாகவும் அமோனியம் சல்பேட்டாகவும் வேறு சில உரங்களாகவும் சந்தைப்படுத்தப்பட்டன. பயிர்கள், ஊக்க மருந்து செலுத்தப்பட்ட ஓட்டப்பந்தய வீரனைப் போல தன் தன்மையில் வீரியத்தைக் காட்டின.
விளைவு... அதை உண்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஏற்பட்டது. உணவுப் பொருட்களில் ஏற்பட்ட அதிகப்படியான கார்போ ஹைட்ரேட் அடர்த்தியினால் சர்க்கரை நோய்... அதற்காக நாம் சாப்பிடும் மருந்துகளால் மேலும் பக்க விளைவுகள்... சங்கிலித் தொடர் போல ரசாயனத்தின் பிடியில் சிக்கிக் கொண்டோம். ரசாயனங்கள் நமது பாரம்பர்ய பயிர்களை மட்டுமன்றி நம் மண்ணையும் பாழாக்கிவிட்டது.

இந்தியா முழுதும் உள்ள விவசாயிகளிடம் இந்த ஆவணப்படம் எப்படி சென்றடைந்தது?

அது யாரிடம் எப்படிச் செல்கிறது என்பது என் கையிலேயே இல்லை. திடீரென்று பீகாரிலிருந்தோ, கர்நாடகாவிலிருந்தோ விவசாயிகள் யாராவது பேசும்போதுதான் இது அங்கெல்லாம் சென்றிருக்கிறது என்பதை அறிந்து கொள்கிறேன். நம்மாழ்வாரும் விவசாயிகளின் அழைப்பின் பேரில் நேரில் சென்று விளக்கம் தருகிறார். இந்த ஆவணப்படத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் தயாரித்திருக்கிறேன்.
சில இடங்களில் அவர்களாகவே அவர்கள் மொழியில் பின்னணிக் குரல் கொடுத்தும் சப் டைட்டில் போட்டும் திரையிடுகிறார்தகள். மேற்கு வங்கத்தில் "சேவா' என்ற விவசாய அமைப்பும் கேரளத்தில் "தானல்' அமைப்பும் கர்நாடகத்தில் "நாகரிகா' அமைப்பும் ஆந்திரத்தில் "அந்த்ரா' என்ற அமைப்பும் தமிழகத்தில் "இயற்கை உழவு' என்ற அமைப்பும் இதை மக்களிடம் கொண்டு செல்லும் பணியில் இருக்கின்றன.

இதனால் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?

நிச்சயமாக. பல கிராமங்களில் இயற்கை உரங்கள் மூலமே பயிர்செய்வோம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் இதை முழுமையாக உணர முடியும்.

வேறு ஆவணப் படங்கள் தயாரித்திருக்கிறீர்களா?

சுனாமி பாதிப்பை உணர்த்தும் ஆவணப் படத்தை ரவுண்ட் டேபிள் அமைப்பினருக்காக தயாரித்தேன். இண்டெர்நெட்டில் சிக்கி உழன்று கொண்டிருக்கும் இளைஞர்களின் நிலையைச் சொல்லும் படத்தையும் தயாரித்தேன். வனப் பாதுகாப்பை வலியுறுத்தும் படம் ஒன்றை உதகையில் இருக்கும் அயல்நாட்டு அமைப்பினருடன் சேர்ந்து தயாரித்து வருகிறேன். ஈஷா யோகா அமைப்பினர் நாடெங்கும் லட்சக் கணக்கில் மரம் நடுவதைப் பற்றியும் படமெடுக்கும் திட்டம் உண்டு. விளம்பரப் படம், சினிமா இவற்றிலும் தடம் பதிக்கும் ஆர்வமிருக்கிறது.

சனி, செப்டம்பர் 22, 2007

ஒரு நாள் தரிசனம்!


பெண்ணால் முடியும் என்பது எல்லாத் துறைகளிலும் நிரூபிக்கப்பட்டு வருவதுபோலவே சினிமா துறையிலும் சமீபகாலமாகச் சாத்தியப்பட்டு வருகிறது. டி.பி.ராஜலட்சுமி முதல் "கண்ணாமூச்சி ஏனடா' ப்ரியா வரை சினிமாவில் இயக்குநர்களாகத் தங்களைப் பதிவு செய்தவர்கள் ஏராளம் பேர் இருக்கிறார்கள்.
சமீபத்திய பதிவாக டைரக்ஷனுக்கான தங்க மெடல் வாங்கி திரையில் தடம் பதிக்க வருகிறார் யூ. அபிலாஷா. பாரம்பர்யமிக்க பிரசாத் ஸ்டூடியோவின் ஃபிலிம் அண்ட் டி.வி. அகாதமியில் படித்து வெளியேறும் முதல் பேட்ச் மாணவர்களுக்கான புராஜக்டில் முதல் பரிசு வென்றிருக்கிறார் இவர்.
இன்றைய மாணவர்கள் சாஃப்ட்வேர் என்ஜினியர், எம்.பி.ஏ., டாக்டர் போன்ற துறைகளுக்காக போட்டி போட்டுக் கொண்டு இருக்கும்போது உங்களைச் சினிமா துறையை நோக்கி திருப்பிய அம்சம் எது?
சொல்லப் போனால் சினிமா ஆர்வம்தான் எல்லோருக்கும் இயல்பானதாக இருக்கிறது. ஏனென்றால் எல்லோருமே சினிமா பார்ப்பவர்களாக இருக்கிறோம். மற்ற என்ஜினியர், டாக்டர் கனவுகள் எல்லாம் சிலருடைய அறிவுரையின் பேரில் ஏற்படுவதாக இருக்கிறது. கதை கேட்பதும் பாடுவதும் ஆடுவதும் குழந்தையிலேயே ஏற்படும் ஆர்வங்கள். பின்னாளில் அது மாறிப் போய்விடும். ஆனால் சிறுவயதில் எனக்கு ஏற்பட்ட ஆர்வத்தை நான் அணையாமல் வைத்திருந்தேன். அதுதான் என்னை இதைப் படிக்கவும் வைத்தது.
உங்கள் குடும்பப் பின்னணியைப் பற்றிச் சொல்லுங்கள்...?
நான் கோவையைச் சேர்ந்தவள். அப்பா, அம்மா, தம்பி எல்லாம் அங்குதான் இருக்கிறார்கள். நான் முதலில் பி.காம் படித்தேன். டைரக்ஷனுக்கான இந்த இரண்டாண்டு படிப்பை முடித்திருக்கிறேன்.
நீங்கள் விரும்பிப் பார்த்த படங்கள் மூலமாக பெற்ற அனுபவம் இங்கே படிப்புக்குப் பயனுள்ளதாக இருந்ததா?
நிச்சயமாக. மணிரத்னம், பாலா ஆகியோரின் படங்கள் எனக்கு மிகவும் பிடித்தவையாக இருந்தன. இங்கே இரானிய படங்கள், ஆப்ரிக்க, பிரெஞ்சு படங்கள் போன்றவற்றைப் பார்க்கும் போது மனிதர்களின் ஆதாரமான பிரச்சினைகளை ஒவ்வொருவரும் எப்படிச் சொல்கிறார்கள் என்பதை ஒப்பிட முடிந்தது. நிறைய படங்கள் பார்ப்பது நிச்சயமாக ஒரு பயிற்சிதான். கமர்ஷியல் ஃபிலிம், ஆர்ட் ஃபிலிம் என்ற பேதம் இல்லாமல் எல்லாவற்றையுமே நான் பார்க்கிறேன்.
கமர்ஷியல் ஃபிலிம், ஆர்ட் ஃபிலிம் என்ற வகைகளில் உங்களின் ஆர்வம் எப்படி இருக்கிறது?
தமிழில் படம் இயக்க வேண்டுமானால் அது கமர்ஷியலாகத்தான் இருந்தாக வேண்டும். கமர்ஷியல் என்பதை எந்த அர்த்தத்தில் சொல்கிறேன் என்றால் உதாரணத்துக்கு என் படத்தில் பாடல் காட்சிகள் இருக்கும். பாடல் காட்சி இல்லாத படத்தை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. நம்முடைய கூத்து முறைகளிலேயே வசனக் காட்சிக்கு இணையாக பாடல்கள் இடம் பெற்றன. ஆகவே பாடல் காட்சி என்பது நம் கலாசாரத்தோடு வருகிற அம்சம். வித்தியாசமான முயற்சியாக பாடல் இல்லாத படங்களை ஒன்றிரண்டு தரலாம். பத்திய சாப்பாடாக ஏதோ இரண்டு நாள் உப்பில்லாமல் சாப்பிடுவது போலத்தான் அது.
இங்கே நிறைய வெளிநாட்டுப் படங்கள் பார்த்ததாகச் சொன்னீர்கள்... அவற்றுக்கும் நம்முடைய படங்களுக்குமான பெரிய வித்தியாசமாக எதைக் கருதுகிறீர்கள்?
பெரும்பாலும் எங்களுக்குத் திரையிட்டவை எல்லாம் ரியலிஸ்டிக் படங்கள்தான். மிகவும் இயல்பாக நகரும் காட்சிகள், மிகவும் உண்மையான பிரச்சினைகள், வாழ்வின் அடிநாதமான கேள்வியை எடுத்துச் சொல்பவையாக அவை இருந்தன. தமிழ் சினிமாவில் பெரும் பாலும் மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள், அதிரடி மாற்றங்களும், ஹீரோயிஸத்தை வலியுறுத்துபவையாகவும் உள்ளன. ஆனால் இவை இரண்டுக்குமான இடைவெளியைக் குறைப்பதன் மூலம் இயல்பாகவும் விறுவிறுப்பாகவும் கதை சொல்ல முடியும் என்றே தோன்றுகிறது.
உங்களுக்கு வகுப்பெடுக்கத் திரைத்துறையில் இருந்து வந்தவர்களில் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவர்கள்?
நடிகர் ஓம்பூரி, எடிட்டர் சுரேஷ் அர்ஸ், லெனின், கேமிராமேன் கே.வி. ஆனந்த் ஆகியோர் வந்திருந்தனர்.
நீங்கள் தேர்வு செய்த கதை எத்தகையது?
தனிமையில் வாடும் ஒரு பணக்கார வீட்டுச் சிறுமிக்கு கிராமத்து எழிலைச் சுற்றிக் காட்டுகிறான்

ஒரு சிறுவன். அந்தச் சிறுவனின் தந்தை ஒரு நாடோடிக் கலைஞன். மறுநாளே அவர்கள் வேறு ஊருக்குப் போய் விடுகிறார்கள். அந்தச் சிறுமிக்கு அந்த ஒரு நாள் அனுபவம் மிகப் பெரிய தரிசனமாக இருக்கிறது. படத்தின் தலைப்பாக "ஒரே ஒருநாள்' என்று வைத்தேன். எனக்கும் ஒரு தம்பி இருப்பதால் இந்த உணர்வுகளைச் சொல்வது சுலபமாக இருந்தது. ஆனால் சினிமா ஒரு டீம் ஒர்க். நடிகர்கள், ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர் உள்ளிட்ட அனைவருடைய பங்களிப்பும் சிறப்பாக இருந்தால்தான் வெற்றி சாத்தியம். என்னுடைய வெற்றியையும் என் டீமில் இருக்கும் அனைவருக்குமானதாகத்தான் நான் கருதுகிறேன்.
தமிழ்மகன்

LinkWithin

Blog Widget by LinkWithin