திங்கள், ஆகஸ்ட் 24, 2009

அப்பா தந்த அதிர்ச்சி!!



இளம்பிராயத்தைக் கிராமத்தில் கழித்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள். இப்படிச் சொல்வது கொஞ்சம் பழமையான உதாரணமாக இருக்கலாம். ஆனாலும் அந்தச் சொர்க்க வாழ்க்கையை விவரிப்பதற்கு வேறு வார்த்தையில்லை.
பிரேம் சந்த் சிறுகதைகள் என்ற இந்த சாகித்ய அகாதமி வெளியீட்டில் 8 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. அவருடைய மிகச் சிறந்த கதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருப்பதாகத் தோன்றுகிறது. அவருடைய பிரபலமான சிறுகதைகள் பட்டியலில் இதில் உள்ள மூன்று கதைகளைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.


உத்திரபிரதேச மாநிலத்தில் கிராமம் ஒன்றில் பிறந்த இவர் இந்தியிலும் உருதிலும் சேர்த்து சுமார் 300 சிறுகதைகள் எழுதி இருக்கிறார்.இந்த 8 கதைகளில் அடிநாதமாக ஓர் ஒற்றுமையைப் பார்க்க முடிகிறது. முக்கியமாக எல்லாக் கதையிலும் கிராமம் இருக்கிறது. அதில் ஒரு சிறுவன் இருக்கிறான்.
உண்மையும், இரக்க குணமும், விளையாட்டு குணமும் கொண்ட அவர்களில் பிரேம் சந்த் ஒளிந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. அந்தச் சிறுவர்கள் மூலமாக அவர் தன் கடந்து போன ஞாபகங்களை மறு பிரதி எடுப்பது நன்றாகத் தெரிகிறது. அதை தெரிந்து கொள்வது சுலபமாக இருக்கிறது.. ஏனென்றால் முழு கற்பனாவாதக் கதைக்கும் பழம் நினைவுகளைக் கற்பனை செய்து பார்த்துக் கொள்வதற்கும் தெளிவான வித்தியாசம் இருக்கிறது.


பிரேம்சந்த் கிட்டிப்புள் மீது பைத்தியமாக இருந்திருக்க வேண்டும். இந்த எல்லா கதைகளிலும் ஒரு எசிறுவன் கிட்டிப்புள் விளையாடுகிறான். போதாததற்குக் கிட்டிப்புள் என்றே ஒரு சிறுகதையும் இதில் இருக்கிறது.சிறுவயதில் மிகப் பிரமாதமாகக் கிட்டிப்புள் ஆடுகிறான் இவரைவிட வயதில் மூத்த இவருடைய கிட்டிப்புள் தோழன். அந்த விளையாட்டில் புள்ளை அடிப்பதில்தான் சுவாரஸ்யம். எதிரில் நின்று அதைப் பிடிப்பதில் அத்தனை ஈர்ப்பு இருக்காது. பிடிப்பது அத்தனை எளிதானதும் இல்லை. ஆனால் பிரேம் சந்துக்கு கிட்டிப்புள் அடிக்கிற வாய்ப்பு கிடைக்கவில்லை. எதிராளி தோற்பதாக இல்லை. இத்தகைய சூழ்நிலையில் பிரேம் சந்த் தன்னை வீட்டில் திட்டுவார்கள் கிளம்புறேன்.. என்று நழுவப் பார்க்கிறார். எதிராளி விடுவதாக இல்லை. வேறு வழியில்லாமல் அழ ஆரம்பிக்கிறார்.விளையாட்டில் போட்டி போட முடியாமல் அழுவது கேவலமான விஷயம்தான். ஆனால் பிரேம் சந்த்துக்கு வேறு வழி தெரியவில்லை. அழுது காரியத்தைச் சாதித்துக் கொள்கிறார்.


அப்பாவின் வேலை நிமித்தம் ஊரை விட்டுச் சென்று விடும் அவர், பின்னாளில் பெரும் பதவியோடு அந்த ஊருக்கு வருகிறார். அன்று தன்னை விளையாட்டில்அழ வைத்த அந்தத் தோழனை அழைத்து இப்போது கிட்டிப்புள் ஆட ச் சொல்கிறார். காலம் அவனை வயதால் மூத்தவனாகவே வைத்திருக்கிறதே தவிர வறுமையால் இறக்கி வைத்திருக்கிறது. ஐயா அப்போது ஏதோ தெரியாமல் செய்துவிட்டேன் என்கிறான் அவன். யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று தவிர்க்கிறான். கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று ஊருக்கு வெளியே வெட்ட வெளியில் ஆட்டம் தொடங்குகிறது. புள், கிட்டியில் பட்டாலும் "இல்லை அது ஏதோ கல்லில் பட்டு சப்தம் கேட்கிறது' என்பது போல அவனாகவே தோற்றுப் போகிறான். அவன் வேண்டுமென்றே தோற்றது தெரிந்ததும் பிரேம் சந்த் மிகவும் வருந்துகிறார். அவன் தோற்றதன் மூலம் தன்னை வெற்றி கொண்டு விட்டான் என்று முடிகிறது கதை.


கிட்டிப்புள் மீது அவருக்கு இருந்த ஆர்வம் எல்லா கதைகளிலும் தெரிகிறது. அண்ணாச்சி என்ற அவருடைய புகழ் பெற்ற கதை இதில் இடம் பெற்றிருக்கிறது. அண்ணன், தம்பி இருவரும் ஒரு அறை எடுத்துத் தங்கிப் படிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அண்ணன் தினமும் தம்பிக்கு அறிவுரை சொன்னபடியே இருக்கிறான். படிப்பது அத்தனை சுலபமான விஷயமில்லை. வரலாற்றில் ஒரே மாதிரி பெயர்கள் பல இருக்கும். பல அரசர்களுக்குப் பெயர்கள் கிடைக்கவில்லையோ என்னவோ ஹென்றி ஓன்று, ஹென்றி இரண்டு என்றெல்லாம் பெயர் வைத்திருப்பார்கள் .. கணக்கு அத்தனை சுலபமானதல்ல... எந்த நாடு எங்கே இருக்கிறது என்பதை மனப்பாடம் செய்வது கஷ்டமானது ... இப்படியெல்லாம் சொல்கிறான். ஆனால் அந்த ஆண்டு அண்ணன் பெயில் ஆகிறான். தம்பி பாஸ்.ஒரு தடவை பாஸ் ஆகிவிடுவது சுலபம். இதை வைத்துக் கொண்டு மனப்பால் குடிக்காதே.. எப்போது பார்த்தாலும் கிட்டிப்புள் ஆடுவதை நிறுத்து என்று அறிவுரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.அடுத்த ஆண்டும் அண்ணன் தேர்ச்சி பெற முடியவில்லை. விளையாட்டுத் தம்பி பாஸ் ஆகிறான். இப்போதும் அண்ணன் அறிவுரை சொல்கிறான். நான் அறிவுரை சொல்வது உனக்கு கஷ்டமாக இருக்கும் ஆனால் அப்பா நமக்காக பணம் அனுப்பிப் படிக்கவைக்கிறார். நாம் பொறுப்பில்லாமல் இருப்பது சரியா என்கிறான். அண்ணன் தொனி மாறுகிறது. அண்ணன் மீண்டும் பின் தங்குகிறான். இறுதியில் பள்ளிப் படிப்பை விட அனுபவப் படிப்புதான் முக்கியம் என்கிறான் அண்ணன். மிக அருமையான உரையாடல் மூலம் நகர்த்தப்பட்டிருக்கும் இந்தக் கதையின் முரண் முடிச்சு.. வாழ்க்கையில் முன்னெச்சரிக்கை என நாம் நினைப்பது கவிழ்த்து விடுவதும் அலட்சியமாக இருந்தவன் முன்னேறிச் செல்வதும் மட்டுமல்ல. சறுக்கல்கள் மூலமாக அறிவுரையின் தொனியில் ஏற்படும் மாற்றமும்தான்.


வீட்டு நாய்கள் எஜமானர்கள் முன்னால் எடுத்துக் கொள்ளும் உரிமையும் தைரியமும் அவர்களை விட்டுப் பிரிந்து விட்டபோது பலவீனமாகிவிடுவதை, ஒரு விசுவாசமான ஊழியனின் மனப்பாங்குக்கு ஒப்பிடுகிற கஜாகி சிறுகதை மனதைத் தொடுகிறது.


ராம லீலா சிறுகதை... அந்தக் காலத்திலும் ஊழலுக்கான அம்சங்கள் இருந்ததைச் சொல்லும் ஒரு ஆவணம். ஊரே பல் இளிக்கும் கணிகையிடம் தன் தந்தை கம்பீரமாக நடந்து கொள்வார் என்று எதிர் பார்க்கும் சிறுவனின் தலையில் இடி விழும் அந்தக் காட்சி சிறுவனுக்கு ஏற்படுத்தும் அதிர்ச்சி வேதனையானது. போலீஸ் வேலை பார்க்கும் சிறுவனின் தந்தை எந்த விஷயத்தையும் மிடுக்குடன் எதிர் கொள்பவர். ஆனால் அந்தக் கணிகை, திருவிழாவில் அவரை வருடிச் செல்லும் போது அசட்டுத்தனமாக சிரிப்பது அந்தச் சிறுவனுக்குப் பேரதிர்ச்சியாக இருக்கிறது. வறிய பிச்சைக்காரர்களுக்குக் காசு தருவதற்கு கண்டிப்பு காட்டும் அவர், அந்தப் பெண்ணுக்குப் பளிச்சென்று 100 ரூபாய் நோட்டை எடுத்து நீட்டுகிறார்... இதில் உள்ள எல்லா கதைகளும் சிறுவர்களின் பார்வையில் இருந்து எழுதப்பட்டிருப்பது வியப்பான ஒற்றுமை. கதையின் எளிமையும், அது தரும் மன அதிர்வுகளும் எதிர்ப்பார்க்க முடியாத இரண்டு துருவங்களாக இருக்கின்றன.


பிரேம்சந்த்தின் சிறந்த கதைகள்,

முதல் தொகுதி சாகத்திய அகாதமி வெளியீடு

தமிழில் : என். ஸ்ரீதரன்,சி.ஐ.டி. வளாகம்,

தரமணி,

சென்னை-

விலை: 50

ஒரு தூக்கு மேடை குறிப்பு



கலைஞரைப் பார்ப்பதற்காகக் காத்திருந்தார் அந்தப் பெரியவர். பார்வைக் கணிப்பிலேயே 80 வயதை மதிப்பிட முடிந்தது. முரசொலி அலுவலகத்தில் அன்று கலைஞரைப் பார்க்க நிறைய பேர் வந்திருந்தார்கள். பெரியவரால் கலைஞரைப் பார்க்க முடியவில்லை. கலைஞர் கார் கிளம்பும்போது எப்படியும் அவர் தம்மைக் கவனித்துவிடுவார் என்ற அவருடைய நம்பிக்கையும் வீணாகிவிட்டது. மற்றவர்கள் போல காரின் கதவுப் பக்கம் ஓடித் தங்கள் முகத்தைத் தெரியப்படுத்திக் கொள்ளும் சாகஸம் எதுவும் அவரிடம் இல்லை. கார் கிளம்பியதும் சோர்ந்து நின்றுவிட்டார்.

அவரை அணுகி பேச்சுக் கொடுத்தேன். "பரவால்ல பட்ட கஷ்டத்துக்கு இப்ப வசதியா இருக்குது.. அது போதும். பாவம் இந்த வயசிலயும் ஓயாத வேலை இதுக்குது அதுக்கு'' என்றார். இதுக்கு, அதுக்கு என்று அவர் சொல்வது கலைஞரை என்பது தெரிந்ததும் ஒருவித அச்சம் வியாபித்து, என் அறைக்கு அழைத்துச் சென்றேன்.

அவர் பெயர் பாஸ்கர். எம்.ஆர்.ராதா நாடக கம்பெனியில் வேலை பார்த்தவர்.
"திருச்சில அண்ணாவோட வேலைக்காரி நாடகம் நடக்கும்போதுதான்.. இதோட தூக்குமேடை நாடகமும் நடந்தது. அண்ணா நாடகத்துக்கு ‘அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி'ன்னு விளம்பரம் பண்ணியிருந்தாங்க.. நாங்க ‘கருணாநிதியின் தூக்குமேடை'னு போட்டிருந்தோம். அன்னைக்கு காலீல எனக்கு ஒரு யோசனை.. அனாவுக்கு அனாவா போட்டதுமாதிரி நாம க'னாவுக்கு க'னா போட்டு "கலைஞர் கருணாநிதி'னு போட்டா என்னனு ராதாண்ணகிட்ட கேட்டேன். அண்ணன் சரிடான்னுட்டாரு.. நான்தான் மொத மொதல்ல சாக்பீஸ்ல இவரை கலைஞர் கருணாநிதினு எழுதினேன்.. ராதா அண்ணனும் இவரை மேடைக்கு வரவழைச்சு கலைஞர்னு சொன்னாரு. என்னை நல்லா தெரியும்.. அதான் ஒருவாட்டி பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன்.''

உண்மையா, உயர்வு நவிற்சியா என்ற சந்தேகம் வரவில்லை. ஏனென்றால் அவர் பேசும் தொனி உண்மைக்கு நெருக்கமானதாக இருந்தது. ஒல்லியாக இளம்பிராயத்தில் ஓடியாடி உழைத்தவராகத் தோன்றினார். சுறுசுறுப்பின் மிச்சம் அவருடைய நடுக்கம் நிறைந்த வேகத்தில் வெளிப்பட்டது.
"என்னைப் பார்த்துட்டா வுடவே வுடாது.. எம் மேல அவ்ளோ பிரியம்.. ''
வீட்டில் இவர் சொல்வதை நம்புபவர்களாக இருக்க மாட்டார்கள் என்று தோன்றியது. கலைஞரின் நண்பர் என்பதை நிரூபிக்க வேண்டியிருந்திருக்கலாம். முதுமையின் அலைபாயலில் தொலைந்த நட்பைப் புதுப்பிக்க நினைத்திருக்கலாம். ஞாபகம் வைத்திருக்கிறாரா என்ற சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்கிற ஆசையாக இருந்திருக்கலாம். ஏதோ உதவி தேவைப்பட்டிருக்கலாம். என்னவாக இருந்தாலும் அவரையும் கலைஞரையும் சந்திக்க வைக்க ஆசைப்பட்டேன். என்னுடைய யூகங்களில் எது சரியானது என்பதைத் தெரிந்து கொள்கிற ஆர்வம்.

இன்னொரு முறை வாருங்கள் எப்படியாவது சந்திக்க வைக்கிறேன் என்று சொல்லி அனுப்பினேன். அவர் இன்னொரு முறை வந்த போது கலைஞர் முரசொலிக்கு வரவில்லை. இன்னொரு முறை போன் செய்துவிட்டு வாருங்கள் என்றேன்.

அதன் பிறகு அவர் அங்கு வரவில்லை. எங்கள் குங்குமம் பிரிவை மயிலாப்பூர் தினகரனுக்கு மாற்றிவிட்டார்கள். எனக்கு வேறு அலுவலக முகவரியும் வேறு தொலைபேசி எண்ணும் அமைந்தது. அவர் என்னைத் தேடியிருப்பாரா... கலைஞரைச் சந்தித்தாரா? வீட்டில் நம்பாமலேயே போய்விட்டார்களா? கலைஞரைச் சந்திக்க வருகிற எத்தனையோ தொண்டர் குவியல்களில் இந்த மாதிரி ஆதாயம் கோராத பல கொடி மரத்து வேர்கள் உண்டு. அவர்களின் எல்லா கதைகளையும் கேட்க நேரம் இருப்பதில்லை.

எல்லோருக்கும் வேறு இடங்களில் வேறு கதைகள் காத்துக் கொண்டே இருக்கின்றன.

LinkWithin

Blog Widget by LinkWithin