வெள்ளி, மார்ச் 27, 2009

மின்னலா, வெண்ணிலவா?

இளம் நட்சத்திரங்கள்
மின்னலா, வெண்ணிலவா?

கால வேகம், அனைத்தையும் சுருக்கி விட்டது. சோழ சாம்ராஜ்யத்துக்கும் தொண்டை மண்டலத்துக்கும் இடையில் மாதக்கணக்கில் பயணிக்க வேண்டியிருந்தது. இப்போது அதே அவகாசம் பூமிக்கும் செவ்வாய்க் கிரகத்துக்குமாக மாறிவிட்டது. மனிதர்களின் வாழுங்காலம், பிரதமர் பதவிக் காலம் அனைத்துமே சுருங்கி விட்டது. 35 ஆண்டுகளுக்கு மேல் கதாநாயகர்களாக கோலோச்சிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி காலம், கமல் ரஜினி காலத்தில் இன்னும் சற்றுக் குறைந்து இப்போது சொற்ப வருடங்களாக மாறிவிட்டது.
அஜீத்குமார், அப்பாஸ் காலத்தை அது என்னவாக மாற்றப் போகிறது என்று சிந்திக்க வைக்கிறது.


அப்படியானால் எம்.ஜி.ஆரும் சிவாஜியும் சுமார் 35 ஆண்டுகளுக்கு மேல் திரைத்துறையில் அரசாட்சி செய்ததற்குக் காரணம். காலச் சூழல் மட்டும்தானா? மற்றெல்லா துறையைப் போலவும் இதையும் பொதுமைப்படுத்தி விட முடியுமா? இப்போது படத்துக்குப் படம் கதாநாயகர்கள் மாறிக் கொண்டிருப்பதற்குக் காரணம் என்ன? பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.



முன்பு போல நடிகர்களுக்குள் அர்ப்பணிக்கும் குணம் அற்றுப்போய்விட்டது. இரண்டு படம் வெற்றி பெற்றுவிட்டால் சம்பளத்தைப் பல லட்சங்களுக்கு உயர்த்திவிடுகிறார்கள். சிவாஜியும், எம்.ஜி.ஆரும் தங்கள் வாழ்நாளில் வாங்காத சம்பளத்தை, இன்றைய இளம் நடிகர் தன் இரண்டாம் படத்திலேயே கேட்கிறார். ஆட்டம் அதிகமாகி விடுகிறது. சரியாக ஒத்துழைப்புக் கொடுப்பதில்லை. கால்ஷீட் சொதப்பல்கள்... நடிகர்கள் வந்த வேகத்தில் காணாமல் போவதற்கு இப்படிப் பல காரணங்கள் சொல்லப் படுகின்றன.
நடிகர்களின் விட்டேற்றியான போக்குதான் அவர்களின் நிலைமைக்குக் காரணம் என்று உறுதியாகக் கூறமுடியாது. நல்ல இயக்குநர்களின் அறிமுகம் கிடைக்காமல் எத்தனை திறமையான நடிகர்கள் வீணாகியிருக்கின்றனர்?
ராசியில்லாத நடிகர் என்ற காரணத்திற்காக ஒரங்கட்டப்பட்டவர்கள் எத்தனையோ பேர். ஆட்டம் போட்ட நடிகர்கள் பலர் நீண்டகாலம் நடித்தும் இருக்கிறார்கள்.
களத்தூர் கண்ணம்மா படத்தில் கமல்ஹாசனுடன் சண்டை போடும் சிறுவன்தான் இப்போது ராமன் அப்துல்லா படத்தில் உன் மதமா என் மதமா என்று கிறுக்கன் வேடத்தில் வந்து பாட்டு பாடிய தசரதன்.
சமீபத்தில் மறைந்த தசரதனைப் பற்றி கமல்ஹாசன் ஒரு முறை இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்.
களத்தூர் கண்ணம்மா படத்தில் என்னை விடச் சிறப்பாக வசனம் பேசி நடித்தவர் தசரதன். அவர் இன்று நடந்து போய்க் கொண்டிருக்கிறார். நான் பென்ஸ் போட்டோல் போய்க்கொண்டிருக்கிறேன். போட்டோல் போய்க் கொண்டிருப்பதால் அவரைவிட நான்தான் சிறந்த நடிகன் என்று நான் எண்ணியதில்லை. அவரைப் போல பல நடிகர்களை நான் உதாரணம் சொல்ல முடியும். வாய்ப்பு கிடைக்காததாலேயே தங்களை நடிகர்களாக அடையாளம் காட்ட முடியாதவர்கள் அவர்கள்.
மூன்று முறை தேசிய விருது பெற்ற நடிகர் கமல்ஹாசன் தரும் ஆதாரம் இது.
தொடர்ச்சியாக நல்ல வாய்ப்பு முக்கியம். தமிழில் நூறு படங்களைத் தாண்டிய பல நடிகர்களுக்கு இது பொருந்தும். எம்.ஜி.ஆர். காலத்திலேயே ரவிச்சந்திரன் படங்களுக்கு இளைஞர்களின் மத்தியில் வரவேற்பு இருக்கவில்லையா? ரவிச்சந்திரன் என்ன ஆனார்? கமல்ஹாசன், ரஜினி படங்களுக்கு மத்தியில் தொடர்ந்து வெள்ளி விழாப் படங்களைத் தந்த மோகன் என்ன ஆனார்? அவர்களுக்கு இருந்த வரவேற்பு திடீரென்று மங்கிப் போனது ஏன்?


சில தோல்விப் படங்களுக்குப் பிறகு அவர்களின் மவுசு குறைந்து போனது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. கனவுக் கன்னியாக ஜொலித்துக் கொண்டிருந்த நாயகிகள் ஒரு சாயங்காலத்தில் ஆட்ட நாயகியாகவும், அக்காவாகவும், அம்மாவாகவும் மாறுவதற்கும் காரணம் இதுதான்.

தொடர்ச்சியான வெற்றிப்படங்கள் - திறமையான இயக்குநர்கள் இல்லாததால்தான் நடிகர்கள் காணாமல் போகிறார்களா?...


ஒரு காலத்தில் அப்படியிருந்திருக்கலாம். இப்போது அப்படிச் சொல்ல முடியாது. ஓர் இளம் நடிகரின் படங்கள் தொடர்ச்சியாக வெற்றிப்படங்களாக அமைவதுதான் ஆபத்தாக இருக்கிறது. அவருடைய சம்பளம் ஏடாகூடமாக ஏறிவிடுவதால் உடனடியாக வேறு நடிகரைத் தேட வேண்டியிருக்கிறது. இந்திப் பட உலகம் புதிய புதிய இளம் நடிகர்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்திக் கொண்டிருப்பதற்கு அதுதான் காரணம் என்கிறார் விநியோகஸ்தர் ஒருவர். ஆயிரம் இருந்தாலும் முன்புபோல நடிகர்களுக்குப் பயிற்சியில்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். சிவாஜி, எம்.ஜி.ஆர்., எம்.ஆர். ராதா, ரங்காராவ், பாலையா போன்ற பல நடிகர்கள் 30 ஆண்டுகளுக்கு மேல் கோலோச்சியிருந்ததற்குக் காரணம் அவர்கள் எல்லாம் நாடகத்துறையில் இருந்து வந்தவர்கள். நாடகம் அவர்களுக்கு நல்ல பயிற்சிக் களமாக இருந்தது. நடிப்போடு நல்ல பண்பாடும் இருந்தது. பண்பாடு அவர்களை நிலைநிறுத்திக் கொள்ளப் பேருதவியாக இருந்தது. எதிரெதிர் முகாம்களில் இருந்த எம்.ஜி.ஆரும் சிவாஜியும் கூட அண்ணன் தம்பி உறவு முறை சொல்லி விளித்துக் கொண்டனர்.

எத்தனை போட்டி பொறமைக்கிடையேயும் மற்றவர்களை அவர்கள் மதிக்கத் தவறியதில்லை.
இப்போது...?
நடிப்பில் எனக்கு ஆர்வமிருந்ததில்லை என்று கூடச் சில அறிமுக நடிகர்கள் பேட்டி கொடுக்கிறார்கள்.


மாடலிங் செய்து கொண்டிருந்தேன். அப்போது படத்தின் இயக்குநர் என்னைப் பார்த்து விட்டு நடிக்க அழைத்தார். முதலில் எனக்கு விருப்பமில்லை. நடிக்க வந்த பிறகுதான் இதற்கிருக்கும் வரவேற்பை உணர்ந்தேன் என்று கூறியிருக்கிறார்கள்.

நான் பிஸினஸ் மேன், ஒரு விழாவில் சந்தித்த இயக்குநர் மணிரத்னம் என்னை நடிக்க விருப்பமா? என்று கேட்டார். பார்க்கலாம் என்று சொல்லியிருந்தேன். தளபதியில் எனக்குக் கிடைத்த கலெக்டர் வேடம் அதன் பிறகு அமைந்ததுதான் என்றார் அரவிந்தசாமி. நடிப்பில் தாகம் குறைந்த பலர் நடிக்க வந்து, அதனால் கிடைத்த புகழுக்கும் பணத்திற்கும் விருப்பம் கொண்டு தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி இருக்கிறார்கள். என்னை ஒரு நடிகனாக மக்கள் அங்கீகாரம் செய்வதற்கு நான் 25 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது என்று கூறிய எம்.ஜி.ஆர். எங்கே? கூட்டத்தில் சிப்பாய் வேடம். தாங்கி நடித்தவர், பின்னாளில் மாபெரும் மக்கள் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியதற்குக் காரணம் அந்த விடாமுயற்சிதானே? இப்போது வருகிறவர்கள் ஆரம்பத்திலேயே கதாநாயகன் வேடத்தோடு களத்தில் குதிக்கிறார்கள். வரவேற்பு இருக்கும் வரை நடிக்கிறார்கள். இல்லையா... சரி விடு என்று நடையைக் கட்டுகிறார்கள். வாழ்க்கையை லேசாக எடுத்துக் கொள்ளும் இந்த டேக் இட் ஈஸி போக்கு இக் கால இளைஞர்களின் பொதுத் தன்மையாக இருந்தாலும் துறையில் நீடிக்கமால் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். நடிக்க வருபவர்கள் தங்களுக்கென பாணி எதுவும் வைத்துக் கொள்ளாதது மற்றொரு காரணம். சிவாஜியும் எம்.ஜி.ஆரும். கமலும் ரஜினியும் ஒரே காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்தற்கு. அவர்களின் தனித் தன்மை எவ்வளவு உதவி போட்டோந்திருக்கிறது என்பது சுலபமாக விளங்கும். அதை அவர்கள் பிடிவாதமாகக் கடைப்பித்தார்கள். விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் போன்றவர்களும் தங்களுக்குள் இந்த வித்தியாசங்களைக் காட்டினார்கள். இதில் பிரபு, கார்த்திக் ஆகியோருக்காவது பெரிய நடிகர்களின் மகன்கள் என்ற அடையாளம் இருந்தது. கதாநாயகர்களாகவே அறிமுகமானார்கள். அவர்களின் தனித்துவத்தை நிரூபிப்பதற்கு சற்று அவகாசம் எடுத்துக் கொள்ள முடிந்தது. ஆனால் விஜயகாந்த், சத்யராஜ் ஆகியோர் போராடி ஜெயித்து வந்தவர்கள். கதையின் சிறப்பினாலோ, தயாரிப்பின் பிரமிப்பினாலோ வெற்றிகாணும் இளம் கதாநாயகர்கள் அதைத் தனக்குக் கிடைத்த வெற்றியாக நம்பத் தொடங்கி ஏமாறுகிறார்கள். அவர்களின் பெண் ரசிகைகளும் போகிற இடங்களிலெல்லாம் எதிர்ப்படும் விசிறிகளின் குளிர் சாமரமும் ஏதோ சாதித்த திருப்தியை ஏற்படுத்தி கடைசியில் அவர்களை அழிக்கின்றன.
இளம் நடிகைகளின் ஆதிக்கம் குறைவதற்கு இத்தனை நீண்ட காரணம் கூடத் தேவையில்லை. பெரும்பாலும் மும்பை, ஆந்திரம், கேரளம், ஆகிய மாநிலத்தில் இருந்து இறக்குமதியாகும் இவர்களின் பண நோக்கம் அப்பட்டடமாகவே தெரியும். கலைதாகம் என்பது அவர்களுக்கு பத்தாம் பட்சமே. புகழைத் தக்க வைக்க வேண்டுமே என்ற கவலை வேண்டுமானால் சிலருக்குக் கொஞ்ச காலம்வரை இருக்கும். மேற் சொன்ன காரணங்களில் ஒன்றினாலோ அல்லது அத்தனையும் சேர்ந்தோ இளம் நடிகர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
வரிசைப்படுத்துவோமா?
1. காலச்சூழல்
2. அர்ப்பணிக்கும் குணமின்மை
3. நல்ல படங்களில் தொடர் வாய்ப்பின்மை
4. நடிகர்களின் சம்பளப் பிரச்சினை
5. நடிப்பில் தாகமின்மை
6. தனித் தன்மையின்மை
7. பண ஆசையும் புகழ்போதையும்

இந்தக் காரணங்களால் நடிகர்கள் காணாமல் போவது சினிமா தொடங்கிய காலத்திலிருந்தே இருப்பதாகக் கூறினாலும் அதன் விகிதாச்சாரம் இப்போது முழுமை அடைந்திருப்பதை யாரும் மறுக்க முடியாது.

LinkWithin

Blog Widget by LinkWithin