வியாழன், ஆகஸ்ட் 20, 2009

டைரக்டர் ஷங்கருக்கு நண்பராகாதவர் பற்றிய குறிப்பு


நண்பர்கள் தினத்தன்று சுமார் 40 எஸ்.எம்.எஸ்.கள். என்னுடைய நண்பர் கோவர்தனை நினைத்துக் கொண்டேன். அவர் அந்த நாளில் என்னைத் தொடர்பு கொள்ளவே இல்லை.
நாள்கள்- நிகழ்வுகள் சார்ந்து அவர் பேசுவதும் இல்லை. ஒரு நாள் பஸ்ஸில் தாம்பரத்தில் இருந்து படப்பைக்குப் பஸ்ஸில் போய்க் கொண்டிருக்கும்போது போன திங்கள் கிழமை ஏன் கூட்டத்துக்கு வரவில்லை என்று கேட்டேன். அவர் ""ஓ சாரி.. எனக்கு கல்யாணம் நடைபெற்றதால் வரமுடியவில்லை'' என்றார். அதிர்ச்சி ஒரு நண்பர் இப்படியும்கூட செய்வாரா என. ஆனால் அந்த அதிர்ச்சியை அவர் அடுத்த வினாடியே போக்கிவிட்டார், இன்னொரு அதிர்ச்சியின் மூலமாக. "இன்னும் அண்ணனுக்குக்கூட சொல்லலை'' என்றார். அவருடைய அண்ணன் எங்கள் இருக்கைக்கு முன் வரிசையில் அமர்ந்திருந்தார். அதாவது நாங்கள் அவருடைய அண்ணன் தலைக்கு மேலே இருந்த கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு இதைப் பேசிக் கொண்டிருந்தோம். எதையும் ஏற்றுக் கொள்ளும்விதமாகச் சொல்லுவதில் வல்லவர். முற்போக்கான சிந்தனைகள் உள்ளவர்.
இத்தகைய லெளகீக சமாசாரங்களுக்கு அவர் அதற்கு மேல் முக்கியத்துவம் தராதவராக இருந்தார். ஒரே ஒரு பையன் உண்டு. எட்டு வயசு. ஒரு தடவை போன் செய்த போது, அவருடைய மனைவி போனை எடுத்தார். "பையனை தூக்கிக் கொண்டு கடைக்குப் போயிருக்கிறார்'' என்றார்.
"தூக்கிக் கொண்டா? வந்ததும் பேசச் சொல்லுங்கள்.''
போன் வந்தது. "பையனுக்கு இன்னைக்கு லீவா?'' என்றேன்.
"இதுக்குள்ள ஸ்கூலா? இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்''
"ஏற்கெனவே படித்துக் கொண்டுதானே இருக்கிறான்? இதுக்குள்ள ஸ்கூலா என்கிறீர்கள்?''
"இந்த மாதிரி விஷயங்கள்தான் மறந்து போகிறது... இவன் இன்னொரு பையன்... போன வருஷம் பிறந்தான்''
இப்படியாக அவர், வீடு மாறினாலோ, போனை மாற்றினாலோ, கார் வாங்கினாலோ, வேலை மாறினாலோ என்னிடம் அதைப்பற்றி ஒரு உடனடி பரிமாற்றமாகப் பகிர்ந்து கொண்டதே இல்லை. அவர் இருப்பது பெங்களூருவில். பார்ப்பதும் பேசுவதும்கூட அரிது.
இதையெல்லாம் புறந்தள்ளி கடந்த இருபத்தைந்தாண்டுகளாக முதல் வரிசை நண்பர் பட்டியலில் அவருக்கு நானும் எனக்கு அவரும் இருப்பது விந்தையாகத்தான் இருக்கும். இடுக்கண் களைவதில் உடுக்கை இழந்தவன் கைபோலத்தான் அவர் செயல்பட்டிருக்கிறார். மிக முக்கியமாக முடிவெடுக்க வேண்டிய ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இருவரும் பகிர்ந்து கொள்வோம். ரசனையில் இருந்த ஒற்றுமை எங்களை இணைத்ததாக நினைக்கிறேன். குமுதத்துக்காக எழுதிய டைரக்டர் ஷங்கர் வாழ்க்கைத் தொடரான சங்கர் முதல் ஷங்கர் வரை நூலை அவருக்கு டெடிகேட் செய்திருந்தேன்.
இவரைப் போல
இருக்க முடியவில்லையே என்று
என்னை என்றென்றும் ஏங்க வைக்கும்
நண்பர். இரா. கோவர்தன்
அவர்களுக்கு...
என்று எழுதியிருந்தேன்.
"யார் இவர்'' என்று ஷங்கர் கேட்டார்.
என்னைவிட அவருக்குத்தான் அவர் நன்கு தெரிந்திருக்க வேண்டும். "நீங்கள் சென்ட்ரல் பாலிடெக்னிக்கில் படித்த அதே 80- 84 ஆண்டில்தான் அவரும் அங்கு படித்தார்'' என்றேன்.
"எப்படி இருப்பார் எனக்கு நினைவு வரவில்லையே'' என்றார். விளக்கிச் சொல்ல முனைந்தேன். அவருக்கு நினைவு வரவில்லை. "அதன் பிறகு நீங்கள் ஹால்டா டைப்ரைட்டிங் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்தீர்களே.. அங்கேதான் அவர் எலக்ரானிக் பிரிவு தலைவராக இருந்தார்'' என்றேன். "அடடா அப்படியா?'' என்றார். அப்போதும் அவருக்கு நினைவு வரவில்லை.
பாலிடெக்னிக்கில் படித்தது, ஹால்டாவில் வேலை பார்த்தது எல்லாவற்றையும் அவர் அந்தத் தொடரில் சொல்லியிருந்தார்.
கோவர்தனுக்கும் ஷங்கரை நினைவு வரவில்லை. இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் ஒரே கல்லூரியில் படித்ததையும் வேலை பார்த்ததையும் அவர்களுக்குக் கண்டுபிடித்துச் சொன்னேன். ஆனால் பலனில்லை இருவருக்குமே ஞாபகம் வரவில்லை. இப்போது ஒருமுறை சந்தித்துக் கொள்கிற விருப்பமும் இருவரிடத்திலும் இல்லை.
"பிராமின்கள் நல்லவர்கள் போலவும் நான் பிராமின்ஸ் பலரும் கெட்டவர்கள் போலவும் அவருடைய படத்தில் காட்சிகளைப் பார்த்திருக்கிறேன். அதை அவர் தெரிந்துதான் செய்கிறாரா'' என்று கேட்டார் கோவர்தன்.
ஆங்கிலத்தில் "இப்படியிருந்திருந்தால்களும் ஆனால்களும்..' (ifs and buts) என ஒரு பிரயோகம் உண்டு. யூகமாக சில யோசனைகளை முன் வைப்பதற்காக இதைச் சொல்லுவார்கள். ஷங்கரும் இவரும் கல்லூரி நாள்களிலேயே நண்பர்களாக ஆகியிருந்தால் ஷங்கர் இப்படி ஒரு கேள்விக்கு ஆளாகியிருக்க மாட்டார் என்று நிச்சயமாகத் தோன்றுகிறது.
ஆனால்?

LinkWithin

Blog Widget by LinkWithin