திங்கள், டிசம்பர் 10, 2007

25 ஆயிரம் மாணவர்கள்... ஒரு டிஸ்க் ஜாக்கி!







குதிரை ரேஸில் மட்டுமே கேள்விபட்டிருந்த ஜாக்கிகள் இப்போது பல்வேறு துறைகளிலும் அடிபட ஆரம்பித்திருக்கிறார்கள். ரேடியோ ஜாக்கிகள், விடியோ ஜாக்கிகளைத் தொடர்ந்து இப்போது உலகமெங்கும் பிரபலமாகி வருவது டிஸ்க் ஜாக்கிகள்...

கல்யாண விழாக்கள், பிறந்தநாள் நிகழ்ச்சிகள் தொடங்கி கார்பரேட் கொண்டாட்ட களேபரங்கள் வரை வந்திருப்பவர்களை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் மகிழ்விப்பதற்கு உருவாக்கப்பட்டிருக்கும் புதிய கலாசாரம்தான் டிஸ்க் ஜாக்கி உலகம். பிரபலமான சினிமா பாடல்களைச் சுடச்சுட ரீமிக்ஸ் செய்து பாடி, ஆடி என்டெர்டெய்ன் செய்பவர்கள் டிஸ்க் ஜாக்கிகள். பார்ட்டி அரங்குகளில் இவர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் வட்டமேடை (?) டிஸ்க் என்று அழைக்கப்படுகிறது. சரி.. ஜூட். சர்வ தேச அளவில் புகழ் பெற்று இருக்கும் டிஜே'வான நாஷா சமீபத்தில் நேச்சுரல் நிறுவனத்தின் புதிய கிளையின் திறப்புவிழாவுக்காக மும்பையிலிருந்து சென்னை வந்திருந்தார். அவர் நமக்களித்த பேட்டிக்குப் போவோமா?


உங்களுக்கு டிஜே லட்சியம் ஏற்பட்டது பற்றி சிறுகுறிப்பு?

இயற்பெயர் ரித்தேஷ் டி'úஸôசா. அப்பா, அம்மாவுக்கு இசையில் அதீத ஆர்வம் இருந்தது. நான் ஒரு ராக் ஸ்டார் ஆக வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால் டி.ஜே.வில்தான் சாதிக்க வேண்டும் என்று எனக்கு எழுதியிருக்கிறது. 1999-ல் முதல் அரங்கேற்றம். தொடர்ந்து உலகம் முழுதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றாகிவிட்டது. எம்.டி.வி.யின் மிக நீண்ட நடன நிகழ்ச்சிக்காகப் பாடி கின்னஸ் சாதனையும் செய்தாகிவிட்டது.





உங்கள் நிகழ்ச்சியின் அரிய சந்தர்ப்பங்கள் என்று எதை நினைக்கிறீர்கள்?

ஜாகீர் ஹுசைன், யூ.ஸ்ரீனிவாஸ், செல்வகணேஷ், சிவமணி, ரஞ்சித் பரோட் போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றிய நேரங்களை என்னால் மறக்கவே முடியாது.

பொழுதுபோக்குவதற்காக

உங்களை அழைக்கிறார்கள். ஏதாவது சந்தர்ப்பத்தில் அலுப்பு ஏற்பட்டு மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்ட சம்பவம் நடந்திருக்கிறதா?

அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. டி.ஜே.வின் அடிப்படை அம்சமே உற்சாகம்தான். நாங்கள் கலந்து கொள்ளும் விழா எத்தகையது என்பதை முன்னரே தெரிந்து கொள்வதால் அதற்கான தயாரிப்புகளோடு இருப்போம். உதாரணத்துக்கு புனேவில் 25 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்ட இண்டர் காலேஜ் நிகழ்ச்சி. மாணவர்களைக் கட்டுக் கோப்பில் வைத்திருப்பது சாதாரண விஷயமா? ஆனால் நான் நடத்திய நிகழ்ச்சிகளிலேயே மிக சிறப்பாக அமைந்த நிகழ்ச்சி அதுதான்.

டிஜே'வுக்கு விடப்பட்ட சவாலே அந்த நிமிடத்தில் மகிழ்ச்சிப்படுத்துவதுதான்.

இந்த விஷயத்தில் உங்களுக்குக் குரு யார்?

குரு என்று சொல்ல முடியாது. ஆனால் என் ஃபேவரைட் ஆசாமி இங்கிலாந்தைச்

சேர்ந்த "டிஜே' ஸ்க்வீன்.


வேறு இசை முயற்சிகள்?

இந்திப் படங்களுக்கு ரீமிக்ஸ் செய்ய அழைக்கிறார்கள். படங்களுக்குச் செய்வதை நான் அவ்வளவாக விரும்புவதில்லை. ஆன் தி ஸ்பாட் ரீமிக்ஸில்தான் த்ரில். "முட்ஷே சாதிக்கரோ' படத்துக்கு ஒரு ரீமிக்ஸ் செய்திருக்கிறேன். டிஜே அகாடமி ஒன்று துவங்கியிருக்கிறேன். ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் வந்து சேர்கிறார்கள். இது ஒரு மகிழ்ச்சியூட்டும் முயற்சி என்ற விதத்தில் என் வேலை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

தமிழ்மகன்

படங்கள்:மீனம் மனோ

ஒன்பது ரூபாய் நோட்டையொட்டி..!






தமிழ் நாவல்கள் திரைப்படங்களாவது பல சந்தர்ப்பங்களில் பலத்த விமர்சனத்துக்கு ஆளாகும்படிதான் ஆகியிருக்கிறது. எழுத்தின் சுவையை ஃபிலிம் சுருள் சாப்பிட்டுவிட்டதாக உலகு தழுவிய புகார் உண்டு.

இந்தப் பிரச்சினை தீருவதற்கு கதாசிரியர்களே இயக்குநர்கள் ஆனால்தான் உண்டு. உன்னைப் போல் ஒருவன் கதையை எழுதி, அதை இயக்கியும் இருந்தார் ஜெயகாந்தன். அப்படி தானே எழுதி தானே இயக்கியவர் வரிசையில் இடம் பெற்றிருக்கிறார் தங்கர் பச்சான். அவருடைய ஒன்பது ரூபாய் நோட்டு நாவல் சமீபத்தில் சினிமாவாகி உள்ளது.

தமிழில் சிறப்பாகப் போற்றப்பட்ட பல நாவல்கள் சினிமா ஆகியிருக்கின்றன. பரவலாக ரசிக்கப்பட்ட பல நாவல்கள் சினிமாவாக ரசிக்க முடியாமல் போயிருக்கின்றன. ""1935-ல் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் "மேனகா', "திகம்பர சாமியா'ரில் இருந்தே நாவல்கள் திரைப்படங்களாகியிருக்கின்றன. அகிலனின் "குலமகள் ராதை', "பாவை விளக்கு', "கயல்விழி' (மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்) நாவல்கள் திரைப்படங்களாகியிருக்கின்றன. கல்கியின் "தியாக பூமி', "கள்வனின் காதலி', "பார்த்திபன் கனவு' போன்ற கதைகளும் மக்களால் கதையாகவும் சினிமாவாகவும் வரவேற்கப்பட்டன.

கொத்தமங்கலம் சுப்புவின் "தில்லானா மோகனாம்பாள்', நாமக்கல் கவிஞரின் "மலைக்கள்ளன்' ஆகியவை நாவலைவிடவும் பெரிய அளவில் சினிமாவாகச் சிலாகிக்கப்பட்டவை'' என்கிறார் சினிமா விமர்சகரும் திரைப்பட மக்கள் தொடர்பாளருமான பெரு. துளசி பழனிவேல்.

""மக்களுக்குச் சினிமா பொழுது போக்கு அம்சமாகவே உள்வாங்கப்பட்டிருக்கிறது. காமெடியும், அடிதடியும், கண்ணீரும் அதில் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து கலர் ஃபுல்லாக வழங்கப்பட வேண்டும். ஆனால் வாசிப்பு அனுபவம் முற்றிலும் வேறுவிதமானது. கதையுலகில் ஆராதிக்கப்படும் ஆயிரம் பக்க "அன்னா கரீனி'னாவையும் "மோகமுள்'ளையும் சினிமாவாக்கும் போது இது இன்னும் பட்டவர்த்தனமாகத் தெரிய ஆரம்பிக்கிறது'' என்கிறார் ஓர் உதவி இயக்குநர்.

சுஜாதாவின் "காயத்ரி', "கரையெல்லாம் செண்பகப் பூ', "இது எப்படி இருக்கு' நாவல்களுக்குக் கிடைக்காத வரவேற்பு, மகரிஷியின் "புவனா ஒரு கேள்விக்குறி', "பத்ரகாளி' படங்களுக்குக் கிடைத்தது. வாசக வெற்றி திரைப்பட வெற்றிக்குப் போதுமானதாக இல்லாத நிலை இது. அறிஞர் அண்ணாவின் ரங்கோன் ராதா, படமானபோது அது பரவலாக வரவேற்கப்படவில்லை.

மகேந்திரன் சில படங்களே இயக்கியிருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை நாவல்களே. திறமையான கலைஞர்களால் கதைகளை அதன் சாராம்சம் கெடாமல் திரைப்படங்களாக்க முடியும் என்பதற்கு அவர் ஓர் உதாரணம். உமா சந்திரனின் "முள்ளும் மலரும்', புதுமைப்பித்தனின் "சிற்றன்னை'யைத் தழுவி எடுத்த "உதிரிப் பூக்கள்', பொன்னீலனின் "பூட்டாத பூட்டுகள்', சிவசங்கரியின் "நண்டு' போன்ற நாவல்களைப் படமாக்கியிருக்கிறார் மகேந்திரன்.

""இருந்தாலும் சினிமா இயக்குநர்கள் அவர்கள் நேசித்து உருவாக்கிய கதையை உரசிப்பார்த்துக் கொள்ளவும் சரி பண்ணிக் கொள்ளவும்தான் தமிழ் எழுத்தாளர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதனால்தான் சுஜாதா, பாலகுமாரன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா போன்ற பல எழுத்தாளர்கள் வசனகர்த்தாக்களாக்கப்பட்டிருக்கிறார்கள் இப்போது'' என்கிறார் பழனிவேல்.

சினிமா வேறு வாழ்க்கை வேறு என்று சாதாரணமாக ஒரு பிரயோகம் உண்டு. சினிமா வேறு; நாவல் வேறு என்பதும் நமக்குப் பொருத்தமாக இருக்கும் போலிருக்கிறது.

LinkWithin

Blog Widget by LinkWithin