திங்கள், ஜனவரி 07, 2013

வனசாட்சி குறித்து...






ஜனவரி 6-ம் தேதி மாலை சென்னை புக் பாயிண்டில் உயிர்மையின் ஒன்பது நூல்கள் வெளியீட்டு விழா. ஒன்பது நூல்களையும் அய்யா நெடுமாறன் வெளியிட்டார். இயக்குநர் லிங்குசாமி என்னுடைய வனசாட்சி நாவலை பெற்றுக்கொண்டு பேசினார்.
அதிகார இடைத்தரகர்களின் கேவலமான சுயநலத்துக்காக மக்கள் எப்படி பலியாகிறார்கள் என்பது நாவலின் அடிநாதம்.
நாவலின் பின் அட்டைக் குறிப்பாக கவிஞர் மனுஷ்யபுத்திரன் இப்படி எழுதி இருக்கிறார்..


’’கழுத்தில் வைக்கப்படும் நுகத்தடிகளில் சர்க்கஸ் ரிங் மாஸ்டரின்
சாட்டைகளில், மணவறையில் கட்டப்படும் தாலிகளில், அலுவலகத்தில் தரப்படும்
அப்பாயின்மென்ட் ஆர்டர்களில்... எல்லாவற்றிலும் ஒளிந்திருக்கின்றன
அதிகாரத்தின் நுணுக்கமான ரேகைகள். நாம் அதை மௌனமாக அனுமதிக்கப் பழகி
இருக்கிறோம். அது அதிகார துஷ்பிரயோக மாறாதவரை நமக்குக் கவலை இல்லை. உலகமே
அதிகாரத் தரகர்களின் கையில் சிக்கிச் சிதைந்து போயிருக்கிறது.
அசடர்களிடம் அதிகாரம் குவியும்போது துயரத்தின் விளைவு அதிகமாக இருக்கும்.
கூடவே கொஞ்சம் நகைச்சுவையும்.
இந்த நாவல் சுமார் 200 ஆண்டு தேயிலைத் தோட்டப் பின்னணியில் அதை அலசுகிறது.’’

அதிகாரத்தின் ஆணவ முகம் நாளுக்கு நாள் கோராமாகிக்கொண்டே போகிறது. விழாவில் எழுத்தாளர் ஜெயமோகன் பேசும்போது அதிகாரிகள் ஒரே நேரத்தில் ஒருத்தரிடம் பணிவாகவும் இன்னொருவரிடம் திமிராகவும் நடந்துகொள்ள வேண்டி இருக்கிறது என்றார். அவர் சிவகாமியின் உண்மைக்கு முன்னும் பின்னும் நாவல் குறித்துதான் சொன்னார். ஆனால் அவர் என் நாவல் குறித்து பேசியது போலவே இருந்தது.

அதிகார அடுக்கு ஒரு அதிகாரியை இன்னொரு அதிகாரியிடம் மண்டியிட வைக்கிறது. குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதை அடிக்கொருதரம் அவர்கள் விழுந்துவிழுந்து காட்ட வேண்டி இருக்கிறது. மீசையில் மண் ஒட்டாததை நிரூபிப்பதற்காகவே அவர்கள் தொடர்ந்து குப்புற விழுகிறார்கள். அவர்கள் தங்கள் அடிமைகளை அச்சுறுத்த நினைத்து அவர்களுக்கு எல்லையற்ற நகைச்சுவையைத்தான் தருகிறார்கள். அடிமைகளில் மிகச் சிலரே அதை ரசிக்கத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்.

வனசாட்சி நாவலின் முதல் பாகம்.. முன்பனிக் காலம்.
19-ம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிருந்து சாரை சாரையாக தமிழ் மக்கள் இலங்கைக்கு தோட்ட வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதைச் சொல்கிறது. ஒரு குழு இங்கிருந்து இலங்கை தோட்டத்தைச் சென்று அடைவதோடு முதல் பாகம் முடிகிறது.

இரண்டாவது பாகம் பின்பனிக் காலம்.

ஸ்ரீமாவோ- சாஸ்திரி ஒப்பந்தத்தின் படி இலங்கையில் வேலைபார்த்துவந்த பத்து லட்சம் தோட்டத் தொழிலாளர்களில் பாதிப் பேர் அங்கிருந்து திருப்பி அனுப்பப் படுவதை சொல்கிறது.

மூன்றாவது பகுதி.. இலையுதிர் காலம்.

திருப்பி அனுப்புவதில் ஏற்பட்ட கோளாறில் மகள் வேறு குடும்பவ் வேறாகப் பிரிந்து போன ஒரு குடும்பம் பற்றிச் சொல்கிறது. இலங்கையில் தொலைந்துபோன அந்தப் பெண் இயக்கத் தொடர்பு ஏற்பட்டு முள்ளி வாய்க்கால் போரில் வீரமரணம் அடைவது வரை செல்கிறது.

மீண்டும் என் நாவலில் சமகாலச் சரித்திரத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறேன். சமூகம் வேறாகவும் கதை வேறாகவும் என்னால் கற்பனை செய்யவே முடியவில்லை. புனைவும் நிஜமும் பிணையும் புள்ளியாக இருப்பதே என் படைப்புகள்.. மற்ற எல்லாரையும்விட பட்டவர்த்தனமாக அதை நான் செய்கிறேன்.

அதனால்தான் இதில் சேன நாயக்க முதல் ராஜபக்‌ஷே வரை.. சாஸ்திரி முதல் ராஜீவ் காந்தி வரையில் சொல்ல வேண்டி இருக்கிறது.

வாசகர்கள் வர வேற்பார்கள் என்ற நம்பிக்கையுடன்..











LinkWithin

Blog Widget by LinkWithin