சனி, அக்டோபர் 06, 2007

ராகசுதாவிலிருந்து, நிர்மலானந்தாவுக்கு...

திரையுலகில் பிரபலமாக இருந்துவிட்டு திடீரென்று ஒரு நடிகை சந்நியாசம் மேற்கொண்டால், வழக்கமாக எல்லோருக்கும் ஏற்படும் முதல்கேள்வி ""எதுக்காக வாழ்க்கை மீது அப்படி ஒரு வெறுப்பு?''

மைசூரிலுள்ள பரமஹம்ச நித்தியானந்தரின் நித்தியானந்த பீடத்தில் சந்நியாசியாக இருக்கிறார் நடிகை ராகசுதா, சரியாகச் சொன்னால் சுவாமி நிர்மலானந்தா.
""பலர் என்னிடம் அப்படித்தான் கேட்டார்கள். நான் வாழ்க்கையை வெறுத்து சந்நியாசத்துக்கு வரவில்லை. வாழ்க்கை மீது உள்ள அளவுகடந்த விருப்பத்தால் சந்நியாசி ஆகியிருக்கிறேன்.

வாழ்க்கையை எதிர்கொள்ள பயந்து தனிமனித விரக்தி காரணமாகச் சந்நியாசத்தை மேற் கொள்பவர்கள் ஆன்மிகத்தைக் கொச்சைப்படுத்திவிடுகிறார்கள்.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற என் கனவு பலித்தது. பல தமிழ்ப்படங்களில் நடித்தேன். "தங்கத்தின் தங்கம்' எனக்குப் பெரிய பிரேக். தொடர்ந்து கன்னடப் பட உலகில் பல வெற்றிப்படங்களில் கதாநாயகியாக நடித்தேன். மலையாளத்திலும். கடைசியாக வெளியான "தம்பி' படம் வரை தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தேன். வீடும், காரும் போன்ற லெüகீக கனவுகள் எல்லாம் எனக்குச் சாத்தியமாயிற்று. ஆக, எனக்கு வாழ்க்கை வெறுத்துப் போகும் நிலைமை ஏற்படவேயில்லை. நான்கைந்து ஆண்டுகளாக நான் பல தியான வகுப்புகளுக்குச் சென்று கொண்டிருந்தேன். பதஞ்சலி யோகா முதல் நான் செல்லாத யோகா வகுப்புகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஞானத்தைத் தேடி அலைந்தேன். தனவணிகன் என்ற ஒரு சிற்றிதழில் மகா அவதார் பாபாவின் தீட்ஷை பெற்றவர் என்ற தலைப்பில் நித்தியானந்தர் பற்றி ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. இயல்பான ஆர்வத்தில் அவரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். அண்ணா பல்கலைக்கழகத்தில் அவர் தியான வகுப்பு எடுப்பதாக அறிந்து அங்கு சென்றேன். நித்தியானந்தரை முதலில் நேரில் பார்த்தது அங்குதான். என்னையும் அறியாமல் அவர் பாதத்தைத் தொட்டு வணங்கினேன். தொடர்ந்து திருவண்ணாமலையில் அவருடைய தியான வகுப்புக்குச் சென்றேன்.

ஆன்மிக ஆனந்தம் எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும் என்பது நித்தியானந்தரின் அணுகுமுறையாக இருக்கிறது. அதை அவர் ஆன்மிக விஞ்ஞானம் என்கிறார். எப்படி விஞ்ஞானம் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் அனைவருக்கும் பயனளிக்கக் கூடியதாகவும் பின்பற்றக் கூடியதாகவும் இருக்கிறதோ அப்படியே ஆன்மிகமும் இருக்கிறது. இது உங்களுக்குப் புரியாது, இது சரிபட்டுவராது என்று யாரையும் ஒதுக்கித் தள்ள முடியாது.

ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது யார் கூட்டினாலும் வரக்கூடிய ஒரே விடை போலத்தான் ஆன்மிக ஆனந்தமும். அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். ஐரோப்பியன் கூட்டினாலும் அமெரிக்கன் கூட்டினாலும் ஈரான் காரன் கூட்டினாலும் கிடைக்கக் கூடிய ஒரே பதில் போல ஆன்மிகப் பலனும் கிடைக்கவேண்டியது அவசியம். விஞ்ஞானத்தில் தொழில்நுட்பத்தில் ரிஸர்ச் அண்ட் டெவலப்மென்ட் நடப்பதுபோல ஆன்மிகத்திலும் த & ஈ தேவைப்படுகிறது. நம் உணர்வுகளை யாரும் புரிந்து கொள்ளாதது இல்லை இப்போதைய பிரச்னை. நம் உணர்வுகளை நாம் புரிந்து கொள்ளாததுதான் பிரச்னையே.

நான் நைஷ்டீக பிரம்மச்சர்யம் மேற் கொண்டு இங்கு ஆச்சார்யாவாக இருக்கிறேன். தியான வகுப்புகள் எடுக்கிறேன். தியான வகுப்பு எடுப்பவர்களுக்கான வகுப்புகள் எடுக்கிறேன். நான் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை என்னுடைய பெற்றோர், சகோதரி, பெரியம்மா கே.ஆர்.விஜயா, திரைப்படத்துறை நண்பர்கள் நடிகர்கள் சரத், ஸ்ரீமன், நடிகைகள் வினோதினி, மெüனிகா, டைரக்டர் பாலுமகேந்திரா ஆகியோர் நன்றாக அறிவார்கள்.

ஆகவே நான் ஆனந்தமாகத்தான் இருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது வாழும் கலையின் ஓர் அங்கம்.

-தமிழ்மகன்

சரண்யாவாகிய நான்...


"காதல் கவிதை', "நீ வருவாய் என' படத்திலிருந்து சுமார் ஒரு டஜன் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பவர் "காதல்' சரண்யா.

"காதல்' படத்தில் சந்தியாவின் தோழியாக வந்தவர் இப்போது கதாநாயகி ஆகியிருக்கிறார். குழந்தை நட்சத்திரம் டு கதாநாயகி வரையான பயணத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்...


சினிமாவுக்கு வருவதற்கு எல்லாருக்கும் ஏதாவது சந்தர்ப்பம் இருந்திருக்கும்... உங்களுக்கு?

அகத்தியன் சார் இயக்கிய காதல் கவிதை படத்தில் இஷா கோபிகருடன் நடிப்பதற்கு நான்கைந்து சிறுமிகள் தேவைப்படுகிறார்கள் என்று எங்கள் குடும்ப நண்பர் சொன்னார். அப்படித்தான் சினிமாவுக்கு நான் அறிமுகமானேன்.

காதல் படத்தில் முதலில் நீங்கள்தான் நாயகியாகத் தேர்வானீர்களாமே?

ஆமாம். "காதல்' படத்தில் நாயகியாக என்னைத்தான் தேர்வு செய்தார்கள். நான் அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பிறகு சந்தியாவைப் பார்த்ததும் படக்குழுவினர் அவர் அந்த வேடத்துக்கு மிகவும் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்துவிட்டார்கள். படத்தில் முதல் பகுதியில் பள்ளிக்கூட மாணவியாக நடிப்பதற்கு வேண்டுமானால் நான் பொருத்தமாக இருப்பேன். பிற்பகுதியில் மணமானப் பெண்ணாக நடிப்பதற்கு என்னுடைய தோற்றம் சரியாக இருக்காது என்று கூறிவிட்டனர்.

அந்தப் படத்திலேயே கதாநாயகியின் தோழியாக நடிப்பதற்குச் சம்மதித்திருக்கிறீர்கள். எப்படி?

வருத்தம் இல்லாமல் இருக்குமா? அதே படத்தில் ஃப்ரண்ட் வேடம் இருக்கிறது என்று கேட்டபோது அழுகையே வந்துவிட்டது. நல்ல கதை- நல்ல பேனர்... ஏதோ ஒரு வேடத்தில் நடித்தால் போதும் என்ற ஆசையும் இருந்தது. சம்மதித்து மதுரைக்கு ரயிலேறி விட்டோம். தூக்கமே இல்லை. அழுதபடியே ஷூட்டிங் போன முதல் பெண் நானாகத்தான் இருக்கும். படம் நடிக்க ஆரம்பித்ததும் அது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிட்டது.

சந்தியாவும் என் வயது தோழியாக மாறிவிட்டார். செம ஜாலியாக அரட்டை அடித்து கதாநாயகி வேடம் கிடைக்காத துக்கம் முழுக்கவே மறைந்துவிட்டது எனக்கு. படம் வெளியீட்டுக்கு நெருங்க நெருங்க படத்தைப் பற்றி வந்த எதிர்பார்ப்புகள் மறுபடி எனக்குள் ஏமாற்ற உணர்வை உண்டாக்கின. அதுவும் படம் வெளியாகி மகத்தான வெற்றி பெற்றதும் ஒவ்வொருவரும் படத்தைப் பற்றிப் பாராட்ட பாராட்ட எனக்கு மீண்டும் தாளமுடியாத துக்கம்.

இப்போதாவது அந்தத் துக்கத்தில் இருந்து வெளியே வந்து விட்டீர்களா இல்லையா?

"காதல்' திரைப்படம் தெலுங்கிலும் ரிலீஸ் ஆனது. தெலுங்கிலும் வெற்றி. அந்தப் படத்தைப் பார்த்து தெலுங்கு படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் பரத்துடன் நடிக்க முடியாமல் போன ஏக்கம் அங்கு தெலுங்கு பரத்துடன் கதாநாயகியாக நடித்தபோது தீர்ந்தது. இப்போது தமிழில் "திருத்தம்', "இளவட்டம்' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறேன்.

இப்போது ப்ளஸ் டூ முடித்துவிட்டு அஞ்சல் வழியில் பிபிஏ படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இனி முழு மூச்சாக நடிக்க முடியும் என்ற தீவிரம் வந்திருக்கிறது. பரீட்சை லீவில் நடிப்பதற்கும் முழு நேரமாக நடிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நிறைய வேடங்களில் நடிக்க முடியும் என்ற நம்பிக்கையும் அதற்கான நேரம் இருக்கிறது என்ற நிதானமும் மனதில் இருக்கிறது. துக்கமெல்லாம் போயே போச்சு...

என்ன மாதிரி வேடங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

"அம்முவாகிய நான்' படத்தில் பாரதி ஏற்றிருந்த பாத்திரம் துணிச்சலானதாக இருந்தது. அது போன்ற கான்ட்ரோவர்ஸியான வேடங்களை நான் எதிர்பார்க்கிறேன்.

-தமிழ்மகன்

LinkWithin

Blog Widget by LinkWithin