சனி, ஜூலை 08, 2006

சாலை ஓரத்திலே வேலையற்றதுகள்

சிறுகதை

தமிழ்மகன்

"ஒரு ரூபாய் வைத்துக்கொண்டு ஒரு கோடி சம்பாதிப்பது எப்படி?' புத்தகத்தின் கவர்ச்சியான தலைப்பில் ஒரு கணம் மலைத்துப் போனான் அருண்.

அனிச்சையாய் பாக்கெட்டைப் பார்க்க, அக்கா செலவுக்குக் கொடுத்து விட்டுப் போன பணத்தில் இரண்டு ரூபாய் மீதமிருந்தது."தெர் ஃபோர் டூ குரோர்ஸ்' அருண் நூலகத்துக்கு வந்தால், வழக்கமாய் "உடலுறவுச் சிக்கல், குழந்தை பிறக்கவில்லையா?' போன்ற புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு ரகசியமாய் படிப்பான். அல்லது ஆங்கிலப் பத்திரிகையில் வேலை தேடுவான். நூலகம் பலருக்கும் இந்த விதத்தில் பயனாக இருந்தது. சிலர் வெகு நேரமாய் எதாவதொரு பத்திரிகையை வைத்துக் கொண்டு குனிந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் விடும் மெல்லிய குறட்டையை நூலகர் மட்டுமே இனம் கண்டு, "தூங்காதீங்க சார்...'' என்று எழுப்புவார்.

முதன் முறையாக ஒரு ரூபாயில் வாழ்வில் உயர்வடையும் ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்த பிரமிப்பில் அருண் வேகமாகப் படித்துக் கொண்டிருந்தான். லட்சாதிபதியாகவாவது ஆகிட முடியாதா என்ற ஆசை!

அருண் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்த நேரத்தில் நூலகர் ஜன்னலை அடைத்து, லைட்டையும், பேனையும் நிறுத்தி தடுத்தார்.

காலை 8.00 முதல் 11.00 வேலை நேரம் என்று போர்டில் இருந்தாலும் வழக்கத்தில் 10.30-க்கு கதவடைப்புப் பணிகள் தொடங்கிவிடும்.

புத்தகத்தை அப்படியே டேபிளின் மீது போட்டுவிட்டு வந்தால் இரண்டு அபாயங்கள் உண்டு. ஒன்று, மாலையில் முதலில் வந்த வேறு ஒரு வாசகர் கையில் அந்தப் புத்தகம் கிடைக்கப் பெற்று, அவர் கோடீஸ்வரனாகிவிடுவார். அல்லது லைப்ரரியன் புத்தகத்தை எதோ ஒரு புத்தக இடுக்கில் சொருகி வைத்துவிட்டார் என்றால் பிறகு இந்தப் புத்தகத்தைத் தேடி எடுக்க முடியாமல் போகலாம்.

அருண், அதை மறுபடி மாலையில் வந்து படிக்கும் ஆசையில், "என்சைக்ளோபீடியா'வில் ஒளித்து வைத்துவிட்டு வெளியே வந்தான்.

முன்பெல்லாம் ஆப்படி நூலகத்தை மூடிவிடும்போது மாலை வரை நேரத்தைக் கழிப்பதில் பெரிய அவஸ்தை இருந்தது. நித்தியானந்தன் சைக்கிள் கடை வைத்ததிலிருந்து அந்தப் பிரச்சனை இல்லை.

"அதோ போறது யார் தெர்தா?'' என்பான் நித்தி.

"சுருட்டு புடிக்றானே அந்த ஆளா?''

"அட... பச்சப் புடவ..''"

"ஆங்... அமா..''"

"அது யார் தெரிதா?''"

நினவுக்கெட்டியவரை அந்தப் பெண்ணைத் தேடிவிட்டு, "யாரு?'' என்றான் அருண்.

"நம்ப சம்பத் இல்ல..? ஒருவாட்டி கோலி முழுங்கிட்டானே.''"

"ஆமா..."

"என்னா ஆமா.. அவன் தங்கச்சிடா... இப்ப கல்யாணம் ஆயிட்ச்சி.''

"எப்ப?''

"அதாயி ரெண்டு வருஷமாச்சி.''

"குட்டி யானை மாரி இருக்குது?''

"மாக்கெட்டுக்கு போவுது... இப்ப வரும் பாரு...''சம்பத்தின் தங்கச்சி வருவதை எதிர்பார்த்திருப்பது ஒரு வேலை. அடுத்து, அருண், "சம்பத் இப்ப என்ன பண்றான்?'' என்று கேட்டான்.

பேச்சின் நடுவே சூடாக டீ. அதுவும் இன்றைக்கு யார் கணக்கில் டீ என்பதற்கு பெயர் எழுதி சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அருண் பெயர் வந்தாலும் நித்தியானந்தம்தான் கொடுப்பான். அப்புறம் தந்துவிடுவதாகப் பேச்சு!

அதன்பிறகு மதிய சாப்பாட்டுக்காக நித்தியானந்த வீட்டுக்குப் போவான். அவன் சாப்பிட்டுவிட்டு வரும்வரை கடையை அருண் பார்த்துக் கொள்வான். தெருவில் சளைக்காமல் பெண்கள் போய்க் கொண்டிருந்தார்கள். எதிர்த்த வீட்டில் ஒரு பெண் ஜன்னலோரமாய் அடிக்கடி வந்து விட்டுப் போவாள். இடையே வாடகை சைக்கிள் கேட்டு வருபவனின் பெயரையும், நேரத்தையும் குறித்துக்கொண்டு, சைக்கிள் விட்டவனிடம் காசை வசூலிப்பதும், காற்றடிக்கச் சொன்னால் "ஆளில்லை' என்பதுமாக நேரம் கழிய நித்தியானந்தன் வந்து விடுவான்.

இன்று மணி இரண்டாகியும் வரவில்லை.

டீக்கடை குமார், "நித்தி, இன்னுமா வரலை?'' என்றார்.

"வரலை.''

"நீங்க வேணும்னா சாப்பிட்டு வாங்க. நான் பாத்துக்றேன்.''

"பரவால்ல... பசி எடுக்கலை..''

"இண்டர்வியூக்கு போனீங்களே, என்ன ஆச்சி?'' என்றார் குமார்."

"எந்த இண்டர்வியூ?''"

"போன வாரம் டைப் அடிச்சு எடுத்துப் போனீங்களே?''"

"அதுவா? மூவாயிரம் ரூபா டெபாசிட் பண்ணணுமாம்.''"

"எவ்ளோ தரேன்றான்?''

"முன்னூர் ரூபா தர்றேன்றானுங்க. பஸ் செலவுக்கே சரியா பூடும் போலருக்குது. அதுவும் எங்கே? திருவான்மியூர்ல, தண்டையார் பேட்டைலதான் எனக்கு வர்ற வேலைலாம். பக்கத்திலனாக்கூட பரவால்ல...''

"ப்ச்'' என்றார் குமார்.

"ஒண்ணு செய்றியா சொல்லு.''

"ம்..''

"ஒரு மூவாயிரம் ரூபா தோது பண்ணிக்கோ. என்னை மாதிரி ஒரு டீக்கடை போட்டுக்கோ... என்னா சொல்றே?''

அருண் யோசித்தான்.

மூவாயிரம் இருந்தால் மூவாயிரம் கோடி சம்பாதிக்கலாம் என்று சொல்ல நினைத்தான்.

"பார்க்கலாம்'' என்றான்.

"வேணும்னா சொல்லு... "பாலாஜி லக்கி சென்டர்' இருக்குதில்ல...''

"பஸ் ஸ்டாண்டிலயா?''

"நல்ல இடம்.''ஒருவன் `கிளிங்' என்று சைக்கிள் பெல்லை அடித்து அழைத்தான்.

"சைக்கிள் வேணும்'' என்றான். அருணுக்கு ஆள் தெரியவில்லை என்பதுகூட பிரச்சினையாய் இல்லை. இவ்வளவு அலட்சியமாய் சைக்கிள் கேட்டதுதான் எரிச்சலாய் இருந்தது.

"ஆள் தெரியாது.''

"எதிர் வீடு'' என்றான் அவன்.

"எதிர் வீடா? உன்னை பாத்ததே இல்லையே?''

"ஊர்ல இருந்து வந்திருக்கேன். எங்க மாமா வீடு இது...''

"யாரையாவது சொல்லச் சொல்லு.''

அவன் ஜன்னலருகே போய், "மாமி, மாமி'' என்று குரல் கொடுக்க, அவன் மாமியும், அதன் பின்னால் அந்தப் பெண்ணும் ஜன்னலில் தோன்றினர். மாமி, அருணை, "எம்பா சைக்கிள்'' என்று அறிமுகப்படுத்திக் கொண்டாள். அருண், அவனிடம் பெயரை விசாரித்துக் கொண்டு, "ரெண்டாம் நம்பர் சைக்கிள் எடுத்துக்க. நல்லா போவும்'' என்று சிபாரிசு பண்ணினான்.

ஜன்னல் பெண், சண்முகநாதன் சைக்கிளில் எறிப் போகிற அழகைப் பார்த்துவிட்டுத்தான் மறைந்தாள். நித்தியானந்தம் உண்ட மயக்கத்தில் அப்படியே தூங்கி விட்டதாகச் சொல்லி
"சாரி'' என்றான். என்ன சாரி? அருண் பொறுமையாகக் கிளம்பி வீட்டுக்குப் போனான். வீட்டுக்குப் போவதில் அம்மா மட்டுமே சற்று ஆறுதலான விஷயம். அருணின் அம்மா, "வேளா வேளைக்கு ஒழுங்கா சாப்பிட்டா தானே?'' என்று வருந்தினாள்."பெரிய ஷிப்ட்டு வேலைக்குப் போய் கழட்டிட்டு வர்றானே.. சோத்த போட்றி..'' என்றார் அருண் அப்பா வஞ்சப் புகழ்ச்சியாய்.

தினம், தினம்தான் என்றாலும் சற்றே மனஸ்தாபம் அதிகரித்து உடனடியாய் சாப்பிட உட்காராமல், காலையில் துவைத்துப் போட்டு விட்டுப் போன சர்ட்டையும், பேண்ட்டையும் மடித்து வைக்க ஆரம்பித்தான். "சைக்கிள் கடைல வேலை செய்யறதுக்கா படிக்க வெச்சேன்? உன்னாட்டம் புள்ளைல்லாம் இப்பிடியா இருக்குது? சுரணை இருக்கறவன்தான்டா சுயமா சம்பாதிச்சு வாழணும்னு நினைப்பான்.''அருணின் அம்மா இடையில் குறுக்கிட்டு, "வேலைதான் கிடைக்கலையே, சும்மா திட்டிக்கினு இருந்தா என்னா பண்ணுவான்'' என்று ஆதரவு காட்டினார். மறுபடி சைக்கிள் கடை.

"லைப்ரரிக்கு கிளம்பறோம்டா.. ஐரு ரூபாய் இருந்தா ஒரு கோடி சம்பாதிக்கலாம்னு ஒரு புக் படிச்சுக் கிட்டிருக்கேன்.. என்னதான் சொல்றான்னு பார்த்துட்டு வந்திடறேன்... கொஞ்சம் சைக்கிள் தர்றியா?'' என்றான் அருண்.

"உனக்கு கோடீஸ்வரன் ஆகணும் அவ்ளோதானே?''தனுஷ் படத்துக்கு டிக்கெட் கேட்ட மாதிரி சாதாரணமா சொன்னான் நித்தியானந்தன். "என்கூட ஐரு தபா திருப்பதி வரைக்கும் வர்றியா பொட்டலம் வாங்கித் தர்றேன். சும்மா இந்தக் கைக்கு அந்தக் கை... ஒரு மாசத்தில லட்சாதிபதி ஆகிடலாம். சாமர்த்தியம் இருந்தா தீபாவளிக்குள்ள கோடீஸ்வரனாய்டுவே..''

"பொட்டலம்னா?''

"கஞ்சா..."

"எவ்ளோ செலவாகும்?'' என்றான் அருண்குமார்.

சிரிப்பொலி

"சோடா உடைத்துக் கொண்டு வாடா'' என்றால் சோடா பாட்டிலை உடைத்துக் கொண்டு வந்து
கொடுக்கும் வேலைக்காரன். "சபாபதி' படத்தின் வேலைக்காரன் காளி என். ரத்தினம் நம்மை
இப்படித்தான் சிரிக்க வைத்தார். "எதையுமே தட்டில் கொண்டு வந்து கொடுக்க வேண்டும்'
என்றால் அவர் செருப்பைத் தட்டில் கொண்டு வந்து கொடுப்பார். மக்கள் ஒவ்வொரு தரம்
பார்க்கும்போதும் அவருடைய மூடத்தனம் குறித்துச் சிரித்தார்கள். அவனுக்கு ஒன்றுமே
தெரியவில்லையே என்பதில் அப்படியொரு குஷி. இப்படிப்பட்ட ஒருவன் எந்தத் தைரியத்தில்
வேலைக்கு வந்தான் என்றோ, அவனை எதற்காக வேலையில் வைத்திருக்கிறார்கள் என்றோ
யாரும் கேட்பதில்லை. மிகைப்படுத்திக் காட்டப்படுவதனால்தான் ஒரு இயல்பான சம்பவம்
நகைச்சுவையாகிறது.

பேசும் சினிமா காலத்திலோ, அதற்கு முன்பிருந்த நாடகங்களிலோ இப்படிச் சிரிக்க
வைப்பதற்காக நகைச்சுவைப் பாத்திரங்கள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றன. ஒருவன்
சராசரிக்கும் கீழே இருப்பது, உலகம் புரியாதவனாக இருப்பது நகைச்சுவையின் அடிப்படை.
தங்கள் அப்பாவித்தனத்தால் எல்லோரும் பார்க்கும் விதமாக இல்லாமல் புதுவிதமான
கோணத்தில் உலகத்தை அவர்கள் பார்ப்பதும் வேடிக்கைக்கு வழி வகுத்தது. "ஞானப்
பழத்துக்குக் கொட்டை இருக்குமா?'' என்ற செந்திலின் சந்தேகமும் அதற்கு கவுண்டமணியின்
ரியாக்ஷனும் இந்த வகைப்பட்டதுதான்.

மாறாக புத்திசாலித்தனமான பேச்சால், சாதுர்யத்தால் பிரமிக்க வைப்பதாலும் சிரிக்க வைக்க
முடியும் என்றவர் என்.எஸ்.கிருஷ்ணன்.

40 களில் இவருக்கு கதாநாயக மவுசு. தனியாக இவர் உருவாக்கி வைத்திருந்த காமெடி
ட்ராக்குகளைத் திரைத்துறையினர் தங்கள் படங்களில் பயன்படுத்திக் கொண்டனர். "நவீன
விக்கிரமாதித்தன்' போன்ற இவருடைய ட்ராக்குகளுக்கு மெயின் கதையைவிட கிராக்கி
இருந்தது. பிராமணர்கள் சாப்பிடும் இடம் என்று அந்தக் காலத்தில் பிரிவினை இருந்தது. அந்த
இடத்துக்கு வரும் என்.எஸ்.கே. பலகையில் எழுதியிருப்பதைப் படிப்பார். எப்படி?
"பிராமணர் "கள்' சாப்பிடும் இடம். ஓஹோ இது அவங்க "கள்' சாப்பிட்ற இடமா?' என்பார்.
பட்டனைத் தட்டினால் இட்லியும் காபியும் பக்கத்தில் வருகிற விஞ்ஞானத்தை வளர்ப்பதைப்
பற்றிப் பாடுவார். நாட்டைச் சீர்திருத்தும் "நல்ல தம்பி'யாக அவதாரம் எடுப்பார்.

எம்.ஆர்.ராதாவுடையது துணிச்சல் காமெடி என்றும் சொல்லலாம். எம்.ஜி.ஆர். டாக்டராக நடித்த
படம். ஒரு கிராமத்துக்கு வந்து வழக்கம்போல் சேவை செய்வார். மக்கள் எல்லாம் அவரைப் பு
கழ்வார்கள். "போனவாரம் ஆற்றுவெள்ளத்தில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றியவர்
இவர்தான். கள்ளக் கடத்தல் காரர்களைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தவர் இவர்தான்''
என்ற ரேன்ஜுக்குப் பாராட்டுவார்கள். எம்.ஆர்.ராதா கேட்பார் : "டாக்டர் வேலையையும்
செய்றார் இல்ல?'' "பாகப் பிரிவினை' படத்தில் இவரை நம்பி பேங்கில் பணம் எடுத்துச் சிக்கிக்
கொள்ளும் நம்பியாரை "ஏண்டா பயப்பட்றே? ஜெயில்ல ஏ கிளாஸ் வாங்கித்தரேன். ஜாலியா
இரு போ'' என்பார். பிரச்னையை புதிய கோணத்தில் பார்க்கிற பாங்கு அது. ஜெயிலுக்குப்
போவதால் ஏற்படும் அவமானம், குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிடும் என்ற புலம்பல்
எல்லாம் போய் ஜெயிலில் வசதியாக இருப்பதைப் பற்றி யோசிப்பதில் ஒரு அதிர்ச்சியும் நி
யாயமும் கலந்த நகைச்சுவையை எதிர் கொள்கிறோம். தன்னைச் சாடிக் கொள்வதன் மூலம்
சமூகத்தைச் சாடும் வேடிக்கை அது.

மிடுக்குத்தனம் மிக்க கோமாளித்தனம் என்றால் பாலையா ஞாபகத்துக்கு வருவார். "எல்லோரும்
சென்று ஓய்வெடுங்கள் .. நானும் எடுக்க வேண்டும்'' என்பது பாலையா பன்ச். என்னுடைய
யூகத்தில் "திருவிளையாடல்' வசனப் பக்கத்தில் எல்லோரும் சென்று ஓய்வெடுங்கள் என்றுதான்
இருந்திருக்க வேண்டும். நானும் எடுக்க வேண்டும் என்பது பாலையாவின்
கைங்கர்யமாகத்தான் இருக்கும். "தில்லானா மோகனாம்பாள்' ரயில் காட்சியில் சிவாஜியின்
சைகையைப் புரிந்து கொண்டு, பாலையா செய்யும் சேட்டைகள்.. உலகில் ரயில்கள்
இருக்கும்வரை மறக்க முடியாவை. பொய் மிடுக்கு இவருடைய ஸ்பெஷாலிட்டி. "காதலிக்க
நேரமில்லை'யில் "அசோக் உங்க பையனா என்று கேட்பதற்கு பதிலாக அசோகர் உங்க
மகர்ரா?'' என்பது அதற்கு நல்ல உதாரணம்.

உச்சரிப்பின் மூலம் தமிழ் விளையாட்டுகள் மூலம் சிரிக்க வைத்தவர் டணால் தங்கவேலு.
அலுங்காமல் குலுங்காமல் காமெடி செய்வதில் சமர்த்தர். கானா.முனா. கட்சி என்று நடத்துவார்.
என்னடாவென்றால் காதலர்கள் முன்னேற்ற கட்சி என்று விளக்குவார். அவருடைய மன்னார்
அண்ட் கம்பெனி} எழுத்தாளர் பைரவன் காமெடி சாகாவரம் பெற்றவவை. அங்க சேட்டைகள்
இல்லாமல் முகபாவம் மற்றும் உச்சரிப்பின் மூலமாகவே அந்த வரத்தைப் பெற்றதுதான்
அவருடைய சிறப்பு.

உடல் சேட்டைகளும் குரலில் ஏற்ற இறக்கங்களும் கொண்டு நகைச்சுவை செய்பவர்களில் சந்
திரபாபு, நாகேஷ் ஆகியோர் முக்கியத்துவம் பெறுகிறார்கள். அவர்களின் உடல்வாகும் அதற்கு
ஒத்துழைத்தது. இவர்களிடம் இருந்த இன்னொரு முக்கிய அம்சம் தத்துவார்த்தமான
அணுகுமுறை. சந்திரபாபுவின் "ஏழை படும் பாடு', கவலை இல்லாத மனிதன் , நாகேஷின் "நீ
ர்க்குமிழி' போன்றவை நகைச்சுவையைத் தத்துவார்த்தமாகப் பயன்படுத்தியது எதிர்பாராத
முரண். இந்த இருவரிடமும் இருந்த இன்னொரு ஒற்றுமை உடம்பை வில்லாக வளைத்து ஆடும்
நடனத்திறமை.

இரட்டை அர்த்த வசனங்களுக்குப் பிள்ளையார் சுழி போட்டது சுருளிராஜன். பாத்திரங்கள்
பழுது பார்ப்பவராகத் தோன்றும்போது "எவ்வளோ பெரிய ஓட்டை. இதை அடைக்கறதுக்கு
நம்மமாள முடியாதும்மா'' என்பார் சுருளி. இந்தப் பாணியை மிக அதிகமாகப் பயன்படுத்துபவர்
"வெண்ணிற ஆடை' மூர்த்தி. "பாப்பா... பர்ர்ர்... வாழைப்பழம்னா உனக்கு ரொம்ப புடிக்குமா?,
எம்மா.. வெத்தலை கொஞ்சம் கொடேன்.. சுண்ணாம்பத் தடவி சுவைச்சுப் பாக்கிறேன்''-
இதுதான் மூர்த்தி பிராண்ட்.

கவுண்டமணி, செந்தில் நகைச்சுவை லார்ல்- அண்ட் ஹார்டியை நினைவு படுத்தினாலும்
இறங்கி வந்து காமெடி செய்தவர்கள் என்பதால் அடித்தட்டு மக்கள் வரை இடம்
இடம்பிடித்தவர்கள். பிணம் எரிப்பவன், சாவு மேளம் அடிப்பவன், சாக்கடை அள்ளுபவன்,
சவரம் செய்பவன், சாணை பிடிப்பவன், சாராயம் காய்ச்சுபவன், திருடன், பிக்பாக்கெட்,
சமையல்காரன் என்று இவர்களுக்கு காமெடியோடு இணைந்து ஒரு தொழில் இருந்தது. விளிம்பு
நிலை மனிதர்களின் பிரச்சனையைச் சொல்லுவதையும் இதில் அடிசரடாகப் பார்க்கமுடியும். ஒரு
படத்தில் பிராமணர் வேடமணிந்த ஒருவர் "சாவுக்கு மேளம் அடிப்பதெல்லாம் ஒரு வேலையா?''
என்பார். கவுண்டமணி, "அவ்வளவு ஈஸியான வேலையை நீங்க கொஞ்ச நாள் செய்யுங்களேன்
சாமீ'' என்பார். தொழிலில் உள்ள சாதீய அடையாளத்தைச் சுட்டும் வேலையை
நகைச்சுவையால் வெளிப்படுத்த முடிந்தது. பழமொழிகளை கிண்டல் அடிப்பது, சடங்குகளைக்
கேலிக்குள்ளாக்குவது போன்றவை இவர்களின் நகைச்சுவையில் அதிகம் வெளிப்பட்டது.

இதன் உடன் விளைவாக ஒருவர் அவமானப்படுத்தப்படுவதும் தன்னைத்தானே அவமான
ப்படுத்திக் கொள்வதும் அதிகரித்ததையும் குறிப்பிட வேண்டும். "இருட்டல பார்க்கறதுக்கு
பன்னி மாதிரியே இருந்தாம்பா அதான் சுட்டுட்டேன்'' என செந்திலைச் சுட்டதற்கு காரணம்
சொல்லப்பட்டது ஒரு உதாரணம்.

வடிவேலு, விவேக் காலகட்டம் இது. வடிவேலுவுக்கு மதுரை வட்டார வழக்கு தமிழ் நடையும்
வெற்றுச் சவடால் போக்கும் கைவந்த கலையாக இருக்கிறது.
சொல்லப் போனால் தமிழ் நகைச்சுவை பாரம்பர்யத்தின் அனைத்து பாணிகளும் இவர்கள்
இருவரிடத்திலும் பங்கிடப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. என்.எஸ்.கே., எம்.ஆர்.ராதா, சிவாஜி
ஆகியோரின் இமிட்டேஷன் இவருடைய நகைச்சுவைக்குப் பலம் சேர்க்கிறது. இருநூறாவது
படத்துக்குப் பிறகு சிவாஜி பல படங்களில் மூக்கடைப்பாகப் பேசியதும் `பட்டாக்கத்தி
பைரவ'னாகச் சிறுத்தையோடு ஊர் சுற்றுவதும் `லாரி டிரைவர் ராஜா கண்ணு'வாக கோட்
அணிந்து லாரி ஓட்டுவதும் இவருடைய "பாராடப்பிங்' வகை. சடங்கு சம்பிரதாயங்கள், அந்த
வார டி.வி. நிகழ்ச்சிகள், நாட்டு நடப்புகள் எதையும் விட்டு வைப்பதில்லை இவர்.

எம்.ஜி.ஆர். பாடல்களைப் பாடுவதும் கதாநாயகர்களுக்கு நிகராக பாடுவதும் ஆடுவதும்
வடிவேலுவின் சிறப்பு. கதாநாயகர்கள் சீரியஸôக செய்வதை கேலியாக செய்வது இவருடைய
பாணி. சொல்லப்போனால் எல்லா ஹீரோக்களின் அடிதடிகளையும் கேள்விக் குறியாக்கிவிடுகி
றார் ஒரு கைப்பிள்ளை. `நாடோடி மன்னன்', `உத்தமபுத்திர'னின் அங்கதச் சித்திரமாக இம்சை
அரசன் இருந்தான். உலக ஹீரோயிஸத்தையே பகடி செய்யும் வடிவேலுவின் பாணி அவர்
ரத்தத்தில் ஊறிய வெளிப்பாடாக இருக்கிறது. அதனால்தான் அப்படி நாம் செய்கிறோம்
என்பதைக்கூட அறியாமலேயே அவரால் புகுந்து விளையாட முடிகிறது.

இதுதவிர டி.ஆர்.ராமசந்திரன், தேங்காய் சீனிவாசன், ஜனகராஜ், ஒய்.ஜி.மகேந்திரா, கர்ணாஸ், மதன்பாப்,
சார்லி, தாமு, வையாபுரி என விடுபடமுடியாதவர்களைத் தனியாக ஒரு பட்டியல் போடலாம்.


இவர்கள் தவிர பெண்களில் டி.ஏ. மதுரம், சரோஜா, மனோரமா, கோவை சரளா என காமெடியில்
சிகரம் தொட்டவர்கள் உள்ளனர். பெண்களுக்கு நகைச்சுவை முக்கியத்துவம் உள்ள வேடங்கள்
பல இருந்தன. இருந்தாலும் இதில் பலர் ஆண் காமெடியனுக்கு மனைவியாகவோ,
காதலியாகவோ நடிப்பதற்காகத் தேவைப்பட்டவர்கள்தான்.

கதாநாயகர்களாக இருந்தவர்கள் பலரும் காமெடி செய்ய ஆசைப்பட்டிருக்கிறார்கள். எம்.
ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, ரஜினி, கமல், விஜய் என பலருக்கும் காமெடி படங்கள் வாய்த்தன.

"இது காமெடி படம்' என்று அறிவித்தும் சில வேளையில் சீரியஸ் படம் என்ற
போர்வையிலும்கூட அது நடந்தது.

இந்த நீண்ட காமெடி பாரம்பர்யத்தின் விளைவுதான் தமிழ் நாட்டில் இத்தனை காமெடி சான
ல்களும் காமெடி நிகழ்ச்சிகளும் இருப்பதற்குக் காரணம். எழுபத்தைந்து ஆண்டுகாலமாக
சற்றுமே தோய்வில்லாத நகைச்சுவை வாரிசுகள் இங்கே இருந்தார்கள். சோகத்தை மறக்கவோ,
சந்தோஷத்தை இரட்டிப்பாக்கவோ காமெடி தேவைபட்டுக் கொண்டேதான் இருக்கிறது.

LinkWithin

Blog Widget by LinkWithin