திங்கள், அக்டோபர் 06, 2008

திரைக்குப் பின்னே- 1

உயிரோசையில் என் சினிமா அனுபவ தொடர் வேலையாகிறது. அது இங்கே...

நடிகர் விஜய்யின் அப்பாவிடம் கேட்ட மறக்க முடியாத கேள்வி!




நான் சினிமா நிருபராகப் பணியாற்றிய போது கிடைத்த அனுபவங்கள் சுவையானவை.

தினமணியில் திரு. சம்பந்தம் ஆசிரியராக இருந்த நேரம். நடிகர் விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்..சந்திரசேகரன் (அப்போது எஸ்.. சந்திரசேகர்) ஆசிரியரைப் பார்க்க வந்திருந்தார்.

விஜய்யின் மூன்று படங்கள் ஒரே நேரத்தில் வெள்ளி விழா கொண்டாடிய நேரம். `பூவே உனக்காக', `ப்ரியமுடன்', `ஒன்ஸ்மோர்' என்று படங்களின் வெற்றிப் பட்டியல் வளர்ந்து கொண்டிருந்தது. அந்தச் சரியான சந்தர்ப்பத்தில் மகனுக்குத் திருமணம் வைத்திருந்தார். திருமணத்துக்கு ஆசிரியரை வரவேற்கத்தான் அவர் வந்திருந்தார்.

``பையனுக்கு கல்யாணம் வைத்திருக்கிறேன்.அவசியம் நீங்கள் வந்திருந்து வாழ்த்த வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார். ``இவர் எங்கள் சினிமா எடிட்டர். இவர் வருவார். எனக்கு நேரம் இருக்குமானு தெரியலை'' என்று என்னைக் கைகாட்டினார்.

பிறகு பொதுவாக சினிமா பற்றி பேசினார்கள். எடிட்டர் ஒரு முறை சிவாஜிகணேசனைச் சந்தித்திக்க நேர்ந்ததைப் பற்றிப் பேசினார். கிளம்பும்போது சிவாஜி ``தீர்த்தம் சாப்பிட்டுட்டுப் போறீங்களா'' என்றாராம்.




அவரும் சிவாஜிகணேசன் பற்றி ஏதோ நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

கிளம்பும்போது எடிட்டர் மறக்காமல் ஒரு கேள்வி கேட்டார். அந்தக் கேள்வியை எஸ்..சந்திரசேகரன் ஜென்மத்துக்கும் மறந்திருக்க மாட்டார், அவருடைய ஞாபக சக்தி வலுவானதாக இருந்தால்.

எடிட்டர் கேட்ட கேள்வி: ``பையன் என்ன பண்றாரூனு சொல்லவேயில்லையே''



சன் டி.வி. நடிகைகளும் நானும்!


சன் டி.வி. ஆரம்பித்த நேரம். சன் டி.வி. பார்க்க வேண்டுமானால் அதற்கான ஆண்டெனா ஒன்றும் வாங்க வேண்டும். அதன் விலை 12 ஆயிரம். அப்போது டி.வி.யின் விலை சுமார் 4 ஆயிரம் சன் டி.வி. பார்க்க ஆன்டெனா வாங்க 12 ஆயிரம் என்றால் யார் டி.வி. வாங்குவார்கள்? சன் டி.வி. பரவலாக அறியப்படாமலேயே இருந்தது. அந்த நேரத்தில் சன் டி.வி.க்கு பேட்டி கொடுப்பதென்றால் யாரும் சம்மதிக்கவே மாட்டார்கள். நான் அப்போது வண்ணத்திரையில் பொறுப்பாசிரியராக இருந்தேன். என்னை அணுகி நடிகைகளிடம் அனுமதி வாங்கித் தருமாறு டி.வி.யில் நிகழ்ச்சி தயாரிப்பவர்கள் கேட்பார்கள். நானும் அப்போது வளர்ந்து வரும் நிலையில் இருந்த சில நடிகைகளிடம் சன் டி.விக்குப் பேட்டியளிக்குமாறு கேட்டுக் கொண்டேன். அப்போது பல நடிகைகள் என்னிடம் வைத்த கோரிக்கை: ``வண்ணத்திரையிலும் அந்தப் பேட்டியைப் பிரசுரிப்பீர்களா?''

வண்ணத்திரையில் பேட்டி வெளியிட்டால்தான் சன் டி.வி.க்கு பேட்டி தருவேன் என்றவர்களும் உண்டு.



என் ஞாபகம் சரியாக இருந்தால் செண்பகா, வினோதினி, யுவராணி, சொர்ணா, ரேஷ்மா, மடிப்பு அம்சா உள்ளிட்ட பலர் அப்படிக் கேட்டிருக்கிறார்கள்.

தினமணிக்குப் பிறகு மீண்டும் ஒரு நடை வண்ணத்திரையில் பணியாற்றப் போனேன். வண்ணத்திரையை விளம்பரப்படுத்த சன் டி.வியில் ஏற்பாடு செய்ய வேண்டும் என இதழின் நிர்வாக இயக்குநர் தயாநிதிமாறனிடம் கோரிக்கை மேல் கோரிக்கையாக வைத்தேன். பலமுறை நோட் எழுதினேன். ஒருமுறை அவர் தோள்மீது கை போட்டபடி தெளிவாகச் சொன்னார். ``வண்ணத்திரை விளம்பரமெல்லாம் சன் டி.வி.யில போட்டா நல்லா இருக்காது தமிழ்''

உண்மைதான். வண்ணத்திரையில் பேட்டி போட்டால் சன் டி.வி.க்கு பேட்டி தருவேன் என்றவர்களில் முக்கால் வாசிப்பேர் சன் டி.வி. சீரியல்களில் பத்தோடு பதினொன்றாக நடிக்கப் போய்விட்டதை நானும் புரிந்து கொண்டேன்.




அவதாரங்களின் பின்னால்...

திரைத்துறையில் பல அரிய சாதனைகளை நிகழ்த்திவிட்டு மிக அமைதியாக இருப்பவர்களில் ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் ஒருவர். அவர் படத்தின் விளம்பரங்கள் தொடர்ந்து பத்திரிகைகளில் வெளியாகும். ஆனால் அவர் படம் எந்தப் பத்திரிகையிலும் வெளியானதில்லை. இதுவரை பலநூறு படங்களை விநியோகித்தவர். பல திரைப்படங்களைத் தயாரித்தவர். சசியை இயக்குநராக அறிமுகப்படுத்திய "ரோஜாக்கூட்டம்', விஜயகாந்தின் மார்க்கெட்டை உயர்த்திய "வானத்தைப் போல', "ரமணா', ஷங்கர், சுஜாதா, விக்ரம் கூட்டணியில் தயாரான "அந்நியன்', கமலின் "தசாவதாரம்' உள்ளிட்ட பல படங்கள் உலக அளவில் பிரபலம். ஆனால் இவர் எப்படியிருப்பார் என்று யாருக்கும் தெரியாது. "வானத்தைப் போல' திரைப்படம் ஜனாதிபதி விருது பெற்றது. அப்போதும்கூட இவர் சார்பாக இவருடைய தம்பிதான் அந்த விருதைப் பெற்றுக் கொண்டார். அவ்வளவு ஏன் ஜாக்கிசானின் நெருங்கிய நண்பர் இவர். அவருடைய ஆரம்பக்கால திரைப்படங்களில் இருந்து இந்திய வெளியீட்டு உரிமையை வாங்கித் திரையிட்டு வருகிறார். இவருடைய அழைப்பை ஏற்றுத்தான் சென்னையில் நடைபெற்ற தசாவதார பாடல் கேசட் வெளியீட்டு விழாவுக்கு அவர் வந்திருந்தார். அந்த விழா மேடையில்கூட அவர் இடம் பெறவில்லை. ஏன் விழாவுக்கேகூட வந்தாரா என்று தெரியவில்லை.



திரைப்படங்கள் தயாரிப்பது பெயருக்காகவும் புகழுக்காகவும்தானே? அது இரண்டையும் இப்படி உதறித் தள்ளுகிறாரே என்று இவரைப் பார்க்கும்போதெல்லாம் ஆச்சர்யப்பட்டுக் கேட்பேன்.

"படம் எடுப்பது நம் வேலை, அவ்வளவுதான்'' என்பார்.

சரி சினிமா எடுத்து ஆடம்பரமாக வாழ்வதில் ஆர்வம் இருக்குமா என்றால் அதுவும் இல்லை. மிக எளிமையான உடை. சாதாரண டீ சர்ட். சாதாரண பேண்ட். கைகளில் மோதிரங்கள் மின்னாது. இவ்வளவு ஏன் அவர் திருமணமும் செய்து கொள்ளவில்லை. பகட்டாகச் சுற்றித் திரிவதும்கூட இல்லை. பெரும்பாலும் பச்சை கேரட்டும் கறிவேப்பிலையும் காலை ஆகாரம்.

ஒருமுறை அவரும் நானும் வடபழனி சரவணபவன் ஓட்டலுக்குச் சென்றோம். காலை நேரம் பொங்கலும் காபியும் சாப்பிடுவதாக உத்தேசம். எங்களுக்கு பரிமாறுவதற்காக வந்த ஓட்டல் ஊழியர், வணக்கம் சார் என்றார் ஆஸ்கார் ரவியைப் பார்த்து. வணக்கமும் பொங்கலும் சொல்லி அனுப்பிவிட்டு பதற்றத்தோடு என்னிடம் கேட்டார்: "அவருக்கு என்னை எப்படித் தெரிந்தது?.. விசாரித்துச் சொல்லுங்களேன்'' என்று கேட்டுக் கொண்டார்.

காபி வைக்கப்பட்டதும் சாதாரணமாக விசாரித்தேன். இவரை உங்களுக்குத் தெரியுமா?

சர்வர் "தெரியுமே'' என்றார்.

"எப்படி?''

"டைரக்டர் சசி சாரோட கார் ஓட்டிக்கிட்டு வருவாரே?'' என்றார்.

சர்வர் போனதும் ரவி நிதானமாக விவரித்தார். "ரோஜாகூட்டம் நேரத்தில நானும் சசியும் அப்பப்ப இங்க சாப்பட வருவோம். நான் டிரைவர் வெச்சுக்கிறதில்லை. எப்பவும் நான்தான் ஓட்டிக்கிட்டு வருவேன். சசியோட டிரைவர்னு நினைச்சுட்டார் போலருக்கு'' என்றார்.
பலகோடிகள் போட்டு அவர் தயாரிக்கும் படங்களைவிட பிரமிப்பாக இருந்தது.

LinkWithin

Blog Widget by LinkWithin