வெள்ளி, ஆகஸ்ட் 08, 2008

அடுத்த பக்கம் பார்க்க

பாவம்... இன்னும் சொல்லவில்லை. சொன்னால் இடிந்து போகும். வந்ததிலிருந்து
தவித்துக் கொண்டிருக்கிறது. முப்பது முத்தம் கணக்காயிருக்கிறது. "வீணையடி
நீ எனக்கு'' என்று பாட்டு பாடுகிறது.

`ஆடி மாதம். ஒரு மாத அஞ்ஞாத வாசம். உன்னையும் என்னையும் பிரித்து இன்றோடு
முப்பதாறு நாட்கள். உன்னைப் போல் நானும் கணக்கு வைத்திருக்கிறேன்
கண்ணா... நீ நேற்று வந்திருக்க வேண்டும். முப்பத்தாறோடு இன்னொரு மூன்று
நாள்களைக் கூட்டிக்கொள்.'
தாழ்வாரத்தில் இருந்து பார்க்கிறபோது அது படித்துக் கொண்டிருப்பது
தெரிகிறது. பாவம், வெகுநேரமாகப் படித்துக் கொண்டிருப்பது மாதிரி பாசாங்கு
செய்து கொண்டிருக்கிறது.' செண்பகத்துக்கு தன் கணவனுக்கு இன்னும் சற்று
நேரத்தில் தரப்போகிற ஏமாற்றத்தை நினைத்து கொஞ்சம் சிரிப்பாகவும்
இருந்தது.
செண்பகம் மாட்டுத் தொழுவத்தில் எரிந்து கொண்டிருந்த விளக்கை
அணைத்துவிட்டு, புழக்கடை கதவு பூட்டப்பட்டு விட்டதா? என்று பார்த்தாள்.
வழக்கமாக இதையெல்லாம் அவள் பார்ப்பதில்லை. செண்பகத்தின் அம்மா பார்த்துக்
கொள்கிற வேலைகள். நேரம் கடத்துவதற்காக இதையெல்லாம் செண்பகம் செய்து
கொண்டிருந்தாள். வழக்கமாகக் காலையில் தேய்க்கிற பாத்திரங்களையும்,
எடுத்துப் போட்டு இப்போதே தேய்த்தாகிவிட்டது.
கட்டிலறைக்குப் போகாமல் இருக்க இன்னும் ஏதேனும் வேலைகள் இருக்குமா?
என்றும் பார்த்தாள். அது மூடிதான் இருந்தது.
ஏற்கனவே, அவள் அம்மாவும் அப்பாவும் தூங்கியாயிற்று.
ஒன்பதாகிவிட்டது.
"தான் மட்டும்தான் இப்போது ஊரில் விழித்துக் கொண்டிருப்பவளோ'
என்று கூட தோன்றியது.
மெல்ல கட்டில் இருந்த அறைப் பக்கம் வந்து நின்றாள்.
சந்திரன் காத்திருந்தவன் மாதிரி நிமிர்ந்தான். "முடிஞ்சுதா?... இன்னும்
வேலை பாக்கியிருக்கா?'' என்றான்.
செண்பகம் இன்னமும் வாசல் படியைப் பிடித்துக் கொண்டே நின்றாள்.
"நீ
இன்னும் தூங்கலையா?'' என்றாள். அதற்குள் அவளுக்குச் சிரிப்பு வந்தது.
சந்திரன், "விளையாட்றாயா?'' என்றான்.
"இல்லப்பா... நிஜமாதான். நீ ஏன் தூங்கல?''
கொஞ்ச நேரம் பார்த்தான். "ஏன் தூங்கலையா? இங்க வா சொல்றேன்''
என்று எழுந்தான்.
இன்னும் சொல்ல முடியவில்லை. சந்திரன் எழுந்து வந்து பலாத்காரமாய்த்
தூக்கிக் கட்டிலில் போட்டான்.
"ஹேய்... நா சொல்றத....'' என்று ஆரம்பித்தவளை முத்தத்தால் அடக்கினான்.
பிறகு "சொல்லு?'' என்றான்.
"நா இன்னைக்கு கீழ படுத்துக்கிறேன். நீ மட்டும் "கட்டில்டல படுத்துக்க...''
முகம் வாடிப் போய்விட்டது. இன்னேரம் அதற்குப் புரிந்திருக்க வேண்டும்.
இருந்தாலும் சைகையிலேயே... "ஏன்?' என்றது.
தலையில் எண்ணெய் தேய்ப்பது மாதிரி பாவனை செய்தாள்.
இடுப்பைச் சுற்றியிருந்த சந்திரனின் கைகள் இறுக்கத்தைத் தளர்த்தின.
பரிதாபமாய் செண்பகத்தின் முகத்தைப் பார்த்தான்.
"ஹேய்?... பொய்தானே?''
செண்பகத்துக்கு மிகவும் பரிதாபமாய் இருந்தது. சிரிப்பு வரவில்லை.
"நிஜமாத்தான்'' என்றாள்.
அப்படியே சரிந்து தலையணையில் விழுந்தான்.
பேச்சில்லை... "வீணையடி...' பாட்டில்லை. சிரிப்பில்லை. அசையாது
படுத்திருந்தான்.
செண்பகம் தலைமாட்டில் தட்டில் இருந்த அதிரசத்தை இவன் பக்கம் எடுத்து
வைத்து "சாப்பிடு'' என்றாள்.
சந்திரன், ஏமாற்றத்தை மறைக்க முயன்று "ஏற்கனவே அஞ்சு சாப்டாச்சு'' என்றான்.
செண்பகம் எழுந்து விளக்கை அணைத்துவிட்டு ஃபேன் ரெகுலேட்டரை மூன்றுக்குத்
திருப்பிவிட்டு வந்து படுத்தாள்.
அரைமணி நேரமாய்த் தூங்குவதற்கு முயன்று, "சர்ட்டி'லிருந்து
சிகரெட்டையும், தீப்பெட்டியும் எடுத்துக் கொண்டு மாடிக்குப் போனான்.
எத்தனை சிகரெட் எடுத்துக் கொண்டு போவது என்று தெரியவில்லை. அரைமணி நேரம்
கழிச்சு திரும்பி வந்தான். மறுபடியும் புழக்கடை கதவைத் திறந்து வெளியே
போனான். இன்னொரு அரை மணிநேரம்... பக்கத்தில் வந்து படுத்தான்.
செண்பகம் "கோவமா?'' என்றாள்.
"சேச்சே... வயிறு ஒரு மாதிரியா இருந்தது... அதான் வெளிய போயிட்டு
வந்தேன்... தலைவலி வேற... நீ ஏன் தூங்கலை?''
செண்பகத்துக்குத் தூக்கம் சொக்க ஆரம்பித்தது.
ஏதோ மாடு ஒன்று கத்துவது மாதிரி கனவு கூட வந்தது. திடுக்கிட்டு
எழுந்தாள். பக்கத்தில் மறுபடியும் சந்திரன் இல்லை. பாத்திரம் தேய்க்கிற
இடத்தில் யாரோ ஓக்களிப்பது கேட்டது, செண்பகம் விளக்கைப் போட்டுவிட்டு,
பார்த்தபோது... சந்திரன்.
"என்னாச்சு?'' என்று ஓடிபோய் அவன் காதை இரண்டு கைகளாலும் அழுத்திக்
கொண்டு கேட்டாள்.
"ஒண்ணுமில்லை.... வாந்தி... நீ தூங்கறதானே?... அதர்சம்
ஒத்துக்கலை...'' என்றாள்.
"ச்சம்.... அதெல்லாம் ஒண்ணும் வேணாம்'' என்று முடிப்பதற்குள்
"இன்னாப்பா ஆச்சு?'' என்று பெரிய ரூமில் இருந்து
செண்பகத்தின்
அப்பாவும் அவருக்குப் பின்னால் புடவையைச் சரி செய்து கொண்டு அம்மாவும்
தோன்றினார்கள்.
"ஒண்ணுமில்லை... ஒண்ணுமில்லை'' என்று சுதாரித்து எழுந்தான் சந்திரன்.
"இவருக்கு வயிறு சரியில்லை'' என்று வெளியே போய்விட்டு வந்தாரு...
படுத்து கொஞ்ச நேரம் கூட ஆகலை, அதுக்குள்ள வாந்தி... அதர்சம்
ஒத்துக்கலை'' என்று விளக்கினாள் செண்பகம்.
"ஒண்ணுமில்லை'னு சொல்லிக் கொண்டிருக்கும்போதே செண்பகம் இந்த அளவுக்கு
விளக்கிக்கொண்டிருப்பது எரிச்சலாக இருந்தது.
"அஜிர்ணமாயிட்டு இருக்குது! சோடா வாங்கியாறட்டுமா மாப்பிள்ளை?''
"இந்த ராத்திரிலையா?''
"அட, கதவ தட்டினா எடுத்துக் குடுப்பான்''
"வேணாம்... வேணாம் காலைல பாத்துக்கலாம். நீங்க போய்ப் படுங்க''
ராத்திரியில் இப்படிப் பலரும் தன் விஷயமாய் கவலைப்படுவது பிடிக்காமல்
"விருட்'டென்று போய் கட்டிலில் படுத்துக் கொண்டான்.
"ஏதாவது மாத்திரை சாப்டா நல்லது'' என்றாள்.
"கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டியா?... "அனாசின்' மாத்திரை தவிர வேற
மாத்திரை வெச்சிருக்கானா உங்க ஊரு கடையில?''
வயிறு மறுபடி கலக்கியது. காலும் தேய்ந்து போய் கண்ணும்
கிறுகிறுத்தது. தலைவலி பின் மண்டை முழுவதும் பரவியிருந்தது. கழுத்தை
இப்படியும் அப்படியும் சொடுக்க தலையையே கழற்றிப் போட்டது மாதிரி சத்தம்.
"தைலம் தேய்க்கட்டா?'' என்று நெற்றியில் கை வைத்தவள், "ஜுரம் கூட
காயுதே'' என்றாள்.
"வேணாம்... வேணாம்'' என்று எழுந்தான். மீண்டும் வயிற்றைக் கலக்கியது.
பட்டென்று கக்கூஸில் நுழைந்து கொள்ள முடியாத
பட்டிக்காடு.... ஆற்றங்கரை... தேங்கிய ஆறு. நீர் இருக்கிற இடமாகத் தேடி
அமர வேண்டும். எழுந்திருக்கவே பிரயத்தனப்பட்டாலும்... போய்த்தானே ஆக
வேண்டும்?
"வெளிய போறீங்களா?'' என்றாள்.
"உம்''
"நானும் வரட்டமா?''
"ச்சும்...நீ தூங்கு...?''
புழக்கடை வரை சென்று விட்டவனிடம் ஓடி வந்து "டார்ச் லைட்' டைக்
கொடுத்தாள். ""பாம்பு கீம்பு கிடக்கும்'' என்றாள்.
ஸ்டார்ச் லைட் டைப் பிடுங்கிக் கொண்டு வேகமாக நடந்தான்.
வீடுகளைத் தாண்டுகிற வரை நாய்கள் தின்று விடுகிற மாதிரி சூழ்ந்து நின்று
குரைத்தன.
யாரோ ஒருத்தர் "யாருப்பா அது!?'' என்றார்.
"குப்பனா?''
சந்திரன் பதில் சொல்லவில்லை, ஆற்றில் போய் அமர்ந்தபோது "அப்பாடா'
என்றிருந்தது. "வீணையடி நீ எனக்கு... ச்சே என் பாட்டு இது இந்த
நேரத்தில். காலையில் வாயில் நுழைந்து கொண்ட பாட்டு விடவே இல்லை.
பஸ்ஸில்... பழக்கடையில்... பஸ்ûஸ விட்டு நடக்கையில், படிக்கையில்...
படுக்கையில்... முயன்று வேறு பாட்டாவது பாட வேண்டும் என்று பஸ்ஸில்
சங்கல்பம் எடுத்த போதும் மறுபடியும் இதே... எங்கே பிடித்தோம் இதை?...
உம்.. "மிண்ட் பஸ்டேண்டில்ட டீக்கடை ரேடியோவில்... தூங்கி எழுந்தாலொழிய
போகப் போவதில்லை...''
வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தபோது யாரோ எதிரில் வருவது அடர்த்தியான
கருப்பாய் தெரிந்தது.
அருகில் சென்றதும் நின்றான். செண்பகம்.
கூசிய கண்ணை முழங்கையில் மூடிக்கொண்டு, "இப்ப தேவலாமா?'' என்றாள்.
"எங்க இன்றல்ல?''
"மலர் அக்கா வூட்டுக்காருக்குக்கூட பேதி'னு நேத்து ஆஸ்பத்திரி போயிட்டு
வந்தாங்க... "மாத்திரை இருக்குதா'னு கேட்டுப் பாக்றேன்.''
"சுள்'ளென்று எரிச்சல் பரவியது. "மானத்தை வாங்குகிறாள்'.
"எனக்குப் பேதியாகறது ஊர்புல்லா தெரியணும் அதானே?'' என்றான்.
"மலரக்கா ஜென்னல் ஓரமாகத்தான் படுத்துக்குனு இருக்கும். "ஜன்னல்'ல்லையே
தட்டி வாங்கியாறேன்... நீ போ' என்றாள். கொஞ்ச நேரத்தில் ஜன்னலைத் தட்டி,
"அக்கா... மலரக்கா...'' என்று செண்பகம் அழைப்பது கேட்டது.
சந்தரன் வேகமாய் அந்த இடத்தை விட்டு அகன்றான். "வாங்கி வரட்டும். கழுதை
சொன்னா கேக்கிறாளா? வரட்டும், வீசி எறிகிறேன். என் திமிர்?
சொல்லிக்கொண்டே இருக்கிறேன் போய் தட்றாளே...?'
வீடு அதைவிட மோசமாக இருந்தது. மாமனாரும் மாமியாரும் நடு ராத்திரியில்
"தந்தி' வந்தவர்கள் மாதிரி இடிந்து உட்கார்ந்திருந்தார்கள். வீட்டில்
எல்லா லைட்டுமே எரிந்து கொண்டிருந்தது. உள்ளே நுழைவதற்கே கூச்சமாக
இருந்தது.
போதாத குறைக்கு, உள்ளே நுழைந்ததும், மாமனார் பதறி எழுந்து
"பேதியா
மாப்பிள்ளை?'' என்றார்.
"அதெல்லாம் ஒண்ணுமில்லங்க...''
"அட ரெண்டு வாட்டி போனீங்களாமே சொல்லியிருந்தா, கூட வந்திருக்க மாட்டேன்?''
"பேதியாவதைப் போய் யாராவது சொல்லிக் கொண்டிருப்பார்களா? அதுவும்
மாமனார், மாமியார் முன்னால் சொல்வார்களா? பேதியானால் ஆனது மாதிரி
போகிறது... இவர்களுக்கென்ன ராத்திரியில்?'
மாமனார் "அதர்சத்தை வாரி வாரி வெச்சிருப்பா... அதான்... அதர்சம்னா
ஒண்ணு, ரெண்டு மரியாதை... சோறா அது?'' என்று மாமியாரைக் கேட்டுவிட்டு "ஓம
வாட்டர்' வாங்கியாந்து வெச்சிருக்கேன் குடிங்கோ'' என்றார்.
"ஓம வாட்டரா?''
"ஆமா... அஜீர்ணத்துக்கு அத வுட்டா வேற வைத்தியம் கிடையாது'' என்று
தீர்மானமாகச் சொன்னார்.
சந்திரன் கட்டிலில் போய் படுத்தான். "ஊருக்கேதான் தெரிந்துவிட்டது!
நாரண்சாமி மரும்புள்ளக்கி பேதியாம்ட என்று காலையில் டீக்கடையில் பேசிக்
கொள்ளப் போகிறார்கள். இவளைச் சொல்ல வேண்டும். இவளால் தான். காலையில்
டவுனுக்குப் போய் சந்தடியில்லாமல் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கலாம்.
எல்லாம் கெட்டது.'
அவசரமாய் உள்ளே வந்த செண்பகம் " இது நல்ல மாத்திரையா பாருங்க...?''
என்று மாத்திரை பட்டையை நீட்டினாள்.
"டமாரம் கட்டிக்குனு அடிக்கிறதானே? ச்சே... இப்படியா அசிங்கப்படுத்தர்து?''
அவனது கோபத்தை மதிக்காமல் "நல்ல மாத்திரையானு பாருங்கனா?'' என்றாள்.
சந்திரன் திரும்பிப் படுத்துக் கொண்டான்.
"இதல கோச்சிக்கறதுக்கு என்னா இருக்கு... நம்ம உடம்பு. நம்ம
பாத்துக்கறோம். ஊருக்குத் தெரிஞ்சா என்ன?''
"அதான் விடிஞ்சதும் போய் எல்லார்க்கும் சொல்லிட்டு வா''
கொஞ்ச நேரம் பேசிக் கொள்ளவில்லை. தூக்கம் வரவில்லை. அசதியாகவும்,
எரிச்சலாகவும் இருந்தது. சந்திரன் எழுந்து பார்த்தபோது, பெரிய ரூமில்
விளக்கை அணைத்து விட்டது தெரிந்தது. மாடியில் போய் கொஞ்ச நேரம் உலாவலாம்
என்றிருந்தது. தூக்கம் வந்தபின் படுத்தால் போதும் என்று நினைத்தான்.
எழுந்தான்.
"மறுபடியும் போறீங்களா?''
சந்திரன் பதில் சொல்லவில்லை. நடந்தான்.
"போறதானா பேக்கடை'ல போங்க''
"அசிங்கம்... அசிங்கம் என்றால் என்னவென்றே இவர்கள் குடும்பத்துக்குத்
தெரியாதா?... இந்த மாதிரி நிலைமை ஒருத்தனுக்கு எவ்வளவு எரிச்சலா
இருக்கும்னு புரிஞ்சுக்க முடியாதா? ச்சே...
"எனக்கு வர்ல'' மாடியில் ஏறினான்.
இருட்டும் ஈரக்காற்றும் பிசைந்து கொண்டு இருந்தது. அமாவாசை போய்
நான்காவது நாள். நடக்க முடியாமல் ஒரே சோர்வாக இருந்தபோதும் உலவினான்.
வாய் "வீணையடி நீ எனக்கு' என்று முணுமுணுத்துக் கொண்டிருப்பதை
உணர்ந்தான்.
"அடுத்த வரி... மீட்டும் விரல் நானுனக்கு... யார் வீணை? யார் விரல்?
பொம்பளை... வீணை. ஆம்பளை விரலா? பொம்பளை ஜடம். ஆம்பளை ஜீவனா? ச்சே...
யாரோ ஒருத்தர் வீணை... யாரோ விரல்... இந்த நேரத்தில் இது வேறயா?'
எக்கச்சக்கமாய்க் குளிரியது. உடம்பு அனலாய் கொதித்தது. படிக்கட்டில்
இறங்கிய போது செண்பகம் சால்வையை எடுத்துக் கொண்டு மேலே வருவது தெரிந்தது.
சந்திரன் இறங்கி வருவது கண்டு நின்றாள்.
திரும்பி அறைக்குள் வந்து படுத்தனர். செண்பகம் விரோதமாய்
கட்டிலின் மறுகோடியில் போய் முதுகைக் காட்டிக் கொண்டு படுத்துக்
கொண்டாள்.
"எல்லாம் இயற்கை செய்கிற சதி இவள் என்ன செய்வாள்' என்று தேற்றிக்
கொண்டான் சந்திரன்.
சந்திரன் டேபிளின் மீதிருந்த ஓம வாட்டரை எடுத்துப் பார்த்தான்.
குடித்ததும் தெம்பாய் இரண்டு "ஏப்பம்' வரும் என்பதை நினைக்கவே
கிளுகிளுப்பாய் இருந்தது. மாத்திரை பட்டையை எடுத்துப் பெயரைப்
பார்த்தான். "ஸ்டேப்ரோ பாராக்சின்'. பரவாயில்லை அவசரத்துக்குப் போட்டுக்
கொள்ளலாம்.
பெருமிதமாய் செண்பகத்தைத் திருப்பிப் பார்த்துவிட்டு மாத்திரை ஒன்றைப்
போட்டுக் கொண்டான். ஒரு மொணறு "ஓம வாட்டரை' குடித்தான்.
கட்டிலில் படுத்து அவள் வரை உருண்டு போனான். செண்பகம் அசையாமல்
படுத்திருந்தாள்.
"செல்லி...'' மெல்ல கூப்பிட்டான். திரும்பியவளின் கண்களில் ஈரம்
துடைத்து விட்டான்.





tamilmagan2000@gmail.com

LinkWithin

Blog Widget by LinkWithin