வெள்ளி, மே 29, 2009

இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்

அறிஞர் அண்ணா எழுதிய இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் என்று நூலுக்கு நான் எழுதிய முன்னுரை இது. அண்ணாவுக்குப் பேரன் எழுதியதாக நினைத்தால் தப்பில்லை.



தம்பிக்காக...


மாநிலக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது (1993) தமிழ்ப் பாட வகுப்பில் பேராசிரியர் இ. மறைமலை மாணவர்களின் வாசிப்பு ஆர்வம் குறித்து விசாரித்துக் கொண்டிருந்தார். மாணவர்கள் தாங்கள் வாசித்த பிடித்தமான புத்தகங்கள் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தனர்.

அப்போது எனக்குப் பிடித்தமான புத்தகமாக "இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்'' என்றேன். ஏதோ புத்தகத்தின் தலைப்பு என்று விட்டுவிட முடியவில்லை. தலைப்பு அவரை ஈர்த்திருக்க வேண்டும். "யார் எழுதியது?'' என்றார். "அண்ணா எழுதியது?'' என்றேன்.

"அண்ணாவா?'' என்று வியப்போடு கேட்டுவிட்டு மற்ற மாணவர்களிடம் வரிசையாகக் கேட்டுக் கொண்டே போனார்.

தமிழறிஞருக்குத் தெரியாத ஒரு புத்தகத்தை நாம் சொல்லிவிட்டோம் என்று பெருமிதமாக இருந்தது. எல்லா மாணவரிடத்தும் கேட்டு முடித்துவிட்டு மீண்டும் என்னிடத்தில் வந்தார்.
"எதைப் பற்றி எழுதியிருக்கிறார்?'' என்றார்.

"நெப்போலியன் வாழ்க்கை வரலாற்று நூல்''

"எந்தப் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது?''

"பதிப்பகம் தெரியவில்லை. தமிழ்நாடு மின்சார வாரிய செயலகச் சங்க ஆண்டுவிழா மலரில் (1972) இது வெளியாகி இருக்கிறது''

"மின்வாரிய மலரா?''

"என் தந்தையார் அந்தச் சங்கத்தின் தலைவராக இருந்தார். அவர்தான் மலரில் அதை வெளியிடக் காரணமாக இருந்தார்' 'என்றேன்.

அண்ணாவின் நூல்கள் பார்வதி பி.ஏ. ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகை, செவ்வாழை, ரோமாபுரி ராணிகள் உள்ளிட்ட நூல்களை புத்தகக் கடைகளிலோ, நூலகங்களிலோ பார்க்க முடிகிறது. திராவிடர் கழகக் கூட்டங்களில் "தீ பரவட்டும்', "ஆரியமாயை', "கம்பரசம்' போன்ற நூல்களின் மலிவுப் பதிப்பைப் பார்க்க முடியும். இது ஏனோ எங்கும் என் கண்ணில் பட்டதே இல்லை. பலருக்கும் இப்படியொரு நூல் அண்ணாவால் எழுதப்பட்டது தெரிந்திருக்கவில்லை.

பதிப்பாளர்களும் இந்த நூல் பெரிய அளவில் விற்பனை ஆகாது என்று நினைத்தோ என்னவோ பதிப்பில் இருந்தே விடுபட்டுப் போயிருந்தது. அல்லது தொடர்ந்து பதிப்பிக்கப்பட்டு யார் கண்ணிலும் படாமலே போய்விட்டதோ தெரியவில்லை.

இப்போது என் ஆச்சர்யமெல்லாம் இரண்டு.

முதல் ஆச்சர்யம், நெப்போலியன் வாழ்க்கை வரலாற்றை மின்வாரிய ஆண்டு மலரில் என் தந்தை ஏன் பிரசுரித்தார்?

அதற்கு இப்படியொரு சமாதானம் சொல்லிக் கொள்வேன்.

என் தந்தைக்கு அண்ணாவை மிகவும் பிடிக்கும். நெடுஞ்செழியன் நடத்திய மன்றம் இதழில் உதவியாசிரியராக சில மாதங்கள் பணியாற்றிய நேரத்தில் அண்ணாவோடு ஒன்றாக அமர்ந்து உணவருந்திய சம்பவத்தைச் சொல்லுவார்.

தனக்கு வைத்த அப்பளத்தை அண்ணா வேகமாகச் சாப்பிட்டுவிட்டதால் தன் இலையில் இருந்த அப்பளத்தை அவருக்குக்

கொடுத்தேன். அண்ணா "ஏன் அப்பளம் பிடிக்காதா?'' என்றார்.
"உங்களுக்குப் பிடிக்கிறதே என்று வைத்தேன்'' என்றேன்.

அண்ணா ரசித்துச் சிரித்தார்.

இதைச் சொல்லும்போது என் தந்தையின் கண்கள் கலங்கிவிடும். அப்படியொரு பிரியம். அவர் படித்த நாளிதழ் எல்லாம் நாத்திகம்,

திராவிட நாடு, முரசொலி மட்டுமே. கல்லூரியில் படித்த காலத்தில் அதை அண்ணா எழுதிய சூட்டோடு இதைப் படித்தவராக என் தந்தை இருந்திருக்கக் கூடும். பசுமரத்தாணியாய் அப்போதே பதிந்துபோய் இருக்கலாம்.

இரண்டாவது ஆச்சர்யம். நெப்போலியன் வாழ்க்கை வரலாற்றை அண்ணா தம் தம்பிகளுக்கு எழுதியது ஏன்?

நெப்போலியனும் அண்ணாவைப் போல் அதிக உயரம் இல்லாதவர்தான். ஆனால் நிச்சயமாக இந்த நூலை எழுதுவதற்கு அது காரணமாக இருக்காது.

தம்பிகளுக்கோ, அவர் அப்போது எதிர் கொண்டிருந்த அரசியல் நெருக்கடிகளுக்கோ நெப்போலியன் கதை எந்தவிதத்தில் துணைபுரிந்தது.

அடிப்படையில் முழு நேர எழுத்தாளர் அல்ல. அரசியல்வாதி. பேச்சாளர்.

ஆனால் பெரிய வாசிப்பாளராகவும் கிடைத்த அரிய நேரத்தில் எழுதிக் கொண்டே இருந்தவராகவும் தெரிகிறார். அரிய திரைப்படங்களைத் தேடிச் சென்று பார்த்து மகிழ்ந்திருக்கிறார்.

அவருக்கென்று ஓர் அடுக்கு மொழி நடை வைத்திருந்தார். அது மிடுக்கானது; ஆனால் அதில் அவர் சிக்கிக் கொண்டவராகத் தெரிகிறார். அவர் படித்த மிக உன்னதமான விஷயங்களையும் அந்த நடையில் கொடுக்க முயன்றதால் மலிவாகத் தெரிந்தது மற்றவருக்கு.

கட்சிக்காரர்களுக்காக அவர் சற்று இறங்கிவந்து எழுதியிருக்கிறார் என்றும் தெரிகிறது.

ஒரு நாள் இரவு. பெங்களூர் ஓட்டல் ஒன்றில் அண்ணா ஏதோ படித்துக் கொண்டிருக்கிறார். அவருடன் ஈ.வே.கி. சம்பத் இருக்கிறார்.

சம்பத்துக்கு அண்ணாவின் திராவிட நாடு கொள்கை உறுதியானதுதானா என்ற சந்தேகம். "திராவிட நாடு கொள்கையில் உங்களுக்கு நிஜமாகவே நம்பிக்கை இருக்கிறதா?'' என்கிறார். அண்ணா தீவிரமாகப் படித்துக் கொண்டிருக்கிறார். பதிலே சொல்லவில்லை.

இரண்டு மூன்று முறை இதைப் பற்றி கேட்கிறார். அண்ணா பதில் சொல்லாமல் படித்துக் கொண்டிருக்கிறார்.

அது இந்தியாவில் தடைசெய்யப்பட்டிருந்த புத்தகம். அது டி.ஹெச். லாரன்ஸ் எழுதிய லேடி சாட்டர்லீஸ் லவ்வர் என்ற ஆங்கில நாவல்.

திராவிட நாடு கோரிக்கையும் சாதி மறுப்பு கோரிக்கையும் காங்கிரஸ்கட்சி எதிர்ப்பும் பேசி வந்த ஒருவருக்கு லேடி சாட்டர்லீஸ் படிப்பது அவருடைய விருப்பங்களை மீறிய வாசிப்புத் தேடலாகவே இருக்கிறது.

மேடைகளிலே சாக்ரடீஸ், அலெக்ஸôண்டர், வால்டேர், ரூúஸô, ரஷ்ய புரட்சி என்று பேசியவர். உலகின் அத்தனை பெரிய நதிகளையும் பற்றி அவர் ஒருமுறை பச்சையப்பன் கல்லூரியில் பேசியதை என் தந்தை கூறியிருக்கிறார். ஒருமுறை கல்லூரியில் பேச அழைத்திருக்கிறார்கள். தலைப்பு என்ன என்கிறார் அண்ணா. மாணவர்களுக்கு தலைப்பு கொடுத்துப் பேசச் சொல்வதாக எண்ணமே இல்லை. ஆகவே ஒன்றுமில்லை என்று கூறியிருக்கிறார்கள். அதையே தலைப்பாக்கி ஒன்றுமில்லை என்பது குறித்து ஒன்றரை மணி நேரம் பேசியிருக்கிறார். உலகு தழுவிய பரந்துபட்ட ஞானம் அவருக்கு இருந்தது. அவர் தேடித் தேடி வாசித்த படிப்பாளி.

ஆனால் தமிழக அரசியலில் தொண்டர்களுக்கு அவர் தெரிவிக்க வேண்டியதோ மிகச் சொற்பம்தான். சொல்லப்போனால் அவர் தொண்டர்களுக்குத் தனியாகவும் அவருக்காகத் தனியாகவும் செயல்பட்டவராகவே இருக்கிறார். நிறைய கூட்டங்களில் சொற்பொழிவு, கட்சிப் பணி, நாடகப் பணி, திரைக்கதை வசனம், ஓயாத சுற்றுப் பயணம், பத்திரிகைப் பணி எல்லாம் கொண்ட மனிதராகவும் இந்தச் செயல்பாட்டுக்கு அப்பாற்பட்ட ரசனையும் உள்ளவராகவும் அண்ணா இருக்கிறார். அதனால்தான் நெப்போலியன் வாழ்க்கைக் கதையைப் படிக்கவும் அதைத் தமிழில் எழுதவும் அவருக்கு முடிந்திருக்கிறது. எல்லாவுக்கும் மேலாக அதைத் தம்பிக்காக எழுத முடிந்திருக்கிறது.


கார்ஸிகா தீவிலே பிறந்தவன் எலினா தீவிலே இறக்கிறான். இந்த இரண்டுத் தீவுக்கிடையில் அவன் கண்ட ராஜ்ஜியங்கள் என்ன பெயரென்ன புகழென்ன?

பிரான்ஸின் ஆதிக்கத்தில் இருந்த கார்ஸிகா தீவிலே பிறந்தவன் எப்படி பிரெஞ்சு தளபதியானான்? ஜோஸபினைச் சந்திப்பதும் காதலிப்பதும் மணந்த மறுநாளிலேயே இத்தாலி மீது படையெடுத்தது , ரஷ்யாமீது போர்த் தொடுத்து அடைந்த இன்னல்கள் எல்லாம் இருக்கிறது.
ஆனால் இது சரித்திர நாவலா, சரித்திரமா என்பதில்தான் முடிவெடுக்க முடியாத நிலை. சரித்திரக் குறிப்புகள் உள்ளன.

நெப்போலியன் பிறந்த ஊர், பிறந்த ஆண்டு, மணந்த ஆண்டு, முடிசூட்டிக் கொண்ட ஆண்டு, கொள்கை முடிவுகள், குழப்பங்கள்

எல்லாம் இருக்கின்றன. கூடவே தம்பிகளுக்கு எடுத்துச் சொல்கிற வியாக்யானங்களும் உண்டு. தம்பிகளுக்குப் பிடித்ததே அந்த வியாக்யானங்கள்தான். சரித்திர மாணவர்களுக்கோ இவருடைய வியாக்யானங்கள் அத்தனை முக்கியமில்லை. அவர்களுக்குத் தேவை சரித்திரக் குறிப்புகள்.

அதனால்தான் இந்த நூல் அந்த இரு தரப்பினராலும் போற்றத் தக்க நூலாகவோ புறக்கணிக்கப்பட்ட நூலாகவோ இருக்கிறது இப்போதும்.

தமிழ்மகன்
சென்னை -50
06-11 -2008

கையேடுகளின் நிரந்தர ஆட்சி!

உலகின் எத்தனையோ தத்துவம மரபைப் போலவே திராவிட இயக்க சிந்தனைக்கும் ஆழமான ஒரு தத்துவ தரிசனம் உண்டு. அது இப்போது தடம் மாறி சாதீய மதவாத கட்சிகளோடு தேர்தலுக்காகக் கூட்டணி வைத்துக் கொள்ளும் அளவுக்கு நீர்த்துப் போயிருப்பதாகக் கூறினாலும் அதன் ஆரம்ப குறிக்கோள்கள் வீரியத்தோடுதான் இருந்தன.

"பரத்தியாவதேதடா பனத்தியாவதேதடா' போன்ற சித்தர் சித்தாந்தமும் "சாதி சமய சழக்கை ஒழித்தேன் அருட் சோதியைக் கண்டேனடி' என்ற வள்ளலாரின் சிந்தனையும் பவுத்த சிந்தனை மரபும் ஊறித் திளைத்து விளைந்த ஒரு இயக்க ரீதியான செயல் தத்துவம் இது.

பெண் விடுதலை, தன்மான உணர்வு, சடங்கு சம்பிரதாய எதிர்ப்பு, நாத்திகவாதம், இன உணர்வு, சமுதாய சமத்துவம் ஆகியவற்றின் கூட்டுத்தன்மையோடு திராவிட இயக்கம் உருவானது.

மேடைப் பேச்சு, பிரசுரங்கள் மூலமே கட்டப்பட்ட ஒரு இயக்கமாகத்தான் இதைச் சொல்ல வேண்டும். உரம் ஏறிப் போயிருந்த இன்னொரு எழுச்சியைப் பிளந்து கொண்டு பிறந்த இந்த இயக்கத்தின் பெரும் பலம் பிரசுரங்கள்தான். சுதந்திர உணர்வும் நாட்டுப் பற்றும் எழுச்சி பெற்றிருந்த மக்கள் மத்தியில் தன்னந்தனியராக எழுந்தவர் பெரியார். மிகவும் உண்மையானவராகவும் மக்கள் மீது அதீத அக்கறை கொண்டவராகவும் இருந்ததால்தான் சுதந்திரத்துக்கு மாற்றாகவும் அல்லது சுதந்திரத்தைவிட உடனடி தேவையாகவும் "மக்கள் இழிவு இன்றி வாழ வேண்டும்' என்பதை முக்கியம் என்று அவரால் வலியுறுத்த முடிந்தது.

இந்தியா சுதந்திரம் அடைய வேண்டும் என்பதைவிட ஒவ்வொரு மனிதனும் சுதந்திரம் அடைய வேண்டும் என்ற அவருடைய பேச்சில் மக்களுக்கு இன்னமும் நெருக்கம் அதிகமாக இருந்தது. சுதந்திர வேட்கைக்கு சமமான ஒரு ஆதரவோடு, எழுச்சியோடு திராவிட இயக்கம் தமிழகத்தில் வளர்ந்தது. மகாத்மா காந்தியின் அர்ப்பணிப்போடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய உழைப்பும் கண்மூடித்தனமான பழக்க வழக்கங்களை ஒட்டு மொத்தமாகத் தூக்கி எறிந்த துணிச்சலும் பெரியாருக்கு மக்களிடம் செல்வாக்கை உயர்த்தியது.

அவருடைய மிக நேர்மை தொனிக்கும் எளிமையான பேச்சில் மக்கள் ஈர்க்கப்பட்டனர். எல்லா இடத்திலும் எல்லா நேரத்திலும் அவரே இருக்க முடியாத சூழலைத் துண்டுப் பிரசுரங்கள் தீர்த்து வைத்தன. அவருடைய பேச்சும் எழுத்தும் சிறிய சிறிய பிரசுர நூல்களாக வந்தன. அது ஒவ்வொரு முறை படிக்கும்போதும் படிப்பவரைத் தூப்பாக்கியில் இருந்து சீறிப்பாயும் தோட்டாக்களின் நிலைக்குத் தள்ளியது.

அவருடைய சுயமரியாதை பிரசார வெளியீடுகள் மிக மலிவான விலையில் வெளியாகின. மக்களுக்குப் புதிய சிந்தனையை -மாற்று சிந்தனையை - ஊற்றெடுக்க வைப்பதாக அவை அமைந்தன.

"சோதிடப் புரட்டு' என்ற நூலில் சோதிடம் கணிப்பவர்கள் பூமியை மையமாக வைத்து சூரியன் அதைச் சுற்றி வருவதாகச் சொல்கிறார்கள். உண்மையில் சூரியனைத்தான் பூமி சுற்றி வருகிறது. இந்த அடிப்படை ஞானம் கூட இல்லாத ஒரு விஷயத்தை மக்கள் நம்புவது முட்டாள்தனமாக இல்லையா? என்ற நுணுக்கமான கேள்வியை பெரியார் முன் வைத்தார்.

கைரேகை பார்த்து சோதிடம் சொல்வதென்றால் குரங்குகளுக்கும் கையில் ரேகை இருக்கின்றதே, அதற்கும் வேலை வாய்ப்பு, சொத்து வரவு எல்லாம் உண்டா? என்பார்.

மக்களின் சந்தேகங்களைத் தீர்த்து கைபிடித்து அழைத்துச் செல்லும் பணியை, அவர்களுக்கு விஞ்ஞானபூர்வமாகச் சிந்திக்க வேண்டிய அவசியத்தை கல்வியின் அவசியத்தை அந்தத் துண்டுப் பிரசுரங்கள் செய்தன. ஒரேயடியாக மூடநம்பிக்கை புரையோடிப் போயிருந்த சூழ்நிலையில் சாதி, மத பிரிவினையால் ஒருவரை ஒருவர் இழிவு படுத்திக் கொண்டிருந்த வேளையில் அந்தப் பிரசுரங்கள் அதிரடி வைத்தியமாக இருந்தன. வேதங்கள் பெண்களை ஐந்தாம் வர்ணமாக பிரிவினை செய்திருப்பதை அவை தோலுரித்துக் காட்டின. திருமண மந்திரங்கள் என்ற பெயரில் உச்சரிக்கப்படும் பிற்போக்குத்தனங்களை மக்கள் அறிந்தார்கள். சுயமரியாதைத் திருமணங்கள், சாதி மறுப்புத் திருமணங்கள் வேகமாக நடந்தன.

கலப்பு மணம் என்ற வார்த்தையையே அவர் கிண்டல் செய்கிறார். "நான் என்ன மாட்டுக்கும் மனுஷனுக்குமா திருமணம் செய்கிறேன். மனிதனுக்கும் மனிஷிக்கும்தான் திருமணம் செய்கிறேன். இது எப்படி கலப்பு மணம் ஆகும்' என்ற நியாயமான கேள்வியில் மக்கள் ஆர்ப்பரித்தார்கள். மறுமணங்களை ஆதரித்தும் தாலி என்ற லைசென்ஸ் அடையாளத்தை நீக்கியும் அவர் மறுமலர்ச்சி செய்தார். இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருந்த இந்த சடங்குகளை சில ஆண்டு பிரசாரத்தின் மூலம் அவர் ஆட்டம் காணவைத்தார்.

தத்துவவிளக்கம் என்ற அவருடைய சிறிய துண்டு பிரசுரம் வேதங்களும் மதகுருமார்களும் என்னென்ன சொல்லி வந்திருக்கிறார்கள். அதில் எத்தனை முரண்பாடுகள் இருக்கின்றன என்று தோலுரித்தன. அவர் இசை, கலை, இலக்கியம் சம்பந்தமான கருத்துகளைப் பேசுவதினும் முக்கியமாக சமத்துவத்தைப் போற்றியதால் இவற்றை அவர் தன் வாழ்நாளில் இருந்து தியாகம் செய்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் அன்னா கரீனினாவையோ ஆன்டன் செகாவையோ படிக்காமல் போனது தமிழகத்துக்கு நேர்ந்த இலக்கிய இழப்புதான். ரத்தமும் சதையுமாக உண்மை சொட்டும் அவருடைய நடையில் அவருடைய ஆர்வம் இன்றியே இலக்கியத் தன்மை இருந்தது. எழுத்தாளர் க.நா.சு இவருடைய எழுத்து நடையைச் சிலாகித்திருப்பது இங்குச் சுட்டிக் காட்டத்தக்கது.

சிலப்பதிகாரத்தைப் பற்றி அவர் சொல்கிறார்: இது விபச்சாரத்தில் ஆரம்பித்து, பத்தினித்தனத்தில் வளர்ந்து முட்டாள்தனத்தில் - மூட நம்பிக்கையில் முடிந்த பொக்கிஷம்; என்று விமர்சிக்கிறார்.

ராமாயணம், பெரியபுராணம், திருக்குறள் போன்ற தமிழின் தலைசிறந்த நூல்களாக எண்ணுகின்ற அனைத்தைப் பற்றியும் அவருக்கு இப்படியான கடுமையான விமர்சனங்கள் இருக்கின்றன. மனிதன் சாதி வாரியாக கேவலப்பட்டுக் கொண்டிருப்பதையும் புரோகிதர்களின் புரட்டுகளையும் கண்டிக்காமல் என்ன ரசனை வேண்டிக்கிடக்கிறது என்பதுதான் அவருடைய கோபத்துக்குக் காரணம். இது குறித்து "தமிழர், தமிழ் இலக்கியங்கள்' என்ற வெளியீடு ஒன்று வெளியாகியுள்ளது.

அவருடைய அறிவு விருந்து என்ற பிரசுரத்தில் "கடவுளும் தண்டிக்கிறான், மனிதனும் தண்டிக்கிறான். கடவுளும் பழி வாங்குகிறான், மனிதனும் பழி வாங்குகிறான். இவையெல்லாம் மனிதன் கற்பித்தவை என்பதாலேயே இப்படி மனித குணத்தோடு இருக்கின்றன' என்கிறார்.

"புரட்டு இமாலய புரட்டு', "நீதி கெட்டது யாரால்?', "காந்தியாரின் படத்தை எரிப்பது ஏன்?', "புரட்சி அழைப்பு', "சுதந்திர தமிழ்நாடு ஏன்?', "பாரத ஆராய்ச்சி' போன்ற பல தலைப்புகளில் வெளியீடுகள் வந்துள்ளன. இந்த வெளியீடுகள் 1930-களின் துவக்கத்தில் இருந்து இப்போதும் .. இன்றைய பிரச்னைகளான இட ஒதுக்கீடு, இலங்கைத் தமிழர் உரிமை போன்ற தலைப்புகளில் வெளியீடுகள் பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவன வெளியீடாக வந்து கொண்டிருக்கின்றன.

பெரியார் தவிர கைவல்ய சாமி, குத்தூசி, அறிஞர் அண்ணா, சிங்காரவேலர் போன்றவர்களின் பேச்சுகள்- எழுத்துகளும் இத்தகைய பிரசார வெளியீடுகளாக வந்திருப்பதைக் காண முடிகிறது.
அறிஞர் அணண்ணாவின் "தீபரவட்டும்', "ஆரிய மாயை' போன்ற பேச்சு வெளியீடுகள் அன்றைய இளைஞர்களுக்கு ஆவேசத்தை வளர்த்தெடுக்கக் காரணமாக இருந்தன. இந்தப் பிரசுரங்களில் பல பல்வேறு ஆட்சிச் சூழல்களில் தடைசெய்யப்பட்ட நூல்களாகவும் அதனாலேயே அதிகம் பரபரப்புக்கு ஆளான நூல்களாகவும் விளங்கின.

பகுத்தறிவு பிரசார வெளியீடு, திராவிடப் பண்ணை, நாத்திகம் வெளியீடு, பெரியார் மையம், சிந்தனையாளன் வெளியீடு போன்ற பல அமைப்புகளும் இத்தகைய துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டன.

ரேடியோ, தொலைக்காட்சி, அலை பேசி, தொலைபேசி, வாகன வசதி, சாலை வசதி, கமம்ப்யூட்டர் தொழில்மமநுட்பம், இண்டர் நெட் போன்றவை அறவே õல்லாத நிலையிõல் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு மாற்றங்களை ஏற்படுத்தியதில் இந்தத் துண்டுப் பிரசுரங்களின் பங்கு மகத்தானது.

தமிழரின் பேச்சில் எழுத்தில் வாழ்வில் இந்தத் துண்டுப் பிரசுரங்கள் ஏற்படுத்தியிருக்கும் மகத்தான மாற்றம் என்ன வென்றால் இப்போது பக்கத்து மாநிலங்களான ஆந்திரத்திலும் கேரளத்திலும் கர்நாடகத்திலும் நாயுடு என்றும், நாயர் என்றும் ராவ் என்றும் ஆட்சியாளர்களேகூட பெயருக்குப் பின்னால் சாதியைப் போட்டுக் கொள்ளும் வழக்கம் இருக்கிறது. தமிழகத்தில் அப்படி வெளிப்படையாகக் காட்டிக் கொள்வதில் சகலருக்கும் கூச்சம் இருக்கிறது. மறைவில் சாதி அதன் வன்மத்தோடு தயாராகக் காத்திருப்பதை மறுக்கவில்லை. ஓட்டுக்கு ஏங்கிகளால் அது எப்படியெல்லாம் எண்ணெய் ஊற்றி வளர்க்கப்படுகிறது என்பது தெரிந்ததுதான். ஆனாலும் சாதியை வெளிப்படையாகச் சொல்லிக் கொள்வதில் காட்டுகிற தயக்கம், சாதி மறுப்பு, மறுமணம் போன்றவற்றில் ஏற்பட்ட சிறிய வெற்றியை இந்த பிரசுரங்கள் சாத்தியமாக்கின. ஆட்சிக்கு வந்தவர்கள் செய்த சில மாற்றங்களுக்குப் பின்னும் இந்த காலணா கையேடுகளின் உத்வேகம் இருப்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். அந்த வகையில் இக் கையேடுகளின் ஆட்சி நிரந்தமானது.

சமரசம் செய்ய வேண்டிய இந்த ஆட்சி அதிகாரத்தைப் பெரியார் உதறித்தள்ளியதற்கான கணிப்பையும் இப்போது தெளிவாகவே உணர முடிகிறது.

LinkWithin

Blog Widget by LinkWithin