திங்கள், நவம்பர் 01, 2010

அமில தேவதைகள் அத்தியாயம்-4


அறிவியல் குறுந்தொடர்

சந்திரசேகரின் கையில் உள்ள துப்பாக்கியை ஒரு குபீர் பாய்ச்சலில் தட்டிவிட முடியும் என்று நினைத்தார் கருப்பசாமி. அப்படி எதுவும் முயற்சி பண்ண முடியாதபடி அவருக்கு இரண்டு பக்கமும் இரண்டு முரட்டு மருத்துவர்கள் நின்று கொண்டிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருந்தது.

இவரையும் யூஸ் பண்ணிக்க வேண்டியதுதான் என்ற வாக்கியத்துக்கு என்ன அர்த்தம்? ஆஷா போலவா?

பின்பக்கம் இருந்த இருவரும் ஆளுக்கொரு கையைப் பிடித்து அலேக்காகத் தூக்கி நிறுத்தினர். கருப்பசாமி பலியாடு போல அவர்களுடன் நடந்தார்.

சந்திரசேகர் ஒருவித அலட்சியப் பெருமிதத்தோடு துப்பாக்கியை மேஜை அறைக்குள் போட்டுவிட்டுப் புன்னகைத்தார்.

அதே நேரம் அறைக்கதவை உடைத்துக் கொண்டு பாயாத குறையாக உள்ளே வந்தார் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி. கையில் துப்பாக்கி.

"ஹாண்ட்ஸ் அப்''

மூவரும் அவ்வளவு எளிதில் கையைத் தூக்கவில்லை. என்றாலும் பயந்து போய் நின்றார்கள்.

மறுநாள் பதினாறு கொலைகளைத் தாம்தான் செய்ததாக ஒப்புக்கொண்ட நிலையில் டாக்டர் சந்திரசேகர் அவருடைய மருத்துவமனையில் வைத்து விசாரிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் வைத்து விசாரித்ததற்குக் காரணமிருந்தது.

கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட பெண்கள் அனைவரும் மருத்துவமனையின் ரகசிய கேந்திரத்தில் இருப்பதாகக் கூறியிருந்தார் சந்திரசேகர்.

கொஞ்சம் குழப்பமாக காவல் அதிகாரிகள் அவர் அழைத்துச் சென்ற இடத்துக்கு நடந்தனர். மருத்துவமனையின் பாதாள அறை அது.

முன்னேறிய இயற்பியல் கூடமும் மருத்துவக்கூடமும் கலந்த இடம். கம்ப்யூட்டர் நெட்வொர்க் போல சில இடமும் மைக்ராஸ்கோப் கண்ணாடி சீசாவில் திரவங்கள், அமிலங்கள் அடங்கிய இடமும் கலந்து தெரிந்தது.

சட்டென்று ஒரு இடத்தில் நின்று, "இதோ இருக்காங்க பாருங்க'' என்றார்.

அனைவரும் ஒருகணம் திடுக்கிட்டு அவர் சுட்டிய இடத்தில் பார்க்க... வரிசையாக நீண்ட, நீண்ட கண்ணாடி சீசாவில் தண்டுவடத்தோடு கூடிய மூளைகள் மிதந்து கொண்டிருந்தன.



"இது ஹாஸ்பிடல்ல நர்ஸா இருந்த மேரி..'' என்றார்.

எல்லோரும் அறையப்பட்டவர்கள் மாதிரி நின்று கொண்டிருந்தனர்.


"ஆனா, இவ இப்ப மேரியில்ல, மகாலட்சுமி.''

எல்லோரும் டாக்டர் சந்திரசேகரைக் குத்துமதிப்பாகத்தான் பார்த்தனர். மரைகழன்றுவிட்டதோ என்று உடனடியாக உறுதி செய்யமுடியாத தடுமாற்றத்துடனும் ஏதோ வினோதமாக நிகழ்ந்திருப்பதை எதிர்பார்த்தும் இருந்தனர்.

"இங்க பாருங்க..'' மகாலட்சுமி என்று விளிக்கப்பட்ட சீசாவோடு பிணைக்கப்பட்ட கம்ப்யூட்டரைத் தொடங்கி வைத்து "உன் பெயர் என்ன?'' என்றார்.

திரையில் சின்தûஸஸர் அலை அசைவுகள்.. கூடவே ""ஹலோ என் பெயர் மகாலட்சுமி'' என்ற குரல்.


"பார்த்தீங்களா? நான் சொன்னேன் இல்ல?'' என்று சிரித்தார் சந்திரசேகர்.

"ஓ.கே. டார்லிங்.''

திரையைவிட்டுத் திரும்பி, "புரியல இல்ல? இது மேரியோட ப்ரைன். ஆனா அவளோட ப்ரைன்ல இருந்த அத்தனை செய்தியையும் அழித்துவிட்டு அதில மகாலட்சுமியோட மூளையில் இருந்த தகவலை ஏத்தியிருக்கேன்... அதனால இப்ப இவ மகாலட்சுமியாயிட்டா..'' பெருமிதமாகச் சொன்னார் சந்திரசேகர்.

அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து தைரியப்படுத்திக் கொண்டனர்.


"பயந்துடாதீங்க... உங்களுக்கு சிம்பிளா விளக்கிட்றேன். அப்புறம் ஆச்சர்யப்பட்டுப் போயிடுவீங்க. மனிதனுக்கு மரணமே இல்லாம இருந்தா உங்களுக்கெல்லாம் சந்தோஷம்தானே? அதுக்காகத்தான் கொஞ்சம் பேரை மரணமடையச் செய்ய வேண்டியதா போச்சு.''

"இப்ப இதோ கருப்பசாமி இருக்காரு... இவரோட உடம்புல கருப்பசாமிங்கிறது யாரு? இவரோட கையா? காலா? இந்தத் தொப்பையா? இது எதுவுமில்ல. இவரோட மூளைதான் கருப்பசாமி. இன்னும் ஷார்ட்டா சொல்லணும்னா அவருடைய மூளையில் இருக்கிற ஞாபகங்கள்தான் கருப்பசாமி. இப்ப அந்த ஞாபகங்கள் அப்படியே இன்னொரு மூளைக்கு டீகோட் பண்ண முடிஞ்சா கருப்பசாமியும் அந்த மூளைக்கு ட்ரான்ஸ்பர் ஆகிடுவார். இப்ப மேரிய மகாலட்சுமி ஆக்கினது அப்படித்தான்...''

....'' -சந்திரசேகரைத் தவிர எல்லோரும்.



"இந்த மூளையெல்லாம் மிதக்கறதுக்கு ஒரு திரவம் பயன்படுத்தியிருக்கேன் பாருங்க. அதுக்குப் பேரு, செரிபுரோ ஸ்பைனல் ஃளூயெட். இது நம்ம எல்லார் மூளையைச் சுத்தியும் இருக்கு. இந்த ஆராய்ச்சிக்காக இந்தத் திரவம் நிறைய தேவையா இருந்தது. அதுக்காகத்தான் இந்த காலேஜ் பொண்ணு மண்டையையெல்லாம் உடைக்க வேண்டியதா போச்சு.''

கொலைகள் பற்றி உலகத்தில் உள்ள சட்டங்கள் பற்றியெல்லாம் கொஞ்சமும் அறிந்தே இராத ஞான சூன்யமாக இருந்தார் சந்திரசேகர். ஆராய்ச்சித் தேவைக்காகக் கொஞ்சம் மண்டைகளை உடைத்துவிட்டேன் என்கிறார்.

சந்திரசேகர் தொடர்ந்தார்..

"இதில பாருங்க. டெம்ரோல் லோப்தான் இந்த டீ கோடீங்க்ல ரொம்ப இம்பார்ட்டன்ட். ஆனா ப்ரைன்ல மத்த பகுதியவிட அதுதான் ரொம்ப காம்பிளிகேட்டட். இப்ப உங்ககிட்ட ஸ்ரீபெரும்புதூர்னு ஒரு வார்த்தைய சொல்றேன்னு வெச்சுக்கங்க. ஆட்டோமேட்டிக்கா உங்களுக்கு ராஜீவ் காந்தி மர்டர், ஒத்தக்கண் சிவராசன், டைகர்ஸ், ராமானுஜர், நாமம் எல்லாம் வரிசையா விரியும். நம்ம ஞாபகத்தில ஸ்ரீபெரும்புதூர் என்பது வெறும் எழுத்துக்களால் மட்டும் ஆனது அல்ல. அது ஒரு கலவை. உங்களுக்கு அங்க ஒரு ஃப்ரண்ட் இருந்தா அவரும் அதில வந்துடுவார். அவரோட போன் நம்பர், அவரோட வழுக்கத்தலை... எல்லாமே ஸ்ரீபெரும்புதூரோட ஞாபகச் சிக்குல இருக்கு. மேரியோட ஞாபகப் பகுதிய எவ்வளவுதான் அழிச்சும்கூட சில நேரங்கள்ல மேரி இருந்துக்கிட்டுதான் இருந்தா. மேரிக்கு ஜான்சன் குடுத்த முத்தம் மகாலட்சுமியின் ஞாபக இடுக்குல சிக்கிடுச்சி. சில நேரங்கள்ல மகாலட்சுமி கர்த்தரேனு அழுவுறா. ஆனா இதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மாத்திடலாம். தாழ்த்தப்பட்ட பெண்ணான மேரி, பிராமின் பொண்ணு மகாலட்சுமியா மாறியிருக்கிறதால் ஏற்பட்டிருக்கிற சிக்கல் பல நேரங்கள்ல இடிக்குது. என்ன செய்றது? ஆயிரம் ஆயிரம் வருஷமா ஊறிப்போன சங்கதிங்க இல்லையா? இன்டர்னல் காம்ப்ளெக்ஸ்.''

க்ரைம் டி.ஸி.க்கு ஒரு கட்டத்தில் ஆத்திரம் தாளவில்லை.

"நான்சென்ஸ்.. 16 பெண்களைக் கொன்னுட்டு நீங்க என்ன புதுவகை பூசணிக்காய் கண்டுபிடிச்ச மாதிரி வியாக்யானம் கொடுக்கறீங்க?'' என்றார்.

"என்ன... ஆஃப்ட்ரால் 16 யூஸ்லெஸ் பொண்ணுகளைக் கொன்னுட்டேன். ஆனா.. இந்த ஆராய்ச்சி சக்ஸஸ் ஆகிட்டா யாருக்குமே மரணமில்ல, புரிஞ்சுக்கங்க. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், மகாத்மா காந்தி இவங்கல்லாம் இறக்கறதுக்கு முந்தி இதைக் கண்டுபிடிச்சிருந்தா, இப்ப அவங்களும் நம்மகூட இருந்து உலகத் தமிழ் மாநாடு பத்தியெல்லாம் கருத்து சொல்லியிருப்பாங்க.''

"போதும் நிறுத்துங்க... இந்த ஹாஸ்பிடலுக்கு சீல் வெச்சுட்டு.. இவரை கோர்ட்டுக்குக் கொண்டு போங்க'' துணை கமிஷனர் கொதித்துப் போனார்.


"'நோ.. நோ அப்படியெல்லாம் பண்ணாதீங்க.. ஹாஸ்பிடலுக்கு சீல் வெச்சுட்டா அப்புறம் ஆக்ஸிஜன் கண்ட்ரோல் இல்லாம மகாலட்சுமி செத்துப் போயிடுவா... எஸ்.பி.எஸ். புளூயட் டயாலிசிஸ் பண்ணனும்..'' அவர் புலம்புவதை யாரும் சட்டை செய்யவில்லை.

சந்திரசேகரைக் கதறக் கதற இழுத்துக் கொண்டு போயினர்.


கருப்பசாமி ஜீப்பில் ஏறுவதற்கு முன் ராமசாமியை அருகில் அழைத்தார்.

"அதுசரி.. நீங்க எப்படி நேத்து சரியான நேரத்துக்கு வந்து என்னைக் காப்பாத்தினீங்க?'' என்றார்.

"என்ன சார், எவ்வளவு நாளா உங்களுக்குக்கீழ வேல பாக்கறேன். உங்க தாட் என்னன்னு புரியாதா? நேத்து உங்க ஆபிஸுக்குப் போயிருந்தேன். மர்மமா செத்துப் போன 16 பேரோட தகவல் உங்க டேபிள் மேல இருந்தது. அதில ஒண்ணு மேரியோட தகவல். மேரி, மந்தாகினி ஹாஸ்பிடல்ல ஒர்க் பண்ணின நர்ஸுனு இருந்தது....

அப்புறம் சுரேஷ் அட்மிட் ஆகியிருந்த ஹாஸ்பிடலுக்குப் போனேன். அங்க நீங்க ஜீப்ல ஏறி உக்காந்து பாலவாக்கம் போப்பா'ன்னு நம்ம சென்ட்ரி காதுல விழுற மாதிரி சொல்லிட்டுப் போயிருக்கீங்க. உங்க ஐடியா புரிஞ்சு போச்சு. மந்தாகினிக்கு வந்ததும், நீங்க சந்தரசேகரைப் பார்க்கறதுக்காக பியூனை அடிச்சுத் தள்ளிட்டு உள்ள போனதா சொன்னாங்க. விஷயம் சீரியஸாயிடுச்சுன்னு நானும் துப்பாக்கியோட உள்ள பாஞ்சுட்டேன்'.' ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் ராமசாமி.

கருப்பசாமி சிரித்தார். "பேசாம ஆராய்ச்சிக்கு உன் மூளைய பயன்படுத்தியிருக்கலாம்.''



ஜீப் பறந்தது.

(முற்றும்)

LinkWithin

Blog Widget by LinkWithin