புதன், டிசம்பர் 23, 2009

தமில் பேசுவது தப்பா? -2 பஞ்ச் டயலாக்!





திரைப்படங்களில் கதாநாயன் ஒரு சில வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்வது பஞ்ச் டயலாக் என்று அழைக்கப்படுகிறது.

சமீபத்தில் ஒரு படத்தில் இப்படியொரு வசனம் கேட்டேன்:

"நான் ஒரு முடிவு எடுத்துட்டா அப்புறம் நானே என் பேச்சைக் கேட்க மாட்டேன்.''

}இது என்ன பரிதாபம் என்றுதான் முதலில் தோன்றியது. நம்மமுடைய பேச்சை இரண்டாவது நபரோ, மூன்றாவது நபரோ கேட்காமல் போவது சரி. நாமே நம் பேச்சைக் கேட்காமல் போவதா? இந்த நிலைமை நமக்கு ஜென்மத்துக்கும் ஏற்படக்கூடாது.

"சாமி கிட்ட சாந்தமா பேசுவேன். சாக்கடைங்க கிட்ட சாந்தமா பேச மாட்டேன்' என்று அதே நடிகரின் அடுத்த அறிவிப்பு இப்போது வெளியாகியிருக்கிறது. ரூம்போட்டு யோசிக்கிறார்கள் என்பது உண்மைதான். அதிலும் இதை பூஜை ரூமில் யோசித்தார்களா? பாத் ரூமில் யோசித்தார்களா என்று அத்தனை உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

"இது எப்படியிருக்கு' என்று பதினாறு வயதினிலே படத்திலேயே ரஜினிக்கு இப்படி பஞ்ச் டயலாக் பேசியிருந்தாலும் இதற்குப் பெயர் சூட்டுவிழா நடத்தியது நான்தான் என்று என் ஞாபகம்.

அருணாச்சலம் படம் துவங்குவதற்கு முன்பு பஞ்ச் டயலாக் என்று சொல்வது புழக்கத்தில் இருந்ததாக எனக்கு நினைவில்லை. அப் படத்தின் அறிவிப்புக்கு ரஜினி பத்திரிகையாளர் சிலரை மட்டும் தன் வீட்டுக்கு அழைத்திருந்தார். பட அறிவிப்பு, யாரெல்லாம் நடிக்கிறார்கள், எங்கெல்லாம் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது இப்படியாகப் பேசி முடித்துவிட்டுக் கிளம்பினோம். ரஜினியிடம் இந்தப் படத்தில் நீங்கள் அடிக்கடி பேசும் வசனம் என்ன என்று கேட்டேன். நான் என்ன கேட்கிறேன் என்று அவருக்கு சட்டென்று விளங்கவில்லை. "பஞ்ச்சாக ஒரு டயலாக் பேசுவீர்களே அது'..

"பஞ்ச் டயலாக்... நல்லா இருக்கில்ல...? பஞ்ச் டயலாக்..' என்று சிரித்தார். ரஜினி அந்த வார்த்தையை அப்போதுதான் கேள்விபடுவதாக பூரித்ததனால் அந்த நிமிடம் வரை அவருடைய அத்தகைய வசனங்களுக்குப் பெயர் சூட்டப்படாதது தெரிந்தது.
பிறகு சுந்தர் சியிடம் கேட்டு, "ஆண்டவன் சொல்றான்.. அருணாசலம் கேட்கிறான்' என்ற பஞ்ச் டயலாக்கை பத்திரிகையில் வெளியிட்டேன். ரஜினியின் பஞ்ச் டயலாக் என்ற வரிகள் என்ற பிரயோகம் அதன் பிறகு, பரவலாகப் பரயோகிக்கப்பட்டது. சிம்பு, தனுஷ், விக்ரம், அஜீத், விஜய் போன்ற பலர் இப்படித் திரும்பித் திரும்பிச் சொல்லும் வசனங்களுக்கும் அந்தப் பெயர் சூட்டப்பட்டது. நடிகர் விவேக் படத்துக்குப் படம் பஞ்ச் டயலாக் என்ற வார்த்தையைப் பிரபலப்படுத்தினார். இப்போது சினிமாவில் விலேஜ் சப்ஜெக்ட், சிட்டி சப்ஜெக்ட் என்பது போல ஒரு வார்த்தையாகிவிட்டது.

இதற்காக நான் பெருமை பட்டுக் கொள்ள வேண்டியதில்லை. ஆப்பிள் எவ்வளோவோ காலமாக கீழே விழுந்து கொண்டிருந்தாலும் அதற்குப் புவியீர்ப்பு விசை என்று பெயர் சூட்டிய நியூட்டனோடு என்னை ஒப்பிட்டுக் கொள்கிற விஷயமல்லவே இது. அதுவுமில்லாமல் இந்த டயலாக்குகள் மீது எனக்கு எப்போதும் அதீத வெறுப்பு உண்டு.

"நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி'' என்பதெல்லாம் எந்த கணக்கு அமைவுகளுக்கும் பொருந்தாதவை. அது சாத்தியமே இல்லாத ஒன்று என்பதாகத்தான் மனது அடித்துக் கொள்ளும். ஒரு தடவை சொல்வது ஒரு தடவை சொல்வதற்குத்தான் சமமாக இருக்க முடியும்.

இப்படி தவறான தமிழை அல்லது தவறான மொழியை சினிமாவில் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படியான வசனங்களின் போது
இன்னொரு ஆபத்தையும் கவனிக்கலாம்.

அப்படி வசனம் பேசுகிறவர்கள் "துளசி வாசம் மாறினாலும் மாறும்.. இந்த தவசி பேச்சு மாற மாட்டான்டா'' என்று பேசுகிறார்கள். "இந்த சாரதிகிட்ட சண்டை வெச்சிக்கிட்டவங்க தப்பிச்சுப் போனதா சரித்திரம் இல்லடா'' என்றோ, "எம் பேரு சிம்பு.. என்கிட்ட வெச்சுக்காத வம்பு'' என்றோ.. "இந்த அண்ணாமலையை பகைச்சுக்கிட்டா இதுதான்டா தண்டனை... இந்த வாங்கிக்கோ டுமீல்'' என்றோ டயலாக் பேசுகிறார்கள்.


இந்த உலகில் யாருமே இப்படி பேசுவதற்கு வாய்ப்பில்லை. "என்னைப் பகைச்சுக்கிட்டா இதுதான்டா தண்டனை' என்று சொல்வதில் நியாயம் இருக்கிறது. "நான் பேச்சு மாற மாட்டேன்டா' என்பானா "இந்த தவசி பேச்சு மாற மாட்டான்டா' என்பானா? தானே தன் பெயரைத் தொடர்ந்து சொல்லிக் கொள்ளும் விபரீதம் தமிழ் மொழிக்குப் புதிது.. எனக்கு உலக மொழிகள் பற்றி தெரியாது. அதிலும்கூட இப்படி இருக்காது என்று நம்புகிறேன். தொடர்ந்து இத்தகைய வசனங்களைக் கேட்கும் குழந்தைகள், அதைப் போல பேசுவதற்கு ஆரம்பிக்கின்றன. "எம்பேரு அஷோக்கு.. இந்தா புஸýக்கு'

என்று பேசுகின்றன. சில பெற்றோர்கள் பூரித்துப் போய் பக்கத்துவீட்டுக்காரர்களை அழைத்துக் காட்டவும் செய்கிறார்கள்.

சில குழந்தைகளோ சினிமாவில் வருகிற மாதிரி அன்று தகராறு செய்த அந்த ஆட்டோகாரனிடம் தம் அப்பா ஏன் டயலாக் பேசவில்லை, சுழன்று சுழன்று சண்டை போடவில்லை என்று மனம் பாதிக்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாத ஒரு மொழிச் சிதைவும் மனச் சிதைவும் அரங்கேறி வருகிறது.

ஒரு சிலர் அஜீத் கால்ஷீட் வேண்டும் என்பதற்காக, விஜய்யை மட்டம் தட்டி சில டயலாக்குகளை எழுதி அவருடைய மனதில் இடம் பிடிக்கிறார்கள்.

விஜய்க்கு "திருமலை' படம் ரிலீஸôன நேரத்தில் "எவன்டா மலை.. நான்தான்டா தல' என்பது போன்ற டயலாக்குகளை எழுதுகிறார்கள். விஜய்யும் அஜீத் ரேஸ் ஓட்டுவதைக் கிண்டல் செய்து, "ரேஸ்ல ஃபர்ஸ்ட்டு மொதல்ல வர்றது முக்கியமில்லடா.. கடைசியில மொதல்ல வர்றதுதான்டா முக்கியம்' என்பார் அவருடைய படத்தில். தியேட்டரில் விசில் பறக்கும். இப்படியான தனிமனித துவேஷத்தை வளர்ப்பதும் தமிழில்தான் அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது.

பஞ்ச் டயலாக் எழுதும் வசனகர்த்தாக்கள் இயக்குனர்கள் மனம் வைப்பர்கலா?

also see in www.koodu.in

LinkWithin

Blog Widget by LinkWithin