ஞாயிறு, ஜூன் 21, 2009

குடும்ப எண் 18!



ஒரு மனிதன் தன் வாழ்நாளில் மீண்டும் ஒரு தரம் மனிதனாவது என்று சொன்னால் கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கும். புக்கர் டி வாஷிங்டன் சுயசரிதையைப் படிக்கும் போது ஆறறறிவு ஆடு மாடு போல நடத்தப்பட்ட ஒருவர் எப்படி மனிதராகப் பரிணமிக்கிறார் என்பதை உணரமுடிகிறது. கரியால் ஒரு கோடு போடுவதற்குக்கூட தெரிந்திருக்காத அந்தக் குடும்பச் சூழலில்} சமூக சூழலில் இருந்துதான் புக்கர் வாஷிங்டன் தஸ்கேஜீ பல்கலைக் கழகத்தை உருவாக்கி மாமனிதனாக உருவாகிறார்.
பார்ப்பதற்கு மனிதர்கள் போல இருப்பதனால் மட்டும் ஒருவரை இன்னொரு மனிதன் என்று மனிதனென்று ஏற்றுக் கொள்வதில்லை. ஆப்ரிக்காவில் இருந்து "ஓட்டிச்' செல்லப்பட்ட ஒரு மனிதக் குழு அமெரிக்காவில் எப்படி விலங்குகள் போல நடத்தப்பட்டது என்பதைச் சொல்லி ஆரம்பிக்கிறது "அடிமையின் மீட்சி' என்ற பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்ட இந்த நூல்.

ஆடு மாடுகளுக்காவது ஓரளவுக்குப் பாதுகாப்பான இடம் இருக்க முடியும், அவற்றின் விலைக்காக. ஆடு மாடுகள் சித்திரவதைக்குப் பயந்து பணிந்து போகத் தெரியாதவை. மனிதனுக்கோ அது தாங்க முடியாத உயிரின் வலி. நம் குழந்தையை சுட்டுவிடுவார்கள், தம்மைச் சிறையில் அடைத்துவிடுவார்கள் என்ற பயம் மனிதனுக்கு இருப்பதால் அவனைப் பணியவைப்பது சுலபம். எந்தவித உரிமை குறித்தும் தெரியாமல் கொட்டடியில் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் மக்களில் ஒருவராக வளர்ந்த புக்கர் டி வாஷிங்டனுக்கு மனிதர்களுக்குப் பெயர் இருப்பதுகூட அதிசயமாக இருக்கிறது. இவர்கள் குடும்பத்துக்கென்று பண்ணையில் ஒரு எண் உண்டு. அது 18. சிறுவயதில் அந்த எண்ணை எங்கு பார்த்தாலும் தன்னால் அடையாளம் கண்டுவிட முடிந்தது என்று அவர் கூறுவதில் இருந்து இதைப் புரிந்து கொள்ள முடியும்.

பள்ளியில் சேரும் ஆர்வம் இவருள் தீயாய் பெருகிக் கொண்டிருக்கிறது. பள்ளியிலோ எல்லோருக்கும் இரண்டு பெயர்கள் அல்லது மூன்று பெயர்கள் இருக்கின்றன. இவரை எல்லோரும் புக்கர் என்று மட்டுமே அழைத்துக் கொண்டிருந்ததால் தனக்குப் படிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுவிடுமோ என்னும் அளவுக்கு அஞ்சுகிறார். ஆசிரியர் ஒவ்வொருத்தராக பெயர் கேட்டுக் கொண்டே வருகிறார். திடீரென்று புக்கர் வாஷிங்டன் என்கிறார். நெடுநாளாக தனக்கு அந்தப் பெயர்தான் போல அவருக்கே அப்போது தோன்றுகிறது. அந்தப் பெயரே அவருக்கு இறுதி வரை நிலைத்துவிட்டது. ஏனென்றால் புக்கருக்கு அவருடைய தந்தையைத் தெரியாது. பின்னாளில் தன் தாய்க்கும் ஒரு வெள்ளையருக்கும் தாம் பிறந்ததாகத் தெரிந்து கொள்கிறார். உள் நாட்டு அரசியல் போர்கள் முடிந்து ஆபரகாம் லிங்கன் ஆட்சிக்கு வந்து சுதந்திரப் பிரகடனம் அறிவிக்கும் வரை நீக்ரோக்கள் அங்கு விலங்குகள் போலத்தான் வாழ்கிறார்கள்.

வெர்ஜினியாவின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதியில் இருக்கும் ஹாம்டன் கல்வி மன்றத்துக்கு இவர் கல்வி கற்கப் பிரயாணிப்பதை விவரிக்கும் புத்தகத்தின் எழுத்துக்களை, நம் கண்ணீர் திரையிட்டு மறைப்பதைத் தவிர்க்க முடியவில்லை. சரியான துணி மணி இல்லை. மரநாரில் இருந்து பின்னி தயாரிக்கப்பட்ட ஆடை, மரப்பட்டையும் பதப்படுத்தாத தோலும் சேர்ந்து உருவாக்கப்பட்ட மடங்காத காலணி, சாக்குப் பை சகிதம் 800 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து போகத் துணியும் ஒரு கறுப்பின சிறுவன், இனவெறி தலைதூக்கி ஆடிக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் எத்தனைத் துன்பங்கள் அனுபவத்திருப்பான் என்பதை கற்பனை செய்து பாருங்கள். வண்டியில் ஏற்றிக் கொள்ள மறுக்கிறார்கள், ஓட்டலில் சாப்பிட அனுமதிக்கவில்லை, தங்குவதற்கு அனுமதிக்கவில்லை... ஏறத்தாழ முக்கால் வாசி தூரத்தை நடந்தே கடக்கிறான். பசியிலும் பனியிலும்.

அவ்வளவு தூரம் கடந்து ஹாம்டன் கல்வி மன்றத்தை அடைந்து அங்கு படிப்பதற்கு அனுமதி கேட்கிறார். பஞ்சத்தாலும் பசியாலும் வாடிப் போய் அழுக்காக கோணிப் பையுடன் நின்று கொண்டிருக்கும் புக்கரை யாரும் ஏறிட்டும் பார்க்கவில்லை. இவருக்குப் பின்னால் வந்தவர்களுக்கெல்லாம் அனுமதி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நமக்கு பள்ளியில் இடம் கிடைக்காமல் போய்விடுமா என்று பதறுகிறார். அந்த நேரத்தில் அங்கிருந்த ஆசிரியருக்கு வழிபாட்டுக் கூடம் சுத்தம் செய்ய வேண்டும் என்று ஞாபகம் வருகிறது. அங்கே நின்று கொண்டிருந்த புக்கரை சுத்தம் செய்ய பணிக்கிறார்.

"இதுதான் வாய்ப்பு என எனக்குப் பட்டது. அது போன்ற ஓர் உத்தரவை அத்தனை குதூகலத்துடன் நான் ஏற்றது இல்லை. கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்யும் பணியை மிகத் திறமையாகச் செய்பவன் நான். வழிபாட்டுக் கூடத்தை மூன்றுமுறைக் கூட்டினேன். பழந்துணி பெற்று நான்கு முறை துடைத்தேன்' என்கிறார்.

இந்த செய் நேர்த்திக்காகத்தான் அங்கு அவருக்குப் படிக்க அனுமதி கிடைக்கிறது. அந்தக் கறுப்புச் சிறுவன் அங்கே இருக்கும் உப்பளத்தில் காலையும் மாலையும் வேலை பார்த்து இடையே படிப்பைத் தொடர்கிறான். உப்பளத்தில் வேலை பார்த்து அதே ஆடையில் படிப்பது சிரமமாக இருக்கிறது. சாமுவேல் ஆம்ஸ்ட்ராங் என்ற ஆங்கிலேயர் அவருக்கு ஆடை கொடுத்து உதவுகிறார். (அந்த நெருக்கம் வாழ்நாள் முழுக்கத் தொடர்கிறது.) அங்கு அவருக்கு இரண்டு போர்வைகள் தருகிறார்கள். அது நாள் வரை அந்த மாதிரி ஒரு ஆடம்பரத்தை அவர் அனுபவித்திராதவர். சுதந்திரம் பெறும் வரை படுக்கை என்பது கூட அவருக்குத் தெரியாது. தரையில் தூசியிலும் தும்பிலும் ஈரத்திலும் ஒரு பன்றியைப் போலவோ மாட்டைப் போலவோதான் உறங்கி வந்தவர். அதனால் இரண்டு போர்வைகளை எப்படிப் பயன்படுத்துவதென்று அவருக்குத் தெரியவில்லை. முதல் நாள் இரண்டு போர்வைகளையும் தரையில் போட்டு அதன் மேல் படுத்துக் கொள்கிறார். இரண்டாம் நாள் இரண்டு போர்வைகளையும் போர்த்திக் கொள்கிறார். மூன்றாவது நாளில்தான் அதை கீழே ஒன்றும் போர்த்திக் கொள்ள ஒன்றுமாகப் பயன்படுத்தியதாகச் சொல்கிறார்.

இப்படியாகப் படித்து ஆசிரியர் பயிற்சி மேற் கொண்டு தன் கிராம மக்களுக்குக் கல்வியின் அவசியத்தைப் போதிக்கிறார். இத்தனை துன்பத்திலும் அவர் ஒரு இடத்திலும் வெள்ளை இனத்தவரின் முரட்டுக் குணத்தைப் பழிக்கவே இல்லை. படிப்பின் மூலமாக அவர் எல்லோரையும் விட சிறந்தவராக மாறுகிறார். ஜனாபதி ரூஸ்வெல்ட் அவரை வெள்ளை மாளிகைக்கு அழைத்து கெüரவிக்கிறார். உலகம் முழுக்க அவருடைய பேச்சைக் கேட்க மக்கள் திரள்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் அவருடைய சுற்றுப் பயணமும் பேச்சும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகிறது.

இறுதி வரி இப்படி முடிகிறது...

எந்த மாநிலத்தில் நான் பிறந்தேனோ, அந்த மாநிலம் என்னை வரவேற்று உபசரித்ததற்காக இரு இனத்தவர்க்கும் என் இதயபூர்வமான நன்றி.
என வரவேற்பளித்த வெள்ளை இனத்தவருக்கும் சேர்த்தே நன்றியைத் தெரிவிக்கிறார். வன்முறையைக் கையில் எடுக்க மிக நேர்மையான காரணம் இருந்தாலும்
ம.ந.ராமசாமியின் இயல்பான மொழி பெயர்ப்பில் நெஞ்சைத் தைக்கும் நூல் இது.

அடிமையின் மீட்சி
புக்கர் டி. வாஷிங்டன்,
நிவேதிதா புத்தகப் பூங்கா,
14, இரண்டாம் தளம், பீட்டர்ஸ் சாலை,
ராயப்பேட்டை,
சென்னை- 14

விலை: ரூ.120

கருத்துகள் இல்லை:

LinkWithin

Blog Widget by LinkWithin