புதன், நவம்பர் 12, 2008

ஒளவை

ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருப்பதில் பல்வேறு இடையூறுகள் இருப்பதை நான் அமுதாவிடம் விளக்கியிருக்கிறேன். அவற்றை ஒரு பொருட்டாகவே அவள் மதிக்கவில்லை.
அமுதா என் மீது அளவுகடந்த அன்பும் மரியாதையும் வைத்திருந்தாள். ஆரம்பித்தில் அதை நான் உணரவே இல்லை.

ரயில் சினேகம் போல இதை ஆபிஸ் சினேகம் என்று நினைத்திருந்தேன். அவள் அப்படி நினைக்கவில்லை. அவள் மீது மரியாதை செலுத்திக் கொண்டிருந்ததை எல்லாம் நான் ரொம்ப நாளாகக் கவனிக்காமல் இருந்துவிட்டது இப்போது வருத்தமாக இருக்கிறது.

நான் சுழலில் சிக்கிய சிறிய மரத்துண்டு போல அவளுடைய நட்பில் இழுத்துச் செல்லப்பட்டேன்.

"சார்... யுனிவர்சிட்டி வரைக்கும் போயிட்டு வரலாமா?''என்றாள். அவளுடைய வண்டியில் இருந்த மழைக் கோட்டை எடுத்துக் கொண்டு என்னுடைய ஸ்கூட்டரிலேயே வந்தாள்.

அவளுடைய ஹெட் ஆப் த டிபார்ட்மென்ட் வகுப்பெடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்கள். வகுப்பு முடிந்து அவர் வரும்வரை நீண்ட படிக்கட்டுகளில் அமர்ந்து காத்திருந்தோம். மழைத் தூறிக் கொண்டிருந்தது. மழைக் கோட்டுக்குள் ஒடுங்கிக் கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.

எதிர்பார்க்காத தருணத்தில் "சொல்லுங்கோ சார்'' என்றாள்.




எதைப் பற்றியாவது சொல்லிக் கொண்டே வந்து அதைப் பாதியில் நிறுத்திவிட்டேனா என்று நான் அவசரமாக நினைவுபடுத்திப் பார்த்தேன். நான் அப்படி நினைப்பதைப் புரிந்து கொண்டவள் போல "ஏதாவது சொல்லுங்க சார்'' என்றாள் கன்னத்தில் கையூன்றி என்னைக் கூர்மையாகக் கவனித்தபடி.

""நிகலாய் கோகலின் "ஓவர் கோட்' மாதிரி நாமே ஆளுக்கு ஒண்ணு மாட்டிக் கிட்டு இருக்கோம்'' என்றேன்.

""அது யாரு நிகலாய் கோகல்?''

நான் நிகலாய் கோகலின் எழுதின "மேல் கோட்டு' சிறுகதை பற்றிச் சொன்னேன். அவள் விழுந்து விழுந்து சிரித்தாள்.

பெண்கள் மட்டும் மிகவும் நம்பிக்கை உள்ளவர்களிடம் மட்டும்தான் இப்படி மனம் விட்டுச் சிரிக்கிறார்கள். இங்கிதம் பார்க்காமல் நாசுக்குக்கான முனைப்பில்லாத சிரிப்பு அது. சிரிப்பைக் கட்டுப் படுத்திக் கொண்டு "அப்புறம்?'' என்று ஆர்வமாகக் கேட்டாள்.

மேல் கோட்டு பற்றியில்லாமல் அங்கு பட்டாணி விற்றுக் கொண்டிருப்பவனைப் பற்றிச் சொன்னாலும் அமுதா ஆர்வமாகக் கேட்டாள். இது அமுதாவின் சுபாவம்.

நேரமாகிக் கொண்டிருந்தது. அவளுடைய மேடம் வகுப்பெடுத்துக் கொண்டிருந்த இடத்துக்கே சென்றோம். பெண்பால் புலவர்கள் பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார் அவர்.

"ஒளவையார் என்ற பெயரில் பல பெண்பால் புலவர்கள் இருந்தார்கள். அதியமானிடம் நெல்லிக்கனி பெற்ற ஒளவை வேறு. முருகனிடம் சுட்டப் பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்று கேட்ட ஒüவை வேறு. சங்க காலத்தில் காதலைப் பற்றிப் பாடிய ஒளவைகளே அதிகம். ஆக, ஒளவைகள் என்றால் பாட்டி என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க வேண்டும். நிறைய இளம் ஒளவைகள் இருந்திருக்கிறார்கள்...''

வகுப்பு நடந்து கொண்டிருந்த அறையின் வராண்டாவில் நடை போட்டவாறு இருந்தோம்.

""நிஜமாகவா சார்?''

"ஆமா'' என்றேன்.

"நான் என்ன கேட்டேன். நீங்க எதற்கு ஆமா'னு சொன்னீங்க?'' என்று சிரித்தாள்.

"ஒளவைதானே?''

""சாரி சார். நான் ஏதோ நச்சரிக்கறதால சும்மாவாவது "ஆமா'னு சொல்லிட்டீங்களோன்னு நினைச்சேன்.''

""உங்களைப் போய் நச்சரிக்கறதா நினைப்பேனா?''

"நினைக்க மாட்டீங்க. ஆனா நான் நச்சரிக்கிறேன்னு எனக்கே தெரியும்.''

"அமுதா, ஒளவை நல்லா இருக்கணும்ணு நெல்லிக்கனி கொடுத்த அதியமான் கதையில ஒளவையை சின்னப் பெண்ணா கற்பனை செய்து பாருங்களேன்''

""நல்லா இருக்குல்ல?'' என்று வியந்தாள்.

"சங்க காலத்தில் இவ்வளவு பெண்பால் புலவர்கள் வேறு மொழிகளில் இருந்தார்களா'னு தெரியல. இங்க இவ்வளவு பேர் இருந்ததிலே இருந்தே பெண்கள் ரொம்ப சுதந்திரமா இருந்தாங்கன்னு தெரியுது. ஒளவையும் அதியமானும் இன்டலக்சுவல் ஃப்ரண்ட்ஸô இருந்திருக்க வாய்ப்பிருக்குனு தோணுது''

""இன்னைக்கு இங்கு வராம போயிருந்தா. இந்த அருமையான விஷயம் பத்திப் பேசாமப் போயிருப்போம் இல்லையா?''

நான் சொல்லுகிற விஷயத்தைக் கேட்டு அளவுக்கு அதிகமாகவே வியந்தாள் அமுதா. அவள் என் மீது வைத்திருக்கிற அன்பும் மரியாதையும் என்னைக் கவனத்துடன் பேசவைக்கும். ஆழம் தெரியாமல் காலை வைத்து விட்ட மாதிரி அஞ்சவும் செய்கிறேன் சில நேரம். அவளுடைய வியப்புக்கு உகந்த விஷயங்களைப் பேச வேண்டும் என்றும் அவள் என் மீது நம்பிக்கைக்கு உரியவனாக என்னை தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் நான் ஓயாமல் போராடுகிறேன்.

சட்டென்று மேகம் கவிழ்ந்து வடிகட்டிய சூரிய ஒளி வளாகம் முழுதும் சூழ்ந்தது. அமுதா மேடத்தைப் பார்த்து பட்ட மேற்படிப்பு முடித்து பட்டம் பெறுவதற்கு விண்ணப்பிப்பது குறித்துப் பேசிவிட்டு வந்தாள்.

அவளை ஹாஸ்டலில் கொண்டுபோய்விடும்போது நன்கு இருட்டிவிட்டது.

திடீரென்று அவளுக்கு மாப்பிள்ளை தேர்வாகிவிடவே, ஆபிûஸவிட்டும் ஹாஸ்டலைவிட்டும் அவள் விலகிக் கொள்ள வேண்டியிருந்தது. எனக்கு அந்தத் திடீர் தனிமை உலுக்கிவிட்டது ஆறுமாதம் ஹாஸ்டல் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் என்கூட நிழல்மாதிரி வியாபித்திருந்தவள் ஏற்படுத்தியிருந்த தாக்கம்.

இடையில் ஊரில் இருந்து அவள் "எனக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு சார்'' என்று போன் செய்த போது ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருப்பதில் உள்ள இடைஞ்சலைப் பற்றி விசனப்பட்டேன்.

அவள் வருத்தப்பட்டது எனக்கு மேலும் வருத்தமாகிவிட்டது.

"அதனால என்ன சார். நான் வந்து உங்களைப் பார்க்கிறேன்''

எனக்குக் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.

"அமுதா நீ ஏன் ஆம்பளையா பிறக்காமப் போனே? என்ன இருந்தாலும் நாம முன்னமாதிரி பேசிக்க முடியும்னு நினைக்கிறியா?''

கொஞ்சமும் நாகரீகம் இல்லாமல் நான் உணர்ச்சிவசப்படுவதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.

"முடியும் சார். நாம எப்பவும் போல இருக்கலாம் சார்... கொஞ்ச நாளாகும் அவ்வளவுதான்''


அமுதா அவளுடைய திருமண அழைப்பிதழை எடுத்துக் கொண்டு என் வீட்டுக்கு வந்தாள். அவளுடைய கணவராகப் போகிற அதிர்ஷ்டசாலியும் கூட வந்திருந்தார்.

என் மகளுக்குக் கரடி பொம்மை, ஸ்வீட் என்று வாங்கிவந்திருந்தாள்.

அவர் என்னுடன் கைகுலுக்கி அறிமுகம் செய்து கொண்டார்.

"என்னுடைய ஒரு ஃப்ரண்ட் வீட்டுக்கு இவங்க வரணும்னும் இவங்களோட ஒரு ஃப்ரண்ட் வீட்டுக்கு நான் வரணும்னும் ஒப்பந்தம். என்னுடைய ஒரே ஒரு ஃப்ரண்ட் இவர்தான்னு சொன்னாங்க. அதான் உங்களை இன்வைட் பண்ண நானும்கூட வந்தேன்'' என்றார்.

"ஹாஸ்டல் வெறுப்புக்கெல்லாம் சார்தான் ஒரே ஆறுதல்'' என்றாள் அமுதா குறுக்கிட்டு.

என் கண்கள் கலங்கின. என் நல்ல தோழிக்கு நல்ல கணவர் கிடைக்கப் போகிறார் என்று பூரித்தேன்.

என் மனைவி டீ எடுத்துக் கொண்டு வந்தாள். எங்கள் வீட்டில் உபசரிப்பு என்றால் டீ தான். இரண்டுபேருமே டீ குடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் என்று எனக்குத் தெரியுமாதலால் நான் அதைத் தடுத்துப் பார்த்தேன்.

அமுதா "இருக்கட்டும் சார், நான் சில வேளைகளில் டீ குடிப்பேன்'' என்றபடி "சொல்லுங்க சார்'' என்றாள்.

நான் எதை எங்கிருந்து தொடங்குவது என்று புரியாமல் ""கார்ட்டூன் படங்கள்ல டாம் அண்ட் ஜெர்ரி எனக்கு ரொம்ப பிடிக்கும். சி.டி. இருக்கு பாக்றீங்களா?'' என்றேன்.

"போடுங்களேன்'' அதிர்ஷ்டக்காரர்தான் சொன்னார்.

பூனையை எலி தொடர்ந்து வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார். மனம்விட்டுச் சிரித்தாள். "பிரில்லியண்ட் காமெடி..'' என வியந்து கொண்டே அமுதா தன் ஹான்ட் பேகிலிருந்து எதையோ எடுத்து என் கையில் திணித்தாள்.

நெல்லிக்காய்.


(ஆனந்தவிகடன் - 2003)

2 கருத்துகள்:

Nilofer Anbarasu சொன்னது…

1. நிஜமாகவே அதியமானிடம் நெல்லிக்கனி பெற்ற ஒளவையும், முருகனிடம் சுட்டப் பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்று கேட்ட ஒüவையும் வேறா?

2. //"ஹாஸ்டல் வெறுப்புக்கெல்லாம் சார்தான் ஒரே ஆறுதல் அமுதா'' என்றாள் அமுதா குறுக்கிட்டு.//

சரியாக புரியவில்லை.

தமிழ்மகன் சொன்னது…

"ஹாஸ்டல் வெறுப்புக்கெல்லாம் சார்தான் ஒரே ஆறுதல்'' என்றாள் அமுதா குறுக்கிட்டு.//

this is correct

LinkWithin

Blog Widget by LinkWithin