செவ்வாய், நவம்பர் 04, 2008

திரைக்குப் பின்னே- 6

விக்ரம் சுமந்த வேதாளம்!


ஒரு மனிதன் வெற்றி பெறுவதற்கு அதிக பட்சம் எத்தனை வாய்ப்புகள் வரை அனுமதிக்கலாம்?
நடிகர் விக்ரம் தன் கடைசிப் படத்தையும் நடித்து முடித்துவிட்டார் இனி அவ்வளவுதான் என்று முடிவு கட்டும் வரை தோல்வியையே சந்தித்தவர்.

கெனி என்று நண்பர்கள் வட்டாரத்திலும் குடும்பத்தினர் மத்தியிலும் அழைக்கப்படும் இவர் தன் பெயரை சினிமாவுக்காக விக்ரம் ஆக்கிக் கொண்டார். ஆரம்பத்தில் சினிமாவை வேதாளமாகத் தன் முதுகில் சுமந்து திரிந்தார். சிறுவனாக மான்ட்போர்ட் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போதே பள்ளி நாடக மேடைகளில் ஆங்கில நாடகங்களில் எல்லாம் அசத்தியவர். நினைவு தெரிந்த நாள் முதல் எமக்குத் தொழில் என்று கனவு கண்ட ஒரு நடிகன்.
ஆனால் அவர் திரைப்பட நடிகராக அடையாளம் காணப்படுவது அத்தனைச் சுலபமாக நிகழ்ந்துவிடவில்லை. இத்தனைக்கும் அவரை வைத்துப் படமெடுத்தவர்கள் எல்லாம் சினிமா உலகின் ஜாம்பவான்கள்.




இயக்குநர் ஸ்ரீதர் இவரை வைத்து "தந்துவிட்டேன் என்னை' படமெடுத்தார். படம் ஓடவில்லை. தொடர்ந்து வெற்றிப்படங்களாக இயக்கிக் கொண்டிருந்தார் இயக்குநர் விக்ரமன். இவரை வைத்து இயக்கிய புதிய மன்னர்கள் அவுட். ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் இவரை வைத்து இக்கிய "மீரா 'காற்றினிலே கரைந்த கீதமாகிவிட்டது. நடிகர் அமிதாப் பச்சனின் ஏபிசிஎல் நிறுவனத்தின் மூலம் தமிழில் தயாரித்த "உல்லாசம்' பிக் பி யை ஸ்மால் பி ஆக்கியது.

தமிழ் சினிமா உலகில் முதல் இரண்டு படங்களில் சாதிக்க முடியாதவர்கள் செண்டிமென்டாக ராசியில்லாதவர்கள் பட்டியலுக்குத் தள்ளப்பட்டுவிடுவார்கள். விக்ரம் சில நடிகர்களுக்கு டப்பிங் கொடுக்க ஆரம்பித்திருந்தார். கையில் படங்களே இல்லை. பாலா இயக்கிய சேது படம் இரண்டு ஆண்டுகளாக இழுத்துக் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் கலசா டப்பிங் தியேட்டரில் "சுந்தரபுருஷன்' படத்தில் நடித்த யாரோ ஒரு நடிகருக்கு டப்பிங் கொடுப்பதற்காக வந்திருந்தார் விக்ரம். முதலில் அவரைப் பார்த்ததும் அடையாளமே தெரியவில்லை. பாதியாக இளைத்திருந்தார். ""சார் என்ன இப்படி இளைத்துப் போய்விட்டீர்களே? உடம்புக்கு என்ன?'' என்றேன்.
"சேது' படத்தில் அப்படியொரு கெட்டப். மொட்டை போட்டு இளைத்து பிச்சைக்காரன் மாதிரி ஒரு வர்றேன். படம் எப்படியும் இந்த மாதத்தில் ரிலீஸôயிடும் படம் பார்த்துட்டு சொல்லுங்க'' என்றார். படம் அதற்குப் பிறகு ஒரு வருடம் ஆகியும் வரவில்லை.

படம் ரிலீஸ் ஆனது. இந்த நூற்றாண்டின் சிறந்த படம் என்றெல்லாம்கூட எழுதினார்கள். விக்ரம் வேதாளத்தைப் பிடித்துவிட்டார். இதன் தயாரிப்பாளர் சினிமாவுக்குச் சம்பந்தமில்லாத ஒரு பில்டிங் கான்ட்ராக்டர். டைரக்டர் பலமுறை ஒரே படத்துக்குப் பூஜை போட்டு நொந்து போனவர். முக்கிய கதாநாயகி இல்லை. இளையராஜா மட்டும்தான் ஒரே துருப்புச் சீட்டு.
ஆனாலும் என்ன விக்ரம் வெற்றி இப்படித்தான் ஆரம்பித்தது.

வெற்றிடச் சுமை!

பிரபலம் என்பது ஒரு பெருங்கனவு. இன்னுமொரு ஐநூறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது பிரபலம் என்று நினைத்துக் கொண்டிருக்கிற பலரும் இன்று சாதாரணமாக வாழ்ந்துவிட்டுப் போனவர்களும் எல்லாம் சரிநிகர் சமானமாத்தான் இருப்பார்கள். காலம் மிகப் பெரிய கம்யூனிஸ்ட். அது எல்லாப் புகழையும் பிரம்மாண்டத்தையும் நிரவி வைத்துவிடுகிறது.
சினிமா புகழுக்கும் தியாகராஜ பாகவதர் காலத்தில் இருந்து நிறைய நினைவுகளைச் சொல்லலாம்.

சினிமாவில் சீட்டுக் கட்டு கோபுரம் போல சிறிய அளவில் புகழேணியில் ஏறிக் கொண்டிருந்தார் ராகசுதா. கடைசியாக ரோஜாவனம், தம்பி போன்ற படங்களில் நடித்தார்.
ஒரு நாள் காலை கண்ணீர் தேம்பலுடன் அவரிடமிருந்து ஒரு போன் கால்.
விஷயம் இதுதான்.

சாலிகிராமத்தில் அவர்களுக்கு ஒரு வீடு உண்டு. அதைப் படப்பிடிப்புக்காக வாடகைக்குவிட்டிருந்தார்கள். அந்த வீட்டில் ப்ளூ ஃபிலிம் எடுப்பதாக ஒரு செய்தியை ஒரு வார இதழ் எழுதியிருந்தது. அந்த வீட்டை ஒரு மானேஜரின் மேற்பார்வையில் விட்டுவிட்டதால் ராகசுதாவோ அவருடைய சகோதரியோ அவருடைய வயதான பெற்றோர்களோ அடிக்கடி போய் பார்த்துக் கொள்ளாமல் விட்டுவிட்டதால் அப்படியொரு தவறு நடந்தும்கூட இருக்கலாம்.
ஆனால் எழுதிய வார இதழோ ப்ளூ ஃப்லிம் எடுப்பதற்காகவே வாஸ்து பார்த்துக் கட்டப்பட்ட வீடு என்று எழுதியிருந்தது. அதாவது அவர்கள் திட்டமிட்டே இப்படியொரு வீட்டைக் கட்டியதாக எழுதியிருந்தது அவர்களைப் பெரிதும் பாதித்தது. அவர்கள் வீட்டில் அப்படியொரு படப்பிடிப்பு நடைபெற்றதாகச் சொல்வது வேறு. அவர்களே அப்படித் திட்டமிட்டார்கள் என்பது வேறு.
ராகசுதாவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, சம்பந்தபட்ட வார இதழில் எனக்குத் தெரிந்த நண்பரிடத்தில் விளக்கினேன். என்னால் ஆன உதவி. மறுப்பு வெளியிட்டது.

"அண்ணா.. அண்ணா' என்று என் மீது அவருக்கு அத்தனை பாசம்.



கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு அவர் மைசூரில் உள்ள சுவாமி நித்யானந்தர் ஆசரமத்தில் சன்யாசினி ஆனார். அத்தனை சினிமா வெளிச்சத்தையும் வழித்துத் தூக்கி எறிந்துவிட்டு, எல்லாச் சொத்துக்களையும் துறந்து பக்தர்களுக்குச் சேவை செய்து வருகிறார்.
ஏன் இந்தத் திடீர் முடிவு என்றேன்.

"புகழ் என்பது வெறுமையால் அடைக்கப்பட்ட பெரிய சுமை. அதை நான் இறக்கி வைத்துவிட்டேன். வாழ்க்கையில் துன்பம் வந்தால்தான் சன்யாசி ஆவார்கள் என்பது தவறான அபிப்ராயம். மிகப் பெரிய மகிழ்ச்சிக்காகவும் சன்யாசி ஆகலாம் என்பதற்கு நான் ஓர் உதாரணம்'' என்றார்.

http://www.uyirmmai.com/Uyirosai/contentdetails.aspx?cid=460

கருத்துகள் இல்லை:

LinkWithin

Blog Widget by LinkWithin