திங்கள், நவம்பர் 24, 2008

புதன்கிழமை

மற்ற விரலையெல்லாம் மடக்கிக் கொண்டு கட்டை விரலை மட்டும் வாயருகே நீட்டி, "கிடைக்குமா?'' என்றார் பழனிச்சாமி.

வாசு நாயகருக்குப் புரிந்தாலும் ஊர்ஜிதமாகத் தெரிந்து கொள்வதற்காக, ""கள்ளா? சாராயமா?'' என்றார்.

"சாராயம்தான்'' என்றார் அப்படியும் அப்படியும் பார்த்துக் கொண்டு.

"அந்தப் பழக்கம் உண்டா?''

"ஆட்டோ ஓட்றவங்களுக்கு அது இல்லாம முடியாதே'' என்றார் தீர்மானமாக.

"இங்க ஏகப்பட்ட பேர் காச்றாங்க''

"காய்ச்சர்தா? ஆந்திரா சரக்கு கிடைக்காதா?''

"இத்தாண்ட எந்தச் சரக்கும் ஒண்ணும் பண்ண முடியாது... ஒருவாட்டி சாப்டு பாரேன்'' வாசு நாயகர் தெம்பாக நடந்தார்.

வானம் பார்த்த பூமி. சுற்றிலும் அடையாளத்துக்கும் பச்சை இல்லாத வயல்கள். நான்கு மணி வெய்யிலும்கூட இவ்வளவு சூடாக இருந்தது. பழனிச்சாமி குத்தகைப் பணம் வாங்குவதற்காக வருடத்துக்கு ஒருமுறை வருவார். வருடத்தில் இரண்டாவது முறையாக வந்ததன் காரணம் அந்த ஒரு பயணத்தையும் நிறுத்திவிடுவதற்காகத்தான். அவசரமாய் நிலத்தை விற்றுவிட்டு சொந்தமாக ஆட்டோ வாங்கிக் கொள்வதாகத் திட்டம்.

வருஷத்துக்கு நான்கு மூட்டை நெல் என்ற கணக்கில் நிலத்தை வாசு நாயகரிடம் குத்தைக்கு விட்டிருந்தார் பழனிச்சாமி. மூட்டைக்கு இன்ன ரேட் என்று பழனிச்சாமி வந்ததும் எண்ணி வைத்துவிடுவார் வாசு நாயகர். நேர்மை, நாணயம் இவற்றையெல்லாம் அவர் நம்பி வந்தார்.

"கொஞ்ச நாள் கழிச்சு வித்தா கொஞ்சம் வெல ஏறும்'' அபிப்ராயம் சொன்னார் வாசு.

"எங்க ஏறுது? எங்கப்பன் காலத்துல இருந்த மாதிரிதான் இருக்குது''

"உம்..'' என நின்று மறுத்துவிட்டு, மேற்கொண்டு நடந்தார். ""உங்கப்பா காலத்துல ஒரு செண்ட் ஏழு ரூபா... இப்ப என்ன வெல தெரியுமா?''

"எவ்ளோ?''

"எர் நூர் ரூபா''

"ஒரு செண்ட்டா?''

"ஆமா..'' என்றார் ரகசியம்போல்.

பழனிச்சாமி இவ்வளவு எதிர்பார்க்கவில்லை. ஒரு ஏக்கரும் பத்து செண்டும்... நூற்றிப்பத்து செண்ட்டுகள்... இருபத்தி ரெண்டாயிரம். சேட்டிடம் இருபதாயிரம். கொஞ்சம் நகை விற்கலாம். சொந்தமாக ஆட்டோ வாங்க போதும்...

"வருஷத்துக்கு நாலுமூட்டை... ஆட்டோ வாங்கினா கேரண்டியா டெய்லி நூர் ரூபா நிக்கும் கைல''

"வாஸ்தவம்தான். ஆனா நிலத்துக்கு மதிப்பு ஏறிக்னே இருக்குதே? ஆட்டோ அப்படி ஏறுமா?''

"இப்ப பொழைக்கறது எப்படி? வெல ஏர்றத பாத்துக்னு இருந்தா வயிர் ரொம்பிடுமா?''

பழனிச்சாமி இப்படிக் கேட்டுவிடவே வாசு நாயகர் மேற்கொண்டு பதில் சொல்வதற்குக் கொஞ்சம் யோசித்தார்.

"விக்கறதால எனக்கொன்னும் இல்ல... வேணும்னா நாளைக்கேகூட ஏற்பாடு பண்றேன். ரோட்டுமேல இருக்கிற நிலம். இப்பவே கம்பெனிகாரனுங்க வந்து கேட்டுட்டுப் போறானுங்க. ஐநூர் ரூபா வெல வித்தாதான் குடுக்கறதுனு ஊரே ஸ்ட்ராங்கா இருக்குது. உங்ககிட்ட இப்ப இருநூர் ரூபாய்க்கு வாங்கி அடுத்த வருஷம் ஐநூர் ரூபாக்கு வித்தா நாளைக்கு ஏண்டா சொல்லலன்னு கேட்றகூடாது. அதுக்குத்தான் சொல்லிட்டேன் ''

பழனிச்சாமி யோசித்தார்.

"கேரண்டியா அடுத்த வருஷம் ஐநூறு விக்கும்னா காத்துக்குனு இருக்கலாம்''

"விக்கும்''

மோசமான முள்வேலிகளைக் கடந்து ஏறி நின்று ""ஆட்டோ எவ்ளோ?'' என்றார்.

"அம்பதாயிரம் வெச்சா அருமையான வண்டி''

"இப்ப வித்தா அவ்ளோ வராதே?''

"அஞ்சு பைசா வட்டிக்கி சேட்டு கிட்ட கேட்ருக்கேன்''

"வட்டிக்கிலாம் வாங்கி என்னாத்த பண்ணுவே? வேணாம்.. வேணாம். கொஞ்சம் பொறுத்து விக்கலாம். நல்ல வெலவந்தா நானே சொல்றேன்''

பழனிச்சாமி பேசவில்லை. அப்போது ஆட்டோ விலையும் ஏறிவிடுமா? என்ற யோசனை.

ஏரிக்கரையின் பனைமர வரிசையில் ஒருவன் வெளிப்பட்டான்.

"ரெண்டு பேருக்கும் குட்றா'' என்றார் வாசு அவனைப்பார்த்து.

புதரில் முப்பத்தைந்து லிட்டர் கேனில் இருந்து ஒரு தகர டப்பாவில் ஊற்றி ஆளுக்கொரு டம்ளர் நீட்டினான்.

பழனிச்சாமி, "எவ்ளோ?'' என்று பாக்கெட்டில் கையைவிட்டவாறு கேட்டார்.

"ரெண்டு பேருக்கும் சேத்து எட் ரூபா''

"உறையே மூன் ரூபாதான்'' என்றார் பழனி.

"சாப்டீங்களே.. இது எப்பிடி? ஒறை எப்படி?''

"நீயே காச்சுவியா?''

"காச்சுவேன். அதுக்கெல்லாம் கொஞ்சம் துட்டு வேணும். வாங்கியாந்து விக்றேன்''

"காச்சறதுனா எப்பிடி?'' ஆர்வமாக விசாரித்தார் பழனி.

"வேணாம் சார். அதெல்லாம் சொன்னா வெறுத்துடுவீங்க''

"அட சொல்லுப்பா... இனிமேபட்டு நா எங்க வெறுக்கறது?''

கொஞ்சம் தயங்கி "இன்னா ரெண்டு மூட்டை வெல்லம். அழுகல் பழம் ஒரு புட்டுக்கூடை. அப்புறம் பாமா பாஸ் அரை மூட்டை'' என்று சொல்லிக் கொண்டு போனான்.

"அடப்பாவி பயிருக்கு வாங்கி போட்ற மாதிரி இருக்குதே'' என்றார் வாசு.

"பழனி, பாமா பாஸýனா என்ன?''

"பயிறுக்குப் போட்ற மருந்து. பாஸ்பேட்டு..''

"சொல்லாதப்பா... போலிஸ் பிரச்னைலாம் எப்பிடி?''

"காச்சும்போது வந்தா அம்பதோ நூறோ வாங்கினு பூடுவான்''

"புடிக்கமாட்டானா?''

"அதெப்படி புடிச்சுடுவான்? அவனை வெட்டி அடுப்புல போட்ற மாட்டாங்களா?''

பழனிச்சாமி சிரித்தார்.

"ஒருவாட்டி உள்ள தள்ளி இடி இடினு இடிச்சாத்தான்டா புத்திவரும்'' என்றார் வாசு பெருமிதமாகச் சிரித்துக் கொண்டே.

"துன்றதுக்கு எதனா இருக்குதா?'' என்று விசாரித்தார் பழனி.

"இருக்குது. உங்களுக்கு அதெல்லாம் வேணாம்'' என அவனே நல்லெண்ணம் கருதி தவிர்த்தான். தூரத்தில் கூர்ந்து பார்த்துவிட்டு "உங்க வாய் முகூர்த்தம் பலிச்சுடுச்சு. இன்னிக்கு இன்னா கிழம?'' என்றான் வாசுவை.

"புதன்கிழம''

"இன்னிக்கி எதுக்கு வரான் போல்சு?''

"போலீசா? எதா வர்றான்?'' என்றார் பழனி.

"வர்ற சனிக்கிழமதான் மாமூல். இன்னிக்கும் வர்றாம்பாரு...''

"சரி நாங்க வர்றோம்'' என்று இருவரும் நடந்தார்கள். ""எங்க போலீஸ் காணமே?'' என்றார் பழனி.

"நம்ம கண்ணுக்கெல்லாம் தெரியாது. இதே லைன்ல இருக்கவனுக்குத்தான் அதெல்லாம் தெரியும்''

ஆட்டோ ஓட்டும் போதுதான் எப்.சி. பண்ணிட்டியா, டாக்ஸ் கட்டிட்டியானு உயிரெடுப்பானுங்க. இங்கே கூடவா? என்று நினைத்துக் கொண்டே நடந்தார்.

"போலீஸ் மேலயே மரியாதை போய்ட்து'' என்றார் பழனி.

"இன்னா பண்றது ஏதோ இல்லாத கொறைதான் அவனுக்குத் தேவையான்து கெடச்சிட்டா ஏன் இப்டி பண்றான்? திருடங்கூட எதுக்காகத் திருட்றான்?'' என்று கடைசியில் ஒரு கேள்வியைக் கேட்டார், போலீûஸத் திருடனுக்கு ஒப்பிடும் பிரக்ஞை இல்லாமலேயே.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

LinkWithin

Blog Widget by LinkWithin