வெள்ளி, ஆகஸ்ட் 14, 2009

சாருலதாவின் உலகம்!


நாம் யாரும் தனிமைச் சிறையில் அகப்பட்டுக் கிடக்கவில்லை. திசை மாறிச் சென்று ஏதோ தீவில் தரைதட்டி தனிமையில் வாழ நேரவில்லை. ஆனால் தனிமை வாட்டுவதாக வருந்தாத மனிதர்கள் உலகில் எத்தனை பேர்? சரியாகச் சொல்லப் போனால் இந்த 600 கோடி பேருமே ஏதாவது ஒரு தருணத்தில் தனிமையால் வாடியதாகப் புலம்பியிருக்கிறார்கள். தனிமை என்பது என்ன? உலகில் இருக்கும் 600 கோடி பேரில் நம்மைப் புரிந்து கொண்ட ஒருத்தரும் அமையாமல் தவிப்பதுதான். அப்படி இருக்கமுடியுமா என்று யோசிக்கலாம். ஆனால் அப்படி அமைந்துவிடும் நினைத்துப் பார்க்க முடியாத தருணங்களால் ஆனதுதாக இருக்கிறது வாழ்க்கை.

தேர்ந்த இணை என்பது உடலின் தனித்து இயங்கும் இன்னொரு பகுதியாக இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் இணையை வாழ்நாளெல்லாம் தேடித் தேடிச் சோர்ந்து போகிறார்கள். எல்லா அம்சங்களிலும் ஒத்துப் போகிற ஒரு இணை, ஒரு சகா, அந்த மறு பாதியை அடைய முடியாமலேயே போராடித் தோற்றுக் கொண்டிருப்பதாகப்படுகிறது. மனிதன் எழுதத் தொடங்கிய காலத்தில் இருந்து காதல் காவியம் படைத்தபடி இருக்கிறான். அணையாத தீபமாக மனித இனத்தின் கடைசி கட்டம் வரை இந்த நெருப்பு சுடர்விட்டபடி இருக்கும் என்றே தோன்றுகிறது. ஏனென்றால் முழுமையான அந்த இணை, காலம் தோறும் கண்ணா மூச்சி காட்டிக் கொண்டே இருக்கிறது. தனிமை கொடியது. அதுவும் இளம் பருவத்தில் தனிமையில் வாடுவது வற்றிய ஓடையில் இருந்தபடி மழைக்காக ஏங்கும் மீனின் நிலைமைக்குச் சமம்.

சென்ற நூற்றாண்டின் முதல் ஆண்டில் ரவீந்தரநாத் தாகூர் எழுதிய சிறிய நாவல் சிதைந்த கூடு.

இளம் மணப் பெண் சாருலதா. அவளுடைய கணவன் பூபதி பத்திரிகை நடத்துவதில் பித்து பிடித்தவனாக இருக்கிறான். யாராவது அவனுடைய எழுத்துகளைப் பாராட்டி அவன் தொடர்ந்து பத்திரிகையாளனாக இருக்கும்படியாகச் செய்து கொண்டே இருக்கிறார்கள். மனைவியின் தனிமையை அவன் உணர்ந்தானில்லை. யாரோ சுட்டிக் காட்டும்போதுதான் அதை அவன் நினைத்துப் பார்க்கிறான். உடனே தன் உறவினன் ஒருவனை அவனுடைய மனைவி சகிதம் தன் வீட்டில் வந்து தங்கியிருக்க ஏற்பாடு செய்கிறான். ஆனால் வந்து தங்கும் உமாபதியும் அவன் மனைவி மந்தாகினியும் பவுதீக ஆதாரமாக இருக்கிறார்களே தவிர மனோரீதியான பரிவாக தோன்றவில்லை.

காலப் போக்கில் உமாபதி பத்திரிகை சந்தா போன்ற விஷயங்களில் ஊழல் செய்து பூபதிக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துபவனாக இருக்கிறான். மந்தாகினி சாருலதாவுக்கு ஏற்படுத்தும் மனோரீதியான நஷ்டம்தான் கதையின் உயிர்.

பூபதிக்கு அமல் என்ற தம்பி இருக்கிறான். சாருலதாவும் அமலும் போட்டி போட்டுக் கொண்டு கட்டுரைகள் எழுதுகிறார்கள். அதை ஒருவரிடம் ஒருவர் பகிர்ந்து கொள்ளும் வெட்கம் ததும்பும் தருணங்கள் சுவையானவை. வீட்டுக்குப் பின்புறம் இருக்கும் தோட்டத்தில் அமர்ந்து அந்தத் தோட்டத்தை எப்படி புதிதாக வடிவமைக்கலாம் என்று திட்டமிடுகிறார்கள். எங்கே குளம் வெட்ட வேண்டும்.. எங்கே படகு நிறுத்த வேண்டும். எங்கே என்னென்ன மரங்கள் நட வேண்டும் என்றெல்லாம் திட்டமிடுகிறார்கள். சிறிய சப்போட்டா மரத்தின் நிழலில் அமர்ந்து அவர்கள் உலவும் கற்பனை உலகம் அவர்களுக்கு மட்டுமே ஆனது.

ஆனால் மந்தாகினி வந்த பின்பு இருவர் மட்டுமே இருந்த அந்த உலகில் மூன்றாவது நபரின் இடையூறு ஏற்படுகிறது. அமல், மந்தாகினியிடமும் பேசுகிறான். அது சாருலதாவுக்குப் பிடிக்கவே இல்லை. பொஸஸிவ்னஸ் அவர்களுக்குள் மெல்லிய இடைவெளியை ஏற்படுத்துகிறது. அதனால் ஏற்படும் வரிசல் அவளை விபரீத கற்பனைகளுக்கு இட்டுச் செல்கிறது. மந்தாகினியும் அமலும் தவறாகப் பழகுகிறார்களோ என்றும் எண்ணுகிறாள். அளவுக்கு மீறிய அன்பின் குரூரம் அது. அவளுடைய மன உலகம் அமலனிடமிருந்து மெல்ல நழுவுகிறது. அண்ணன், தன்னையும் சாருலதாவையும் சேர்த்துச் சந்தேகிப்போரோ என்று வருந்துகிறான் அமலன். அண்ணனை எதிர் கொள்ள முடியாமல் குற்ற உணர்வுடன் தயங்கி விலகுகிறான். பூபதி, சாருலதா, அமலன், மந்தாகினி என்ற நால்வரும் ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாமலேயே நான்குவிதமான கருத்துகள் உருவாகி நால்வரையும் அலைக்கழிக்கிறது.

அதிகம் பாதிக்கப்படுவது சாருலதா. அவளுக்குக் கணவன், மந்தாகினி, அமல் எல்லோர் மீது ம் வெறுப்பு கவ்வுகிறது. உமாபதியின் ஊழல் காரணமாக அவனும் மந்தாகினியும் வீட்டைவிட்டு வெளியேறிவிடுகிறார்கள். அமல் கல்யாணம் நிச்சயமாகி, இங்கிலாந்துக்குப் படிக்கப் போய்விடுகிறான். பத்திரிகை தொழில் நசிந்த நிலையில் பூபதி மைசூரில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகைக்கு ஆசிரியனாகக் கிளம்புகிறான்.

நாவலின் கடைசி காட்சி..

மைசூருக்கு நீ வேண்டாம் அங்கு உனக்கு தனிமையாக இருக்கும் என்கிறான் பூபதி. சாருலதா எங்கே இருந்தால் தனிமை என்று வாசகர்களே குழம்பும் விசித்திர கட்டம்.

நானும் வருகிறேன் என்கிறாள் சாருலதா. ஏற்கெனவே தனிமைகள் தந்த வடு அப்படிச் சொல்ல வைக்கிறது.

கொஞ்சம் யோசித்து பூபதி சரி நீயும் வா என்கிறான்.

அவளுக்குத் தனிமையை எங்கு அனுபவித்தால் என்ன என்ற கண நேர யோசனை.

நான் இங்கேயே இருந்துவிடுகிறேன் என்கிறாள்.

கதை முடிந்துவிடுகிறது.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தாகூர் இந்த நாவலை எழுதியிருக்கிறார். சாருலதாவின் தனிமையும் மனப் போராட்டங்களும் மைத்துனனான இனிமையான கனவு நாள்களும் மிக எளிமையாக விவரித்திருக்கிறார். எழுத்தாளர் திலகவதி ஐ.பி.எஸ்.ஸின் மொழியாக்கம் இருபதாம் நூற்றாண்டின் செல்வந்தர் குடும்பத்துப் பெண்ணின் சூழலை வடித்துக் காட்டுவதாக இருக்கிறது.

சத்யஜித் ரே இக் கதையில் சில மாற்றங்களுடன் சாருலதா என்ற பெயரில் படமாக எடுத்தார். இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதி இந்தியப் பெண்களின் புரிந்து கொள்ளப்படாத பக்கங்களை இந்த நாவல் படம் பிடித்தது. அதை ரே திரைப்படமாக அலங்கரித்தார்.

சிதைந்த கூடு
ரவீந்திரநாத் தாகூர்
தமிழில் : திலகவதி
விலை 60

அம்ருதா பதிப்பகம்,
5, ஐந்தாவது தெரு,
எஸ்.எஸ்.அவின்யூ,
சக்தி நகர், போரூர்,
சென்னை
போன்- 2252 2277

1 கருத்து:

RAGUNATHAN சொன்னது…

நல்ல கதை போல இருக்கு. வாங்கி படிச்சுட்டு வாரேன். :)

LinkWithin

Blog Widget by LinkWithin