ஞாயிறு, மே 13, 2012

கிருஷ்ணா டாவின்ஸிக்காக சென்னையில் ஒரு இரங்கல் நிகழ்ச்சி நடந்தது. அதைப்
பற்றி ஜூனியர் விக்டனில் நான் ஒரு பக்கத்தில் எழுதினேன்.  அது ...


கிருஷ்ணாவும் டாவின்ஸியும்

கிருஷ்ணா டாவின்சி... பத்திரிகைகள் வாசிக்​கும் பழக்கம் உள்ள அனை
வருக்கும் அறிமுகம் ஆன பெயர்!
இளம்வயதிலேயே மரணத்தைத் தழுவிய அவரை நினைவு கூர்​வதற்கு நிறையச்
செய்திகள் இருந்ததை, ஞாயிற்றுக்​கிழமை சென்னையில் நடந்த அவருக்​​கான
நினைவேந்தல் நிகழ்ச்சி வெளிப்படுத்தியது. தமிழில்வெளியாகும் அத்தனை
செய்தி நிறுவனங்​களில் இருந்தும் வந்திருந்து அரங்கை நிறைத்திருந்தனர்
பத்திரிகை​​யாளர்கள்.
கிருஷ்ணாவின் சகோதரியும் எழுத்தாளருமான உஷா, ‘கிருஷ்​ணா​வின் முதல்
பள்ளிநாள் நினை வுகளில் இருந்து அவர் மரணப்படுக்கையில் பயமில் லாமல்
புன்னகைத்தது’ வரை நெகிழ்ச்சியாக எடுத்து ரைத்தார். ‘கிருஷ்ணா
டாவின்சியின் புன்னகை ஒரு ஞானியின் புன்னகையைப் போல இருக்கும்’ என்றார்
எழுத்தாளர் மதன். ‘மரணத்தைக் கண்டு கலங்காத, அதை வாழ்வின் இன்னொரு
தரிசனமாகப் பார்த்தவருக்கு கிருஷ்ணா என்று பெயர் வைத்தது
பொருத்தமானதுதான் ’ என்று, அவருடைய தந்தை பெருமைப்பட்டார்.
தொடர்ந்து பேசிய பலரும் கார்கில் போரின் போது கிருஷ்ணா, நேரடி ரிப்போர்ட்
செய்தது, இலங்கை சென்று பிரபா​கரனின் நேர்காணலை எடுத்து வந்தது, ஒரு
குறிப்பும் இல்லாமல் ரஜினியின் பேட்டியை ஆறு வாரங்களுக்கு எழுதி
ரஜினியிடம் பாராட்டுப் பெற்றது என்று சிலாகித்​தார்கள்.
கிருஷ்ணா டாவின்சியின் குழந்தை நேயா நடனமாட இவர் கிடார் இசைத்துப் பாடும்
வீடியோ ஒன்றைத் திரைஇட்டார்கள். எல்லா நேரமும் குழந்தையுடன் விளையாடி,
குழந்தைக்காகப் பாடி, குழந்தையோடு சுவரெல்லாம் கிறுக்கி மகிழ்ந்த
நினைவுகளை பார்க்க முடிந்தது.  சினிமா, அரசி​யல், சூழலியல், புத்தகங்கள்,
இலக்கியம், விளையாட்டு, பொருளாதாரம், அறிவியல் என அனைத்துத் துறை யிலும்
அவருடைய எழுத்து முத்திரை இருந்தது. இசைப்பதிலும் பாடுவதிலும் அவருக்கு
இருந்த இன்னொரு முகம் நெருங்கிப் பழகியவர்களுக்கே தெரியும். இறுதிக்
காலத்தில் இசைபற்றியே அவர் நிறைய எழுதினார். ‘இசையாலானது’ என்ற நூலும்
அக்கூட்டத்தில் வெளியிடப்பட்டது. இயக்குநர் லிங்குசாமி வெளியிட குழந்தை
நேயா பெற்றுக் கொண்டாள். ‘‘நேயாவின் எதிர்காலத்துக்காக எம்மாதிரியான
உதவியும் செய்யக் காத்திருக்கிறேன்’’ என்ற லிங்குசாமியின் அறிவிப்பும்
‘‘கிருஷ்ணா டாவின்சியின் பெயரில் பத்திரிகையாளர் விருது வழங்கப்பட
வேண்டும்’’ என்ற ‘பாலை’ செந்தமிழனின் கோரிக்கையும் நிறைவேற்றப்பட வேண்டிய
ஆத்மார்த்தமான செயல் திட்டங்கள்.
விஜய் டி.வி.யில் நடிகர் சூர்யா நடத்தும் ‘கோடீஸ்​வரன்’ நிகழ்ச்சிக்கான
ஒத்திகையை கிருஷ்ணா டாவின்சியை வைத்தே செய்திருக்கிறார்கள். அதில்
‘உங்கள் பெயரில் டாவின்சி இணைந்ததற்கு என்ன காரணம்’ என்கிறார் சூர்யா.
புன்முறுவலோடு அவருடைய பதில்: ‘‘டாவின்சியை மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்
என்பார்கள். ஜாக் ஆஃப் ஆல் சப்ஜெக்டாக.. அதாவது எல்லாவற்றிலும்
நுனிப்புல்லாவது மேயலாமே என்றுதான் வைத்துக் கொண்டேன்’’
அது, கிருஷ்ணா டாவின்சியின் தன்னடக்கம்.!

1 கருத்து:

சித்திரவீதிக்காரன் சொன்னது…

தங்கள் பதிவின் மூலம் கிருஷ்ணா டாவின்சி இறந்ததை அறிந்தேன். அவரைக்குறித்த பதிவு மனதை நெகிழ்த்தியது.

LinkWithin

Blog Widget by LinkWithin