திங்கள், டிசம்பர் 17, 2012

தமிழ் மகனின் படைப்புலகம் : ” ஆண்பால் பெண்பால் “ நாவலை முன் வைத்து….


சுப்ரபாரதிமணியன்

Share

பொதுவாக இந்திய  வெகுஜன இதழ்களில் குடும்பம், திருமணம், மணமுறிவு, மன முறிவு, பிரிவு, கூடுதல் சம்பந்தமான லட்சக்கணக்கான தொடர்கதைகள் இது வரை வெளிவந்திருக்கும்.பெரும்பாலும் இந்துவா சிந்தனைகள், சடங்குகளின் மேன்மை, இந்தியர்களின் குடும்ப்ப் பெருமை பற்றி சிலாகிப்பவை . இது தமிழிலும்  சாத்தியமாகியுள்ளது.       தமிழ் மகனின்  “ ஆண்பால் பெண்பால்” நாவலில் மணமுறிவு சார்ந்த நுணுக்கமான உளவியல் சார்ந்த விசயங்கள் ஆக்கிரமித்திருருப்பதைக் குறிப்பிடலாம்.
பலவீனமான குடும்ப அமைப்புகளின் அடையாளம் இந்த மண முறிவு. மேற்கத்திய நாட்டுக்குடுமபங்கள் இந்த பலவீன்ங்களைக்கொண்டவை. எனவே மண விலக்கு அங்கு சாதாரணமாகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில்   5 முதல் 10 ஆண்டுகளே திருமண உறவு பெரும்பான்மையாக நீடிக்கிறது பிறகு மண விலக்கும், மறுமணமும் சாதாரணமாகிறது .இது பல இடங்களில் ஒரு முடிவு என்பதாகிறது. இன்னும் பல விசயங்களில்  புது தொடக்கம் என்றாகிறது. கருக்கலைப்பை அங்கீகாரம் செய்யாத சில கிறிஸ்துவ நாடுகளைப் போல்  மணவிலக்கை அங்கீகரிக்காத சில கிறிஸ்துவ நாடுகளும் உள்ளன. இந்தியாவின் பெருநகரங்களில் மணவிலக்கு  இது சாதாரணமாகி வருகிறது. இடம்பெயர்ந்து வந்து நகரங்களில் வாழும் தொழிலாளி வர்க்கத்தில் இது அதிகரித்து வருகிறது..எனக்குத்தெரிந்த ஒரு இளைஞன் தினமும் காதலிக்கு     நூறு குறுஞ்செய்திகளையாவது அனுப்புவான்.இரண்டாண்டுகளுக்குப் பிறகு அவர்கள் பிரிவை ஒரு குறுஞ்செய்தியால் கூட பகிர்ந்து  செய்யாமல் விலகிக் கொண்டார்கள்.
இந்த நாவலின்  மையமான இந்த மணமுறிவு சார்ந்த விசயங்கள் உளவியல் பார்வையோடு சொல்லப்படுவதற்கு ஆதாரமான கதாபாத்திரங்களாக தமிழ்மகனின் முந்திய “ வெட்டுப்புலி “ நாவலில் தியாகராஜன், ஹேமலதா மற்றும் கிருஸ்ணப்பிரியா, நடராஜன் ஆகியவற்றைக் கூறலாம். ரசனை வேறுபாடு , கொள்கை வேறுபாடு அவர்களிடம் பிரிவை உருவாக்குகின்றன.தியாகராஜன் கடவுள் மறுப்பாளன், ஹேமலதா தீவிரமான பக்தை. திருமண உறவில் இது பெரிய சங்கடம் தருகிறது. அவள் வேறு ஆண் நட்பும் கொள்கிறான். தியாகராஜன் புதுவை அரவிந்தரின் பக்தனாகிற சரிவு காட்டப்படுகிறது. தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சார்ந்த நடராஜன் தான் காதலிக்கிற பெண் கிருஸ்ணப்ரியா,  பிராமண ஜாதியைச் சார்ந்தவள் என்பதால் அவளிடமிருது விலகி வேறு பெண்ணை திருமணம் செய்து குடும்பச் சிக்கல்களால் மனப்பிறழ்வு நோய்க்கு ஆளாகிறான்.இரண்டிலும் நிகழும் சரிவுகள் எதார்த்தமாக இருந்தாலும் மனதிற்கு சங்கடம் தருகிறது. காரணம் அதை திராவிட இயக்கச் சரிவாக அடையாளம் கண்டு கொள்ள முடிவதால்தான்.
தமிழ்மகனின் நான்காவது நாவலான “ ஆண்பால் பெண்பாலி”ல் இந்த மணமுறிவு  .ரசனை வேறுபாட்டால், உடல் சார்ந்த குறையால் ( ப்ரியாவிற்கு வெண்புள்ளி, அருணுக்கு ஆண்மையில்லாத் தன்மை) அமைகிறது. அவளின் எம்ஜிஆர் பற்றிய ஈடுபாடு, எம்ஜிஆர் சிவாஜி படப்பாடல் ரசனைமுரண் , சசிரேகா, அருணா என்ற பெண்களுடன் அவனைச் சேர்த்துப் பேசுவது,  தங்க செயின் பறிப்பின் போது அவனின் கதாநாயக ஆவேசமின்மை, புலனாய்வு நிறுவனம் மூலம் அவளின் நடத்தையை அவன் அறிய முயல்வது, குழந்தைப்பேற்றுக்கான புனிதப்  பயணங்கள், எம்ஜிஆர் ஆவி ஆக்கிரமிக்கப்பட்ட ப்ரியா எம்ஜிஆர் தமிழர் எனபதை நிருபிக்க அவளின் பயணங்கள், தோல்வி என்று தொடர்கிறது. எம்ஜிஆர் ஆவியோடு ப்ரியா தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறாள். மனபிரமை. எம்ஜிஆர் படித்தப் பள்ளி, தங்க் பஸ்பம் செய்த இடங்கள், தேர்தல் கால பிரச்சார இடங்கள் என்று தீர்த்த யாத்திரை செல்கிறாள்.   அருண் ஆணின் மன்னிப்பு, பெருந்தன்மை எல்லாம் காட்டுகிறான்.உறவுச் சிக்கல்களும், உளவியல் பாதிப்புகளும் அவளை மன நோயாளியாக்குகிறது. அருண் மனவிலக்கும் பெறுகிறான். அவள் குழந்தைப் பேறு அடைய முடியாதது பற்றி அவனுக்கும் சங்கடங்கள் இருக்கின்றன.
இந்நாவலில் சுமார் 10 சம்பவங்கள் அருண், ப்ரியா  பார்வைகளில் திருமபச் திரும்பச் சொல்லப்படுகின்றன. ப்ரியாவின் பார்வை அழுத்தமாக அமைந்துள்ளது. நேர்கோட்டை சிதைக்கிறது  ப்ரியா சொல்வதாக பிரமிளா எழுதுவது, அருண் சொல்வதாக ரகு எழுதுவது என்று கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நாவலினை எழுதியவன் நானல்ல என்கிறார் தமிழ் மகன். மனுஷ்யபுத்திரனுக்கு ராயல்டி தரவேண்டியதில்லையான  மகிழ்ச்சி. இது விளையாட்டாகிறது. பிரதி மாத்திரம் பிரதானமாகிறது.  பெருங்கதையாடலினை இப்படி . கட்டுடைக்கிற பின்நவீனத்துவ அம்சங்களை இந்த நாவல் அதன் வடிவ அமைப்பில் பெற்றிருக்கிறது.
திராவிட அரசியல், திராவிட திரைப்படம், அதன் முக்கிய பிம்பமான எம்ஜிஆர், ப்ரியா அருண் திருமண வாழ்க்கை,  நவீன வாழ்க்கையின் அம்சங்கள் என்று பல அடுக்குகளை இந்த நாவல் கொண்டிருந்தாலும் அதன் ஊடாக வரும் கதாபாத்திரங்களின் எண்ணிக்கை குறைவே. இந்த அடுக்குகளில் இன்னும் நிறைய கதாபாத்திரங்கள் இணைந்திருந்து இதை வேறு பரிமாண நாவலாக்கியிருக்கும் போக்கு இல்லாமல் இரு கதாபாத்திரங்களின் குரலில் திரும்பத்திரும்ப ஒலிப்பது பலவீனமே.பல  ஆண்டுகளாக பத்திரிக்கையாளராக தமிழ் மகன் பணிபுரிவதால் கடைசி  வாசகனையும் சென்றடையும் எளிமையும், சுவாரஸ்யமும் இதிலும் உள்ளது, அதுவும் திரைப்படத்துறை சார்ந்த பத்த்ரிக்கையாளனாக இவர் பணியாற்றி பல கட்டுரைகள், நூல்கள் எழுதியிருப்பதால் இங்கு இடம் பெறும்  திரைப்பட உலகம் சார்ந்த தகவல்கள், அனுவங்கள் இந்த நாவலின்  வாசிப்பினை சுவாரஸ்யமாக்குகிறது. சுஜாதாவின் பாதிப்பில் இவரின் சிறுகதைகள் சொல்லும் தன்மை இருப்பதாய் பலர் சொல்வதுண்டு. இந்த சுவாரஸ்யத்தின் மூலம் அது போன்ற உரைநடையாலும் எள்ளலாலும் தொடர்ந்து இந்த நாவலிலும் சாத்தியமாகியிருக்கிறது. சமகால அரசியல் நிகழ்வுகள், பதிவுகளை இந்த நாவலிலும்  சரியாக அனுபவ சாத்தியமாக்கியிருக்கிறார். சரித்திரமும், தத்துவமும், அறிவியலும். சமகால அரசியலின் பதிவுகளும் இவரின் மொத்தப் படைப்புகளின் பலமாக அமைகின்றன.
பத்திரிக்கை உலகம் சார்ந்த அலுப்பான பணிகளை மீறி தமிழ் மகன் தொடர்ந்து படைப்பிலக்கிய முயற்சிகளில்  அதற்காக நேரம் ஒதுக்கி, குடுமபத்தை ஒதுக்கி விட்டு ஈடுபடுவது அவரின் 4 நான்கு நாவல்கள், இரு சிறுகதைத் தொகுப்புகளின் மூலம் வெளிப்ப்ட்டிருக்கிறது. தமிழக அரசின் விருதுகள், கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் சிறந்த நாவலாசிரியருக்கான இவ்வாண்டின் விருது, நாகர்கோவில் மணி நாவல் விருது, ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது  போன்றவை  மூலம் கவுரப்படுத்தப்பட்டிருக்கிறார். இவரின் திரைப்பட அனுபவங்களும் அது சார்ந்த திரைப்பட முயற்சிகளும் இன்னுமொரு பரிமாணமாக வெளிப்படும் சாத்தியங்கள் மகிழ்ச்சியானதே.
( கோவை இலக்கியச் சந்திப்பு  ‘ தமிழ் மகனின் படைப்புலகம்” பற்றிய நிகழ்ச்சியில் ” ஆண்பால் பெண்பால் “ நாவல் பற்றிய சுப்ரபாரதிமணீயனின் உரையின் ஒரு பகுதி இது. ” வெட்டுப்புலி “ நாவல் பற்றி எம். கோபாலகிருஸ்ணன், சி ஆர் இரவீந்திரன் ஆகியோரும், அவரின்
” சிறுகதைகள் ” பற்றி கோவை ஞானியும், அவரின் படைப்பிலக்கிய  செயல்பாடுகள் பற்றி இளஞ்சேரலும் பேசினர். சு.வேணுகோபால், அறிவன், பொதியவெற்பன், நகைமுகை தேவி, காசுவேலாயுதம், அவைநாயகன், ஆத்மார்த்தி, தியாகு உட்பட பலர் கலந்து கொண்டனர்)

கருத்துகள் இல்லை:

LinkWithin

Blog Widget by LinkWithin