செவ்வாய், செப்டம்பர் 08, 2009

பெரிய மனிதர்.. சின்ன வீடு!

எழுத்தாளர் ஜெயகாந்தனுடன் இரண்டு முறை பேசியிருக்கிறேன். ‘ஊருக்கு நூறு பேர்', ‘பாவம் இவள் ஒரு பாப்பாத்தி', ‘ஆயுத பூஜை' என்று அவருடைய லட்சியம் பேசும் கதைகளைத்தான் முதலில் படித்திருந்தேன். "சில நேரங்களில் சில மனிதர்கள்', ‘கங்கை எங்கே போகிறாள்', ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' போன்ற அதற்கு முந்தைய நாவல்களில் இன்னும் கொஞ்சம் அழுத்தமான மன உணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டியிருப்பதாக ஒரு மேலோட்டமான அபிப்பிராயம் இருந்தது. இந்த வாசிப்புப் பின்னணியில்தான் ஜெயகாந்தனைச் சந்தித்தேன்.
முதல் முறை பேசியது டெலிபோனில்.
போலீஸ் செய்தி என்ற புலனாய்வு பத்திரிகையில் பணியாற்றியபோது அந்தப் பத்திரிகையின் ரத்தவாடையைப் போக்கிவிட நினைத்து நான் எடுத்த முயற்சியின் ஒரு பங்காக சிலவிதமான குற்றங்களுக்கு எழுத்தாளர்களின் கருத்துகளை வாங்கிப் போடலாம் என்று யோசனை சொன்னேன். உதாரணத்துக்குக்கற்பழிப்பு' என்ற குற்றம் குறித்து சேலம் அருள்மொழி, ஜெயகாந்தன் இருவரையும் பேச வைக்கலாம் என்று திட்டமிட்டேன். ஜெயகாந்தனிடம் இதைச் சொன்னபோது "நான் இப்போது பத்திரிகைகளுக்கு எழுதுவதையோ, பேசுவதையோ தவிர்த்துவிட்டேன்'' என்று கூறிவிட்டார்.
போலீஸ் செய்தி பத்திரிகையை சமூக இலக்கிய ஏடாக மாற்றும் யோசனையை பிரபஞ்சனிடம் வாசகர் கேள்விகளுக்கு பதில் வாங்கிப் போட்டதன் மூலம் ஓரளவுக்குத் தீர்த்தேன்.
அதன் பிறகு போலீஸ் செய்தி வேலை இழந்து (சசிகலா) நடராசன் நடத்திய தமிழரசி இதழில் ஃப்ரிலான்ஸராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு விக்ரமன் ஆசிரியராக இருந்தார். பாக்யராஜ் இயக்கத்தில் வெளியானசின்னவீடு' என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.
சின்னவீடு' என்று ஒரு திரைப்படத்திற்குப் பெயர் வைப்பது எவ்வளவு கேவலம்? இது குறித்து எழுத்தாளர் ஜெயகாந்தன் என்ன சொல்கிறார் என்று கேட்டு வாருங்கள் என்று சொல்லியிருந்தார் விக்ரமன்.
போனில் பேசினால் தவிர்த்துவிடுவாரோ என்ற தயக்கம். காலையில் நேரில் அவருடைய வீட்டுக்குச் சென்றேன்.
மீசையைத் தடவிவிட்டுக் கொண்டு மிடுக்காக விசாரித்தார். என்னவோ ஒரு வசீகரம் இருந்தது அவரிடத்தில். பிரமிப்பும் இருந்தது. எனக்கு என்ன சொல்வதென்றே புரியாமல் நாக்குழற ஏதோ பேசினேன்.
"மேலே இருங்கள் வருகிறேன்'' என்றார்.
மாடியில் ஓலை வேய்ந்த கொட்டகை இருந்தது. அங்கே அவர் பைப் பிடிப்பது போல பெரிய போட்டோ ஒன்று மாட்டியிருந்தது. எனக்கு மாக்ஸிம் கார்க்கி மனதில் ஓடினார்.
சின்னவீடு' பற்றிப் பேசுவதற்கு எனக்கே கூச்சமாக இருந்தது.
தோளின் மீது ஒரு துண்டைப் போர்த்திக் கொண்டு உள்ளே நுழைந்தார் ஜெயகாந்தன். நான், வெளிவந்திருக்கும் அந்தப் படத்தின் தலைப்பைப் பற்றிச் சொன்னேன்.
"சின்னவீடு என்றால் என்ன அர்த்தம்?'' என்றார். அவர் தெரிந்து கொண்டே கேட்கிறாரா தெரியாமல் கேட்கிறாரா என்று தெரியவில்லை.
"முதல் மனைவிக்குப் பிறகு ஒருவர் இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்வதை சின்னவீடு என்று சொல்கிறார்கள். அது பெண்களை கொச்சைப் படுத்துவதாக இருக்கிறது... உங்கள் கருத்து வேண்டும்'' என்றேன்.
"எனக்கு இந்த மாதிரியான சீப்பான வார்த்தைக்கெல்லாம் அர்த்தம் தெரியாது'' என்று கூறிவிட்டார்.
"சரி சார்'' என்று எழுந்து வருவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.
பின்னாளில் அவருக்கு இரண்டு மனைவியர் என்ற செய்தியும் தெரிந்த போது அவரிடம் போய் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுச் சங்கடப்படுத்திவிட்டோமே என்று அதிர்ச்சியும் வருத்தமும் ஏற்பட்டது.
ஒருசில அறிமுகங்கள் பிறகு அவர்களை எப்போதும் சந்திக்க வழியில்லாமல் சுவர் எழுப்பிவிடும். ஜெயகாந்தனுடனான இந்தச் சந்திப்பும் அப்படியான ஒன்றுதான். அதன் பிறகு அவரைச் சந்திக்கவே இல்லை.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Blog Widget by LinkWithin